தமிழ்நாடு செய்திகள்

ரூ.516 கோடி மதிப்பீட்டில் சென்னை மாநகருக்கு மேலும் 19 மேம்பாலங்கள் கட்டப்படுகிறது - மு.க.ஸ்டாலின்

Published On 2026-01-29 13:56 IST   |   Update On 2026-01-29 13:56:00 IST
  • திராவிட மாடல் ஆட்சி அமைந்த 5 வருடத்தில் சென்னையின் வளர்ச்சிக்காக நாம் செய்துள்ள திட்டங்களை எண்ணிப் பார்க்கிறேன்.
  • நீர் நிலைகள் புனரமைப்பு, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள், பூங்காக்கள், விளையாட்டு திடல் என நிறைய செய்து கொண்டே இருக்கிறோம்.

சென்னை:

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திரு.வி.க. நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெரம்பூர் நெடுஞ்சாலையில் வட சென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் ரூ.21 கோடியே 50 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 'அண்ணல் அம்பேத்கர் திருமண மாளிகையை' திறந்து வைத்தார். அங்கு 10 தம்பதிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து, சீர்வரிசைப் பொருட்களை வழங்கி மணமக்களை வாழ்த்தினார்.

சென்னையின் கட்டமைப்பு வசதியை பெருக்கிட வேண்டும். அதை நல்ல வகையில் உருவாக்கிட வேண்டும் என்பதில் அக்கறை எடுத்துக் கொண்டு அந்த பணியை நிறைவேற்றி கொண்டிருப்பதில், நம்முடைய திராவிட மாடல் அரசு சிறப்பாக செயல்படுவது உங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும்.

தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை. இங்கு ஏராளமான மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு உரிய வசதியை, நல்ல சுகாதாரத்தை உருவாக்கி தர வேண்டும் என்பதற்காக எத்தனையோ திட்டங்களை அதற்காக பல கோடி ரூபாய் செலவு செய்து பல்வேறு திட்டங்களை நம்முடைய அரசு உருவாக்கி கொண்டிருக்கிறது.

தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்கிற நேரங்களில் எல்லாம் ஏராளமான திட்டங்களை தமிழ்நாட்டிற்கு, குறிப்பாக சென்னை மாநகரத்திற்கு, நாம் கொண்டு வந்திருக்கிறோம்.

இன்றைக்கு சென்னையில் உள்ள மேம்பாலங்களை பார்த்தால், உங்களுக்கு நன்றாக தெரியும். சுரங்கப் பாதைகளாக இருந்தாலும் சரி, பூங்காக்களாக இருந்தாலும், மெட்ரோ ரெயில் வசதியாக இருந்தாலும் எல்லாமே தி.மு.க. ஆட்சியில் தான் கொண்டு வந்திருக்கிறோம்.

இந்த வளர்ச்சிப் பணியில் ஏதாவது விட்டுவிடக்கூடாது என்று கவனமாக பார்த்து பார்த்து உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொண்டிருக்கிறோம்.

திராவிட மாடல் ஆட்சி அமைந்த 5 வருடத்தில் சென்னையின் வளர்ச்சிக்காக நாம் செய்துள்ள திட்டங்களை எண்ணிப் பார்க்கிறேன். வடசென்னை பகுதியில் மேயர் சிட்டிபாபு பாலம், தென் சென்னை பகுதியில் தியாகராயநகர் பகுதியில் ஆகாய நடை மேம்பாலம் ஜெ.அன்பழகன் மேம்பாலம், வடசென்னை யில் செங்கை சிவம் பெயரில் ரூ.500 கோடி மதிப்பீட் டில் பல்வேறு பாலங்களை அமைத்துள்ளோம்.

அதுமட்டுமின்றி 516 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இன்னும் 19 பாலங்கள், சென்னை மாநகருக்கு உருவாக்கி தர பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.

சாலைப் பணிகளை எடுத்துக் கொண்டால், ரூ.2,359 கோடியே 73 லட்சம் மதிப்பீட்டில், 3455 கி.மீ. நீளத்திற்கு 19 ஆயிரத்து 849 பஸ் சாலைகள் மற்றும் உட்புற சாலைகளை அமைத்து உள்ளோம்.

இன்னும் 196 கி.மீட்டருக்கான 1315 சாலைப் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் மழை பெய்தால், என்ன நிலைமை என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் அது இப்போது எந்த அளவுக்கு மாற்றப்பட்டுள்ளது என்பதும் உங்களுக்கு நன்றாக புரியும்.

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், 2015-ல் செயற்கை வெள்ளம். அது சாதாரணமானதல்ல. செயற்கையாக உருவாக்கப்பட்ட வெள்ளம். அதனால் மக்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டார்கள் என்பதை இந்த சென்னை மறந்திடாது.

ஆனால் இன்றைக்கு இயற்கையாகவே சாதாரண மழை அல்ல. எவ்வளவு பெரிய மழை வந்தாலும் அதை சமாளிக்கிற ஆற்றல் சென்னை மாநகருக்கு கிடைத்துள்ளது என்றால், அது நாம் ஆட்சிக்கு வந்து நிறைவேற்றி இருக்கிற திட்டங்கள் தான் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. ரூ.6495 கோடி மதிப்பீட்டில், 1422 கி.மீ. நீளத்திற்கு மழை நீர் வடிகால் அமைக்க பணிகள் மேற்கொண்டு அதில், ரூ.4309 கோடிக்கு 1026 கி.மீ. நீளத்திற்கு பணிகள் முடித்து உள்ளோம். இது மட்டுமல்ல நீர் நிலைகள் புனரமைப்பு, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள், பூங்காக்கள், விளையாட்டு திடல் என நிறைய செய்து கொண்டே இருக்கிறோம்.

அந்த வகையில் இன்று திரு.வி.க.நகர் தொகுதியில், திறந்து வைக்கப்பட்டுள்ள அண்ணல் அம்பேத்கர் திருமண மாளிகை இதனால் இந்த பகுதி மக்களுக்கு மட்டுமல்ல, சுற்று வட்டார பகுதி மக்களுக்கும் நிச்சயமாக இந்த மண்டபம் பயன்பெற போகிறது.

இந்த திருமண மண்டபத்தில் 10 ஜோடிக்கு திருமணம் நடைபெறுகிறது. திருமணத்தை காணும் மணமக்களுக்கு நான் சொல்லும் அறிவுரை, உங்களுக்கு பிறக்கப் போகும் குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர் களை சூட்டுங்கள். ஏனென்றால் யாரையும் விமர்சனம் செய்து பேசவில்லை. யாரையும் கொச்சைப்படுத்தி பேசுவதாக நினைக்க வேண்டாம்.

ஆங்கிலத்தில், வடமொழியில் பெயர் என்பதை பார்க்கிறோம். இதை சொல்கிறபோது என் பெயர் ஸ்டாலின் இது தமிழ் பெயர் இல்லை. இருந்தாலும் அந்த பெயர் வைத்ததற்கு காரணம் உண்டு. அது உங்களுக்கு தெரியும்.

ரஷியாவில் புரட்சி செய்த ஸ்டாலின் நினைவு கொண்டு கம்யூனிஸ்டு சித்தாந்தத்தின் மீது தலைவர் கலைஞர் கொண்ட நம்பிக்கையின் அடிப்படையில், அந்த பெயரை எனக்கு சூட்டி தலைவர் கலைஞர் மகிழ்ந்தாரே தவிர வேறு எதுவும் கிடையாது. அதனால் உங்களை நான் கேட்டுக் கொள்வது அழகான தமிழ் பெயர்களை உங்களுக்கு பிறக்கும் குழந் தைகளுக்கு மணமக்களுக்கு மட்டுமல்ல, வரக்கூடிய காலக் கட்டத்திலே, பேரன், பேத்தி வரும்போது அந்த குழந்தைகளுக்கும் தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, தாயகம் கவி எம்.எல்.ஏ., வெற்றியழகன், ஜோசப் சாமுவேல், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் தலைவர் ப.ரங்கநாதன், கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் உறுப்பினர் செயலர் பிரகாஷ், மாநகராட்சி ஆணையாளர் குமரகுருபரன், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் முதன்மை செயல் அலுவலர் சிவஞானம், மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையாளர் கவுஷிக், மண்டல குழுத் தலைவர் சரிதா மகேஷ்குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News