அஜித் குமார் அடித்து கொல்லப்பட்டதை கண்டித்து நாளை த.வெ.க. போராட்டம்- 10 ஆயிரம் தொண்டர்களுடன் விஜய் பங்கேற்பு
- தமிழக வெற்றிக் கழகம் மாநில அளவில் அதிகாரப் பூர்வமாக நடத்தும் முதல் கண்டனப் போராட்டம் இதுவாகும்
- போராட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ள இருப்பதால் அதற்கேற்ப மற்ற வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
சென்னை:
சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் சமீபத்தில் கோவில் காவலாளி அஜித் குமார் திருட்டு வழக்கு விசாரணையின் போது போலீஸ்காரர்களால் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டார்.
தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக 5 போலீசார் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு கட்சியினரும் கண்டன போராட்டம் நடத்தினார்கள்.
அஜித் குமார் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னையில் போராட்டம் நடத்தப்படும் என்று விஜய் அறிவித்தார். ஆனால் போலீசார் அந்த போராட்டத்திற்கு உடனடியாக அனுமதி வழங்கவில்லை.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கண்டன போராட்டத்திற்கு போலீசார் தற்போது அனுமதி வழங்கி உள்ளனர். அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னை, தூர்தர்ஷன் அலுவலகம் அமைந்துள்ள சிவானந்தா சாலை பகுதியில் போராட்டம் நடத்த போலீசார் அனுமதித்து உள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் போராட்டத்தில் தொண்டர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் நாளை நடக்கும் கண்டன போராட்டத்தில் விஜய் கலந்து கொள்வார் என்று தெரியவந்துள்ளது.
விஜய் தலைமையில் நாளை காலை 10 மணிக்கு இந்த போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் இருந்து தமிழக வெற்றிக் கழக மாவட்டச் செயலாளர் கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் இன்றே சென்னைக்கு வந்து விட்டனர். நாளை நடக்கும் போராட்டத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என்று தெரியவந்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் மாநில அளவில் அதிகாரப் பூர்வமாக நடத்தும் முதல் கண்டனப் போராட்டம் இதுவாகும். இதனால் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்க உள்ளனர். போராட்டத்துக்கான ஏற்பாடுகளை த.வெ.க. பொதுச்செயலாளர் என். ஆனந்த் சிறப்பாக செய்து வருகிறார்.
போராட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ள இருப்பதால் அதற்கேற்ப மற்ற வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட இருக்கிறார்கள்.