என் மலர்tooltip icon

    செய்திகள்

    • தோழிகளான இருவரும் 3 ஆண்டுகள் முன் அமெரிக்கா சென்றுள்ளனர்.
    • இருவரும் மேலும் 4 நண்பர்களுடன் அமெரிக்காவின் அலபாமாவுக்கு காரில் சுற்றுலா சென்றனர்.

    அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்த சாலை விபத்தில், 2 இந்திய இளம்பெண்கள் உயிரிழந்தனர்.

    உயிரிழந்தவர்கள் தெலுங்கானாவின் மஹபூபாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த புல்லுகந்தம் மேக்னா ராணி (24) மற்றும் கடியால பாவனா (24) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

    தோழிகளான இருவரும் 3 ஆண்டுகள் முன் அமெரிக்கா சென்றுள்ளனர். இருவரும் கலிபோர்னியாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்த நிலையில் அமெரிக்காவிலேயே வேலை தேடி வந்தனர்.

    இந்நிலையில், இருவரும் மேலும் 4 நண்பர்களுடன் நேற்று முன் தினம் அமெரிக்காவின் அலபாமாவுக்கு காரில் சுற்றுலா சென்றுள்ளனர்.

    சுற்றுலாவை முடித்து காரில் திரும்பியபோது மலைப்பாங்கான பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் காரில் பயணித்த ராணி, புவனா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். எஞ்சிய 4 பேரும் படுகாயமடைந்தனர்.

    தகவலறிந்து விரைந்த மீட்புக்குழுவினர் 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    உயிரிழந்த ராணி, புவனாவின் உடல்களை விரைந்து இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

    • ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
    • "செம்மொழி" என்ற கதையை திருடி தயாரிக்கப்பட்டுள்ளது என வழக்கு நடந்து வருகிறது.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வர இருக்கும் படம் 'பராசக்தி'.

    இந்தப் படத்தில் ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் படத்தை தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

    மொழிப் போராட்ட பின்னணியில் இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படத்தின் மேக்கிங் வீடியோவை வேர்ல்ட் ஆப் பராசக்தி என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    11 நிமிடங்கள் விரிவாக ஓடும் இந்த இந்த வீடியோ இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. முன்னதாக இதே தலைப்பில் படக்குழு வள்ளுவர் கோட்டத்தில் கண்காட்சி ஒன்றையும் நடத்தியிருந்தது. 

    இதற்கிடையே இந்தப் படத்தை வெளியிட தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தனது "செம்மொழி" என்ற கதையை திருடி தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என உதவி இயக்குனர் ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    கதை திருட்டு புகார் தொடர்பாக விசாரித்து வரும் ஜனவரி 2ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

    • பல முதியவர்கள் தப்பிக்க முடியாமல் தங்கள் அறைகளுக்குள்ளேயே சிக்கிக் கொண்டனர்.
    • தலைநகர் ஜகார்டாவில் உள்ள அலுவலகக் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் பலியாகினர்.

    இந்தோனேசியாவில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 16 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

    அங்கு, வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள மனாடோ நகரில் 'வெர்தா தாமய்' என்ற முதியோர் இல்லம் இயங்கி வந்தது.

    நேற்று இரவு சுமார் 8:30 மணியளவில் முதியோர் இல்லத்தில் திடீரென தீப்பிடித்தது. அந்த நேரத்தில் பெரும்பாலான முதியவர்கள் தங்கள் அறைகளில் உறங்கிக் கொண்டிருந்ததால், தீ பரவியதை அவர்களால் உணர முடியவில்லை. பல முதியவர்கள் தப்பிக்க முடியாமல் தங்கள் அறைகளுக்குள்ளேயே சிக்கிக் கொண்டனர்.

    தகவலறிந்து தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். அங்கிருந்த சுமார் 30 பேரில் 12 முதல் 15 பேர் வரை பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    இந்த விபத்தில் 16 முதியவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் மூன்று பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    அங்கிருந்து மீட்கப்பட்டவர்கள் தற்போது அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    முதற்கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    கடந்த டிசம்பர் 9 அன்று தலைநகர் ஜகார்டாவில் உள்ள அலுவலகக் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் பலியான நிலையில், தற்போது இந்த முதியோர் இல்ல விபத்து இந்தோனேசியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    • சுமார் 241 பயணிகள் ரெயிலில் சென்றுகொண்டிருந்தனர்.
    • பசிபிக் பெருங்கடலையும் மெக்சிகோ வளைகுடாவையும் இணைக்கும் ரெயில் பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மெக்சிகோவில் நேற்று ரெயில் தடம் புரண்ட விபத்தில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பசிபிக் பெருங்கடலையும் மெக்சிகோ வளைகுடாவையும் இணைக்கும் இன்டர்-ஓசியானிக் ரெயில் சுமார் 241 பயணிகள் மற்றும் ஒன்பது பணியாளர்களுடன் சென்றுகொண்டிருந்தது.

    அப்போது ஓக்ஸாகா மற்றும் வெராக்ரூஸ் எல்லையில் உள்ள நிஜண்டா நகருக்கு அருகே தடம் புரண்டு விபத்துக்கு உள்ளானது.

    இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்ததாகவும், 98 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்களில் 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால் பசிபிக் பெருங்கடலையும் மெக்சிகோ வளைகுடாவையும் இணைக்கும் ரெயில் பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • கௌரி தொடரில் நாயகியாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.
    • தற்கொலைக்கு முன் நந்தினி எழுதி வைத்த கடிதம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

    தமிழில் தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் 'கௌரி' சீரியலில் நாயகியாக நடித்து பிரபலமடைந்த நடிகை நந்தினி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கர்நாடக மாநிலம் கோட்டூரு பகுதியைச் சேர்ந்த நந்தினி, கன்னட தொடரில் நடித்ததன் மூலம் சின்ன திரைக்கு அறிமுகமானார். பல தொடர்களில் துணை நடிகையாக தடம் பதித்த நந்தினி, கௌரி தொடரில் நாயகியாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

    'கௌரி' சீரியல் படப்பிடிப்பு பெங்களூருவில் நடந்து வந்த நிலையில், கர்நாடகாவை சேர்ந்த பெங்களூருவில் தான் வசித்து வந்த வீட்டில் நந்தினி, இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து நந்தினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கு முன் நந்தினி எழுதி வைத்த கடிதம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

    அதில், திருமணம் செய்துகொள்ளுமாறு பெற்றோர் வற்புத்தி வந்ததாகவும், தான் திருமணத்திற்கு தயாரக இல்லை என்றும் இதனால் மன ரீதியில் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் நந்தினி எழுதி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நந்தியின் தற்கொலை சக நடிகர்கள் மற்றும் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.   

    • உண்மைக்கு ஆர்ப்பாட்டம் தேவையில்லை என்று நாங்கள் நம்பினோம்.
    • அழுத்தங்களும் பொதுமக்களின் ஆவேசமும் மேலோங்கத் தொடங்கினால், ஒரு சாதாரண குடிமகனுக்கு உண்மையான பாதுகாப்பு என்ன இருக்கிறது?

    உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காரின் இடைக்கால ஜாமின் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது மகள் இஷிதா செங்கார், 'கடந்த எட்டு ஆண்டுகளாகத் தனது குடும்பம் அமைதியாகச் சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து காத்திருந்ததாகவும், ஆனால் தற்போது அந்த நம்பிக்கை மெல்லத் தேய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 

    "இந்தியக் குடியரசின் மாண்புமிகு அதிகாரிகளுக்கு,

    களைப்படைந்த, அச்சமடைந்த மற்றும் மெல்ல மெல்ல நம்பிக்கையை இழந்து வரும் ஒரு மகளாக நான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். ஆனாலும், செல்வதற்கு வேறு இடம் இல்லாததால் இன்னும் நம்பிக்கையை மட்டும் விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறேன். எட்டு ஆண்டுகளாக, நானும் என் குடும்பமும் காத்திருந்தோம், அமைதியாக. பொறுமையாக. 'சரியான வழியில்' அனைத்தையும் செய்தால், உண்மை இறுதியில் தானாகவே வெளிப்படும் என்று நம்பினோம்.

    நாங்கள் சட்டத்தை நம்பினோம். அரசியலமைப்பை நம்பினோம். இந்த நாட்டின் நீதி என்பது சத்தம் போடுவதிலோ, ஹேஷ்டேக்குகளிலோ (hashtags) அல்லது பொதுமக்களின் கோபத்திலோ இல்லை என்று நம்பினோம். இன்று, அந்த நம்பிக்கை சிதைந்து வருவதால் நான் இதை எழுதுகிறேன்.

    எனது வார்த்தை கேட்கப்படுவதற்கு முன்பே, எனது அடையாளம் ஒரு முத்திரைக்குள் சுருக்கப்படுகிறது, 'ஒரு பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினரின் மகள்' என்று. என்னை ஒருமுறைகூட பார்த்திடாத, ஒரு ஆவணத்தையும் படிக்காத, ஒரு நீதிமன்றப் பதிவைக்கூடப் பார்க்காதவர்கள், என் வாழ்க்கைக்கு எந்த மதிப்பும் இல்லை என்று தீர்மானித்துவிட்டார்கள். 

    இத்தனை ஆண்டுகளில் சமூக வலைதளங்களில், உயிருடன் இருப்பதற்காகவே நான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட வேண்டும், கொல்லப்பட வேண்டும் அல்லது தண்டிக்கப்பட வேண்டும் என்று எண்ணற்ற முறை சொல்லப்பட்டிருக்கிறேன். இந்த வெறுப்பு வெறும் கற்பனையல்ல. இது தினசரி நடப்பது. இடைவிடாதது. நீங்கள் வாழ்வதற்கு கூட தகுதியற்றவர் என்று இத்தனை பேர் நம்புகிறார்கள் என்பதை உணரும்போது, அது உங்களுக்குள் இருக்கும் எதையோ ஒன்றை உடைத்துவிடுகிறது. 

    நாங்கள் அமைதியாக இருந்தோம். காரணம் எங்களிடம் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக அல்ல, மாறாக நம் அமைப்புகளின் மீது (Institutions) நம்பிக்கை வைத்திருந்ததால். நாங்கள் போராட்டங்களை நடத்தவில்லை. தொலைக்காட்சி விவாதங்களில் கத்தவில்லை. உருவ பொம்மைகளை எரிக்கவில்லை அல்லது ஹேஷ்டேக்குகளை (Hashtags) டிரெண்ட் செய்யவில்லை. நாங்கள் காத்திருந்தோம், ஏனெனில் உண்மைக்கு ஆடம்பரம்/ஆர்ப்பாட்டம்  தேவையில்லை என்று நாங்கள் நம்பினோம்.

    அந்த மௌனத்திற்கு நாம் கொடுத்த விலை என்ன?

    எட்டு ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் நாம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டும், கேலி செய்யப்பட்டும், மனிதத்தன்மையற்ற முறையிலும் நடத்தப்பட்டு, நமது கண்ணியம் சிறுகச் சிறுகப் பறிக்கப்பட்டுள்ளது. ஒரு அலுவலகத்திலிருந்து இன்னொரு அலுவலகத்திற்கு ஓடியும், கடிதங்கள் எழுதியும், தொலைபேசி அழைப்புகளைச் செய்தும், எங்களைக் கேளுங்கள் என்று கெஞ்சியும்,  நிதி ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சோர்வடைந்துவிட்டோம். நாம் தட்டாத கதவுகளே இல்லை. நாம் அணுகாத அதிகாரிகளே இல்லை. நாம் கடிதம் எழுதாத ஊடக நிறுவனங்களே இல்லை.

    இருப்பினும் யாரும் கேட்கவில்லை.

    அதற்குக் காரணம் உண்மைகள் பலவீனமாக இருந்ததல்ல. ஆதாரங்கள் பற்றாக்குறையாக இருந்ததும் அல்ல. மாறாக, எங்கள் உண்மை அவர்களுக்கு இடையூறாக இருந்தது என்பதே காரணம். மக்கள் எங்களை 'அதிகாரம் படைத்தவர்கள்' என்கிறார்கள். நான் உங்களிடம் கேட்கிறேன், ஒரு குடும்பத்தை எட்டு ஆண்டுகளாகப் குரலற்றதாக ஆக்கும் சக்தி (மௌனமாக்கி) என்ன வகையான அதிகாரம்? உங்கள்பேரில் நாள்தோறும் சேற்றை வாரி இறைப்பதைக் கண்டும், உங்களைக் கண்டுகொள்ளாத ஒரு அமைப்பை (system) நம்பி நீங்கள் அமைதியாக அமர்ந்திருப்பது என்ன வகையான அதிகாரம்?

    இன்று என்னை அச்சுறுத்துவது அநீதி மட்டுமல்ல, திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ள 'பயம்' தான் என்னை அச்சுறுத்துகிறது.

    நீதிபதிகள், பத்திரிகையாளர்கள், நிறுவனங்கள் மற்றும் சாதாரண குடிமக்கள் என அனைவரும் மௌனத்திற்குள் தள்ளப்படும் அளவுக்கு உரத்த ஒரு பயம். எவரும் நமக்கு ஆதரவாக நிற்கவோ, நாம் சொல்வதைக் கேட்கவோ, அல்லது 'உண்மை என்ன என்று ஆராய்ந்து பார்ப்போம்' என்று துணிச்சலாகக் கேட்கவோ கூடாது என்பதற்காகவே இந்த பயம் மிகக் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிகழ்வுகளைப் பார்ப்பது என்னை ஆழமாக உலுக்கியுள்ளது. ஆத்திரத்தாலும், தவறான தகவல்களாலும் உண்மையை இவ்வளவு எளிதாக மூழ்கடிக்க முடியும் என்றால், என்னைப்போன்ற ஒருவர் எங்கே செல்வது? ஆதாரங்களையும் முறையான சட்ட நடைமுறைகளையும் விட, அழுத்தங்களும் பொதுமக்களின் ஆவேசமும் மேலோங்கத் தொடங்கினால், ஒரு சாதாரண குடிமகனுக்கு உண்மையான பாதுகாப்பு என்ன இருக்கிறது?

    நான் இந்தக் கடிதத்தை யாரையும் அச்சுறுத்துவதற்காக (மிரட்டுவதற்காக) எழுதவில்லை. நான் இந்தக் கடிதத்தை யாருடைய அனுதாபத்தையும் பெறுவதற்காக எழுதவில்லை. நான் பயந்துபோயிருப்பதாலும், எங்காவது யாராவது ஒருவராவது இதைக் கேட்கும் அளவிற்கு அக்கறை காட்டுவார்கள் என்று நான் இன்னும் நம்புவதால் இதை எழுதுகிறேன்.

    நாங்கள் எந்தச் சலுகையையும் கேட்கவில்லை. நாங்கள் யார் என்பதற்காகப் பாதுகாப்பையும் கேட்கவில்லை. நாங்கள் மனிதர்கள் என்பதால் நீதியைக் கோருகிறோம்.

    சட்டம் அச்சமின்றிப் பேசட்டும். ஆதாரங்கள் எவ்வித அழுத்தமுமின்றி ஆய்வு செய்யப்படட்டும். உண்மை விரும்பத்தகாததாக இருந்தாலும் இருந்தாலும், அது உண்மையாகவே கருதப்படட்டும். இன்னும் இந்த நாட்டை நம்பும் ஒரு மகள் நான். தயவுசெய்து அந்த நம்பிக்கையை நான் இழக்கும்படி செய்துவிடாதீர்கள்.

    மரியாதையுடன்,

    நீதிக்காக இன்னும் காத்திருக்கும் ஒரு மகள்." எனக் குறிப்பிட்டுள்ளார். 

    • நிதிஷ்குமார் 2000-ல் பீகார் முதல் மந்திரியாக பதவியேற்றார்.
    • அந்தப் பதவி காலம் 7 நாட்களே நீடித்தது.

    பாட்னா:

    பீகார் என்றாலே நிதிஷ்குமார், நிதிஷ்குமார் என்றாலே பீகார் என அழைக்கும் அளவுக்கு தனது பதவியை தக்க வைத்துள்ளதுடன், மக்கள் மனதிலும் நீங்கா இடம்பிடித்த தலைவராக திகழ்கிறார்.

    நிதிஷ்குமார் ஏற்கனவே 9 முறை பீகார் மாநில முதல் மந்திரியாக இருந்துவிட்டார். இந்த ஆண்டு 10-வது முறை பதவி ஏற்றுள்ளார். இதில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால், எந்த தேர்தலிலும் அவர் போட்டியிடவே இல்லை என்பதுதான்.

    இந்த ஆண்டில் அதிக கவனம் பெற்ற ஒரு தேர்தலாக மாறி இருக்கிறது பீகார் சட்டசபைத் தேர்தல்.


    பீகார் சட்டசபைத் தேர்தலில் நிதிஷ்குமார் மற்றும் பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரஸ் மற்றும் ஆர்.ஜே.டி.யின் மகாபந்தன் கூட்டணியும் களம் கண்டன.

    இந்த முறை வழக்கத்துக்கு மாறாக அதிக எண்ணிக்கையில் பீகாரில் வாக்காளர்கள் ஆர்வமுடன் தங்களின் வாக்குகளைப் பதிவு செய்தனர். இத்தனை ஆண்டுகளில் இல்லாத அளவாக இந்த சட்டசபைத் தேர்தலில் பீகாரில் 67.13 சதவீத வாக்குகள் பதிவானது.

    சட்டசபை உறுப்பினராக இல்லாமல் இரு தசாப்தங்களாக முதல் மந்திரியாக இருக்கும் இந்தியாவின் ஒரே அரசியல் தலைவர் நிதிஷ்குமார் மட்டுமே.

    நிதிஷ்குமாரைப் பொறுத்தவரை 1977-ம் ஆண்டு முதன் முதலில் ஜனதா கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் அவருக்கு தோல்வி கிடைத்தது. அடுத்த தேர்தலிலும் தோல்வியை தழுவினார்.

    1985-ம் ஆண்டில் ஹர்ணாத் தொகுதியில் போட்டியிட்டு முதல் வெற்றி வாகை சூடினார்.

    5 முறை மக்களவை பதவி, 10 முறை முதல் மந்திரி பதவி, காங்கிரஸ் மற்றும் பாஜகவுடன் மாறி மாறி கூட்டணி என பீகார் தன் கைக்குள் இருப்பதை உறுதி செய்தவர்.

    நிதிஷ்குமார் 2000-ம் ஆண்டு பீகார் மாநிலத்தின் முதல் மந்திரியாக முதல் முறை பதவியேற்றார். அந்தப் பதவி காலம் 7 நாட்களே நீடித்தது. அதன்பின், 2005-ம் ஆண்டு தொடங்கி தற்போது வரை 10 முறை முதல் மந்திரி பதவியை அலங்கரித்துள்ளார்.

    இத்தனை ஆண்டு காலம் பீகார் மாநில முதல் மந்திரியாக தனது அரியணையை யாருக்கும் விட்டுக் கொடுக்காமல் தக்கவைத்துள்ளார் என்பதே இவரது சாமர்த்தியம். வாஜ்பாயி அரசாங்கத்தில் மத்திய மந்திரி பதவி வகித்தவர்.


    இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்த நிதிஷ்குமார் மீது அம்மாநில மக்களின் நம்பிக்கையும் நல்லெண்ணமும் குறையவில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தின.

    • நீட் தேர்வு ரத்து என்றார்கள், ரகசியம் தெரியும் என்றார்கள் ரத்து செய்தார்களா? ரகசியத்தை சொன்னாரா?
    • சட்டமன்றக் கூட்டத்தில் எங்களால் முடியாது என்று சொல்லிவிட்டார் ஸ்டாலின்.

    மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணம் மேற்கொண்டுவரும் அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு இன்று 178வது தொகுதியான திருத்தணியில் பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது.

    இதையடுத்து திருத்தணி, சோளிங்கர் சாலை, வீரகநல்லூரில் உள்ள திறந்தவெளித் திடலில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் முன்பாக இபிஎஸ் எழுச்சியுரையாற்றினார்.

    அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகிய இருபெரும் தெய்வங்களை வணங்குகிறேன். இந்த எழுச்சிப் பயணத்தில் 178 தொகுதிகளிலும் மக்களின் வரவேற்பு அமோகமாக உள்ளது.

    இங்கு நான் அதிக அளவிலான மக்கள் வெள்ளத்தைப் பார்க்கிறேன். அடுத்தாண்டு தேர்தலில் திருத்தணி தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதற்கான வெற்றி விழா பொதுக்கூட்டம் போல் காட்சியளிக்கிறது. நான் வருகின்ற வழியில் மக்கள் வெள்ளம் அலைகடலென வந்தார்கள். நம் வெற்றியை உங்கள் எழுச்சியில் பார்க்க முடிகிறது. அடுத்தாண்டு தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். கூட்டணி 210 இடங்களில் வெல்லும்.

    சென்னை முதல் திருத்தணி செல்லும் ரெயிலில் ரீல்ஸ் எடுத்தபடி 4 சிறுவர்கள் துன்பப்படுத்துகிறார்கள். கொடூரமாகத் தாக்குகிறார்கள். சிறுமி முதல் பாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பில்லை. திமுக-காரர்கள்தான் போதை விற்பனைக்கு துணை நிற்பதாக பேசப்படுகிறது. ஆட்சிக்கு வந்து ஓராண்டிலேயே போதை நடமாட்டத்தை கட்டுப்படுத்த பலமுறை சொன்னேன், கண்டுகொள்ளவில்லை. பெற்றோர்களே சிந்தியுங்கள், நம் குழந்தைகளை நாம்தான் பார்த்து வளர்க்க வேண்டும். இந்த ஆட்சியை நம்பி பிரயோஜனம் இல்லை.

    நெல்லையில் ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவிகள் சரக்கு அடிக்கிறார்கள். இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எப்படியிருக்கிறது என்பதை எண்ணிப்பாருங்கள். பணம், நகை திருடுவது போல உடம்பில் உள்ள கிட்னி திருடுகிறார்கள். வறுமையில் வாடும் நபர்களை தேர்வு செய்து பணத்தாசை காட்டி கிட்னி எடுக்கிறார்கள். அதுவும் திமுக எம்.எல்.ஏ மருத்துவமனையில் நடக்கிறது. இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதிமுக ஆட்சி அமைந்ததும் இதற்கு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    நீட் தேர்வு ரத்து என்றார்கள், ரகசியம் தெரியும் என்றார்கள் ரத்து செய்தார்களா? ரகசியத்தை சொன்னாரா? சட்டமன்றக் கூட்டத்தில் எங்களால் முடியாது என்று சொல்லிவிட்டார் ஸ்டாலின். இதுதான் அந்த ரகசியம். இதைத்தான் அதிமுகவும் சொன்னது. ஆனால் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று அந்தர்பல்டி அடித்துவிட்டது திமுக.

    2021 தேர்தலில் 525 வாக்குறுதிகள் கொடுத்தார். நான்கில் ஒரு பங்கு கூட நிறைவேற்றவில்லை. அத்தனையும் பச்சைப்பொய். முதல்வரும் அமைச்சர்களும் 95% நிறைவேற்றப்பட்டதாகச் சொல்கிறார்கள், எல்லாம் பொய்.

    100 நாள் வேலைத்திட்டம் 150 நாளாக உயர்த்துவேன் என்றார்கள், உயர்த்தவில்லை. அதிமுக தான் தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தது, அதனால்தான் 125 நாளாக உயர்த்தினார்கள். இதை பொறுத்துக்கொள்ள முடியாத ஸ்டாலின் இத்திட்டம் ரத்து செய்யப்படும் என்ற பொய் தகவலை சொல்லி வருகிறார்.

    ஸ்டாலின் அவர்களே உங்களால் உயர்த்த முடியவில்லை ஆனால் அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் நிறைவேற்றிக் காட்டினோம். 100% இத்திட்டம் தொடரும். 125 நாட்கள் என்பது அதிமுக ஆட்சிக்கு வந்ததும் 150 நாளாக உயர்த்தப்படும்.

    எப்போது பார்த்தாலும் மகளிருக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை கொடுத்தேன் என்கிறார் ஸ்டாலின். உங்கள் வீட்டுப் பணத்தையா கொடுத்தீர்கள்? அதுவும் அதிமுக சார்பில் நானும் சட்டமன்ற உறுப்பினர்களும் சட்டமன்றத்திலும், பொதுக்கூட்டங்களிலும் பேசி அழுத்தம் கொடுத்த காரணத்தால் வேறு வழியின்றி, 28 மாதம் கழித்துதான் உரிமைத் தொகை கொடுத்தார். இப்போது 17 லட்சம் பேருக்கு விதிகளை தளர்த்தி கொடுக்கிறார்கள், ஏன் அப்போதே நிபந்தனையைத் தளர்த்தியிருக்கலாமே?

    மக்கள் செல்வாக்கு இழந்ததால் இப்போது கொடுக்கிறார், இன்னும் 5 மாதம்தான் கொடுக்க முடியும். 2021 தேர்தல் அறிக்கையில் அதிமுக சார்பில் மாதம் 1500 ரூபாய் கொடுப்பதாகச் சொன்னோம், ஆனால் திமுக மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று, ஏமாற்றிவிட்டது.

    கியாஸ் மானியம் 100 ரூபாய் கொடுத்தார்களா? கல்விக்கடன் தள்ளுபடி செய்தார்களா? கூடுதலாக சர்க்கரை ஒரு கிலோ கொடுப்பதாகச் சொன்னார்கள், கொடுத்தார்களா? எதுவுமே நிறைவேற்றவில்லை. எல்லா துறைகளிலும் ஊழல், உள்ளாட்சியில் பணியாணை வழங்குவதில் ஊழல். இ.டி கண்டுபிடித்து எஃப்.ஐ.ஆர் போடச்சொன்னது, அதிமுக ஆட்சியில் எஃப்.ஐ.ஆர் போடப்படும், தவறு செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்.

    மின்கட்டணம், விலைவாசி உயர்வு, வீட்டுவரி, கடை வரி உயர்வு, கடன் தலைக்கு மேல் இருக்கிறது. 5 ஆண்டு முடியும்போது 5.5 லட்சம் கோடி கடன் வாங்கிவிட்டனர். அத்தனை பேரையும் கடனாளியாக்கிவிட்டார். வருவாய் அதிகம், திட்டங்கள் இல்லை. அதிமுக ஆட்சியில் 400 கோடியில் திருவள்ளூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொடுத்தோம், இது சாதனை. இப்படி ஒரு சாதனை சொல்ல முடியுமா?

    திருத்தணி அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் முருகனின் ஐந்தாம் படை விடு என்ற பெருமை பெற்றது. இங்கு உள்ளூர் மக்கள் வாரந்தோறும் செவ்வாய்கிழமை வழிபாடு செய்ய சிறப்பு அனுமதி கொடுக்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் அந்த அனுமதி மறுக்கப்பட்டது. மீண்டும் அதிமுக ஆட்சியில் செவ்வாய்க்கிழமை தரிசனம் செய்ய சிறப்பு அனுமதி வழங்கப்படும்.

    அதிமுக ஆட்சியில் நான் முதல்வராக இருந்தபோதுதான் தைப்பூசத்துக்கு விடுமுறை விட்டோம்.

    அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு மற்றும் தைப்பொங்கல் நல்வாழ்த்துகள். இந்தக் கூட்டம் சீரோடு சிறப்போடு நடைபெற இருந்த அனைவருக்கும் நன்றி. மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம். ஸ்டாலின் பெயிலியர் மாடல் அரசு, பைபை ஸ்டாலின்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    • தேர்தல் என்றாலே திமுகவின் தேர்தல் அறிக்கைதான் ஹீரோ.
    • கமலாலயத்தில் எழுதி தரும் அறிக்கையை, அதிமுக லெட்டர்பேடில் எழுதி தருகிறார் பழனிசாமி.

    திருப்பூர் பல்லடத்தில் திமுக மகளிரணி சார்பில்  நடைபெற்ற 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' மாநாட்டில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 

    "தேர்தல் என்றாலே திமுகவின் தேர்தல் அறிக்கைதான் ஹீரோ. அந்த ஹீரோவையே தயாரிப்பவர்தான் கனிமொழி. நாடாளுமன்ற தேர்தலில் அவரின் இந்தப் பணியால் வெற்றிப் பெற்றோம். வரும் சட்டமன்ற தேர்தலிலும் மாபெரும் வெற்றியைப் பெறுவோம். பெண்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம்.

    பகுத்தறிவை கையில் ஏந்தி பெரியார், அண்ணா, கருணாநிதி கட்டியெழுப்பிய தமிழ்நாடு முன்னேற்றப் பாதையில் தொடர்ந்து செல்கிறது. நீதிக்கட்சியின் முதல் கூட்டத்திலேயே கலந்துகொண்ட பெண் அலமேலு மங்கை தாயாளு அம்மாள். அதுபோல திராவிட இயக்கம், திமுக தொடங்கியபோதும் பல பெண்கள் கலந்துகொண்டனர். அண்ணா தலைமையில் அமைந்த அமைச்சரவையிலும் பெண்கள் பங்கேற்றனர். அண்ணா மகளிர் மன்றத்தை தொடங்கினார். அதை மகளிர் அணியாக விரிவாக்கி, வலுவான கட்டமைப்பை உருவாக்கினார் கருணாநிதி.

    பெண்கள் படிக்கக்கூடாது, அடுப்படியைத் தாண்டி செல்லக்கூடாது என அடிமைப்படுத்தப்பட்டனர். அதை எல்லாம் உடைத்தெறிந்தது திராவிட இயக்கம்தான். தேவதாசியை முறையை ஒழித்தோம். திராவிட இயக்கமும், நம்முடைய தலைவர்களும் செய்த புரட்சியின் விளைவுதான் பெண் விடுதலை, மகளிர் முன்னேற்றம். இன்றைக்கு எல்லா கட்சிகளிலும் பெண்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவிற்கு உள்ளதற்கு நாம் ஏற்படுத்திய விழிப்புணர்வுதான் காரணம்.

    உள்ளாட்சி அமைப்பில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு சட்டத்தை உருவாக்கியவர் கருணாநிதி. தமிழ்நாட்டில் பெண் மேயர்கள்தான் அதிகம் உள்ளனர். உள்ளாட்சி அமைப்புபோல சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் இடஒதுக்கீடு கிடைக்க வேண்டும். அதுதான் திமுகவின் வெற்றி. தேவையே இல்லாத நிபந்தனையோடு பெண்களுக்கான 33 விழுக்காடு மசோதாவை ஒன்றிய அரசு நிறைவேற்றி உள்ளது. அது எப்போது நடைமுறைக்கு வரும் என்பதை சொல்ல முடியாது. இது ஆபரேஷன் Success ஆனால் Patient dead என்பதை போல் உள்ளது.

    1.30 கோடி மகளிருக்கு, மாதந்தோறும் மகளிர் உரிமைத் தொகை தருகிறோம். உரிமைத் தொகை பல பெண்களுக்கு சுயமரியாதையை, தன்னம்பிக்கையை அளித்திருக்கிறது. மகளிர் உரிமைத் தொகையை ஒவ்வொரு குடும்பத்திலும் ரூ.28 ஆயிரம் வரை கொடுத்திருக்கிறோம். இதுபோன்ற மற்றொரு திட்டம்தான் மகளிர் விடியல் திட்டம். முதலமைச்சராக நான் போட்ட முதல் கையெழுத்து மகளிர் விடியல் பயண திட்டம். நான் முதலமைச்சரான அடுத்த நாள் பேருந்தில் ஏறியதும் டிக்கெட் வாங்க பணம் கொடுத்த பெண்களிடம் "மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்துவிட்டார். இனிமேல் நீங்கள் பணம் கொடுக்க தேவையில்லை" என சொல்லப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல்முதலாக பெண்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தினோம்.

    அதன்பின் புதுமைப் பெண்திட்டம். பெண்கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்துதான் இந்தத் திட்டத்தை உருவாக்கியுள்ளோம். இதில் பல லட்சம் பெண்கள் பயன் பெறுகின்றனர். திராவிட மாடல் ஆட்சி பெண்களுக்கான ஆட்சி. பெண்கள் முன்னேறினால்தான் ஒட்டுமொத்த சமூகமும் முன்னேறும் என இவ்வளவும் செய்கிறோம். 88% பெண்கள் பயனடைந்த 100 நாள் வேலைத் திட்டத்தை பாஜக அரசு சிதைத்துள்ளது. அதற்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி உள்ளார். கமலாலயத்தில் எழுதி தரும் அறிக்கையை, அதிமுக லெட்டர்பேடில் எழுதி தருகிறார் பழனிசாமி. 

    திராவிட மாடல் ஆட்சிபோல பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்த ஆட்சி இருக்கவே முடியாது. திராவிட மாடல் 2.0 ஆட்சியில், பெண்களுக்கான திட்டங்களை விரிவுபடுத்தப் போகிறோம்." என தெரிவித்தார். 

    • கர்நாடகாவில் ஆக்கிரமிப்பு குடிசைகள் அகற்றப்பட்டன.
    • இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கேரள மாநில எம்.பி. பெங்களூரு சென்று பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட்டார்.

    கர்நாடக மாநில அரசு பெங்களூருவில் ஆக்கிரமிப்புக்காரர்களால் கட்டப்பட்ட குடிசைப் பகுதிகளை அப்புறப்படுத்தியது. குடிசை அமைத்தவர்கள் அனைவரும் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்கள். கர்நாடக மாநில நடவடிக்கைக்கு கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்திருந்தார். கர்நாடக மாநில அரசு அதற்கு பதில் அளித்திருந்தது.

    இதற்கிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலங்களவை எம்.பி. ஏ.ஏ. ரஹிம் பெங்களூரு சென்றிருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்திக்கும்போது, ஆங்கிலத்தில் உரையாடினார். அப்போது, ஆங்கில இலக்கணம் தவறாக உச்சரித்ததாக கேலி கிண்டல் செய்யப்பட்டது.

    இந்த நிலையில், எம்.பி.யை கிண்டல் செய்ததற்கு, கேரள மாநில கல்வித்துறை அமைச்சர் வி. சிவன்குட்டி பதில் கொடுத்துள்ளார்.

    இது தொடர்பாக சிவன்குட்டி கூறுகையில் "பேட்டியின்போது எம்.பி. பயன்படுத்திய ஆங்கில இலக்கணத்தை விமர்சனம் செய்தவர்கள் ஒரு விசயத்தை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் பிரதிநிதியின் திறமை, அலங்கார வார்த்தைகளால் மதிப்பிடுவதில்லை. அவரின் செயலால் மதிப்பிடப்படும். ரஹிம் தலையிடுவது பொறுப்பான அரசியல் தலையீடு ஆகும்" என்றார்.

    • புளோரிடாவில் டிரம்ப்- ஜெலன்ஸ்கி சந்திப்பு நடைபெற்றது.
    • ரஷியா போர் தொடுக்காத வகையில் 50 வருட உத்தரவாதத்தை ஜெலன்ஸ்கி கோரியுள்ளார்.

    ரஷியா- உக்ரைன் இடையிலான 4 வருட போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சி மேற்கொண்டு வருகிறது. அவர் 20 அம்ச திட்டத்தை பரிந்துரை செய்தார். இது தொடர்பாக உக்ரைனுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

    இந்த நிலையில்தான் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை, புளோரிடாவில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்து பேசினார்.

    அப்போது, அமைதி திட்டத்தின் ஒரு பகுதியாக அமெரிக்கா, உக்ரைனுக்கு 15 வருட பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்க முன்வந்துள்ளதாக ஜெலன்ஸ்சி தெரிவித்துள்ளார். மேலும், ரஷியா, உக்ரைன் மீது வலுக்கட்டாயமாக ஆக்கிரமிப்பை முயற்சியை மேற்கொள்ளாதவாறு, 50 வருடத்திற்கு அமெரிக்கா பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளார். மேலும், யதார்த்தம், பாதுகாப்பு உத்தரவாதம் இன்றி இந்த போர் முடிவுக்கு வராது என்றார்.

    இந்த சந்திப்பின்போது, உக்ரைன்- ரஷியா இடையே அமைதி ஒப்பந்தம் முன்பைவிட நெருக்கமாகியுள்ளது என டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், ஒரு மாதத்திற்கு மேலான அமெரிக்கா தலைமையில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை முறிந்து போகக் கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.

    முக்கிய பிரச்சினையில் ஒருமித்த கருத்து ஏற்பட இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    • திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியது என்று 1.30 கோடி மகளிர் சொல்வார்கள்.
    • கோவை பெண் வழக்கில் 30 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் திமுக மகளிரணி சார்பில் 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' மாநாடு நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, திமுக அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் பேசிய அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, 

    பெண்களுக்கான ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி சொல்லும் மாநாடுதான் இந்த மாநாடு. நீதி, சமத்துவம், சகோதரத்துவத்தை காக்கக்கூடிய ஒரே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான். தமிழ்நாட்டை அல்ல நாட்டை காக்கக்கூடிய பொறுப்பு முதலமைச்சர் கையில் உள்ளது.

    திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றியது என்று 1.30 கோடி மகளிர் சொல்வார்கள். இந்தியாவிலேயே வேலைக்கு செல்லும் பெண்கள் அதிகமாக உள்ள மாநிலம் தமிழ்நாடுதான். அதற்கான காரணம் நமக்கான கல்வி இங்கு வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் புதிதாகத் தொடங்கி உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் 56% பெண்களால் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் உயர்கல்விக்கு செல்லும் பெண்களின் சதவீதம் 48%. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் இது அதிகம். 

    ஆனால் எதிர்க்கட்சிகள் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாத மாநிலம் தமிழ்நாடு என கூறிக்கொண்டிருக்கிறார்கள். அதிமுக ஆட்சியில் நடைபெற்ற பொள்ளாட்சி கொடூரம் நம் அனைவருக்கும் தெரியும். அந்த பெண்களுக்கு நீதி கிடைத்தது நம் ஆட்சியில்.  உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியின் ஜாமினை எதிர்த்து போராடும் பெண் நடுத்தெருவிற்கு இழுத்து வரப்படுகிறார். இதுதான் பாஜக பெண்களுக்கு வழங்கும் பாதுகாப்பு. ஆனால் கோவை பெண் வழக்கில் 30 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதுதான் திமுகவிற்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இருக்கும் வித்தியாசம்.

    நாம் உண்மையில் பெண்களின் எதிர்காலம், பாதுகாப்பு குறித்து கவலைப்படக் கூடியவர்கள். நூறுநாள் வேலைத் திட்டத்திற்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் இயக்கம் திமுக மட்டும்தான். இது தமிழ்நாட்டை மட்டுமல்ல, நாடு முழுவதையும் பாதிக்கக்கூடியது. நாட்டில் மதக்கலவரத்தை, வெறுப்பை, காழ்ப்புணர்ச்சியை உருவாக்கி அரசியல் செய்துவிடலாம் என துடித்துக் கொண்டிருக்கக்கூடிய பாஜகவிற்கு சம்மட்டி அடியாக இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்னால் அணி திரள்வோம், அணி திரள்வோம், அணி திரள்வோம்'" எனப் பேசினார்.

    ×