பிரிட்டன் எம்.பி.யை கைது செய்ய இன்டர்போல் உதவியை நாடும் வங்கதேசம் - என்ன பிரச்சனை?
- செல்வாக்கை அபகரித்தார் என குற்றம்சாட்டப்பட்டது.
- 4 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
பிரிட்டன் நாடாளுமன்ற எம்.பி.யாக இருப்பவர் துலிப் ரிஸ்வானா சித்திக். வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இவரது அத்தை ஆவார்.
தனது அத்தையான ஷேக் ஹசீனா பிரதமராக இருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி, டாக்காவின் குல்ஷன் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பை எந்தப் பணமும் செலுத்தாமல் சட்டவிரோதமாக அபகரித்துக் கொண்டதாக துலிப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகளும், துலிப் சித்திக்கிற்கு 4 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது அவர் லண்டனில் வசிப்பதால், அவரை கைது செய்து வங்கதேசத்திற்கு அழைத்து வர 'ரெட் நோட்டீஸ்' வேண்டும் என ஊழல் தடுப்பு ஆணையம் கோரியது.
எனவே துலிப் சித்திக்கை கைது செய்ய சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போல் (Interpol) உதவியை நாடுமாறு அதிகாரிகளுக்கு டாக்கா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்டர்போல் மூலம் 'ரெட் நோட்டீஸ்' பிறப்பிக்க ஆவன செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
வங்கதேசத்தில் புதிதாகப் பதவியேற்றுள்ள தாரிக் ரஹ்மான் பிஎன்பி அரசு, அவாமி லீக் தலைவர்கள் மீது திட்டமிட்டு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதற்கிடையே பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஒருவர் மீது வங்கதேச நீதிமன்றம் எடுத்துள்ள இந்த நடவடிக்கை, சர்வதேச அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
2024 இல் மாணவர் போராட்டத்தால் ஆட்சியை இழந்த ஷேக் ஹசீனா தற்போது இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். அவரை நாடு கடத்த வங்கதேசம் தொடர்ந்து இந்தியாவிடம் கோரிவருவது குறிப்பிடத்தக்கது.