search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெல்லை"

    • தமிழகம் முழுவதும் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது.
    • தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    தமிழகம் முழுவதும் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், கன்னியாகுமரி கடல் பகுதிகளில் காற்றானது மணிக்கு 40-45 கி.மீ முதல் அதிகபட்சமாக 55 கி.மீ வரை வீசக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    எனவே, திருநெல்வேலி மாவட்ட மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

    • தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
    • குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை.

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் நேற்று சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. நெல்லை சந்திப்பு, டவுன், வண்ணார்பேட்டை, பேட்டை, சமாதானபுரம், கே.டி.சி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    தென்காசி, செங்கோட்டை, ஆய்க்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றும் விடிய விடிய மழை பெய்தது.

    மலைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக குற்றாலம் மெயினருவியில் இரவில் அதிக அளவு தண்ணீர் வரத்து ஏற்பட்டது. இதனால் இரவில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவிகளில் மிதமான தண்ணீர் விழுந்தது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கழுகுமலை, கோவில்பட்டி, கடம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களில் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. ஓட்டப்பிடாரத்தில் நேற்று மாலையில் கனமழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 17 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    தூத்துக்குடியில் பெய்த மழையால் உப்பளங்களில் தண்ணீர் தேங்கியது. மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரையிலான தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ, ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலை கிராமங்கள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி

    களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.இதனால் அணைக்கரை தரைப்பாலம் மூழ்கியது.

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள மூணாம்சேத்தி கிராமத்தை சேர்ந்த தொழிலாளி சந்திரசேகர் நேற்று இரவு குடும்பத்துடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது பெய்த கனமழையால் மேற்கூரையின் சிமெண்ட் காரை பெயர்ந்து விழுந்ததில் சந்திரசேகர் பலத்த காயம் அடைந்தார்.

    திருச்சி மாவட்டத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. மாலையில் வானம் மப்பும் மந்தார முமாக காணப்பட்டது. பின்னர் இரவில் மழை பெய்யத் தொடங்கியது. திருச்சி மாநகரில் விடிய விடிய சாரல் மழை பெய்தது.

    தஞ்சை, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர், திருவோணம், பேராவூரணி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நாகை, வேதாரண்யம், மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் விடிய விடிய மழை வெளுத்து வாங்கியது. தொடர்ந்து இன்று காலையிலும் மழை இடைவிடாமல் பெய்தது.

    தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் மழையால் மூலவைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணை நீர்மட்டம் ஒரே நாளில் 8 அடி உயர்ந்தது. நேற்று 105 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 113.16 அடியாக உயர்ந்துள்ளது.

    ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் ராமேசுவரம் கோவில், அப்துல்கலாம் மணி மண்டபம், பஸ் நிலையம் மற்றும் முக்கிய சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது.

    ராமேசுவரத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மதுரை பெரியார் பஸ் நிலையம், சிம்மக்கல், கோரிப்பாலையம், புதூர், ஒத்தக்கடை, திருப்பரங்குன்றம், அவனியாபுரம், வில்லாபுரம் ஆகிய பகுதிகளில் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது.

    சேலம் ஆத்தூர், நத்தக்கரை, சங்ககிரி, கரியகோவில், மேட்டூர், தம்மம்பட்டி, கெங்கவல்லி உள்ளிட்ட பல பகுதிகளிலும் மழை பெய்தது. கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் கிராமத்தில் உள்ள 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரச மரம் சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் வேருடன் சாய்ந்தது. புதுச்சேரி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இன்று காலை முதல் சாரல் மழைபெய்து வருகிறது.

    • சி.சிடி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசார்.
    • ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரியும் வாலிபர் என்பது தெரியவந்தது.

    நெல்லை:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சென்னையில் இருந்து தினந்தோறும் நெல்லைக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    அதன்படி படுக்கை வசதி கொண்ட அரசு விரைவு சொகுசு பஸ் நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு நேற்று மதியம் நெல்லைக்கு வந்தது.

    நெல்லை புதிய பஸ்நிலை யத்தில் பயணிகளை இறக்கிவிட்டு வண்ணார்பேட்டையில் உள்ள பணிமனைக்கு பஸ் வந்தது. அதன் பின்னர் சிறிது நேரம் கழித்து வழக்கம் போல் பஸ்சை ஊழியர்கள் சுத்தம் செய்தனர். அப்போது அந்த பஸ்சில் 9-வது எண் படுக்கைக்கு கீழ் ஒரு துப்பாக்கியும், சுமார் 2½ அடி நீளம் கொண்ட ஒரு அரிவாளும் கிடந்தது.

    இதுகுறித்து பணிமனை மேலாளர் கண்ணன் பாளை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனே குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜூலியட், சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் பணிமனைக்கு விரைந்து வந்து அரிவாள் மற்றும் துப்பாக்கியை கைப்பற்றினர்.

    மேலும் அந்த பஸ்சில் வேறு ஏதும் ஆயுதங்கள் இருக்கிறதா? என்று பஸ் முழுவதையும் சோதனை செய்தனர். பின்னர் அவர்கள் அரிவாள், துப்பாக்கியை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

    இந்த சம்பவம் குறித்து பணிமனை மேலாளர் கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் இந்திய தண்டனை சட்டம் 102 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து பஸ்சில் வந்தவர்கள், அந்த இருக்கையில் பயணித்த நபர் யார் என்பது குறித்த விபரங்களை போலீசார் சேகரித்தனர்.

    அப்போது அந்த இருக்கையில் பயணித்தவர் கோவில்பட்டியில் இறங்கி இருப்பது தெரியவந்தது. மேலும் அந்த நபர் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்ததால் பெயர் மட்டுமே இருந்தது. அவரது முகவரி இல்லை.

    இதையடுத்து தனிப்படை போலீசார் கோவில்பட்டிக்கு விரைந்தனர். அங்கு வழக்கமாக அரசு விரைவு பஸ்கள் நின்று செல்லும் பகுதியில் பொருத்தப் பட்டுள்ள சி.சிடி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசார் அந்த நபர் கோவில்பட்டியை சேர்ந்தவர் என்பதை கண்டுபிடித்தனர்.

    தொடர்ந்து அந்த நபரை பிடித்து விசாரித்தபோது, அவர் சென்னையில் ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரியும் வாலிபர் என்பது தெரியவந்தது. அவரிடம் விசாரித்தபோது, தனது பாட்டியின் இறப்பு நிகழ்விற்கு சென்னையில் இருந்து விடுப்பு எடுத்து வந்ததாகவும், படுக்கைக்கு கீழ் ஆயுதங்கள் இருந்த விஷயமே போலீசார் தன்னை விசாரிக்கும்போது தான் தெரியும் என்று கூறியுள்ளார்.

    இதையடுத்து அவரை இன்று பாளை போலீஸ் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க போலீசார் உத்தர விட்டுள்ளனர். அங்கு வைத்து துணை கமிஷனர் ஆதர்ஷ் பசேரா தலைமையில் விசாரணை நடத்தப்பட உள்ளது.

    அந்த வாலிபர் கூறுவது உண்மையெனில், இந்த ஆயுதங்களை வேறு யார் பதுக்கி வைத்திருந்தார்கள்? என்பதை அறியும் கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரசு பேருந்தில் இருந்து துப்பாக்கி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    • சம்பந்தப்பட்ட அரசு பேருந்தில் தடய அறிவியல் துறையினர், கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    நெல்லை:

    சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்த அரசு விரைவு பேருந்தில் துப்பாக்கி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அரசு பேருந்தில் இருந்து துப்பாக்கி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சம்பந்தப்பட்ட அரசு பேருந்தில் தடய அறிவியல் துறையினர், கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

    • சென்னையில் இருந்து நெல்லைக்கு தினசரி ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
    • இன்று எழும்பூர் சிறப்பு ரெயில் இரவு 9.30 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் இருந்து நெல்லைக்கு தினசரி ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அதே போல் நெல்லையில் இருந்தும் சென்னைக்கும் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    தினமும் நெல்லையில் இருந்து சென்னைக்கு வரும் சென்னை எழும்பூர் சிறப்பு ரெயில் மலை 6.45க்கு நெல்லையில் இருந்து புறப்படும்.

    இந்நிலையில், இந்த ரெயில் இன்று 2.45 மணி நேரம் தாமதாக புறப்படும் என்று தென்னிந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது. ஆகவே இன்று எழும்பூர் சிறப்பு ரெயில் இரவு 9.30 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    நெல்லையில் இருந்து சென்னைக்கு இன்று இரவு பயணம் மேற்கொள்பவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். 

    • ரெயிலில் 3 நேரமும் சைவ உணவுகளுடன் பயணத்தின் போது போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தி தரப்படும்.
    • புண்ணிய யாத்திரை மேற்கொள்ளும் பயணிகளுக்கு தென் தமிழக பாரம்பரிய உணவுகள் தயாரித்து வழங்கப்படும்.

    திண்டுக்கல்:

    ஐ.ஆர்.சி.டி.சி. தென் மண்டல குழு பொது மேலாளர் ராஜலிங்கம் திண்டுக்கல்லில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஐ.ஆர்.சி.டி.சி. சார்பில் பாரத் கவுரவ் சுற்றுலா ரெயில் அறிமுகம் செய்யப்பட்டது. அது தற்போது ஜூன் 6-ந் தேதி நெல்லையில் இருந்து புண்ணிய தீர்த்த யாத்திரை என்ற பெயரில் 500க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட உள்ளது.

    நெல்லையில் தொடங்கி விருநகர், மதுரை, சென்னை வழித்தடத்தில் 16 இடங்களில் நின்று பயணிகளை ஏற்றிக் கொண்டு புண்ணிய தலங்களான காசி, அயோத்தி, திருவேணி சங்கமம், கயா போன்ற இடங்களுக்கு செல்கிறது. 16 பெட்டிகளை கொண்ட இந்த ரெயிலில் 3 நேரமும் சைவ உணவுகளுடன் பயணத்தின் போது போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாவலர்கள் பணியில் இருப்பார்கள். புண்ணிய யாத்திரை மேற்கொள்ளும் பயணிகளுக்கு தென் தமிழக பாரம்பரிய உணவுகள் தயாரித்து வழங்கப்படும்.

    இதில் பயணிக்க பெரியவர்களுக்கு ரூ.18650, குழந்தைகளுக்கு ரூ.17560 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. முன் பதிவு தற்போதே தொடங்கி விட்டதால் பயணிகள் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அம்பாசமுத்திரத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்தார்.
    • அம்பாசமுத்திரத்தில் இருந்து, கார் மூலம் அகஸ்தியர் பட்டிக்கு பிரதமர் மோடி விரைந்தார்.

    பாராளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி தமிழகத்தில் முதற்கட்டமாக நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், போட்டிடும் கட்சிகள் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், பாஜக வேட்பாளர்களை ஆதரிப்பதற்காக பிரதமர் மோடி இன்று நெல்லை வந்தடைந்தார்.

    திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அம்பாசமுத்திரத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்தார்.

    பின்னர், அம்பாசமுத்திரத்தில் இருந்து, கார் மூலம் அகஸ்தியர் பட்டிக்கு பிரதமர் மோடி விரைந்தார்.

    நெல்லை அகஸ்தியர்பட்டி பிரசார பொதுக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    தொடர்ந்து, வணக்கம் என கூறி தமிழில் உரையை தொடங்கினார் பிரதமர் மோடி.

    • புதிய சிந்தனையோடு இந்தியாவோடு சேர்ந்து தமிழகமும் சிந்திக்கிறது.
    • காங்கிரசும், தி.மு.க.வும் நாட்டை பிளவுபடுத்தி வருகின்றன.

    நெல்லை:

    நெல்லையில் நடந்த பாரதிய ஜனதா பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-

    நெல்லையப்பர், காந்திமதி அம்மனுக்கு எனது நமஸ்காரங்கள். நாட்டுக்காக உழைக்க நெல்லையப்பர், காந்திமதி அம்மன் நல்லாசி தர வேண்டும். திருநெல்வேலி அல்வா போலவே நெல்லை மக்களும் மிகவும் இனிப்பானவர்கள். திருநெல்வேலி வந்துள்ளதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.

    தமிழக மக்கள் பா.ஜ.க. மீது வைத்துள்ள நம்பிக்கையை நாங்கள் காப்பாற்றுவோம். தமிழகத்திற்காக நான் அளித்த அத்தனை உறுதிமொழிகளையும் கண்டிப்பாக நிறைவேற்றுவேன். இது எனது உத்தரவாதம். பா.ஜ.க.வின் சமூக நீதி, நேர்மையான அரசியலை தமிழக மக்கள் கவனித்து வருகிறார்கள்.

    புதிய சிந்தனையோடு இந்தியாவோடு சேர்ந்து தமிழகமும் சிந்திக்கிறது. நாடு ஒரு புதிய சிந்தனையோடு செயல்பட்டு வருகிறது. இதன் பலன் தமிழகத்துக்கு கிடைக்கும்.

    புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகித்து வருகிறது. உலககெங்கிலும் வசிக்கும் தமிழ் மக்கள் அவர்களுக்கு கிடைக்கும் மரியாதையை நினைத்து பெருமைப்படுகிறார்கள். தமிழக மக்களின் அன்பு எங்களுக்கு உற்சாகத்தை அளிக்கிறது.

    தமிழக மக்கள் எதிர்காலத்தை பற்றிய தெளிவுடன் இருப்பார்கள். அவர்கள் தொழில்நுட்ப அறிவில் மிகவும் சிறந்தவர்கள். இதுதான் தமிழகத்தை பா.ஜனதாவுடன் நெருக்கமாக்குகிறது. பா.ஜனதா கட்சியின் அணுகுமுறையும் சித்தாந்தமும் தமிழக மக்களின் எண்ணத்தோடு ஒத்துப்போகிறது.

    உலகெங்கிலும் வசிக்கும் தமிழக மக்கள் அவர்களுக்கு கிடைக்கும் மரியாதையை நினைத்து பெருமைப்படுகிறார்கள். இது மத்திய அரசின் செயல்பாடுகளால் வருகிறது. பா.ஜ.க. ஆட்சியில் தமிழகம் டெல்லிக்கு மிக அருகே வந்திருக்கிறது.

    5 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் 21 லட்சம் வீடுகளில் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது. இன்று 1 கோடியாக உயர்ந்துள்ளது. இன்று தமிழகத்தில் 40 லட்சம் மகளிருக்கு உஜ்வாலா எரிவாயு சிலிண்டர் கிடைக்கிறது. இதனால் எனக்கு தமிழகத்தில் பெண்களின் ஆதரவு அதிகரித்துள்ளது.

    இன்று நாடு 100 அடி முன்னேறுகிறது என்றால் தமிழகமும் மிக வேகமாக 100 அடி முன்னேறும். இது மோடியின் உத்தரவாதம்.

    தமிழகத்தில் 50 லட்சம் பேர் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் இலவச மருத்துவ உதவி பெறுகிறார்கள். மக்கள் விருப்பத்திற்கு எதிராக மாநில அரசிடம் கணக்கு கேட்க வேண்டிய நேரம் இது. உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை படுகுழியில் தள்ளி விட்டார்கள். நான் இதை தொடர விட மாட்டேன். இது மோடியின் உத்தரவாதம்.

    பல ஆண்டு காத்திருப்புக்கு பிறகு அயோத்தியில் குழந்தை ராமர் ஆலயம் அமைந்திருக்கிறது. அயோத்தி ராமர் கோவில் பற்றி பாராளுமன்றத்தில் விவாதம் நடந்தபோது தி.மு.க. எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். தமிழக மக்களிடம் நாங்கள் பாரபட்சம் காட்டவில்லை.

    காங்கிரசும், தி.மு.க.வும் நாட்டை பிளவுபடுத்தி வருகின்றன. தமிழகத்தில் இருந்து ஒருவரை நாங்கள் பாராளுமன்ற உறுப்பினராக்கி உள்ளோம். அவரை மத்திய பிரதேசத்தில் இருந்து தேர்வு செய்துள்ளோம்.

    தமிழகத்தின் மீது அதிக அன்பு எங்களுக்கு இருக்கிறது. கத்தாரில் இருந்து தண்டனை பெற்ற 8 முன்னாள் ராணுவ வீரர்களை இந்தியா அழைத்து வந்துள்ளோம்.

    எங்களுக்கு நாடுதான் முதலிடம், மக்கள்தான் முக்கியம். இது வலிமையான பாரதம், தமிழகத்தைச் சேர்ந்த அபிநந்தன் பாகிஸ்தான் எல்லையில் விமானத்தில் விழுந்தார். அவரை ஒரு கீறல் கூட இல்லாமல் கூட்டிட்டு வந்தோம். இலங்கையில் 5 மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்தனர். அவர்களை மீட்டு வந்தோம்.

    நம் நாட்டு மக்கள் மீது யாரும் கை வைக்க முடியாது. ஏனென்றால் இங்கு இருப்பது மோடி. மோடியை மீறி யாரும் இந்தியன் மீது கை வைக்க முடியாது.

    தவறானவர்களை திருத்த வேண்டிய நேரம் இது. இந்த அரசுகளை மாற்ற வேண்டிய காலம் வந்து விட்டது. தி.மு.க. பொய் வேஷம் போடுகிறது. தி.மு.க. பிரித்தாளும் சூழ்ச்சியை செய்கிறது. இதை நாம் தெளிவாக பார்க்க முடிகிறது. ஆனால் இனி தி.மு.க.வை பார்க்க முடியாது. இனி தி.மு.க. இங்கு இருக்க முடியாது. ஏனென்றால் இங்கு அண்ணாமலை வந்து விட்டார். உங்கள் கூட அண்ணாமலை இருக்கிறார். இனி தி.மு.க.வை நீங்கள் எங்கு தேடினாலும் கிடைக்காது. தி.மு.க. இங்கு முற்றிலுமாக அகற்றப்படும்.

    நெல்லை, சென்னை வந்தே பாரத் ரெயில் மூலம் வணிகம் பெருகி இருக்கிறது. தமிழ்நாட்டில் இனி தி.மு.க. என்ற ஒரு கட்சி இருக்காது. அக்கட்சியின் வேஷம் விரைவில் கலையும்.

    மத்திய அரசின் திட்டங்களுக்கு மாநிலத்தில் உள்ள தி.மு.க. அரசு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. நெல்லை, தூத்துக்குடியில் சோலார் மின் உற்பத்தி நிலையம், காற்றாலை, விருதுநகரில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும். ராமர் கோவில் விவகாரத்தில் தி.மு.க. வெறுப்பு அரசியலை பரப்பியது.

    தமிழ் வேறு, இந்தி வேறு என்னும் பிரித்தாளும் சூழ்ச்சியை தி.மு.க. கையாள்கிறது. இந்தி பேசும் மாநிலத்தில் இருந்து தமிழரான எல்.முருகனை பா.ஜனதா எம்.பி.யாக்கி உள்ளது.

    மத்திய அரசின் மீது குற்றம் சொல்வதை தி.மு.க. வேலையாக வைத்துள்ளது. அதையும் தாண்டி மக்களுக்கு நன்மை செய்துள்ளோம்.

    தனது குடும்ப வளர்ச்சியை தவிர மாநிலத்தின் வளர்ச்சியை தி.மு.க. கண்டு கொள்வதில்லை.

    தமிழக மாணவர்கள் மருத்துவம், பொறியியல் கல்வியை தாய் மொழியில் படிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தென் தமிழக மக்களின் பிரச்சினைகளை பா.ஜ.க. நன்கு அறிந்துள்ளது. தங்கள் குடும்பத்தை வளர்ப்பதற்காகவே சிலர் ஆட்சிக்கு வர விரும்புகிறார்கள். என்ன வளர்ச்சி பணிகளை செய்ய போகிறோம் என அவர்களுக்கு எந்த திட்டமும் இல்லை.

    ஆட்சிக்கு வந்தால் யார் அமைச்சர் ஆவார்கள் என்ற திட்டம் மட்டும் அவர்களிடம் இருக்கிறது. தமிழ்நாடு எப்போதும் நாட்டுக்கு வழிகாட்டியாக இருந்திருக்கிறது. எனக்கு நம்பிக்கை இருக்கிறது. தங்களுடைய குழந்தைகளின் நல்வாழ்வுக்கு பாடுபடுபவர்களை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்.

    இங்கு எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்கள் வளர்ச்சிக்கான பாதையை வகுத்தார்கள். தங்கள் வாரிசுகளை முன்னிலைப்படுத்துவதை மட்டுமே சிலர் நோக்கமாக வைத்துள்ளனர்.

    தமிழ் மொழியில் பேச முடியவில்லையே என்ற ஏக்கம் எனக்கு இருக்கிறது. அவ்வப்போது ஒரு சில வார்த்தைகளை தமிழில் பேசுகிறேன். ஆனால் முழுமையாக தமிழில் பேச முடியவில்லையே என்கிற வருத்தம் எனக்குள் இருக்கிறது.

    நான் என்ன பேசுகிறேன் என்று ஆர்வத்தோடு கேட்கிறீர்கள். அதற்காக உங்களுக்கு என்னுடைய 100 கோடி வணக்கம்.

    நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை 2 கை எடுத்து கும்பிடுகிறேன். தலைவணங்குகிறேன். நீங்கள் எனக்கு ஆசியும், வாழ்த்தும் கொடுக்க வேண்டும்.

    எதிர்க்கட்சி தலைவர்கள் கூட இன்று பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு வாக்காளரிடமும் நமது திட்டங்களை கொண்டு சேர்க்க வேண்டும். தமிழ்நாடு எனக்கு இத்தகைய ஆதரவு, ஆசீர்வாதம் தருவது எனது பாக்கியம்.

    ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி தி.மு.க.வும், காங்கிரசும் சம்பாதிக்க நினைக்கிறது. தமிழகத்தில் தி.மு.க. வாரிசு அரசியலை முன்னெடுக்கிறது. குடும்ப அரசியலில் ஈடுபடுவோருக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். நீங்கள் எவ்வளவு உழைக்கிறீர்களோ அதை விட அதிகமாக நான் உங்களுக்காக உழைப்பேன்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    • பாஜக ஆட்சியில் தமிழகம் டெல்லிக்கு மிக அருகே வந்திருக்கிறது.
    • தமிழகத்தில் இன்று 40 லட்சம் மகளிருக்கு உஜ்வாலா எரிவாயு சிலிண்டர் கிடைக்கிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழக மக்கள் பாஜகவின் பின்னே வர தொடங்கி உள்ளனர்.

    * பாஜக ஆட்சியில் தமிழகம் டெல்லிக்கு மிக அருகே வந்திருக்கிறது.

    * 5 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் 21 லட்சம் வீடுகளில் குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டது. இன்று அது 1 கோடியாக உயர்ந்துள்ளது.

    * தமிழகத்தில் இன்று 40 லட்சம் மகளிருக்கு உஜ்வாலா எரிவாயு சிலிண்டர் கிடைக்கிறது.

    * உஜ்வாலா எரிவாயு சிலிண்டர் மூலம் தமிழக பெண்களின் வாழ்க்கை எளிதாகி உள்ளது. இதனால் எனக்கு தமிழகத்தில் பெண்களின் ஆதரவு அதிகரித்துள்ளது.

    * இன்று நாடு 100 அடி முன்னேறுகிறது என்றால், தமிழகமும் மிக வேகமாக 100 அடி முன்னேறும், இது மோடியின் உத்தரவாதம்.

    * தமிழகத்தில் 50 லட்சம் பேர் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ உதவி பெறுகிறார்கள்.

    * மக்கள் விருப்பத்திற்கு எதிராக செயல்படும் மாநில அரசிடம் கணக்கு கேட்க வேண்டிய நேரம் இது.

    * உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை படுகுழியில் தள்ளிவிட்டார்கள்.

    * நான் இதை தொடர விட மாட்டேன். இது மோடியின் உத்தரவாதம்.

    * பல ஆண்டு காத்திருப்புக்கு பின் அயோத்தியில் குழந்தை ராமர் ஆலயம் அமைந்திருக்கிறது.

    * அயோத்தி ராமர் கோவில் பற்றி பாராளுமன்றத்தில் விவாதம் நடந்தபோது திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

    * காங்கிரசும், திமுகவும் நாட்டை பிரிக்கின்றன.

    * தமிழகத்தில் இருந்து ஒருவரை நாங்கள் பாராளுமன்ற உறுப்பினராக்கி உள்ளோம். அவரை ம.பி.யில் இருந்து தேர்வு செய்துள்ளோம்.

    * தமிழகத்தின் மீது அதிக அன்பு எங்களுக்கு இருக்கிறது.

    * கத்தாரில் இருந்து தண்டனை பெற்ற 8 முன்னாள் ராணுவ வீரர்களை இந்தியா அழைத்து வந்துள்ளோம்.

    * மத்திய அரசுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. தவறானவர்களை திருத்த வேண்டிய நேரம் இது.

    * மோடியை மீறி இந்தியா மீது யாரும் கை வைக்க முடியாது.

    * தமிழகத்தில் தி.மு.க. இனி இருக்காது, எங்கு தேடினாலும் கிடைக்காது.

    * வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கு, வளர்ச்சியடைந்த தமிழகம் மிக அவசியம்.

    * நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயில் மூலம் வணிகம் பெருகி இருக்கிறது.

    * நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய இடங்களில் சூரிய மின்சக்தி திட்டங்கள் தொடங்கப்பட்டு உள்ளன.

    * வளர்ச்சி திட்டங்கள் தமிழகத்தில் மிக வேகமாக செயல்பட்டு வருகிறது.

    * விருதுநகரில் பிரதம மந்திரி ஜவுளி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

    • பாஜக அரசு ஒரு நேர்மறையான சிந்தனையோடு செயல்படுகிறது.
    • தோளோடு தோள் நின்று நடைபோடுபவர்கள் தமிழர்கள்.

    நெல்லை:

    நெல்லை பாளையங்கோட்டையில் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அவரை பார்த்து தொண்டர்கள் உற்சாக முழக்கமிட்டனர்.

    மேடையில் அண்ணாமலை, எல்.முருகன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் அமர்ந்துள்ளனர். பாஜக பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் ஜான் பாண்டியன், தேவநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி உரையாற்றினார். "அனைவருக்கும் வணக்கம்" என தமிழில் கூறி பிரதமர் மோடி உரையை தொடங்கினார். அவர் கூறியதாவது:

    * அனைவருக்கும் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும்.

    * அல்வாவை போல நெல்லை மக்களும் இனிமையானவர்கள்.

    * தமிழ்நாட்டின் அனைத்து மக்களும் பாஜகவின் பக்கம் நிற்பதை நான் பார்க்கிறேன்.

    * பாஜக அரசு ஒரு நேர்மறையான சிந்தனையோடு செயல்படுகிறது.

    * தமிழக மக்களின் அன்பு எங்களுக்கு உற்சாகத்தை அளிக்கிறது.

    * உங்களின் நம்பிக்கையை பாஜக நிச்சயம் நிறைவேற்றும் என்பது மோடியின் உத்தரவாதம்.

    * தோளோடு தோள் நின்று நடைபோடுபவர்கள் தமிழர்கள்.

    * பாஜக தான் தமிழகத்தை சரியான பாதையில் கொண்டு செல்லக்கூடிய கட்சி.

    * மாற்று எரிசக்தி துறையில் உலகின் முதன்மையான நாடாக இந்தியா உள்ளது.

    * நாடு ஒரு புதிய எண்ணத்தோடு பணியாற்றி வருகிறது. இதன் பலன் தமிழகத்திற்கு கிடைக்கும்.

    * உலகெங்கிலும் வசிக்கும் தமிழ் மக்கள் அவர்களுக்கு கிடைக்கும் மரியாதையை நினைத்து பெருமைப்படுகிறார்கள்.

    * இது மத்திய அரசின் செயல்பாடுகளால் வருகிறது என்று கூறினார்.

    • நெல்லையில் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
    • பிரதமரை பார்த்து தொண்டர்கள் உற்சாக முழக்கமிட்டனர்.

    நெல்லை:

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். பல்லடம், மதுரை ஆகிய இடங்களில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இரவில் அவர் மதுரையில் தங்கினார்.

    இன்று மதுரை விமான நிலையத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் தூத்துக்குடிக்கு புறப்பட்ட பிரதமர் மோடி, வ.உ.சி. துறைமுக வளாகத்தில் ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றினார்.

    அங்கிருந்து பிரதமர் மோடி நெல்லை வந்தடைந்தார். காரின் படிக்கட்டில் நின்று தொண்டர்களை பார்த்து கையசைத்தவாறு பிரதமர் மோடி சென்றார்.

    மோடி மோடி என உற்சாக கூச்சலிட்டு தொண்டர்கள் அவரை வரவேற்றனர். நெல்லையில் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

    நெல்லை பாளையங்கோட்டையில் பாஜக பொதுக்கூட்ட மேடைக்கு பிரதமர் மோடி வருகை தந்தார். பிரதமரை பார்த்து தொண்டர்கள் உற்சாக முழக்கமிட்டனர்.

    மேடையில் அண்ணாமலை, எல்.முருகன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் அமர்ந்துள்ளனர். பாஜக பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் ஜான் பாண்டியன், தேவநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    பிரதமர் மோடி வருகையையொட்டி நெல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    • போராட்டத்தில் ஈடுபட போவதாக கோவில் பக்தர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டது.
    • பக்தர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு கருப்பந்துறை பகுதியில் பிரசித்தி பெற்ற அழியாபதி ஈஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

    தாமிரபரணி நதிக்கரையில் அமைந்திருக்கும் இந்த கோவிலுக்கு முன் பகுதியில் 39.52 சென்ட் நிலம் கோவில் நந்தவனமாக பயன் படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலம் சில நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு நந்தவனம் பயன்பாட்டுக்கு இல்லாத நிலை உருவாகி இருப்பதாக அப்பகுதியினர் புகார் கூறினர்.

    இதனால் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி சுவாமி அழியாபதி ஈஸ்வரரிடம் விண்ணப்பம் செய்து பிரார்த்தனை செய்து போராட்டத்தில் ஈடுபட போவதாக கோவில் பக்தர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை அங்கு பக்தர்கள் பிரார்த்தனை போராட்டம் நடத்தப் போவதாக வந்த தகவலை அடுத்து நெல்லை சந்திப்பு போலீஸ் உதவி கமிஷனர் ராஜேஸ்வரன் தலைமையில் போலீசார் கோவில் வளாகத்தில் குவிக்கப்பட்டனர்.

    அப்போது பக்தர்கள் பிரார்த்தனை செய்ய கோவிலுக்கு வருகை தந்த நிலையில் கோவில் முன்பு ஒற்றை காலில் நின்றவாறு சிவ நாமம் பாடி ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நந்தவனத்தை மீட்க பிரார்த்தனை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து பக்தர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது பிரார்த்தனையில் ஈடுபட்ட பக்தர்கள் தரப்பில், உடனடியாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலம் மீட்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் நில அளவை பிரிவு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு பிரச்சனைக்குரிய இடம் அளவீடு செய்யப்பட்டது.

    தொடர்ந்து அரசு ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட இடம் கோவில் நந்தவனம் என கண்டறியப்பட்டதை தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

    இன்னும் ஒரு சில நாட்களில் இடத்தை மீட்டு தருவது தொடர்பான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் அதிகாரிகளும், வருவாய் துறை அதிகாரிகளும் உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து பக்தர்கள் அங்கிருந்து தற்காலிகமாக கலைந்து சென்றனர்.

    இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாநில செயலாளர் குற்றாலநாதன், மாவட்ட பொதுச்செயலாளர் பிரம்மநாயகம், மாவட்ட துணைத்தலைவர்கள் செல்வராஜ், ராஜ செல்வம், மாவட்ட செயலாளர்கள் சுடலை, சுரேஷ், சங்கர், விமல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×