முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது- நயினார் நாகேந்திரன்
- தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவரவர் தொகுதிகளில் இருந்து பணியாற்ற முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
- முதலமைச்சர், கவர்னரை பற்றியே முழுவதும் விமர்சனம் செய்து வந்தார்.
நெல்லை பெருமாள்புரத்தில் பா.ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. இன்று நிருபர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக முதலமைச்சருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால் தான் எல்லா எம்.எல்.ஏ.க்களையும் வேலை பார்க்க சொல்கிறார். அடுத்த ஓராண்டு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவரவர் தொகுதிகளில் இருந்து பணியாற்ற முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அப்படியென்றால் கடந்த 4 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.க்கள் எந்த வேலையையும் செய்யவில்லை என்பதை தான் அது குறிக்கிறது.
அவர் எதிர்கட்சி காரர்களை பார்த்து உங்களது கூட்டணி சரி இல்லை என்று சொன்னால் அது எந்த விதத்தில் சரியாக இருக்கும். அவர்களுடைய கூட்டணி சரி இல்லை என்று சொன்னால் அது பரவாயில்லை. எதிர்கட்சி கூட்டணியை போய் முதல்-அமைச்சர் சரியில்லை என சொல்லுகிறார். தோல்வி பயத்திலேயே இவ்வாறு அவர் கூறி கொண்டிருக்கிறார்.
முதலமைச்சர், கவர்னரை பற்றியே முழுவதும் விமர்சனம் செய்து வந்தார். தீர்மானம் மட்டுமல்லாது, சட்ட மன்றத்திலும் கவர்னரை நிறைய விமர்சனம் செய்தார்கள். தற்போது கவர்னருடன் அதிகாரப் போட்டி இல்லை என்று சொல்வதை எந்த வகையில் ஏற்றுக்கொள்ள முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, பாஜக நெல்லை தெற்கு மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், நெல்லை வடக்கு மாவட்ட தலைவர் முத்து பலவேசம் ஆகியோர் உடன் இருந்தனர்.