BJP | தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருவாரா? - மத்திய மந்திரி எல்.முருகன் பரபரப்பு பேட்டி
- கடந்த 11 ஆண்டுகளில் மட்டுமே ரூ.13 லட்சம் கோடி உள்கட்டமைப்பு வசதிகளுக்காகத் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசாங்கம் கொடுத்திருக்கிறது.
- பிரதமருடைய இந்த வருகை, தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்புகின்ற வருகையாக இருக்கும்.
திருச்சி:
மத்திய இணை மந்திரி எல்.முருகன் திருச்சியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்புவது என்று தமிழக மக்கள் முடிவு செய்திருக்கிறார்கள். ஏற்கனவே அது உறுதி செய்யப்படுகின்ற நேரமாக இந்த தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் இருக்கும்.
பிரதமர் நரேந்திர மோடி எப்பொழுதெல்லாம் தமிழகத்திற்கு வருகிறாரோ, அப்பொழுதெல்லாம் தமிழ்நாட்டினுடைய வளர்ச்சிக்காகவும், மேம்பாட்டிற்காகவும் நிதியை கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
தமிழ்நாட்டினுடைய வளர்ச்சி மட்டும்தான் அவர் கனவாக உள்ளது. கடந்த மார்ச் 1-ந்தேதி மதுரையில் கிட்டத்தட்ட 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு நலத்திட்டங்களை வழங்கினார். இன்று மீண்டும் கிட்டத்தட்ட ரூ.6 ஆயிரம் கோடி அளவிலான வளர்ச்சித் திட்டங்களைத் தமிழ்நாட்டிற்கு அர்ப்பணிக்க இருக்கிறார். இதில் ரெயில்வே திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அடங்கும்.
கடந்த 11 ஆண்டுகளில் மட்டுமே ரூ.13 லட்சம் கோடி உள்கட்டமைப்பு வசதிகளுக்காகத் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசாங்கம் கொடுத்திருக்கிறது. அதனால்தான், பிரதமர் நரேந்திர மோடியை அன்போடு வரவேற்பதற்குத் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சகோதரர்கள் அனைவரும் காத்துக்கொண்டிருக்கிறோம். பிரதமருடைய இந்த வருகை, தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்புகின்ற வருகையாக இருக்கும் என்றார்.
இதனை தொடர்ந்து த.வெ.க. தலைவர் விஜய் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வருவாரா? என்ற நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், எங்கள் கூட்டணிக்கு எல்லோரும் வருவார்கள் என்றார்.