நந்தனம் கல்லூரியில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை- 3 பேர் அதிரடி கைது
- உணவகத்தில் வேலை செய்த 22 வயது பெண்ணை கல்லூரி வளாகத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
- பாலியல் வன்கொடுமை செய்த மற்ற நபர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை:
சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் 22 வயது பெண்ணை 5 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றிய பரபரப்பான தகவல்கள் வருமாறு:-
சென்னை நந்தனத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் ஆண், பெண் இருபாலரும் படித்து வருகிறார்கள். இந்த கல்லூரியில் உள்ள உணவகத்தில் புதுக்கோட்டையை சேர்ந்த 56 வயது நபரான குணசேகர் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இதே உணவகத்தில் வேலை செய்த 22 வயது பெண்ணை குணசேகர் கல்லூரி வளாகத்திலேயே வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மேலும் 5 பேரும் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பெண் அழுதுகொண்டே கல்லூரியில் உள்ள காவலாளியிடம் வேதனையுடன் தெரிவித்து உள்ளார்.
இதனையடுத்து உடனடியாக சைதாப்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, குணசேகர் கைது செய்யப்பட்டார். உணவக உரிமையாளரான அரசியல் பிரமுகர் செல்வம், டீ மாஸ்டர் ஆகியோரும் இந்த வழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே மாணவி ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுத்தப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அதேபோன்று நந்தனம் அரசு கலைக் கல்லூரியிலும் இளம்பெண் கல்லூரி வளாகத்தில் வைத்தே கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பது புதிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த பாலியல் விவகாரம் தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் தேடி வரும் நிலையில் இளம்பெண் வேறு யாருக்கும் இவர்களால் விருந்தாக்கப்பட்டாரா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே நந்தனம் கலைக்கல்லூரியில் இளம்பெண் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து இன்று மாணவர் அமைப்பினர் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
சென்னையில் கல்விக் கூடங்களில் இதுபோன்று பாலியல் அத்துமீறல் நடைபெறுவது தொடர் கதையாகி வருவதாக அவர்கள் குற்றம் சாட்டினார்கள்.
இது போன்ற பாலியல் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.
இந்தப் போராட்டம் காரணமாக நந்தனம் கலைக் கல்லூரி வளாகத்தில் இன்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு ஏராளமான போலீசாரும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.
சென்னையில் பிரபலமான நந்தனம் அரசு கலைக்கல்லூரியில் அரங்கேறி இருக்கும் இந்த பாலியல் சம்பவம் கல்வியாளர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.