Gas Shortage | கோவையில் சிலிண்டர் தட்டுப்பாடு? விரைந்து விளக்கமளித்த மாவட்ட ஆட்சியர்!
- தமிழகத்தில் வணிக ரீதியான சிலிண்டர்கள் வினியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
- சிலிண்டர்கள் கையிருப்பு இல்லாத சில ஓட்டல்களில் உணவு விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக நடத்தி வரும் தாக்குதலின் எதிரொலியாக உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் எரிபொருள் விநியோகம் தடைபட்டுள்ளது. இதன் காரணமாக எரிபொருள் பற்றாக்குறை மற்றும் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ஓட்டல் சேவை பெருமளவில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, நேற்று தமிழகத்தில் வணிக ரீதியான சிலிண்டர்கள் வினியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் உணவகங்கள் தற்காலிகமாக மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. சிலிண்டர்கள் கையிருப்பு இல்லாத சில ஓட்டல்களில் உணவு விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவையில் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை என்று ஆட்சியர் பவன் குமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், "கோவையில் தற்போதைக்கு சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை. தட்டுப்பாடு ஏற்பட்டால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிக்க வேண்டும். சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டால் அதனை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்," என்று கூறினார்.