தமிழ்நாடு செய்திகள்

கத்தாரில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த நபரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி

Published On 2025-08-31 22:11 IST   |   Update On 2025-08-31 22:11:00 IST
  • சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்தார் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
  • முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

கத்தார் நாட்டில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், பக்கிரிபாளையம் கிராமம், ரஹமான்பேட்டையைச் சேர்ந்த நவாஸ் (35 வயது) த/பெ.அன்வர் என்பவர் கத்தார் நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக கார் டிரைவராக பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த 25.8.2025 அன்று நிகழ்ந்த சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்தார் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

கத்தார் நாட்டில் சாலை விபத்தில் உயிரிழந்த நவாசின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த நவாசின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ஐந்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News