search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாயு கசிவு"

    • அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட தொழிற்சாலையை தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது.
    • கடைவீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.

    திருவொற்றியூர்:

    எண்ணூர் பெரிய குப்பத்தில் தனியார் உரத்தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் கடந்த டிசம்பர் மாதம் திடீரென அமோனியா வாயு வெளியேறியது. இதனால் அப்பகுதியை சுற்றி உள்ள பொது மக்களுக்கு மூச்சுத் திணறல், வாந்தி மயக்கம் உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

    இதைத்தொடர்ந்து அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட தொழிற்சாலையை தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது. வாயு கசிவு ஏற்பட்டது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. பசுமை தீர்ப்பாயத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.


    இந்த நிலையில் உரத்தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து எண்ணூரை சுற்றி உள்ள 33 மீனவ கிராமமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தினமும் ஒவ்வொரு கிராமத்தை சேர்ந்த மக்கள் மீன்பிடிக்க செல்லாமல் தொழிற்சாலை முன்பு போராட்டம் நடத்தி வந்தனர். அவர்களது போராட்டம் இன்று 42-வது நாளாக நீடித்தது.

    இதற்கிடையே வாயு கசிவு ஏற்பட்ட உரத்தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி எண்ணூர் முதல் தாழங்குப்பம் வரை உள்ள 33 மீனவ கிராம மக்கள் இன்று கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியில் உள்ள சுமார் 1000-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன. இதனால் கடைவீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.


    இந்த நிலையில் மீனவ கிராமமக்கள் இன்று காலை திடீரென அன்னை சிவகாமி நகர், தாழங்குப்பம், பெரியகுப்பம், சின்னகுப்பம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து மீனவ கிராம மக்கள் ஆங்காங்கே மறியலில் ஈடுபட்டு வருவதால் பதட்டமான சூழல் ஏற்பட்டு உள்ளது. துணை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். அன்னை சிவகாமி நகர் முதல் எண்ணூர் மேம்பாலம் வழியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    உரத்தொழிற்சாலை முன்பும் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு உள்ளனர். அவர்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.

    • வாயு கசிவு ஏற்பட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆய்வு செய்தார்.
    • தொழிற்சாலையின் நுழைவு வாயில் முன்பு 5வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களை சந்தித்து ஆதரவு அளித்தார்.

    சென்னை:

    சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் உள்ள தனியார் உர தொழிற்சாலையில் இருந்து கடலுக்கடியில் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 26-ந்தேதி நள்ளிரவில் திடீரென அமோனியம் வாயு வெளியேறியதால் அப்பகுதி மக்கள் பலருக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல் மற்றும் உடல் உபாதைகள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இச்சம்பவத்தை தொடர்ந்து தனியார் உர தொழிற்சாலையை தற்காலிகமாக மூட அரசு உத்தரவிட்டது.

    இந்நிலையில், வாயு கசிவு ஏற்பட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆய்வு செய்தார். இதன்பின் தொழிற்சாலையின் நுழைவு வாயில் முன்பு 5வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களை சந்தித்து ஆதரவு அளித்தார்.

    இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களிடையே பேசிய சீமான், உண்ணாவிரத போராட்டத்தால் எந்த பயனும் இல்லை. நன்றாக சாப்பிட்டு தெம்பாக போராட வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

    • அமோனியா வாயு கசிந்ததை அடுத்து கோரமண்டல் ஆலை செயல்பாடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
    • சென்னை எண்ணூரில் வாயு கசிவு ஏற்பட்ட கோரமண்டல் ஆலை மீண்டும் திறக்கப்படவில்லை.

    சென்னை:

    சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் உள்ள உர தொழிற்சாலையில் இருந்து கடலுக்கடியில் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு டிச.26-ந்தேதி இரவு திடீரென அமோனியா கசிவு ஏற்பட்டதால் அப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டது.

    அமோனியா வாயு கசிந்ததை அடுத்து கோரமண்டல் ஆலை செயல்பாடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் ஆலையை மறு தொடக்கம் செய்ய அரசிடம் அனுமதி பெற்றுள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியானதையடுத்து ஆலை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

    சென்னை எண்ணூரில் வாயு கசிவு ஏற்பட்ட கோரமண்டல் ஆலை மீண்டும் திறக்கப்படவில்லை. மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதலின்படி ஆய்வு நடைமுறையை பின்பற்றி வருகிறோம் என்று தெரிவித்துள்ளது.

    • தொழிற்சாலைகள் மக்கள் உயிரை அலட்சியப்படுத்தி லாபத்தைத் தான் பார்க்கின்றனர்.
    • ஏராளமானோருக்கு நுரையீரல் சம்பந்தப்பட்ட வியாதி மற்றும் தோல் வியாதி உள்ளது.

    திருவொற்றியூர் சரஸ்வதி நகரைச் சேர்ந்த பாக்கியம் கூறியதாவது:-

    எண்ணூர் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறிய எண்ணெய் கழிவு மற்றும் அமோனியா வாயுவால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை போராட்டங்கள் நடத்தும் அவர்கள் அதற்கு நிரந்தர தீர்வு காணாமல் அடுத்தடுத்து மறந்து சென்று விடுகின்றனர். நாட்டின் வளர்ச்சி தவிர்க்க முடியாதது தான். குடியிருப்பு பகுதியில் தொழிற்சாலை இருப்பதையும் தடுக்க முடியாது. ஆனால் தொழிற்சாலைகள் மக்கள் உயிரை அலட்சியப்படுத்தி லாபத்தைத் தான் பார்க்கின்றனர். தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கரும்புகையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதுடன் திருவொற்றியூர், எண்ணூர் பகுதியில் ஏராளமானோருக்கு நுரையீரல் சம்பந்தப்பட்ட வியாதி மற்றும் தோல் வியாதி உள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூடுதல் கவனம் செலுத்தி தொழிற்சாலைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மீனவர்கள் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கி தவித்து வருகிறார்கள்.
    • பொதுமக்களின் உயிர் சம்பந்தப்பட்ட விஷயத்தில் எந்த சமரசமும் இன்றி அரசு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவேண்டும்.

    சென்னையில் இந்த மாத தொடக்கத்தில் மிச்சாங் புயல் காரணமாக பலத்த மழை வெள்ளம் ஏற்பட்டது. அப்போது எண்ணூர் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் இருந்து எண்ணெய் கழிவு பக்கிங்காம் கால்வாயில் கலந்து கொசஸ்தலை ஆறு மற்றும் எண்ணூர் முகத்துவார பகுதியில் பரவி கடலில் கலந்தது. இதனால் . எண்ணூர் குப்பம், நெட்டு குப்பம், தாளான் குப்பம் உள்ளிட்ட சுற்றி உள்ள மீனவ கிராமங்களுக்குள்ளும் மழை வெள்ளத்தின்போது எண்ணெய் பரவி வீடுகளில் படிந்தது. மீன்பிடி படகுகள், வலைகள் பாழாகின. எண்ணெய் கழிவால் மீனவர்களும்,திருவொற்றியூர் மேற்கு பகுதி, சடையங்குப்பம், பர்மா நகர் இருளர் காலனியை சேர்ந்த பொதுமக்களும் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர்.

    இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகை வழங்க அரசு உத்தரவிட்டு உள்ளது. எனினும் எண்ணூரை சுற்றி உள்ள மீனவ கிராமத்தினர் சிலரும், திருவொற்றியூர் மேற்கு பகுதியை சேர்ந்த பொதுமக்களும் தங்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும் என்று தொடர்ந்துகோரிக்கை விடுத்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த எண்ணெய் கழிவு எண்ணூரில் இருந்து பழவேற்காடு வரை பரவி உள்ளது. இதனால் அங்குள்ள மீனவ கிராமத்தினரும் நிவாரண உதவி கேட்டு போராட்டங்கள் அறிவித்து உள்ளனர்.

    கடலில் கலந்த எண்ணெய் கழிவுகளை பெரும்பாலும் படகில் சென்று மீனவர்கள் மக்கு மூலம் எடுத்து அகற்றினர். அதற்கு நீண்ட நாட்கள் ஆனது. இதற்குள் எண்ணெய் கழிவுகள் தரையில் 3 அடி வரை சென்றுவிட்டது, எண்ணெய் கழிவுகளை அகற்ற எந்த வித நவீன எந்திரமோ, மாற்று ஏற்பாடோ செய்யப்படவில்லை. இதுவும் தற்போது சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி 28-ந்தேதி எண்ணூர் துறைமுகத்தில் கடலில் 2 கப்பல்கள் மோதிக்கொண்டபோது பல டன் கச்சா எண்ணெய் கடலில் கலந்தது. இந்த எண்ணெய் படலம் எண்ணூரில் இருந்து திரு வான்மியூர் வரை பரவியது.

    உடைந்த கப்பலில் இருந்து கொட்டிய எண்ணெய் கடல் நீரில் ஒரு அடி உயரத்திற்கு திட்டாக படர்ந்தது. அதனை பிரித்து எடுக்கும் பணியில் கடலோர காவல் படையினர் ஈடுபட்டனர். ஆனால் கடல் நீரில் இருந்து எண்ணெய்யை பிரித்தெடுக்கும் நவீன எந்திரம் இல்லாததால் பணியாளர்களே நேரடியாக வாளிமூலம் எண்ணெய் படலத்தை அப்புறப்படுத்தினர்.

    இதேபோல் தற்போதும் எண்ணூர் கடலில் கலந்த எண்ணெய் படலத்தை அப்புறப்படுத்தவும் நவீன எந்திரம் எதுவும் இல்லாததால் எப்போதும் போல் மீனவர்களே படகில் சென்று மக்கு மூலம் எடுத்து பீப்பாய்களில் நிரப்பினர். இது பொதுமக்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே மீண்டும் கேள்வியை எழுப்பி உள்ளது.

    2017-ம் ஆண்டு ஏற்பட்ட எண்ணெய் கசிவை படிப்பினையாக வைத்து கடலில் எண்ணெய் கலந்தால் அதனை எளிதில் பிரித்து எடுக்கும் வகையில் திட்டங்கள் மற்றும் நவீன எந்திரங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். ஆனால் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் இல்லாமல் 2017-ம் ஆண்டின் சம்பவத்திற்கு பிறகும் பாடம் கற்காமல் இருப்பதாக பொதுமக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

    இதேபோல் அடுத்தடுத்து மழை வெள்ளம், எண்ணெய் கசிவு பாதிப்பில் இருந்து எண்ணூர் மற்றும் சுற்றி உள்ள மீனவ கிராமமக்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் முறையாக செய்யப்படாததால் அப்பகுதி மக்கள் தவித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது. மொத்தத்தில் எண்ணூர் எண்ணெய் கசிவால் அப்பகுதியில் சுற்றுச்சூழல், கடல் வளம் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.

    வெளிநாடுகளில் இதுபோன்று எண்ணெய் கசிவு மற்றும் தொழிற்சாலை விபத்துக்கள் ஏற்படும் போது பாதிக்கப்படும் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அபராத தொகை கோடிக்கணக்கில் இருக்கும். மேலும் சம்பந்தப்பட்ட தொழிற்சாலை அல்லது நிறுவனம் மூடப்படும் நிலையும் ஏற்படும். ஆனால் இங்கு அந்த அளவுக்கு கடுமையான நடவடிக்கைகள் இல்லை என்று தெரிகிறது. மேலும் இழப்பீடுகளும் வெளிநாடுகளைப் போல் வழங்கப்படுவதில்லை. பொதுமக்களின் பாதுகாப்புக்கும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றே கூறப்படுகிறது. எனவே தொழிற்சாலை நிர்வாகத்தினர் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படுவததை தடுக்க எந்த வகையான நடவடிக்கைகளை எடுத்து உள்ளனர்? விபத்து ஏற்பட்டால் தடுப்பு நடவடிக்கைகள் என்ன? போன்ற விரிவான திட்டங்களை செயல்படுத்துவதில் அரசு தீவிர கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து சமூகஆர்வலர் ஒருவர் கூறியதாவது:-

    மழை வெள்ளம், எண்ணெய் கசிவு அமோனியா வாயு கசிவு என அடுத்தடுத்து ஏற்பட்ட இன்னல்களால் எண்ணூர் பொதுமக்கள் சொல்ல முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். இதிலிருந்து இன்னும் அவர்கள் மீளவில்லை.கடலில் எண்ணெய் கலந்ததால் மீன்கள் இறந்து உள்ளன. மீனவர்கள் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கி தவித்து வருகிறார்கள்.

    இது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனம் இழப்பீடு கொடுப்பதாக அறிவித்து உள்ளது. ஆனால் இது எத்தனை பேருக்கு போதுமானதாக இருக்கும் என்று தெரியவில்லை. . கடந்த 2017-ம் ஆண்டு எண்ணூர் துறைமுகத்தில் கப்பல்கள் மோதி எண்ணெய் கடலில் கலந்த போது அதனை அகற்ற பெரும் சிரமம் ஏற்பட்டது. தற்போது தொழிற்சாலையில் இருந்து எண்ணெய் கலந்து உள்ளது. 2017-ம்ஆண்டுக்கு பிறகு அந்த எண்ணெய் விபத்தில் இருந்து எந்த பாடமும் படிக்காமல் அதே நிலையில் தான் நாம் உள்ளோம். எந்த பாதுகாப்பு உபகரணங்களும், எண்ணெய் தண்ணீரில் கலந்தால் அதனை அகற்ற தொழில் நுட்ப எந்திரங்களும் இதுவரை இல்லை. இது தொடர்பாக எந்த தெளிவான யோசனையும் இல்லை. இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலும் எங்கும் இல்லை என்றே தெரிகிறது. மீண்டும் இது போன்ற விபத்து ஏற்படாமல் இருக்க எண்ணூரை சுற்றி உள்ள தொழிற்சாலைகளில் பாதுகாப்பு குறித்து உரிய ஆய்வு செய்யவேண்டும். பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் மீட்பு பணிகள் அனைத்தும் காகித அளவில்தான் உள்ளன. இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்கவும், நடந்தால் அடுத்து எடுக்கவேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

    ஏற்கனவே பாதிப்பில் இருந்த எண்ணூர் பகுதி மக்கள் இப்போது உரத்தொழிற்சாலையில் இருந்து கசிந்த அமோனியா வாயுவால்மீண்டும் நிலைகுலைந்து உள்ளனர். அவர்களது உயிருக்கு பாதுகாப்பு கேள்விக்குறி ஆகி உள்ளது. தொழிற்சா லைகள் சரியான முறைப்படி பாதுகாப்புடன் இயங்குவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். ஆனால் இங்கு தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்குவது எதற்காக என்று தெரியவில்லை. இங்கு இது போன்ற தொழிற்சாலைகளை முக்கிய நபர்கள் மற்றும் அரசு நடத்துவதால் நடவடிக்கை இல்லையா? என்று புரியவில்லை. நமது நாட்டில் இதுபோன்ற தொழிற்சாலை விபத்துக்களில் எவ்வளவு பேருக்கு நிவாரண உதவிவழங்கப்பட்டு உள்ளது.

    பொதுமக்களின் உயிர் சம்பந்தப்பட்ட விஷயத்தில் எந்த சமரசமும் இன்றி அரசு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவேண்டும்.

    எண்ணெய் கசிவால் கடலில் உள்ள மீன்கள், நீர்வாழ் உயிரினங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.

    பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டிருந்தாலும் மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை எப்படி மீட்டெடுப்பார்கள் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. இது பற்றிய எந்த தெளிவான விளக்கமும் இதுவரை இல்லை.

    மேலும் கொசஸ்தலை ஆற்றின் முகத்துவார பகுதியில் உள்ள அலையாத்தி காடுகளும் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளது. இங்குள்ள தாவரங்களில் சுமார் 3 அடி உயரத்திற்கு எண்ணெய் படிந்து இருந்ததை நாங்கள் பார்த்தோம். இதனால் சுற்றுச்சூழலின் சமநிலையே கேள்விக்குறியாக மாறி இருக்கிறது. இந்த அலையாத்தி காடுகள் கடுமையான கடல் சீற்றம் மற்றும் சுனாமியின் போது பாதுகாப்பு அரணாக இருக்கும். அங்குள்ள விலங்குகள் மிகவும் முக்கியமானது.


    இதேபோல் பறவைகளின் இறக்கைகளில் எண்ணெய் படர்ந்து பறக்க முடியாத அளவில் இருந்தன.

    இந்த விவகாரத்தில் நிறுவனங்கள் அஜாக்கிரதையாக இருப்பதாகவே தெரிகிறது. சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாது. அபராத தொகையும் கூடுதலாக விதிக்க வேண்டும். அப்படியானால் தான் இது போன்ற நிறுவனங்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து யோசித்து சரியான நடவடிக்கை எடுப்பார்கள். வெளிநாடுகளைப் போல் விபத்து ஏற்படும் தொழிற்சாலைகளுக்கு கூடுதல் அபராதம் விதிக்கப்பட வேண்டும். 2017-ம் ஆண்டு முதல் இதுவரை என்ன முயற்சி எடுத்து உள்ளோம்? இப்போதைய எண்ணெய் கசிவு பற்றி 2017-ம் ஆண்டு போல் பேசப்படவில்லை. இது மிகவும் வருந்தத்தக்கது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் உரத்தொழிற்சாலையயை முற்றுகையிட்டனர். சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
    • இதற்கிடையே தொழிற்சாலை முன்பு தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    திருவொற்றியூர்:

    எண்ணூர், பெரிய குப்பத்தில் உள்ள தனியார் உரத் தொழிற்சாலை கடந்த 3 நாட்களுக்கு முன்பு அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இதனால் மூச்சுதிணறல், மயக்கம் என கடுமையாக பாதிக்கப்பட்ட அப்பகுதியை சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த அமோனியா வாயு கசிவின் தாக்கம் சுற்றி உள்ள சுமார் 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமத்திலும் இருந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் உரத்தொழிற்சாலையயை முற்றுகையிட்டனர். சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் அனுமதியின்றி மறியலில் ஈடுபட்டதாக நெட்டு குப்பத்தைச் சேர்ந்த ராஜேந்திரன், தாழம் குப்பத்தைச் சேர்ந்த முரளி, வெங்கடேசன், பார்த்தசாரதி உள்பட 16 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    இதேபோல் தொழிற்சாலை முன்பு அனுமதி பெறாமல் பந்தல் அமைத்து, ஒலிபெருக்கி வைத்த எண்ணூர் பகுதியைச் சேர்ந்த கணேஷ், சுதாகர் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். இதற்கிடையே தொழிற்சாலை முன்பு தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சுமார் 60 பேருக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • எண்ணூர் கடல் பகுதியில் மீன்கள், நண்டுகள், இறால்கள் உள்ளிட்ட உயிரினங்கள் சுவாசிக்க முடியாமல் செத்து மிதக்கின்றன.

    சென்னை:

    சென்னை, எண்ணூர் பெரியகுப்பத்தில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான உரத் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழி ற்சாலையில் மூலப்பொருளான அமோனியா திரவம் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள 12,500 டன் கொள்திறன் கொண்ட சேமிப்பு தொட்டியில் சேகரிக்கப்பட்டு வருகிறது.

    அம்மோனியா திரவம் அவ்வப்போது வெளிநாடுகளிலிருந்து கப்பல் மூலம் இறக்குமதி செய்யப்பட்டு, எண்ணூரில் உள்ள சிறு துறை முகத்திலிருந்து குழாய்கள் மூலமாக திரவ வடிவில் மைனஸ் 33 டிகிரி செல்சியஸ் குளிர் நிலையில் இத்தொழிற்சாலை சேமிப்பு தொட்டியில் சேகரி க்கப்பட்டு, உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இத்தொழி ற்சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 11.45 மணியளவில் குழாயில் கசிவு ஏற்பட்டு அமோனியா வாயு பரவியது.

    இதனால் அதனை சுற்றியுள்ள நெட்டுக்குப்பம், தாழங்குப்பம், சின்ன குப்பம், பெரிய குப்பம், எர்ணாவூர், சுனாமி குடியிருப்பு உள்ளிட்ட 10 கிராம மக்கள் பாதிக்கப் பட்டனர். அவர்களுக்கு கண் எரிச்சல், நெஞ்செரிச்சல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு வசித்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறினார்கள். அவர்கள் பல்வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். பெரும்பாலான மக்கள் அமோனியா வாயுவில் இருந்து தப்பிப்பதற்காக திருவொற்றியூர் டோல்கேட் வரை வந்து அந்த பகுதியில் தஞ்சம் அடைந்தனர். மேலும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சுமார் 60 பேருக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதையடுத்து உடனடியாக அப்பகுதியில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வாயு கசிவை நிறுத்தினார்கள். மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 2 நுரையீரல் நிபுணர்களை கொண்டு 5 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன.

    தற்போது குழாயில் அம்மோனியா கசிவு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தொழிற்சாலையின் தரத்தை மதிப்பீடு செய்ய தொழில்நுட்பக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு தனது விரிவான அறிக்கையை 3 நாட்களுக்குள் அரசுக்கு சமர்ப்பிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    காற்றில் 0.57 பிபிஎம் அம்மோனியா வாயு கலந்திருப்பது அனுமதிக்கப்பட்ட அளவாகும். ஆனால் வாயு கசிவின்போது, தொழிற்சாலை நுழைவு வாயிலில் 28 பிபிஎம் அம்மோனியா வாயு இருந்துள்ளது. இது அனுமதிக்கப்பட்ட அளவை விட 51 சதவீதம் அதிகம் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே அமோனியா வாயுவை சுவாசித்தவர்களுக்கு காய்ச்சலும் பரவ தொடங்கியுள்ளது. முதலில் அவர்களுக்கு தொண்டை எரிச்சலுடன் சளி தொற்று காணப்பட்டது. பின்னர் காய்ச்சல் ஏற்பட்டது. அமோனியா வாயுவை சுவாசித்த 100-க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    பொதுமக்களுக்கு தொடர்ந்து பாதிப்பு ஏற்படுவதால் உரத் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி 10 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நேற்று தொழிற்சாலை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இரவில் பெண்கள் வீடுகளுக்கு சென்றுவிட்டனர். சில ஆண்கள் மட்டும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு அங்கேயே அமர்ந்திருந்தனர்.

    இன்று காலையில் மீண்டும் பொதுமக்கள் திரண்டு வந்து 2-வது நாளாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். உரத் தொழிற்சாலையை தற்காலிகமாக மூட அரசு உத்தரவிட்டு இருந்தாலும், அதை நிரந்தரமாக மூடும் வரை போராட்டம் தொடரும் என்று பொதுமக்கள் கூறியுள்ளனர்.

    இதற்கிடையே குழாயில் ஏற்பட்ட கசிவால் அமோனியா கடலில் கலந்தது. இதனால் எண்ணூர் கடல் பகுதியில் மீன்கள், நண்டுகள், இறால்கள் உள்ளிட்ட உயிரினங்கள் சுவாசிக்க முடியாமல் செத்து மிதக்கின்றன. மேலும் கடல் நீர் வெள்ளை நிறமாக மாறியதுடன் ஏராளமான மீன்கள் செத்து கரை ஒதுங்கியுள்ளன.

    • எண்ணூர் சுற்றியுள்ள பெரும்பாலான கிராம பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
    • பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிய வருகிறது.

    சென்னை :

    தமிழக பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    சென்னை எண்ணூர் அருகே அமைந்துள்ள தனியார் தொழிற்சாலையில், திரவ அமோனியா குழாயில் கசிவு ஏற்பட்டதால், எண்ணூர் சுற்றியுள்ள பெரும்பாலான கிராம பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.

    பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிய வருகிறது. பொதுமக்கள் அனைவருக்குமே தகுந்த மருத்துவ சோதனைகள் நடத்தி, அவர்கள் உடல் நலத்தை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

    மேலும், எண்ணூரிலுள்ள தொழிற்சாலைகள் அனைத்திலும், முறையான பாதுகாப்பு நடைமுறைகள் செய்யப்பட்டுள்ளனவா என்பதைக் கண்காணிக்க, தமிழக அரசும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார்.

    • உடனடியாக அப்பகுதிக்கு மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் சென்று, பரிசோதனை நடத்தினர்.
    • தனியார் கம்பெனி தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது.

    திருச்சி:

    சென்னை எண்ணூர் அருகே பெரிய குப்பம் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் வாயு கசிவு ஏற்பட்டது குறித்து சுற்று சூழல் அமைச்சர் மெய்யநாதன் கூறியதாவது:-

    அமோனியா கசிவு ஏற்பட்ட நிலையில் 15 நிமிடத்தில் ஆலை நிர்வாகம் அதனை சரி செய்துள்ளது. இந்த வாயு கசிவால் 18 பேர் பாதிக்கப்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உடனடியாக அப்பகுதிக்கு மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் சென்று, பரிசோதனை நடத்தினர்.

    அப்போது அப்பகுதியில் பூஜ்யம் சதவீதம் அமோனியா இல்லை என்று கண்டறியபட்டது. எனவே விபத்து ஏற்பட்ட போதிலும் அது உடனடியாக சரிசெய்யபட்டது.

    அந்த தனியார் தொழி சாலை ரெட் கேட்டகிரியில் உள்ளது. இதே போல ரெட் கேட்டகிரியில் இருக்கும் அனைத்து தொழிற்சாலைகளும், மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும். அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் சரியாக உள்ளதா என்பது குறித்து ஆய்வு நடத்தப்படும். அதே சமயம் இது போன்ற விபத்துகள் ஏற்படும் போது, அதனை தடுக்க நவீன தொழில்நுட்ப அம்சங்கள் உடனடியாக பயன்படுத்தும் நிலையில் உள்ளதா என்பது குறித்து ஒரு குழு அமைத்து வல்லூனர்கள் உதவியுடன் ஆய்வு நடத்தப்பட உள்ளது.

    இரவில் இருந்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் அங்கு உள்ளனர். மேலும் அந்த தனியார் கம்பெனி தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது. சல்ப்யூரிக் ஆசிட் பிளாண்ட் மட்டும் உடனடியாக மூட முடியாது என்பதால் படிப்படியாக மூடும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. எதிர் காலத்தில் இது போன்று விபத்துகள் நடைபெறாமல் இருக்க என்ன நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என்பதை விரைவில் அறிவிப்போம். அங்கு மட்டும் அல்லாமல், நிரந்தர தீர்வை எட்டும் வகையில் இந்த ஆய்வு தமிழக முழுவதும் நடை பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்த விபத்தில் 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை :

    சென்னை தண்டையார்பேட்டையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் இன்று எண்ணெய் கசிவு ஏற்பட்டு பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.

    இந்த விபத்தில் 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்தவரின் பெயர் பெருமாள் வயது (52) கரிமேடு பகுதியை சேர்ந்தவர்.

    பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்ட போது ஊழியர்கள் அலறி அடித்து வெளியே ஓடி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    இச்சம்பவம் அறிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எண்ணூரில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட துரதிருஷ்டவசமான வாயு கசிவு சம்பவத்திற்கு மிகுந்த கவலை தெரிவித்தார்.
    • பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்தினார்.

    சென்னை :

    கவர்னர் மாளிகை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    கவர்னர் ஆர்.என்.ரவி, வடசென்னை எண்ணூரில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட துரதிருஷ்டவசமான வாயு கசிவு சம்பவம் குறித்து மிகுந்த கவலை தெரிவித்ததோடு, அதில் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்தினார் என கூறப்பட்டுள்ளது.

    • பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்ட போது ஊழியர்கள் அலறி அடித்து வெளியே ஓடி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    • வாயு கசிவு போன்ற சம்பவங்களால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

    சென்னை :

    சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டு பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இருவருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


    பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்ட போது ஊழியர்கள் அலறி அடித்து வெளியே ஓடி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    வடசென்னை பகுதியில் கடந்த சில நாட்களாக நிகழும் எண்ணெய் கசிவு, வாயு கசிவு போன்ற சம்பவங்களால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

    ×