சாலையில் படுத்து மாற்றுத்திறனாளிகள் போராட்டம்- 300க்கும் மேற்பட்டோர் கைது
- தற்போது உள்ள விலைவாசி உயர்விற்கு ஏற்றார் போல் இல்லாத காரணத்தினால் மாற்றுத்திறனாளிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
- ஆந்திர மாநிலத்தில் வழங்குவதை போன்று தமிழகத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை உயர்த்தி வழங்க வேண்டும் என கூறி மறியல் போராட்டம் நடத்தினர்.
திண்டுக்கல்:
தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்தி வழங்க கோரி மாநிலம் முழுவதும் தொடர் சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி, திண்டுக்கல்லில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில் திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே உள்ள மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்தின் எதிரில் உள்ள சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் தமிழக அரசு தற்போது வருவாய் துறை மூலமாக சாதாரண ஊனமுற்றோர் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1500யும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2000யும் உதவித்தொகையாக வழங்கி வருகிறது.
தற்போது உள்ள விலைவாசி உயர்விற்கு ஏற்றார் போல் இல்லாத காரணத்தினால் மாற்றுத்திறனாளிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
குறிப்பாக ஆந்திராவில் சாதாரண ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 6000யும், கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10000யும், படுத்த படுக்கையாக உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.15000 உதவித்தொகையாக வழங்கி வருகின்றனர்.
இதேபோல் பாண்டிச்சேரியில் ரூ.5800யும், தெலுங்கானாவில் ரூ.4016யும், டெல்லியில் ரூ.5000யும் வழங்கி வரும் சூழ்நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் அதிகபட்சமாக ரூ.2000 மட்டுமே வழங்கி வருகின்றனர்.
எனவே ஆந்திர மாநிலத்தில் வழங்குவதை போன்று தமிழகத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை உயர்த்தி வழங்க வேண்டும் என கூறி மறியல் போராட்டம் நடத்தினர்.
சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 300க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.