என் மலர்
செய்திகள்
- கூடுவாஞ்சேரியை அடுத்த நந்தியம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று அதிகாலையில் நர்சுகள் தஞ்சம் அடைந்தனர்.
- இன்று 3-வது நாளாக ஆரம்ப சுகாதார நிலையம் முன் அமர்ந்து போராட்டம் நடத்த தொடங்கினார்கள்.
சென்னை:
அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், தாலுகா ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் 8 ஆயிரம் நர்சுகள் பணி நிரந்தரம் செய்யக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் கைது செய்யப்பட்ட நர்சுகளை வெளியேற்றி ஊரப்பாக்கத் தில் உள்ள திருமண மண்டபத்தில் போலீசார் அடைத்தனர். கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று தொடர்ந்து போராடி வருகின்றனர்.
நேற்று இரவு மண்டபத்தை விட்டு வெளியேற்றப்பட்ட நர்சுகள் நடந்தே மீண்டும் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை அடைந்து அங்கு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். பின்னர் அங்கிருந்து போலீசார் வெளியேற்றினர்.
அதையடுத்து கூடுவாஞ்சேரியை அடுத்த நந்தியம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று அதிகாலையில் நர்சுகள் தஞ்சம் அடைந்தனர். இன்று 3-வது நாளாக ஆரம்ப சுகாதார நிலையம் முன் அமர்ந்து போராட்டம் நடத்த தொடங்கினார்கள்.
இது குறித்து சங்க பொதுச்செயலாளர் சுபின் கூறும்போது, போராட்டத்தை கைவிட வேண்டும் என்று அரசு எங்களை மிரட்டுகிறது. பணி நிரந்தரம் செய்ய பணமில்லை என்று அமைச்சர் கூறுகிறார். ஆனால் நாங்கள் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம் என்றார்.
- தமிழ் மொழி கற்பதற்கு கடினம் தான். நான் தமிழ் கற்க தொடங்கியபோது முதலில் எழுத்துகளை கற்றேன்.
- தமிழ்நாட்டு உணவு வகைகளை ரசித்து உண்ணுங்கள். கொஞ்சம் காரமாக இருக்கும்.
சென்னை:
சென்னை கிண்டி ஐ.ஐ.டி. வளாக அரங்கில் "தமிழ் கற்கலாம்" என்ற தலைப்பில் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த 300 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கான பயிற்சி பட்டறை தொடக்க விழா இன்று நடைபெற்றது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இதில் பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:-
கவுகாத்தி பல்கலைக்கழகத்தில் தமிழ் டிப்ளமோ பயிற்சி தொடங்கப்பட்டு 6 மாதங்கள் ஆகும் நிலையில் பலரும் அதை பயன்படுத்திக் கற்றுக்கொண்டு வருகிறார்கள்.
பூ, மரம் என இருப்பது போல் ஒன்றுக்கொன்று தொடர்புடையது போல நாம் அனைவரும் ஒன்று தான். யாரும் தனிப்பட்டவர்கள் கிடையாது.
நீர், மரம், பூமி என அனைத்தையும் வணங்க வேண்டும் என ரிஷிகள் நமக்கு கற்றுக் கொடுத்துள்ளனர். பிரிட்டிஷ்காரர்கள் நம் ஒற்றுமையை பறித்து விட்டார்கள். உடலில் கை, கால் என அனைத்தும் ஒன்றாக இருப்பது போல் நாம் அனைவரும் ஒன்றானவர்கள்.
வடமாநிலத்தவர்கள் தென் மாநிலத்தவர்கள் பற்றி குறைவாகத்தான் தெரிந்து கொண்டிருக்கிறார்கள்.
காசி தமிழ் சங்கமம் தொடர்பாக தெரிந்து கொள்வதற்கு நிகழ்ச்சிகளை ஆளுநர் மாளிகையில் நடத்தினோம். அது போல் இதுவும் ஒரு புது முன்னெடுப்பு தான்.
தமிழ் மொழி கற்பதற்கு கடினம் தான். நான் தமிழ் கற்க தொடங்கியபோது முதலில் எழுத்துகளை கற்றேன். தொடர்ந்து தமிழில் பேசுவதை கேட்டேன், செய்தித்தாள்கள் படித்தேன், இப்போது முடிந்தவரை தமிழில் பேச முயல்கிறேன். நீங்களும் தமிழ் கற்றுக் கொள்ளுங்கள் இப்போது எவ்வளவோ தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. அதன் மூலம் கற்றுக்கொள்வது சுலபமாகி விட்டது.
மொழியால் நமக்குள் இருக்கும் சுவற்றை உடைக்க வேண்டும்.
தமிழ்நாட்டு உணவு வகைகளை ரசித்து உண்ணுங்கள். கொஞ்சம் காரமாக இருக்கும். ஆனால் சுவையாக இருக்கும். கலாச்சாரங்களை வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த பயிற்சிக்கு பின் நீங்கள் தொடர்ந்து தமிழ் படிக்க வேண்டும் என்று நினைத்தால் சொல்லுங்கள் எந்த கல்லூரியில் வேண்டுமோ படிக்க வைக்க உதவுகிறேன். இந்தியாவில் பல மொழிகள் உள்ளன அவற்றையெல்லாம் நாம் கற்றுக்கொள்ளலாம். அதில் எந்த தவறும் இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
- எரிமலைக் குழம்புகளும், போர்க்களக் காட்சிகளும் மெய்சிலிர்ப்பு ரகம்.
- அவரது குத்தும் பார்வையும் கூர்மையான உடல்மொழியும் திரையை ஆட்கொள்கிறது.
டைட்டானிக் மூலம் உலகப் புகழ் பெற்றவர் ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் காம்ரூன்.
தனது படங்களில் பிரமாண்டத்திற்காக அறியப்படும் கேமரூன் 2009 இல் ஒரு படத்தை இயக்கி வெளியிடுகிறார். அதுதான் 'அவதார்'.
ஒரு திரைப்படத்தில் இவ்வளவு பிரமாண்டத்தை அதுவரை யாரும் பார்த்ததே இல்லை என்ற அளவுக்கு அவ்வளவு நுட்பமான காட்சி அமைப்புகள், நவீன VFXகள் என அப்படம் அமைந்தது.
2154 ஆம் ஆண்டில் பண்டோரா எனும் கிரகத்தில் வசிக்கும் நவி இன மக்களைப் பற்றி ஆராய சென்று அவர்களில் ஒருவனாக மாறும் ஹீரோ ஜேக் சல்லி, அவர்களுக்காக தனது சொந்த மனித இனத்தையே எதிர்த்து போராடுவதாக படம் அமைந்திருந்தது.நெய்த்திரி என்ற நவி பெண்ணின் மீதான ஜேக் சல்லியின் காதலே இப்படத்தை நகர்த்தும் அச்சாணி.

இப்படம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு பெரும் வெற்றியை பெற்று கிளாசிக் ஆனது. தொடர்ந்து கடந்த 2022 இல் அவதார் 2 ஆம் பாகமான தி வே ஆப் வாட்டர் வெளியானது.
இது முதல் பாகம் அளவு கொண்டாடப்படவில்லை எனினும் முதலாமதை போலவே அதன் பிரமாண்ட காட்சிகளுக்காக போற்றப்பட்டது.
இந்நிலையில் அவதார் சீரிஸ் உடைய கடைசி பாகமான ஃபயர் அண்ட் ஆஷ் கடந்த 18 ஆம் தேதி வெளியாகி உள்ளது.
கதை:
முதல் பாகத்தில் காடு, இரண்டாம் பாகத்தில் கடல் என நம்மை வியக்க வைத்த கேமரூன், இந்த மூன்றாம் பாகத்தில் பண்டோரா கிரகத்தின் எரிமலைப் பிரதேசங்களுக்கு நம்மை அழைத்துச் செல்கிறார்.
அங்கு வசிக்கும் 'மாங்குவான்' எனப்படும் புதிய நவி இன மக்கள் அறிமுகமாகிறார்கள். இவர்கள் மற்ற நவி இனத்தவரைப் போல அமைதியானவர்கள் அல்ல.
மாறாக வன்முறையும், பொறாமையும் கொண்டவர்களாகக் காட்டப்படுகிறார்கள். இவர்களே சாம்பல் மக்கள் (Ash people) என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்களின் தலைவி வராங் இந்த பாகத்தின் முக்கிய வில்லி ஆவார்.
இந்த பாகத்தில், ஜேக் சல்லி மற்றும் நெய்த்திரி தங்கள் குழந்தைகளைக் காக்கவும், மனிதர்களின் ஆக்கிரமிப்பைத் தடுக்கவும் மீண்டும் போராடுகிறார்கள்.

இவர்களுக்கு எதிராக மனிதர்களும், சாம்பல் மக்களும் கைகோர்ப்பது ஜேக்கின் குடும்பத்திற்குப் பெரும் சவாலாக அமைகிறது.
இந்த சவாலை அவர்கள் முறியடித்தனரா என்பதே படத்தின் கதை. படத்தின் முதல் ஒரு மணி நேரம் கதை நகராமல் மிகவும் மெதுவாகச் செல்வது பலவீனமாகக் கருதப்படுகிறது. இரண்டாம் பாதியில் குடும்ப சென்டிமென்ட் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் சிறப்பாக உள்ளன.

காட்சி அமைப்பு:
படத்தின் மிகப்பெரிய பலமே அதன் VFX மற்றும் 3D தொழில்நுட்பம்தான். ஒவ்வொரு காட்சியும் மெனக்கிட்டு செதுக்கப்பட்டுள்ளது. எரிமலைக் குழம்புகளும், போர்க்களக் காட்சிகளும் மெய்சிலிர்ப்பு ரகம்.
மலைக்க வைக்கும் அளவு, 3 மணி நேரம் 17 நிமிடங்கள் ஓடும் வகையில், வழக்கமான கதைக்களத்தை வடிகட்டிய எடுத்த அவதார் 3, அதன் காட்சி பிரமாண்டத்திற்காக மட்டுமே வொர்த் என்று கூறமுடியும். இந்தப் படத்தை பெரிய திரையில் பார்த்தால் மட்டுமே அதன் முழுமையான அனுபவத்தைப் பெற முடியும்.

நடிகர்கள்:
ஹீரோ ஜேக் சல்லியாக சாம் வொர்திங்டன் தந்தையாகவும், தலைவனாகவும் முதல் 2 பாகத்தை விட முதிர்ச்சி காட்டி உள்ளார். நெய்த்திரியாக நடித்த ஜோ சால்டனா அன்பிலும் ஆக்ஷனிலும் சமமாக ஆதிக்கம் செலுத்துகிறார்.
நெருப்பு உலகத்தின் சாம்பல் மனிதர்களின் தலைவியாக வரும் வில்லி வராங் கதாபாத்திரத்தில் ஷ்பானிஷ் நடிகை ஊனா சாப்ளின் சொல்லி அடித்திருக்கிறார். அவரது குத்தும் பார்வையும் கூர்மையான உடல்மொழியும் திரையை ஆட்கொள்கிறது.
பின்னணி இசை:
இரண்டாம் பாகத்திற்கு இசையமைத்த சைமன் ஃப்ரான்ங்க்லென் இந்தப் படத்திற்கும் இசையமைத்துள்ளார்.
சாம்பல் இன மக்கள் வரும் காட்சிகளில், ஆக்ஷன் காட்சிகளில் வரும் இசை ஈர்க்கிறது. குடும்ப சென்டிமென்ட்டிலும் இசையை பிழிந்திருக்கிறார் சைமன்!
ஒட்டுமொத்தமாக அவதார் 3 ஒரு அருமையான காட்சி அனுபவம், கணிக்கக்கூடிய கதை அனுபவம். மொத்தத்தில் அவதார் 3 அறிவை விட புலன்களுக்கு ஒரு விருந்து.
மாலைமலர் ரேட்டிங் : 3 / 5
- விநாயக் மகாதேவ் என்ற கதாப்பாத்திரத்தில் நடிகர் அஜித் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்திருப்பார்.
- இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார்.
2011 ஆம் ஆண்டு அஜித், திரிஷா, அர்ஜூன் நடிப்பில் வெளியான மங்காத்தா திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.
இன்ஸ்பக்டர் விநாயக் மகாதேவ் என்ற கதாப்பாத்திரத்தில் நடிகர் அஜித் மிகவும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்திருப்பார். ஒரு கடத்தல்காரனை தப்பிக்க விட்டதற்காக அவரை ச்ஸ்பண்ட் செய்து விடுவார்கள். அப்பொழுது அவர் ஒரு கும்பலை சந்திக்கிறார். அவர்கள் 500 கோடி ரூபாய் பணத்தொகையை கடத்த திட்டம் போடுகிறார்கள். அதற்கு அஜித் உதவுவதாக கூறுவார் அதற்கு அடுத்து என்ன நடந்தது என்பதே கதைக்களம்.
இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார். படத்தின் பின்னணி இசை மிரட்டலாக இருக்கும். படத்தில் இடம் பெற்றுள்ள ஸ்டண்ட் காட்சிகளும், அஜித் ஒற்றை வீலில் பைக் ஓட்டும் காட்சிகள் மக்களை பிரமிக்க வைத்தது.
இந்நிலையில், மங்காத்தா படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய பட்க்குழு திட்டமிட்டுள்ளனர். ஜனவரி மாதம் 23 ஆம் தேதி படம் ரீரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதுமாக இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் கிங்மேக்கர் என்று பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
- எந்த சக்தியாலும் முருகரிடமிருந்து எங்களை பிரிக்க முடியாது.
- தி.மு.க.வை பொறுத்தளவில் எல்லோருக்கும் எல்லாம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றோம்.
சென்னை:
சென்னையில் அமைச்சர் பி.கே. சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் பட்டியலை பொறுத்தளவில் அதிலுள்ள சிறு பிரச்சனைகளை களைய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாக நின்றார். அதாவது, வாக்களிக்கின்ற உரிமை இருக்கின்ற எவரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாமல் இருக்கக் கூடாது, வாக்களிக்க தகுதி இல்லாத யாரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று இருக்கக் கூடாது என்பதுதான் தி.மு.க.வின் தாரக மந்திரமாகும்.
இந்த தீவிர திருத்தம் மேற்கொள்வதற்கு முன்பே தமிழ்நாடு முழுவதும் பாகம் வாரியாக முகவர்களை நியமித்த ஒரே இயக்கம் தி.மு.க. மட்டும்தான். எங்கள் முகவர்கள் களத்திற்கு சென்று வாக்களிக்கின்ற உரிமையுள்ள எவரையும் விடுபடாமல் பாதுகாப்போம். 2011 மற்றும் 2016 சட்டமன்ற தேர்தலில் இதே திருத்தப்படாத வாக்காளர் பட்டியலை கொண்டு தான் தேர்தலை சந்தித்து அ.தி.மு.க. ஆட்சி அமைத்தது. எதிர்கட்சி தலைவர், வார்த்தைகளை கொட்டுகின்ற போது அந்த வார்த்தைகளை தகுதியான கருத்துக்களை கூறுகின்றதா என்று ஆராய வேண்டும்.
அவர்கள் ஆட்சியில் இருந்த போது இதே வாக்காளர் பட்டியலை வைத்துதானே ஆட்சிக்கு வந்தார்கள். இப்போது அவர் கூறுவதுபோல் போலி வாக்காளர்கள் தி.மு.க. பக்கம் இருந்திருந்தால் அவர்கள் எப்படி ஆட்சிக்கு வந்திருக்க முடியும். தான் திருடி பிறரை நம்பாள் என்ற பழமொழி இந்த கூற்றுக்கு உகந்ததாக இருக்கும்.
திருச்செந்தூர், பழனி, திருப்பரங்குன்றம் போன்ற முருகன் கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தியதோடு, 27 நாடுகளைச் சேர்ந்த முருக பக்தர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்ற அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை நடத்தி காட்டி தமிழ் கடவுள் முருகப் பெருமானின் புகழுக்கு புகழ் சேர்த்த ஆட்சி இந்த ஆட்சியாகும். இது அனைத்தையும் முருகப் பெருமான் உணர்ந்து எங்கள் முதலமைச்சரோடு கை கோர்த்து கொண்டிருக்கிறார். எந்த சக்தியாலும் முருகரிடமிருந்து எங்களை பிரிக்க முடியாது.
இனத்தால், மதத்தால், மொழியால் மக்களை பிளவுபடுத்த வேண்டும் என்று நினைப்பவர்களை இந்தியாவின் இரும்பு மனிதன் என்ற போற்றப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் உறுதியும், நெஞ்சுரமும் கொண்ட திராவிட மாடல் ஆட்சியின் நாயகன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கின்ற வரையில் எந்த பிரிவினைவாதத்திற்கும் இடம் தர மாட்டார் என்பது சீமானுக்கு தெரியும். தி.மு.க.வை பொறுத்தளவில் எல்லோருக்கும் எல்லாம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றோம் என்றார்.
- விஜய் இதுவரை எந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை.
- திமுக எப்போதுமே மக்கள் செல்வாக்கோடு ஜெயித்தது கிடையாது.
தவெக தலைவர் விஜய் பேச்சுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
ஐயோ பாவம் தவிர விஜய்க்கு வேறு என்ன சொல்ல முடியும்.
விஜய் இதுவரை எந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை. இப்போது எங்கள் அண்ணன் (செங்கோட்டையன்) ஒருத்தர் தவெகவில் இணைந்திருக்கிறார்.
அவர் சேர்ந்ததனால், ஏதோ அம்மா உடன் இருப்பதுபோல் நினைத்து ஏதோ செய்துக்கொண்டிருக்கிறார்.
செங்கோட்டையன் அண்ணன் பாவம். அவருக்கு வேறு வழியில்லை.
திமுக எப்போதுமே மக்கள் செல்வாக்கோடு ஜெயித்தது கிடையாது. 1967-க்குப் பிறகு எம்ஜிஆர் உயிருடன் இருக்கும் வரை அவர் தான் முதலமைச்சராக இருந்தார்.அதன்பிறகு, கட்சி உடைந்ததனால் திமுக ஆட்சிக்கு வந்தது.
கடந்த முறைகூட ஏதோ கணக்கு தவறினால் திமுக ஆட்சிக்கு வந்தது. அதனால் இன்று 50 ஆயிரம் கோடிக்கு மேல் பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வருகிற 24-ந்தேதி நாகூர் ஹனீபா நூற்றாண்டு விழா சென்னையில் நடைபெற உள்ளது.
- கருணாநிதியின் பேச்சு, நாகூர் ஹனீபாவின் பாட்டு ஆகிய 2 பேரின் குரல்கள் தான் திராவிட இயக்கத்தை வளர்த்தது.
நாகப்பட்டினம்:
நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திருவாரூர் வந்தார்.
அங்கு மாலை 6 மணிக்கு காட்டூர் கலைஞர் கோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்காவை திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து மறைந்த தி.மு.க. மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் திருவிடம் படத்திறப்பு நிகழ்ச்சி கலைஞர் கோட்டம், அஞ்சுகம் அம்மையார் திருமண அரங்கில் நடந்தது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு திருவிடம் உருவப்படத்தை திறந்து வைத்தார். பின்னர் இரவு வேளாங்கண்ணியில் உள்ள தனியார் விடுதியில் தங்கினார்.
அதைத்தொடர்ந்து இன்று காலை (சனிக்கிழமை) துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேளாங்கண்ணியில் நடைபயிற்சி சென்றார். பின்னர் நாகை துறைமுகத்துக்கு சென்று அங்கு பாய்மர கப்பல் விளையாட்டு பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார்.
இதையடுத்து அவர் நாகூர் சில்லடி கடற்கரையில் ரூ.2 கோடி மதிப்பில் கட்டப்பட்டு உள்ள நாகூர் ஹனீபா நூற்றாண்டு பூங்காவை திறந்து வைத்தார்.
பின்னர் அவர் நாகை மீன்வள பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நாகூர் ஹனீபா நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு நூற்றாண்டு மலரை வெளியிட்டு அவரது குடும்பத்தினரை கவுரவித்தார்.
பின்னர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
எத்தனையோ மாவட்டங்களுக்கு சென்றாலும் நாகை இங்கு வருவது எனது சொந்த ஊருக்கு வருவது போன்று நெகிழ்ச்சியாக உள்ளது. இந்த மாவட்டத்தில் சிக்கல் சிங்காரவேலவர் கோவில், நாகூர் தர்கா, வேளாங்கண்ணி ஆலயம் என மும்மத வழிபாட்டு தலங்களும் உள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்ட அடிக்கல் நாட்டினார். அதைத்தொடர்ந்து வருகிற 24-ந்தேதி நாகூர் ஹனீபா நூற்றாண்டு விழா சென்னையில் நடைபெற உள்ளது. அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார்.
நாகூர் ஹனீபா, அண்ணா, கருணாநிதி ஆகியோரிடம் நன்மதிப்பை பெற்றவர். கருணாநிதியின் பேச்சு, நாகூர் ஹனீபாவின் பாட்டு ஆகிய 2 பேரின் குரல்கள் தான் திராவிட இயக்கத்தை வளர்த்தது. ஒரே இயக்கம், ஒரே தலைவர், ஒரே இறைவன் என வாழ்ந்தவர் நாகூர் ஹனீபா. இந்த நூற்றாண்டு விழாவை கொண்டாடும் நேரத்தில் தி.மு.க. அரசு ஆட்சியில் இருப்பது சிறப்பு வாய்ந்தது. வைக்கம் நூற்றாண்டு விழா, நாகூர் ஹனீபா நூற்றாண்டு விழா என பல்வேறு நூற்றாண்டு விழாக்களை தி.மு.க. அரசு கொண்டாடி உள்ளது.
இந்தி திணிப்பை எதிர்த்து பெரியார் அறிவித்த பேராட்டம் தான் கருணாநிதியையும், நாகூர் ஹனீபாவையும் போராட்ட களத்துக்கு கொண்டு வந்தது. இந்தி திணிப்பை எதிர்த்து அன்று போராடினோம். அதேபோல் தற்போது வேறு வழியில் மும்மொழிக்கொள்கை என்ற பெயரில் இந்தி திணிப்பை மத்திய அரசு கொண்டு வருகிறது. அதனை தமிழக முதலமைச்சர் எதிர்த்து வருகிறார். தமிழகத்தில் இருமொழிக்கொள்கை தான் என உறுதியாக கூறுகிறார். மும்மொழிக்கொள்கையை ஏற்றால் தான் கல்விநிதி என்கிறது மத்திய அரசு. இப்படி பல்வேறு வழிகளில் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது. இந்தி திணிப்பை தமிழகம் ஒருபோதும் ஏற்காது.
தனது குரல் வளத்தால் இளைஞர்களிடம் எழுச்சியை ஏற்படுத்தியவர் நாகூர் ஹனீபா. நாகூர் தைக்கால் தெருவிற்கு முதலமைச்சர் நாகூர் ஹனீபா தெரு என பெயரிட்டார். நாகூர் ஹனீபா மறைந்தபோது கலைஞர் கருணாநிதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
தமிழ் நாட்டை மதநல்லிணக்கம் மிகுந்த மாநிலமாக வைத்திருக்க வேண்டும். தி.மு.க. அரசு இஸ்லாமிய பெருமக்களுக்கு ஏராளமான நலத்திட்டங்களை செய்துள்ளது. நாகூர் ஹனீபாவின் பாடல்களை மதுரை ஆதீனம் சிறப்பாக பாடி காட்டுவார். தமிழகம் என்றென்றும் மதநல்லிணத்துக்கு எடுத்துகாட்டான மாநிலம். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் வென்று தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- இந்த செய்தியாளர் சந்திப்பு நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
- சிறிது நேரத்திற்கு பிறகு அவரது காதலி திருமணத்துக்கு ஒப்புக்கொண்டதாக அந்த அரங்கில் தெரிவிக்கப்பட்டது.
ரஷிய அதிபர் புதின், வருடாந்திர செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேட்டி அளித்தார். இதில் அவரிடம் உக்ரைன் - போர் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டனர். இந்த செய்தியாளர் சந்திப்பு நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
அப்போது இளம் நிருபர் கிரில் பஜானோவ் என்பவர் நான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்று எழுதப்பட்ட சுவரொட்டியை காண்பித்தப்படி தனது காதலியிடம் நீ என்னை திருமணம் செய்து கொள்வாயா என்று தனது ஆசையை வெளிப்படுத்தினார்.
அப்போது அவர் கூறும்போது 'என் காதலி இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று எனக்குத் தெரியும், என்னை மணந்துகொள் என்றார். இதை அங்கிருந்தவர்கள் கைதட்டி வரவேற்றனர். சிறிது நேரத்திற்கு பிறகு அவரது காதலி திருமணத்துக்கு ஒப்புக்கொண்டதாக அந்த அரங்கில் தெரிவிக்கப்பட்டது.
உடனே ரஷிய அதிபர் புதின் மற்றும் அங்கிருந்தவர்கள் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது புதின் கூறும்போது, நீங்கள் பதிவாளர் அலுவலகத்திற்குச் செல்லத் தயாராகிவிட்டீர்கள் என்றார்.
அதற்கு பஜானோவ் புதினிடம், எங்கள் திருமணத்திற்கு நீங்கள் வந்தால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவோம் என்றார்.
- காமராஜர் மக்கள் கட்சி என்ற கட்சியை தமிழருவி மணியன் தொடங்கினார்.
- காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவராக தமிழருவி மணியன் இருந்தார்.
காந்திய மக்கள் இயக்கம் தலைவராக இருந்த தமிழருவி மணியன் பின்னாளில் தனது இயக்கத்தை காமராஜர் மக்கள் கட்சி என மாற்றம் செய்து அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.
இதனிடையே, தமிழருவி மணியன் தனது காமராஜர் மக்கள் கட்சியை, ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணைப்பதாக அறிவித்தார்.
இந்நிலையில், இன்று ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் தமிழருவி மணியனின் காமராஜர் மக்கள் கட்சி சங்கமித்தது.
ஈரோட்டில் நடந்த விழாவில் தமிழருவி மணியன் முக்கிய நிர்வாகிகளுடன் காமகவை தமாகாவில் இணைத்தார். அப்போது பேசிய தமாகா தலைவர் ஜி.கே.வாசன், "தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் காமராஜர் மக்கள் கட்சி இணைந்திருப்பது அரசியல் களத்தில் தமாகாவுக்கு வசந்த காலம்" என்று தெரிவித்தார்.
தற்போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பாஜக தலைமையிலான தேசியய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
- கடந்த சில நாட்களாகவே அ.தி.மு.க தலைமை கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்காமலேயே இருந்து வந்தார்.
சென்னை:
அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாகவே அ.தி.மு.க தலைமை கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்காமலேயே இருந்து வந்த அவர் தற்போது சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். குடும்பத்தினர் உடனிருந்து அவரை கவனித்து வருகிறார்கள்.
- சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
- துணை கேப்டனாக அக்ஷர் பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
மும்பை:
10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. 'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் இந்தியாவுடன், பாகிஸ்தான், நமிபியா, நெதர்லாந்து, அமெரிக்க அணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவுடன் பிப்.7-ந்தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மோதுகிறது. பரம போட்டியாளரான பாகிஸ்தானை பிப்.15-ந்தேதி கொழும்பில் சந்திக்கிறது.
இந்த நிலையில். டி20 உலகக் கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. துணை கேப்டனாக அக்ஷர் பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் 2-வது விக்கெட் கீப்பராக இஷான் கிஷன் இடம் பிடித்துள்ளார்.
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி விவரம்:-
அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, கேப்டன் சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப்சிங், அக்ஷர் பட்டேல் (துணை கேப்டன்), ரிங்கு சிங், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, வாஷிங்டன் சுந்தர், இஷான் கிஷன்.

- தமிழ் திரையுலகம் என்பது இசை, பாடல், உணர்ச்சிகள் ஆகியவற்றின் அழகிய கலவை.
- ஜெயச்சந்திரன் தனது உணர்ச்சிமயமான குரலால் பாடல்களுக்கு உயிர் கொடுத்தார்.
இசையமைப்பாளர் சபேஷ் மற்றும் பாடகர் ஜெயச்சந்திரன் அவர்களின் மறைவு இசை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
தமிழ் திரையுலகம் என்பது இசை, பாடல், உணர்ச்சிகள் ஆகியவற்றின் அழகிய கலவை. இதில் தனித்துவமான பங்களிப்பு செய்தவர்கள் பலர். அவர்களில் இசையமைப்பாளர் சபேஷ் (சபேஷ்-முரளி ஜோடியின் ஒரு பகுதி) மற்றும் பாடகர் பி. ஜெயச்சந்திரன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

சபேஷ் தனது இசையால் தமிழ் சினிமாவை செழுமைப்படுத்தினார் என்றால், ஜெயச்சந்திரன் தனது உணர்ச்சிமயமான குரலால் பாடல்களுக்கு உயிர் கொடுத்தார். இவர்களின் திரைப்பயணம், தமிழ் இசையின் பொன்னான அத்தியாயங்களில் ஒன்று.
நம்மை விட்டு மறைந்த இசையமைப்பாளர் சபேஷ் மற்றும் பாடகர் ஜெயச்சந்திரன் அவர்களின் திரையுல பங்களிப்புகள் குறித்து இக்கட்டுரையில் பார்ப்போம்
இசையமைப்பாளர் சபேஷ்:
இசையமைப்பாளர் சபேஷ் சென்னையைச் சேர்ந்தவர். தமிழ் திரையிசையில் சபேஷ்-முரளி என்ற ஜோடியின் மூலம் இருவரும் புகழ்பெற்றனர். இவர்கள் பிரபல இசையமைப்பாளர் தேவாவின் இளைய சகோதரர்கள். அண்ணன் தேவாவின் உதவியாளர்களாக தொழிலைத் தொடங்கிய இவர்கள், பின்னர் சுயாதீன இசையமைப்பாளர்களாக உருவெடுத்தனர்.
இசையமைப்பாளர் சபேஷ் அவர்களின் திரைப்பயணம் 1990களின் பிற்பகுதியில் தொடங்கியது, ஆனால் முழுமையான இசையமைப்பாளர்களாக 2001ஆம் ஆண்டு 'சமுத்திரம்' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் இவரின் இசை கவனம் ஈர்த்தது.

சபேஷ்-முரளி ஜோடியின் இசை, உணர்ச்சிகரமான மெலடிகள் மற்றும் பின்னணி இசையால் பிரபலமானது. அவர்கள் இசையமைத்த 'இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி' (2006), 'ஆட்டோகிராஃப்' (2004), 'தவமாய் தவமிருந்து' (2005) 'போக்கிஷம்' (2009), 'கூடல் நகர்' (2007), 'மிளகா' (2010), 'கோரிபாளையம்' (2010) , 'மாயாண்டி குடும்பத்தார் (2009)' ஆகிய படங்களின் பாடல்கள் ரசிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
குறிப்பாக, 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி' படத்தின் இசை, வரலாற்று நகைச்சுவைக்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்டது. அவர்கள் சில படங்களில் பாடல்களையும் பாடியுள்ளனர்.
சபேஷ், சினிமா இசைக்கழகத்தின் (Cine Musicians Union) முன்னாள் தலைவராகவும் பணியாற்றினார், இது அவரது தொழில்துறைக்கான அர்ப்பணிப்பை காட்டுகிறது.
துரதிர்ஷ்டவசமாக, 2025 அக்டோபர் 23ஆம் தேதி, 68 வயதில் சபேஷ் காலமானார். இது தமிழ் சினிமாவுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியது.

பாடகர் ஜெயச்சந்திரன்:
பாடகர் ஜெயச்சந்திரன் தென்னிந்திய திரையிசையின் ஜாம்பவான். 1944 மார்ச் 3ஆம் தேதி கேரளாவின் இரிஞ்சலகுடாவில் பிறந்த இவர், 2025 ஜனவரி 9ஆம் தேதி தனது 80ஆம் வயதில் காலமானார்.
அவரது தந்தை ரவிவர்மா கொச்சனியன் தம்புரான் ஒரு இசைக்கலைஞர், இது ஜெயச்சந்திரனின் இசை ஆர்வத்தை தூண்டியது. இரிஞ்சலகுடா நேஷனல் உயர்நிலைப்பள்ளி மற்றும் கிறிஸ்ட் கல்லூரியில் படித்த இவர், மிருதங்கம் மற்றும் இலகு இசையில் மாநில இளைஞர் திருவிழாவில் பரிசுகள் வென்றார்.
ஜெயச்சந்திரனின் திரைப்பயணம் 1965இல் தொடங்கியது. அவரது முதல் பாடல் 'ஒரு முல்லப்பூ மலையுமாயி' ('குஞ்சலி மரக்கார்' படம், மலையாளம்).
தமிழில் 1973இல் 'மனிப்பயல்' படத்தில் 'தங்கச் சிமிழ் போல்' மற்றும் 'அலைகள்' படத்தில் 'பொன்னென்ன பூவென்ன' பாடல்களுடன் அறிமுகமானார்.

அவரது குரல், உணர்ச்சி மற்றும் மென்மையால் பிரபலமானது, இது இளையராஜா, எம்.எஸ். விஸ்வநாதன், ஏ.ஆர். ரகுமான் போன்ற இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்ற உதவியது. தமிழில் எண்ணற்ற பாடல்கள் பாடியுள்ளார்.
சில குறிப்பிடத்தக்க பாடல்கள்: 'வாழ்க்கையே வேஷம்' ('ஆறிலிருந்து அறுபது வரை', 1979), 'தாலாட்டுதே வானம்' ('கடல் மீன்கள்', 1981), 'காத்திருந்து காத்திருந்து' ('வைதேகி காத்திருந்தாள்', 1985), ராசாத்தி உன்ன ('வைதேகி காத்திருந்தாள்', 1985), 'மயங்கினேன் சொல்ல தயங்கினேன்' ('நானே ராஜா நானே மந்திரி', 1985), 'பூவ எடுத்து ஒரு' ('அம்மன் கோவில் கிழக்காலே', 1986), 'கத்தாழங்காட்டு வழி' ('கிழக்கு சீமையிலே', 1993), 'கண்ணத்தில் முத்தமிட்டால்' (2002). இவை அனைத்தும் இளையராஜா மற்றும் ரகுமானின் இசையில் உருவானவை.
அவரது சாதனைகள்: தேசிய திரைப்பட விருது (1985), 5 கேரளா ஸ்டேட் விருதுகள், 4 தமிழ்நாடு ஸ்டேட் விருதுகள், கலைமாமணி (1997), ஜே.சி. டேனியல் விருது (2020) ஆகியவை அடங்கும்.

16,000க்கும் மேற்பட்ட பாடல்களுடன், அவரது பங்களிப்பு தென்னிந்திய இசையை ஒருபடி மேலே உயர்த்தியது.
முடிவுரை:
சபேஷ் மற்றும் ஜெயச்சந்திரன் ஆகியோரின் திரைப்பயணம், தமிழ் சினிமாவின் இசைக்கு புதிய பரிமாணங்களைச் சேர்த்தது. சபேஷின் இசை அமைப்புகள் உணர்ச்சிகளை தூண்டினால், ஜெயச்சந்திரனின் குரல் அவற்றை உயிர்ப்பித்தது. அவர்களின் படைப்புகள் இன்றும் ரசிகர்களின் இதயங்களில் ஒலிக்கின்றன. தமிழ் திரையிசைக்கு இவர்களின் பங்களிப்பு என்றென்றும் நினைவுகூரப்படும்...






