எப்ஸ்டீன் பைல்ஸ் சர்ச்சை: உலக பொருளாதார மன்றத் தலைவர் ராஜினாமா
- உலக பொருளாதார மன்ற தலைவரான போர்கே பிரென்ட் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.
- போர்கே மீதான குற்றம் குறித்து விசாரிக்க விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.
நியூயார்க்:
சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி பணக்காரர்களுக்கு போகப் பொருளாக விநியோகித்து வந்தவர் அமெரிக்க தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன். இதற்கென தனி தீவே அவர் வைத்திருந்தார். கடந்த 2019 ஜூலை மாதம் கைதான அவர் நியூ யார்க் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அதே ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி தனது சிறையில் தனது அறையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
நீதிமன்ற உத்தரவின்படி இந்த லட்சக்கணக்கான பக்கங்கள் கொண்ட இந்த கோப்புகள் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி, அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் வெளியிட்ட ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகளில் டொனால்டு டிரம்ப், பில் கேட்ஸ், எலான் மஸ்க், பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரு உள்ளிட்ட பலரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இதற்கிடையே, உலக பொருளாதார மன்ற தலைவரும், தலைமைச் செயல் அதிகாரியுமான போர்கே பிரென்ட் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. எப்ஸ்டீனுடன் வணிக ரீதியான இரவு விருந்துகளில் கலந்துகொண்டதாகவும், மின்னஞ்சல், குறுஞ்செய்திகள் மூலம் தொடர்பில் இருந்ததாகவும் போர்கே மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில், இதுகுறித்து விசாரிக்க விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, உலகப் பொருளாதார மன்றத் தலைவர் பதவியை போர்கே ராஜிநாமா செய்தார். இவர் 2017-ம் ஆண்டு முதல் தலைவர் பதவி வகித்து வந்தார்.
இந்நிலையில், தனது பதவி விலகல் குறித்து போர்கே பேசுகையில், உலகப் பொருளாதார மன்றம் எவ்வித இடையூறுமின்றி தொடர்ந்து பணியாற்ற வேண்டும். அதற்காகவே நான் பதவி விலகும் முடிவை எடுத்துள்ளேன். கடந்த எட்டரை ஆண்டுகளாக இந்தப் பதவியில் பணியாற்றியதில் எனக்கு மிகவும் திருப்தி என தெரிவித்தார்.
போர்கே பதவி விலகியதைத் தொடர்ந்து, அலோயிஸ் ஸ்விங்கி இடைக்கால தலைவராகப் பொறுப்பேற்றார்.