தமிழ்நாடு செய்திகள்

பெரியாரையும் தெரியல... கமலையும் தெரியல... சொம்பு தூக்கி முட்டு கொடுக்கிறார்கள்- கஸ்தூரி விளாசல்

Published On 2026-02-10 17:24 IST   |   Update On 2026-02-10 17:24:00 IST
  • கமல் ஹாசன் பேச்சு குறித்த வீடியோ ஒன்றை என்னைக்காவது போட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
  • கமல் பேச்சு ரைட்டு என்று அவர்கள் சொல்கிறார்கள் என்றால், அதற்கு முக்கிய காரணம் அவர்களுக்கு அந்த பேச்சு புரியல.

மாநிலங்களவையில் கமல் ஹாசன் பேசியதற்கு திமுக தலைவர்கள் பாராட்டு தெரிவித்தனர். இந்த நிலையில் கமல் ஹாசனுக்கு பாராட்டு தெரிவித்தது குறித்து கேள்விக்கு கஸ்தூரி அளித்த பதில் பின்வருமாறு:-

கமல் ஹாசன் பேச்சு குறித்த வீடியோ ஒன்றை என்னைக்காவது போட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

கமல் பேச்சு ரைட்டு என்று அவர்கள் சொல்கிறார்கள் என்றால், அதற்கு முக்கிய காரணம் அவர்களுக்கு அந்த பேச்சு புரியல. புரிஞ்சிருந்தால் வரவேற்று சரி என சொல்லமாட்டாங்க. அவர்களுக்கு பெரியாரையும் தெரியல. கமலையும் தெரியல. என்ன பேசினார் என்றும் தெரியல. குருட்டுப்போக்குல எதுக்கும் இருக்கட்டும் என சொம்பு மட்டும் தூக்கி முட்டு கொடுத்துட்டு இருக்காங்க. அதுதான் உண்மை.

தெலுங்கில் பிச்சை எடுத்த தியாகராஜர் எனச் சொல்லி தெலுங்கு பாசையையும், தெலுங்கு மொழியை அவமானப்படுத்திதான் பேச்சை ஆரம்பித்தார் கமல்.

தெலுங்கு மக்களை பேசியதாக பொய்யா கஸ்தூரி மேல இந்த அரசுக்கு வழக்குப் போடத் தெரியுது. தியாகராஜர் தெலுங்கில் பிச்சை எடுத்தார் என்ற கமலை பாராட்ட தெரியுது.

இவ்வாறு கஸ்தூரி தெரிவித்தார்.

முன்னதாக,

மாநிலங்களவை எம்.பி.யான கமல் ஹாசன், தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தனது முதல் உரையை கடந்த 4-ந்தேதி தொடங்கினார். தமிழில் உரையைத் தொடங்கிய கமல்ஹாசன், "நீங்கள் வெள்ளைக்கார கல்வி கற்றது கண்டிப்பாய் கற்பூர புத்திதான். அது காற்றோடு போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதன் பிறகு உங்கள் பிச்சை பாத்திரம் உருமாற்றம் பெற்றது. பிச்சை குவளை பெரும் உண்டியலானது. அந்த உண்டியலை உடைத்து நிதி திரட்ட உதவுவோர், இன்று தமிழை, தமிழரை பார்த்து என்ன சொல்லுகிறீர்கள். தமிழ் பிச்சை எடுக்கக்கூட உதவாதா? ஒரு தர்க்கத்திய அறிவுரை தந்தாய். ஓரளவு உண்மைதான். தமக்கென உங்கள் நிதியை திரட்ட ஆங்கிலத்தில், இந்தியில் பிச்சை எடுக்கலாமே... தமிழ் பிச்சை எடுக்க உதவாது, திருடவும் உதவாது.

தமிழன் பிச்சை எடுக்க மாட்டான், அதுவும் உங்கள் பிச்சையை ஏற்கவே மாட்டான். தங்கச்சி, ஓட்டையும், நாட்டையும் இந்த கமலஹாசன் விற்கவே மாட்டான். உங்கள் சாபங்களில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. உங்களுக்கு இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில், நீங்கள் உணர என் திட்டத்தை சாபமாய் போடுகிறேன், கருணையுடன் நீங்களே ஏற்பீர்" என்று தெரிவித்தார்.

கடந்த ஆண்டு தேசிய கல்விக் கொள்கை விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பெரியார் பேசியதை குறிப்பிட்டு, "தமிழ் படித்தால் பிச்சை கூட கிடைக்காது. தமிழ் படித்தது பிச்சை எடுப்பதை தவிர உயிர் வாழ ஒன்றுக்கும் பயன்படவில்லை. இதற்காக செலவிட்ட காலத்தை வேறு துறையில் செலவிட்டிருந்தால், வாழ்வில் பயன் ஏற்பட்டிருக்கும்" என்று தெரிவித்தார். இதற்கு அப்போது பெரும் கண்டனங்கள் எழுந்தது. இதனை தான் தங்கச்சி என நிர்மலா சீதாராமனை குறிப்பிட்டு கமல்ஹாசன் பேசியதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News