தமிழ்நாடு செய்திகள்

"பேச்சுவார்த்தைக்கு அழைத்து 70 நாட்கள் ஆகிவிட்டது... ஆனால் திமுக இன்னும் குழு அமைக்கவில்லை" - கிரிஷ் ஜோடங்கர்

Published On 2026-02-10 19:22 IST   |   Update On 2026-02-10 19:22:00 IST
  • நாங்கள் திமுகவை குற்றம் சாட்டவில்லை. உண்மையைத்தான் சொல்கிறோம்.
  • டிசம்பரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பேச்சுவார்த்தைக்கு அழைத்தோம்.

தமிழ்நாடு, பஞ்சாப் உள்ளிட்ட 8 மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் ஆலோசனை நடத்தினார். இதில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ஜோடங்கள், 

"கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கப்படாதது குறித்து காங்கிரஸ் கமிட்டி கவலைகொள்கிறது. நாங்கள் தெளிவாக இருக்கிறோம். நவம்பர் மாதம் காங்கிரஸ், தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த 5 உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைத்தது. டிசம்பரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பேச்சுவார்த்தைக்கு அழைத்தோம். பேச்சுவார்த்தைக்கு அழைத்து இன்றுடன் கிட்டத்தட்ட 70 நாட்கள் ஆகிறது. நாங்கள் குழு அமைத்து இரண்டு மாதங்கள் ஆகிறது. விரைவாக அவர்கள் குழு அமைப்பார்கள், உடனடியாக பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவார்கள், எத்தனை இடங்கள், எந்த இடங்களில் நாங்கள் போட்டியிடப் போகிறோம் என்பது தெளிவுபடுத்தப்படும் என்று நம்பிக்கையோடு இருந்தோம். இருக்கிறோம்.

ஆனால் தற்போது வரை குழு அமைக்கப்படவில்லை. தொகுதிப் பங்கீடு, கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை தொடங்கப்படவில்லை. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் கோபமாக உள்ளனர். ஏன் இன்னும் பேச்சுவார்த்தை தொடங்கவில்லை என்று மீண்டும் மீண்டும் கேட்டு வருகின்றனர். நாங்கள் தாமதிப்பது போல் தெரிகிறது. நாங்கள் தாமதிக்கவில்லை. தொடர்ந்து முதலமைச்சரை பேச்சுவார்த்தைக்கு அழைத்து வருகிறோம். ஆனால் யாரும் முன்வரவில்லை. மாநிலத்தலைவர் சொன்னதுபோல இது வருத்தமளிக்கிறது. தேர்தல் வேகமாக நெருங்கி வருகிறது. எங்களுக்கு போதுமான நேரம் தேவை. பேச்சுவார்த்தை  தற்போதுவரை தொடங்கப்படாததற்கு என்ன காரணம் என தெரியவில்லை." என தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், "நாங்கள் திமுகவை குற்றம் சாட்டவில்லை. உண்மையைத்தான் சொல்கிறோம். கடந்த 70 நாட்களாக காத்திருக்கிறோம். நாங்கள் பலமுறை முயற்சி செய்தோம். முதலமைச்சரிடம் கேட்டுக்கொண்டோம். மேலும் விளக்கினோம் ஏன் முன்கூட்டியே பேச்சுவார்த்தையை தொடங்கவேண்டும் என. ஆரம்பத்திலேயே பேச்சுவார்த்தையை தொடங்கவேண்டும் என விரும்பினோம்." என தெரிவித்தார். 

பேச்சுவார்த்தை நடத்த திமுகவுக்கு உடன்பாடு இல்லையா என்ற கேள்விக்கு, "எங்களுக்கு தெரியவில்லை. ஆனால் நாங்கள் காத்திருக்கிறோம்" என தெரிவித்தார். 

Tags:    

Similar News