த.வெ.க. நிர்வாகிகள் மீது தாக்குதல்: விஜய் கண்டனம்
- சென்னை பாரிமுனையில் தமிழக வெற்றிக் கழகத்தினர் சர்வே எடுக்கச் சென்றனர்.
- அப்போது அங்கு வந்த ரவுடிகள் த.வெ.க. கட்சியினர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
சென்னை:
சென்னை பாரிமுனையில் சர்வே எடுக்கச் சென்ற த.வெ.க. கட்சியினர் மீது ரவுடிகள் தாக்குதல் நடத்தியதற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக விஜய் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:
சென்னை பாரிமுனைப் பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மீது 100-க்கும் மேற்பட்ட ரவுடிகள் அராஜக தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.
இந்தத் தாக்குதலில், 4 மாதக் கர்ப்பிணி உள்பட நிர்வாகிகள் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர. அவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
படுகாயம் அடைந்த கழகத் தோழர்கள் 6 பேரும் விரைவில் குணமடைய விழைகிறேன். தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்களிடையே பெருகி வரும் செல்வாக்கைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள், மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றுள்ள நம் கழகத் தோழர்கள் மீது இவ்வாறான வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
இது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயலாகும். தி.மு.க.வின் தோல்வி பயத்தையே இது காட்டுகிறது.
இந்த அராஜகத் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டப் போவது நிச்சயம் என தெரிவித்துள்ளார்.