உலகம்

ஈரான் அரசுக்கு எதிராக போராடிய 26 வயது இளைஞருக்கு மரண தண்டனை!

Published On 2026-01-13 12:26 IST   |   Update On 2026-01-13 12:26:00 IST
  • போராட்டம்-வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 646-ஆக உயர்ந்துள்ளது.
  • சுல்தானியை குடும்பத்தினர் 10 நிமிடங்கள் மட்டுமே சந்திக்க அனுமதிக்கப்பட்டனர்.

ஈரானில் பொருளாதார நெருக்கடி மற்றும் விலை வாசி உயர்வு ஆகியவற்றால் அரசு மற்றும் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகிறது.

அங்கு 2 வாரங்களுக்கு மேலாக போராட்டங்கள் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. போராட்டத்தை ஒடுக்க பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இதனால் ஈரானில் பல இடங்களில் வன்முறை ஏற்பட்டது. போராட்டங்கள் பரவுவதை தடுக்க செல்போன், இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் போராட்டங்கள் கட்டுக்குள் வரவில்லை. இதற்கிடையே போராட்டம்-வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 646-ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே ஈரானில் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுக்கு அந்நாட்டு அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

போராட்டத்தில் பங்கேற்கும் எவரும் கடவுளின் எதிரி என்று கருதப்படுவார்கள். அது மரண தண்டனைக்குரிய குற்றம் என்று தெரிவித்தது.

இந்த நிலையில் போராட்டத்தில் பங்கேற்ற வாலிபர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தலைநகர் தெஹ்ரானின் புறநகர்ப் பகுதியான பர்திசை சேர்ந்த சுல்தானி(வயது 26) என்பவர் போராட்டத்தில் பங்கேற்றதற்காக கடந்த 8-ந்தேதி கைது செய்யப்பட்டார்.

அவருக்கு கடந்த 11-ந்தேதி மரண தண்டனை விதிக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் சுல்தானியை குடும்பத்தினர் 10 நிமிடங்கள் மட்டுமே சந்திக்க அனுமதிக்கப்பட்டனர்.

சுல்தானிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை நாளை நிறைவேற்றப்பட உள்ளதாக ஒரு மனித உரிமை அமைப்பு தெரிவித்தது. போராட்டத்தில் பங்கேற்றதாக மரண தண்டனை விதிக்கப்பட்ட முதல் நபரும் இவரே ஆவார். 

Tags:    

Similar News