செய்திகள்

திருப்பத்தூர் அருகே பெண் துப்புரவு பணியாளர் குத்திக்கொலை- அண்ணன் மகன் கைது

Published On 2019-04-06 11:53 GMT   |   Update On 2019-04-06 11:53 GMT
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே பெண் துப்புரவு பணியாளர் குத்திக்கொல்லப்பட்டது தொடர்பாக அண்ணன் மகனை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்தூர்:

திருப்பத்தூர் அருகே உள்ள கெஜல்நாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் திருமலை. கூலித் தொழிலாளி. இவரது மனைவி உமா (வயது 46), அதே பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் துப்புரவு பணியாளராக வேலைபார்த்து வந்தார்.

அதே ஊரைச் சேர்ந்தவர் உமாவின் அண்ணன் கோவிந்தராஜ். இவரது மகன்கள் மணிகண்டன், மாதேஷ் (21). உமாவிற்கும், கோவிந்தராஜுக்கும் இடையே பணப்பிரச்சனை தொடர்பாக தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் உமா நேற்று வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த மாதேஷ், உமாவிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த மாதேஷ் உமாவின் முகம், கழுத்து உள்ளிட்ட இடங்களில் கத்தியால் சரமாரியாக குத்தினார். படுகாயம் அடைந்த உமா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். அதன்பின்னர் மாதேஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

தகவல் அறிந்த கந்திலி போலீசார் இன்ஸ்பெக்டர் பழனி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து, உமாவை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய மாதேஷை கைது செய்தனர். அவர் கந்திலியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் ஊழியராக பணியாற்றி வருகிறார். கைதான அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News