என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக இயக்க உள்ள படத்தில், நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
    ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படம், விபத்து, கொரோனா பரவல், கமல்ஹாசனின் அரசியல் பணிகள் போன்ற காரணங்களால் பல மாதங்களாக முடங்கி உள்ளது. இதனால் அப்படத்தை கிடப்பில் போட்டுள்ள இயக்குனர் ஷங்கர், அடுத்ததாக தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார்.  

    இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகரும், நடிகர் ராம்சரணின் தந்தையுமான சிரஞ்சீவியும், பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானும் நடிக்க உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. 

    விஜய் சேதுபதி

    இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதியும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய் சேதுபதிக்கு தெலுங்கிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளதால், அவரை நடிக்க வைக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஷங்கரின் இந்தியன் 2 படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும், கால்ஷீட் பிரச்சனை காரணமாக நடிகர் விஜய் சேதுபதி அப்பட வாய்ப்பை தவறவிட்டது குறிப்பிடத்தக்கது.
    படப்பிடிப்பில் நடிகர் விவேக்குடன் எடுத்த வீடியோவை பதிவிட்டுள்ள பிரபல பாலிவுட் நடிகை, அவர் குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
    மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் கடைசியாக, லெஜண்ட் சரவணன் நாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தார். இப்படத்தில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்துலா நாயகியாக நடிக்கிறார். படப்பிடிப்பில் நடிகர் விவேக், அவருக்கு தமிழ் வசனங்களுக்கு ஆங்கிலத்தில் அர்த்தம் என்னவென்று சொல்லிக் கொடுக்கும் வீடியோவையும், அவருடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.

    அதில், “பத்மஸ்ரீ விவேக் சார், நான் உங்களை என்றென்றும் மிஸ் செய்வேன். என்னுடைய முதல் தமிழ் படத்தில் உங்களைப் போன்ற சாதனையாளருடன் நடித்த அனுபவம் மறக்க முடியாத ஒன்று. உங்கள் இறப்பு எனக்கு அதிர்ச்சியளித்தது. நீங்கள் என்னை நன்றாக கவனித்துக் கொண்டீர்கள். விவேக் சார் குடும்பத்திற்கும், ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். எனது வாழ்க்கையில் மறக்க முடியாத சில நல்ல நினைவுகள் உங்களுடன், அனைத்திற்கும் நன்றி சார்,” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.



    பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு உதவிய நடிகை சமந்தாவிற்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
    நடிகை சமந்தா, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது, அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர், தனக்கு 7 சகோதரிகள் இருப்பதாகவும், தனது பெற்றோர் இறந்துவிட்டதால், சகோதரிகளை காப்பாற்ற தான் ஆட்டோ ஓட்டி சம்பாதித்து வருவதாகவும், அந்த வருமானம் போதுமானதாக இல்லை எனவும் தனது கஷ்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

    அதைக் கேட்ட சமந்தா, அவருக்கு தன் சொந்த செலவில் ஒரு கார் வாங்கி தருவதாக உறுதி அளித்தார். அதை வைத்து டிராவல்ஸ் நடத்தி இன்னும் அதிகப்படியான வருமானம் ஈட்டிக்கொள்ளலாம் என்றும் அந்த பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு வாக்குறுதி தந்தார். 

    சமந்தா

    இந்நிலையில், கொடுத்த வாக்கை காப்பாற்றும் விதமாக நடிகை சமந்தா, அந்த பெண்ணுக்கு ரூ.12 லட்சம் மதிப்புள்ள கார் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார். ஏழைப் பெண்ணுக்கு உதவிய நடிகை சமந்தாவிற்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
    கொரோனா இரண்டாவது அலை பரவுவதால், நெடுந்தொலைவுக்கு பயணம் செய்து என்னால் படப்பிடிப்புக்கு வர முடியாது என்று பிரபல நடிகர் சொல்லிவிட்டாராம்.
    பிரபல தெலுங்கு நடிகரான ஜெகபதிபாபு, தமிழில் தாண்டவம், புத்தகம், லிங்கா, கத்தி சண்டை, பைரவா, விஸ்வாசம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது ரஜினியுடன் அண்ணாத்த, தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் பிரம்மாண்டமாக தயாராகும் மகா சமுத்திரம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 

    மகா சமுத்திரம் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளது. இப்படத்தின் முக்கிய காட்சிகளை விசாகப்பட்டினத்தில் படமாக்கி வருகிறார்கள். இதற்காக துணை நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் விசாகப்பட்டினத்தில் குவிந்துள்ளனர். ஜெகபதிபாபு நடிக்கும் காட்சிகளை படமாக்க அழைத்தபோது அவர் படப்பிடிப்புக்கு செல்ல மறுத்து விட்டாராம்.

    ஜெகபதிபாபு

    கொரோனா இரண்டாவது அலை பரவுவதால், நெடுந்தொலைவுக்கு பயணம் செய்து என்னால் வர முடியாது என்று சொல்லி அவர் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்படத்தின் தயாரிப்பாளர் அதிர்ச்சியாகி உள்ளார். ஜெகபதிபாபு வசிக்கும் இடத்தின் பக்கத்திலேயே அரங்குகள் அமைத்து அவர் நடிக்கும் காட்சிகளை படமாக்கலாமா? என்று ஆலோசிக்கிறார்களாம்.
    பாலசந்தர் இயக்கிய "மரோசரித்ரா'' (தெலுங்குப்படம்) சென்னையில் 596 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.
    கமலஹாசனும், சரிதாவும் ஜோடியாக நடித்த படம் இது.

    "மூன்று முடிச்சு'' படத்துக்குப்பிறகு, பாலசந்தரின் "அவர்கள்'', "நினைத்தாலே இனிக்கும்'' ஆகிய படங்களில் கமலஹாசனும், ரஜினிகாந்தும் சேர்ந்து நடித்தார்கள்.

    "அவர்கள்'' படத்தில் கமல், ரஜினியுடன் சுஜாதா நடித்தார். "பேசும் பொம்மை'' ஒரு முக்கிய கதாபாத்திரமாக நடித்தது!

    படம் நன்றாக இருந்தும், சரியாக ஓடவில்லை. தன்னுடைய சிறந்த படம் ஓடவில்லையே என்பதில் பாலசந்தருக்கு வருத்தம் உண்டு.

    ஸ்ரீதரின் "இளமை ஊஞ்சலாடுகிறது'', பாரதிராஜாவின் "16 வயதினிலே'' ஆகிய படங்களிலும் கமலும், ரஜினியும் சேர்ந்து நடித்தனர்.

    இருவரும் நெருங்கிய நண்பர்களாகப் பழகி வந்தார்கள். எனினும் இப்படி சேர்ந்து நடித்துக் கொண்டிருப்பதை விட, தனித்தனியாக நடித்தால்தான் இருவரும் முழுத் திறமையையும் வெளிப்படுத்த முடியும் என்று நினைத்தார்கள். "இனி இருவரும் தனித்தனியாகவே நடிப்போம்'' என்று அறிவித்தார்கள்.

    அவர்கள் எண்ணியது போலவே, இருவரும் நடிப்பில் புதிய பரிமானங்களை வெளிப்படுத்தி, புதிய சிகரங்களைத் தொட்டார்கள்.

    பின்னர் பாலசந்தர் தயாரித்த பல படங்களில் தனித்தனியே நடித்தார்கள்.

    பாலசந்தர் டைரக்ட் செய்த படங்களிலேயே, மிக பிரமாண்டமான வெற்றிப்படம் "மரோசரித்ரா.''

    பாலசந்தரின் நெருங்கிய நண்பரான அரங்கண்ணல், 1978-ல் இதை தெலுங்கில் தயாரித்தார். கமலஹாசனும், சரிதாவும் ஜோடியாக நடித்தனர்.

    படத்தில் சரிதா தெலுங்குப்பெண். கமலஹாசன் தமிழ் இளைஞன். அவர்களுக்கிடையே ஏற்படும் காதலை அற்புதமாக சித்தரித்த படம் "மரோசரித்ரா.''

    கறுப்பு -வெள்ளையில் தயாரிக்கப்பட்ட இந்தப்படம், ஆந்திராவில் திரையிடப்பட்டு மகத்தான வெற்றி பெற்றது. இக்கதையை தமிழில் தயாரிக்க அரங்கண்ணல் யோசித்தபோது "தெலுங்குப்படத்தை அப்படியே தமிழ்நாட்டிலும் திரையிட்டுப் பார்ப்போமே'' என்று பாலசந்தர் கூறினார்.

    அதன்படி, சென்னை `சபையர்' தியேட்டரில் இப்படம் பகல் காட்சியாக திரையிடப்பட்டது. தமிழ் ரசிகர்களையும் இப்படம் வெகுவாகக் கவர்ந்தது. குறிப்பாக, இளைஞர்களும், இளம் பெண்களும் கூட்டம் கூட்டமாக `சபையர்' தியேட்டரை நோக்கிப் படையெடுத்தனர். தினமும் "ஹவுஸ்புல்'' காட்சியாகப் படம் ஓடியது.

    இப்போது 25 வாரம் ஓடினால், "வெள்ளி விழா'' என்று பெரிதாக விழா எடுக்கப்படுகிறது. "மரோசரித்ரா'' மொத்தம் 596 நாட்கள் ஓடியது. அதாவது ஒரு வருடமும் 231 நாட்களும்!

    பெங்களூரிலும் "மரோசரித்ரா'' 2 1/2 வருடம் ஓடி, சாதனை புரிந்தது.

    "மரோசரித்ரா''வை, "ஏக் து ஜே கேலியே'' என்ற பெயரில் எல்.வி.பிரசாத் இந்தியில் தயாரித்தார். அவரே பெரிய டைரக்டர். அப்படியிருந்தும், டைரக்ஷன் பொறுப்பை பாலசந்தரிடம் ஒப்படைத்தார்.

    இந்திப்பதிப்பில் கமலஹாசனும், ரதியும் ஜோடியாக நடித்தனர். படம் கலரில் தயாராகியது.

    "மரோசரித்ரா'' போலவே, "ஏக்துஜே கேலியே''வும், மாபெரும் வெற்றி பெற்றது. வடநாட்டில் இந்தப்படம் 80 வாரங்கள் ஓடியது.

    "மரோசரித்ரா'' பற்றி பாலசந்தர் கூறியதாவது:-

    "மரோசரித்ராவின் கிளைமாக்ஸ் காட்சி (உச்சகட்டம்) ஒரு அற்புதமான விஷயம்.

    வில்லனிடம் சிக்கி, கதாநாயகி துடிதுடிப்பதாக வரும் காட்சி. அலையில் சிக்கிய புடவை, அங்கும் இங்கும் நீரில் வருவதை படமாக்கும்போது, குறிப்பிட்ட ஒரே பிரேமில் அந்தப்புடவை கேள்விக்குறி மாதிரி வந்தது. உடனே அதை கேமிராவில் படம் பிடித்தேன்.

    வில்லனிடம் சிக்கி கதாநாயகி புழுவாய்த் துடிக்கிறாள் என்பதை உணர்த்தும் விதத்தில், அக்காட்சி அமைந்ததுதான் அற்புதமான விஷயம்.

    "ஏக் துஜே கேலியே'' படப்பிடிப்பின்போதும் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. வழக்கமாக படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில், கடைசி நாள் படப்பிடிப்பு நடந்தது. கதாநாயகனும், கதாநாயகியும் உல்லாசமாக சுற்றித்திரிந்த அந்தப் பகுதியில், ஒரு பாறையில் இரண்டு பேர் பெயரும் எழுதப்பட்டிருக்கும்.

    அந்தப் பாறையின் உச்சியில், எழுத்துக்களுக்கு கொஞ்சம் மேலே கடைசி நாளன்று இரண்டு காக்கைகள் சோகமாக வந்து உட்கார்ந்ததை பார்த்தேன். எனக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. அதை எப்படியும் படம் பிடித்து காட்டிவிட வேண்டும் என்று துடித்தேன்.

    கேமராமேன் லோகு, அப்போது அங்கு இல்லை. உடனே அவருடைய உதவியாளரை கூப்பிட்டு, நானே அந்தக் காட்சியை படம் பிடித்தேன். படத்திலும் சேர்த்தேன்.

    சில நேரங்களில், நம்மையும் அறியாமல் சில சம்பவங்கள் நமக்காகவே நடக்கிற மாதிரி அமையும்போது, ரொம்ப எச்சரிக்கையாக இருந்து அதை படத்திலே சேர்த்து விடுவேன்.''

    இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.
    சங்கை குமரேசன், நியா கிருஷ்ணா, ரம்யா, ராஜு, சிந்து, ராஜாமணி, சண்முகம், வெங்கட் நடிப்பில் சங்கை குமரேசனே எழுதி இயக்கி இருக்கும் முன்னா படத்தின் விமர்சனம்.
    சங்கை குமரேசன் நாடோடியாக வாழ்ந்து வரும் குடும்பத்தில் பிறந்தவர். சாட்டையடித்து கலைக்கூத்து நடத்தி பிழைப்பு நடத்தும் நாடோடிக் கூட்டத்தில் வளரும் அவருக்கு நாகரீக வாழ்க்கையை அனுபவிக்க ஆசை பிறக்கிறது. ஆனால் பழமை மாறாத அவரது தந்தையோ மகனின் விருப்பத்துக்கு தடையாக இருக்கிறார். 

    சங்கை குமரேசன் தனது லட்சியத்துக்காக பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுகிறார். அதிஷ்டவசமாக அவர் பெரும் பணக்காரராகி நாகரீக வாழ்க்கைக்கும் செல்கிறார். ஆனால் பணம் வந்த பிறகு மனநிம்மதி பறி போகிறது. அதன்பின் இவரது வாழ்க்கை என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக்கதை.

    விமர்சனம்

    நாயகனாக நடித்திருக்கும் சங்கை குமரேசன், தானே இயக்கி நடித்து இருக்கிறார். தெருக்கோடி வாழ்க்கையில் கிடைக்கிற பணமே போதும் என்று மனசு சொல்லும். அதே மனசு நாகரீக வாழ்கையில் எவ்வளவு பணம் கிடைத்தாலும் பத்தாது என்றுதான் சொல்லும், ஆனால் நிம்மதியும் இருக்காது என்ற கருத்தை சங்கை குமரேசன் வலியுறுத்தி இருக்கிறார். 

    கருத்து சிறப்பாக இருந்தாலும் திரைக்கதையில் தெளிவு இல்லாமல் இருக்கிறது. காட்சிகளின் தொடர்ச்சி இல்லாமல் திரைக்கதை பயணிக்கிறது. 2 மணி நேரம் படம் இருக்க வேண்டும் என்பதற்காக பல காட்சிகள் திணித்தது போல் இருக்கிறது. 

    விமர்சனம்

    நியா கிருஷ்ணா, ரம்யா, ராஜு, சிந்து,ராஜாமணி, சண்முகம், வெங்கட் என பிற கதாபாத்திரங்களும் கதைக்கு ஓரளவிற்கு வலு சேர்த்துள்ளனர். டி.ஏ.வசந்தின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். சங்கை குமரேசனின் வரிகளில் தத்துவம், காதல் இரண்டுமே பெரியதாக எடுபடவில்லை. சுனில் லாசரின் பின்னணி இசையும் ரவியின் ஒளிப்பதிவும் படத்துக்கு பலம் சேர்க்கின்றன.

    மொத்தத்தில் ‘முன்னா’ சுவாரஸ்யம் இல்லை.
    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்ற நடிகர் கவின் நடித்து வரும் படத்தில் பிரபல நடிகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
    ‘சரவணன் மீனாட்சி’ என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் கவின். இதையடுத்து படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த கவின், ‘நட்புன்னா என்னானு தெரியுமா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார்.

    அதைத்தொடர்ந்து பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்ட கவின் ஏராளமான ரசிகர்களைப் பெற்றார். பின்னர் வினீத் இயக்கத்தில் லிப்ட் என்ற படத்தில் நடித்துள்ளார் கவின். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக அம்ரிதா நடிக்கிறார். ஈகா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    கவின் - சிவகார்த்திகேயன்

    இந்நிலையில், இப்படத்தில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
    கந்தன் ஆர்ட்ஸ் மிகுந்த பொருட்செலவில் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் “பகையே காத்திரு” படத்தின் முன்னோட்டம்.
    கந்தன் ஆர்ட்ஸ் மிகுந்த பொருட்செலவில் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் “பகையே காத்திரு”. விக்ரம் பிரபு வித்தயாசமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். முழுக்க முழுக்க ஆக்ஷன் திரில்லர் நிறைந்த சமூக படமாக உருவாகிறது. கதாநாயகியாக ஸ்முருதி வெங்கட், இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், வித்யா பிரதீப், சாய்குமார் தமிழ் திரைப்படங்களில் இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் சிவா ஷாரா, பாலா மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்கிறார்கள்.

    இப்படத்திற்கு செல்வக்குமார்.S ஒளிப்பதிவு செய்ய, ஷாம் C.S இசை அமைக்கிறார். பிரமாண்டமான அரங்குகளை கலை இயக்குனர்  M.சிவா யாதவ் அமைக்க, எடிட்டிங் ராஜா முஹமது, அதிரடியான சண்டைக்காட்சிகளை திலீப் சுப்ராயன் அமைக்க உள்ளார்.  A.ஜெய்சம்பத் நிர்வாக தயாரிப்பை ஏற்கிறார். 

    லைன் புரொடியூசராக செல்வக்குமார்.S. மேலும் பல தொழில்நுட்ப கலைஞர்கள் கொண்டு உருவாகி கொண்டிருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் A.மணிவேல் இயக்குகிறார். இவர் காக்கி என்னும் குறும்படத்தை இயக்கியவர். இப்படம் கொச்சின், ஐதராபாத், சென்னை ஆகிய நகரங்களில் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. இப்படத்தை கந்தன் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ராசி முத்துசாமி தயாரிக்கிறார்.
    தமிழ் சினிமாவில் சின்ன கலைவாணர் என்று அழைக்கப்பட்டு வந்த மறைந்த நடிகர் விவேக் நடிப்பில் மூன்று திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது.
    சமீபத்தில் மறைந்த விவேக் நடிப்பில் கடைசியாக தாராள பிரபு என்ற திரைப்படம் வெளியானது. ஹரிஷ் கல்யாண் உடன் டாக்டர் கண்ணதாசன் என்ற கேரக்டரில் நடித்திருந்தார் விவேக். இக்கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது நடிகர் விவேக் இவ்வுலகை விட்டு விடைபெற்றிருக்கும் நிலையில் அவர் நடிப்பில் அடுத்ததாக 3 படங்கள் திரைக்கு வர உள்ளன. 

    நடிகர் விஜய் சேதுபதியுடன் முதல்முறையாக விவேக் இணைந்து நடித்துள்ள படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’. வெங்கட கிருஷ்ணா ரோகந்த் இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியான நிலையில் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    விவேக்

    அதேபோல் லெஜண்ட் சரவணன் ஹீரோவாக அறிமுகமாகும் படத்திலும் அவருடன் முக்கிய நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விவேக். இன்னும் பெயரிடப்படாத இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் உடன் இந்தியன் 2 திரைப்படத்திலும் விவேக் நடித்து வந்தார். அவரது காட்சிகள் ஏற்கெனவே படமாக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. அதேவேளையில் பல்வேறு காரணங்களால் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 
    கொரோனா 2-வது அலை உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில், சசிகுமார் நடித்த திரைப்படம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
    கொரோனா 2-வது அலை உலகம் முழுவதும் உக்கிரமாக பரவி வருகிறது. சில நாடுகளில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தியேட்டர்களில் பார்வையாளர்கள் 50 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் தமிழ் படங்களின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.

    படக்குழுவினரின் அறிக்கை

    இந்நிலையில், சசிகுமார், சத்யராஜ், சமுத்திரகனி, மிர்ணாளினி ரவி ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் எம்.ஜி.ஆர்.மகன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்படம் ஏப்ரல் 23ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. விரைவில் தியேட்டரில் வெளியாகும் என்றும் படக்குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
    பிரபல கவர்ச்சி நடிகையான சன்னி லியோன், தமிழில் உருவாகும் ஹாரர் காமெடி படத்தில் நகைச்சுவை நடிகருடன் இணைந்து நடிக்க இருக்கிறார்.
    பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன், தற்போது பாலிவுட்டில் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் ஜெய் நடிப்பில் வெளியான வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருப்பார். மேலும் வீரமாதேவி என்ற படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். 

    இந்நிலையில், யுவன் இயக்கும் வரலாற்று பின்னணியில் உருவாகும் ஹாரர் காமெடி படத்தில் சன்னி லியோன் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். இப்படத்தினை வி4யு மீடியா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரிப்பாளர் டி.வி.சக்தி மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் கே.சசிகுமார் இணைந்து தயாரிக்கின்றனர்.

    சன்னி லியோன் - சதீஷ்

    மேலும் இப்படத்தில் ஒரு வித்தியாசமான நாயகனாக சதீஷ் மற்றும் மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக், தங்கதுரை, வினோத் முன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். படத்தின் படப்பிடிப்பை சென்னை, பெரம்பலூர், துறைமுகம் மற்றும் 25 நாட்கள் மும்பையில் படமாக்க திட்டமிட்டிருக்கிறார்கள். 
    சென்னை மாநகராட்சி ஆணையர் கொடுத்த புகாரில் நடிகர் மன்சூர் அலிகான் மீது வடபழனி காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
    கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், அவர் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.

    நடிகர் விவேக், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மறுநாள் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மரணம் அடைந்தார்.

    கொரோனா தடுப்பூசி

    இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், கொரோனா தடுப்பூசி குறித்தும், அரசியல்வாதிகள் குறித்தும் சில கருத்துகளை தெரிவித்தார். அவரது பேச்சு சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

    தொடர்ந்து, சென்னை மாநகராட்சி ஆணையர் கொடுத்த புகாரில் நடிகர் மன்சூர் அலிகான் மீது வடபழனி காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில், தனது பேட்டியை மாநகராட்சி ஆணையர் தவறாக புரிந்து கொண்டதாகவும், உள்நோக்கத்தோடு வேண்டும் என்று தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பவில்லை எனவும், எதேச்சையாக பேட்டியில் வெளிப்பட்ட கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

    கொரோனா தடுப்பூசி செலுத்துவதை கட்டாயப்படுத்தக் கூடாது என்றுதான் கூறினேனே தவிர தடுப்பூசி குறித்து தவறாக எதுவும் தெரிவிக்கவில்லை என மனுவில் கூறியுள்ளார்.

    இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

    ×