தமிழ்நாடு செய்திகள்

திருவண்ணாமலையில் பிரம்மாண்ட திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி தொடங்கியது

Published On 2025-12-14 18:03 IST   |   Update On 2025-12-14 18:03:00 IST
  • நிகழ்ச்சிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.
  • முதலமைச்சரின் வருகையையொட்டி திருவண்ணாமலை விழாக்கோலம் பூண்டுள்ளது.

திருவண்ணாமலையை அடுத்த மலப்பாம்பாடியில் உள்ள கலைஞர் திடலில் தி.மு.க. இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சிக்கு கட்சியின் இளைஞர் அணி செயலாளரான துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.

தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., முதன்மை செயலாளரும், நகராட்சி துறை அமைச்சருமான கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்களான ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, க.பொன்முடி எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களான திருச்சி சிவா, ஆ.ராசா, அந்தியூர் ப.செல்வராஜ், கனிமொழி கருணாநிதி, செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், வழக்கறிஞர் அணி செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி. உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர். பொதுப்பணித்துறை அமைச்சரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளருமான எ.வ.வேலு வரவேற்று பேசுகிறார்.

நிகழ்ச்சியில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு எழுச்சியுரையாற்ற உள்ளார். முடிவில் இளைஞர் அணி மாநில துணை செயலாளர் பிரபு கஜேந்திரன் நன்றி கூறுகிறார்.

முன்னதாக இன்று திருவண்ணாமலைக்கு வருகை தந்த முதலமைச்சருக்கு மாவட்ட எல்லையான மேல்செங்கத்தில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு முதலமைச்சருக்கு வரவேற்பு அளித்தனர். முதலமைச்சரின் வருகையையொட்டி திருவண்ணாமலை விழாக்கோலம் பூண்டுள்ளது.

Tags:    

Similar News