தொழில்நுட்பம்
மக்களவை தேர்தலையொட்டி சமூக வலைதளங்களை கண்காணிக்க தேர்தல் ஆணையம் முடிவு
இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி, சமூக வலைதளங்களை கண்காணிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. #ElectionCommission
இந்தியாவில் விரைவில் மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி சமூக வலைதளங்களை கண்கானிக்க இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் அரசியல் விளம்பரங்களுக்கு முன்கூட்டியே அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெற்றிவாய்ப்பை அதிகப்படுத்தும் நோக்கில் வேட்பாளர்கள் சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்வார்கள் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக மூத்த தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார்.
ஒவ்வொரு மாவட்டம் மற்றும் மாநில அளவுகளில் ஊடக சான்று மற்றும் கண்கானிப்பு குழுக்கள் இடம்பெற்றிருக்கும். இக்குழுவில் ஒரு சமூக வலைதள வல்லுநரும் இடம்பெறுவர். சமூக வலைதளங்களில் பதிவாக இருக்கும் அனைத்து அரசியல் விளம்பரங்களுக்கும் முன்கூட்டியே அனுமதி பெற்றிருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் சமூக வலைதளங்களில் பதிவாக இருக்கும் விளம்பரங்களுக்கு அனைத்து விதகள் மற்றும் நிபந்தணைளை பூர்த்தி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு முறை, அமைதியை சீர்குலைக்கும், பொது அமைதிக்கு கலங்கம் விளைவிக்கும் நடவடிக்கைகள் ஏற்படாமல் இருக்க ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள், வாட்ஸ்அப் மற்றும் ஷேர்சாட் உள்ளிட்ட தளங்களின் மீது அதிக கவனம் செலுத்தப்பட இருக்கிறது என அரோரா தெரிவித்தார்.
மொபைல் போன்களில் அதிகப்படியான டெக்ஸ்ட் மற்றும் வாய்ஸ் மெசேஜ்களின் மீதும், தொலைகாட்சி சேனல்கள், கேபிள் நெட்வொர்க், ரேடியோ, திரையரங்குகள், பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள ஆடியோ வீடியோ டிஸ்ப்ளேக்களில் வெளியாகும் அரசியல் விளம்பரங்களுக்கும் முன்கூட்டியே அனுமதி பெற்றிருப்பது அவசியமாகும் என அரோரா மேலும் தெரிவித்தார்.