2020 டெல்லி கலவரம் ஆட்சிக் கவிழ்ப்புக்கான சதி - உச்சநீதிமன்றத்தில் காவல்துறை பிரமாண பத்திரம் தாக்கல்
- JNU பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் ஷர்ஜீல் இமாம் மற்றும் உமர் காலித் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
- குடியுரிமை திருத்தச் சட்டத்தை இந்தியாவின் முஸ்லிம் சமூகத்தின் படுகொலையாக சித்தரித்து இந்த விவகாரத்தை உலகளாவிய பிரச்சினையாக மாற்ற திட்டமிடப்பட்டது.
மத்திய பாஜக அரசின் குடியுரிமை திருத்த (சிஏஏ) சட்டம் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2020 பிப்ரவரியில் வடகிழக்கு டெல்லியில் நடந்த எதிர்ப்பு போராட்டங்கள் வன்முறையாக மாறியது.
இந்த கலவரத்தில் குறைந்தது 53 பேர் கொல்லப்பட்டனர். மொத்தம் 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கலவரத்தை தூண்டியதாக JNU பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் ஷர்ஜீல் இமாம் மற்றும் உமர் காலித் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் உட்பட இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரின் ஜாமீன் மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இந்த மனுக்களை எதிர்த்து டெல்லி காவல்துறை 389 பக்க பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
அதில், 2020 டெல்லி கலவரம் ஆட்சிகவிழ்ப்பை நோக்கமாகக் கொண்டது என்றும், சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கவும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை இந்தியாவின் முஸ்லிம் சமூகத்தின் படுகொலையாக சித்தரித்து இந்த விவகாரத்தை உலகளாவிய பிரச்சினையாக மாற்றவும் முயற்சி நடந்ததாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
கலவரம் ஒரு வகுப்புவாத சதி என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனர்.
இந்த சதித்திட்டத்திற்கு உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் மூளையாக செயல்பட்டனர். அவர்கள், உரைகள், துண்டுப்பிரசுரங்கள் மற்றும் வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் கூட்டத்தைத் திரட்டினர்.
கலவரம் நடந்த இடத்தில் அவர்கள் இருவரும் இல்லை என்பதால் மட்டுமே அவர்கள் குற்றமற்றவர்கள் என்று ஆகிவிடாது என்றும் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் உட்பட ஐந்து பேரின் ஜாமீன் குறித்து நாளை உச்ச நீதிமன்றம் பரிசீலிக்க உள்ளது.