ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் குண்டுமழை.. 133 பேர் உயிரிழப்பு
- 55 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது.
- 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் ஷியா மசூதியில் நடந்த தற்கொலைப்படை தாக்குகளில் 31 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபான் மீது பாகிஸ்தான் குற்றம்சாட்டியது.
தொடர்ந்து இந்த வார தொடக்கத்தில் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்கியதில் 20 பயங்கரவாதிகளை கொன்றதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது. ஆனால் கொல்லப்பட்டவர்கள் அப்பாவி மக்கள் என ஆப்கானிஸ்தான் கூறியது.
இதற்கு பதிலடியாக நேற்று இரவு பாகிஸ்தான் எல்லைப் புறங்களில் உள்ள ராணுவ முகாம்கள் மீது ஆப்கானிஸ்தான் தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையான டுராண்ட் கோட்டில் நடந்த எதிர் தாக்குதலில் 55 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது.
நான்கு மணி நேர நடவடிக்கையில் இரண்டு பாகிஸ்தான் இராணுவ தளங்களும் 19 இராணுவ சாவடிகளும் அழிக்கப்பட்டதாக ஆப்கானிஸ்தான் கூறியது.
மேலும் பல ராணுவ முகாம்களை கைப்பற்றி, அதில் பாகிஸ்தான் வீரர்களை சிறை பிடித்துள்ளதாகவும் ஆப்கானிஸ்தான் தெரிவித்தது. ஆனால் முகாம்கள் கைப்பற்றப்பட்டதை பாகிஸ்தான் மறுத்தது.
இதற்கிடையே தாலிபான்களின் தாக்குதலுக்கு பதிலடியாக ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் மற்றும் முக்கிய நகரமான காந்தஹார் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
அதிகாலை 1:50 மணிக்கு காபூலில் வான்வழித் தாக்குதல் நடந்ததாகவும், அதைத் தொடர்ந்து இரண்டாவது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் 133 தலிபான் போராளிகள் கொல்லப்பட்டதாகவும் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. மேலும், 27 தாலிபான் ராணுவ நிலைகள் அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கையை உறுதிப்படுத்தாத தாலிபான் அரசு, பாகிஸ்தானின் இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்கள் பெண்கள், குழந்தைகள் உட்பட பொதுமக்களே என தெரிவிதுள்ளது.
இதுகுறித்து பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், பாகிஸ்தான் ராணுவம் எந்த தாக்குதலையும் முறியடிக்கும் திறன் கொண்டது. ஆப்கானிஸ்தானின் தாக்குதலே எங்களை பதில் தாக்குதல் நடத்த தூண்டியது" என்று தெரிவித்தார்.
தாலிபான் ஆட்சியின் நடவடிக்கைகளால் பாகிஸ்தான் பொறுமை இழந்துவிட்டதாகவும், இப்போது நேரடிப் போர் நடத்துவோம் என்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் கூறினார்.