தமிழ்நாடு செய்திகள்

'எங்களுக்கும் செங்கோட்டையன் நிலை வந்துவிடக்கூடாது' - திண்டுக்கல் சீனிவாசன்

Published On 2026-02-10 18:11 IST   |   Update On 2026-02-10 18:11:00 IST
  • தமிழ்நாட்டின் நம்பிக்கையாக நிற்கக்கூடியவர் வெற்றிக் கழகத்தின் தலைவர் புரட்சித் தளபதி
  • எல்லோரும் ஒரு சின்னதட்டில் ஜால்ரா அடிப்பார்கள். அவர் தாம்பளத்தில் அடிக்கிறார்.

தவெக மூன்றாமாண்டு தொடக்கவிழாவையொட்டி ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், ஈரோடு அமைப்புச் செயலாளருமான செங்கோட்டையன் கலந்துகொண்டார். இந்நிகழ்வில் பேசிய அவர்,

"முதன்முதலில் எம்.ஜி.ஆரை பார்த்து சினிமா படத்தைப்போல 100 நாட்கள்தான் இது ஓடும் என்றார்கள். ஆனால் அவர் உயிருள்ளவரை அவர்தான் அவர்தான் தமிழ்நாட்டின் எம்.ஜி.ஆர். அதற்கு பிறகு பொறுப்பேற்ற ஜெயலலிதா இருந்தவரை அந்த இயக்கத்தை யாராலும் அசைக்கமுடியவில்லை. இன்று, நாளை தமிழ்நாட்டை ஆளப்போகிறேன். எதிர்கால தமிழ்நாட்டை உருவாக்கப் போகிறேன் என தமிழ்நாட்டின் நம்பிக்கையாக நிற்கக்கூடியவர் வெற்றிக் கழகத்தின் தலைவர் புரட்சித் தளபதி என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

இதுபோல தொடர்ந்து பல இடங்களில் விஜய்யை புரட்சித்தளபதி எனக்கூறி வருகிறார். இந்நிலையில் விஜய்யை செங்கோட்டையன் இவ்வாறு அழைப்பது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், 

"இதுகுறித்து நான் கண்ணீர்தான் விடவேண்டும். எங்களுடன் இருந்த ஒரு பெரியமனிதர் இவ்வளவு கீழ்த்தரமாக போய்விட்டாரே என்று கண்ணீர்தான் விடவேண்டும். எல்லோருக்கும் ஒரு தகுதி இருக்கும். எல்லோரும் ஒரு சின்னதட்டில் ஜால்ரா அடிப்பார்கள். அவர் தாம்பளத்தில் அடிக்கிறார். அப்பொழுதும் அவரை நான்காவது, ஐந்தாவது இடத்தில்தான் உட்கார வைத்துள்ளனர். எங்களுக்கு அந்த நிலை வந்துவிடக்கூடாது என்றுதான் கண்ணீர் வடிக்கிறோம். அவரது நிலை தாழ்ந்து விட்டது" என தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News