அமெரிக்க படகில் வந்த 4 பேரை சுட்டுக்கொன்ற கியூபா
- கியூபாவின் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளது.
- அமெரிக்காவிற்கும் கம்யூனிச நாடான கியூபாவிற்கும் இடையே உறவு சுமுகமாக இல்லை.
கியூபா நாட்டின் கடலோர காவல்படைக்கும், அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட அதிவேகப் படகில் வந்தவர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் படகில் வந்த நால்வர் உயிரிழந்தனர்.
கியூபாவின் வில்லா கிளாரா மாகாணத்தில் உள்ள பால்கன்ஸ் கே பகுதியிலிருந்து ஒரு நாட்டிகல் மைல் தொலைவில் நேற்று இந்த சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணப் பதிவு எண்ணைக் கொண்ட அந்தப் படகு, கியூபாவின் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளது.
கடலோர காவல்படை அந்தப் படகை அடையாளம் காண நெருங்கியபோது, படகில் இருந்தவர்கள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் கியூபா கப்பலின் கமாண்டர் காயமடைந்தார். இதற்குப் பதிலடியாக கியூபா படையினர் நடத்திய தாக்குதலில் படகில் இருந்த நால்வர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்த ஆறு பேருக்கும் தற்போது மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்காவிற்கும் கம்யூனிச நாடான கியூபாவிற்கும் இடையே ஏற்கனவே உறவு சுமுகமாக இல்லாத நிலையில் இந்தத் துப்பாக்கிச் சூடு சர்வதேச அளவில் கவனிக்கப்பட்டு வருகிறது.
"தனது கடல் எல்லைப் பகுதியை பாதுகாப்பதில் கியூபா உறுதியாக உள்ளது" என்று அந்நாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்கா இன்னும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.