search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாநகராட்சி பள்ளி"

    • ரூ. 1.90 கோடி மதிப்பீட்டில். 2 மாடியில் 6 வகுப்பறை கட்டிடங்கள் நவீன வசதியுடன் கட்டப்பட்டது.
    • மாணவர்கள் அமர்ந்து படிக்க நவீன மேஜை நாற்காலிகள் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ளன.

    திருவொற்றியூர்:

    மணலி, பாடசாலை தெருவில் சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் போதிய வகுப்பறை வசதிகள் இல்லாததால் கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தர வேண்டும் என்று ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் வட சென்னை எம்.பி. கலாநிதி வீராசாமியிடம் கோரிக்கை வைத்தனர்.

    இதைத்தொடர்ந்து தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 1.90 கோடி மதிப்பீட்டில். 2 மாடியில் 6 வகுப்பறை கட்டிடங்கள் நவீன வசதியுடன் கட்டப்பட்டது. மாணவர்களை பெரிதும் கவரும் வகையில் பல வண்ணங்களில் விமானம், வந்தே பாரத் ரெயில், இஸ்ரோ ராக்கெட் என வகுப்பறைமுகப்புகளில் வரையப்பட்டு தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    மேலும் மாணவர்கள் அமர்ந்து படிக்க நவீன மேஜை நாற்காலிகள் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ளன. இதனை மாணவர்கள் பயன்பாட்டிற்காக டாக்டர் கலாநிதி வீராசாமி எம்.பி. திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் மாதவரம் சுதர்சனம், கே.பி.சங்கர், மண்டல குழு தலைவர் ஏ.வி. ஆறுமுகம், வடக்கு மண்டல துணை ஆணையர் சிவகுரு பிரபாகரன், தலைமை ஆசிரியர் கோமளீஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஒரு சில பள்ளியில் மாணவர்களுக்கு அடிப்படையான கழிவறை வசதி போதுமான அளவு இல்லாத நிலை இன்னும் இருந்து வருகிறது.
    • மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிப்பிட வசதி இல்லாததால் பல்வேறு சிரமங்களை சந்திக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் படிப்படியாக செய்யப்பட்டு வருகின்றன.

    ஸ்மார்ட் வகுப்பறை, பாதுகாப்பான குடிநீர், கழிவறை வசதிகள் அவசியம் ஏற்படுத்தி தர வேண்டும் என்பதில் கல்வித் துறை உறுதியாக உள்ளது. "நம்ப பள்ளி நம்ம ஊரு" திட்டத்தில் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் மூலம் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன.

    ஒரு சில பள்ளியில் மாணவர்களுக்கு அடிப்படையான கழிவறை வசதி போதுமான அளவு இல்லாத நிலை இன்னும் இருந்து வருகிறது. மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிப்பிட வசதி இல்லாததால் பல்வேறு சிரமங்களை சந்திக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    சோழிங்கநல்லூர் மூட்டைக்காரன் ரோட்டில் உள்ள அரசு பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கிறார்கள். ஆனால் அங்கு 2 கழிவறை மட்டுமே உள்ளன. இதே போல அம்பத்தூர் கள்ளிக்குப்பம் உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு ஒரு கழிவறையும் மாணவிகளுக்கு ஒரு கழிவறையும் உள்ளன. ஆனால் அங்கு 442 பேர் படித்து வருகிறார்கள்.

    எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் 312 மாணவிகளுக்கு ஒரே ஒரு கழிவறை மட்டுமே உள்ளன. எண்ணூர் நெட்டுகுப்பத்தில் உள்ள மாணவர்களுக்கான பள்ளியில் கழிப்பிடம் புதுப்பிக்கப்படுகிறது.

    அம்பத்தூரில் உள்ள காமராஜர் அரசு மேல் நிலைப்பள்ளியில் இதைவிட மோசமான நிலை உள்ளது. 3,500 பேர் படிக்கக் கூடிய மாணவர்களுக்கு போதுமான கழிப்பிட வசதி இல்லை. மிகவும் மோசமான சூழ்நிலையில் உள்ள ஒரே ஒரு கழிவறையை மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த பள்ளியில் 10 நிமிடங்கள் இடைவேளை விடப்படுகிறது. அதற்குள்ளாக மாணவர்கள் அனைவரும் எப்படி சிறுநீர் கழிக்க முடியும். வாரத்தின் கடைசி நாள் அல்லது பள்ளி நேரத்தில் தான் கழிவறை சுத்தம் செய்யப்படுகிறது.

    அதிக மாணவர்கள் கொண்ட பள்ளியில் சிறுநீர் கழிப்பதற்கு தேவையான வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். ஆனால் ஒன்று அல்லது 2 கழிவறைகள் மட்டுமே இருப்பதால் மாணவ-மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி றார்கள்.

    சில பள்ளிகளில் குடிநீர் குடிக்கவே அனுமதி மறுக் கப்படுகிறது. தண்ணீர் குடித்தால் சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை வரும் என்பதால் அதனை தவிர்க்க வலியுறுத்தப்படுகிறது.

    கழிவறைகள் சுத்தம் இல்லாமல், முறையாக பராமரிக்காமல் இருப்பதால் மாணவர்கள் உள்ளே செல்லவே தயங்குகிறார்கள். கழிவறை வசதி போதுமான அளவு இல்லாததால் மாணவ-மாணவிகள் சிறுநீரை அடக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. சிறுநீர் கழிக்க மாணவிகள் வரிசையில் காத்து நின்று செல்லும் நிலையும் உள்ளது.

    வகுப்பு அறையில் சிறுநீரை அடக்க முடியாமல் இடைவேளை நேரத்தில் ஓடிச் செல்கின்ற நிலையும் காணப்படுகிறது. கழிவறை வசதி இல்லாததால் சிறுநீர் கழிக்க பயந்து தண்ணீர் குடிக்கவே தயக்கம் காட்டுகிறார்கள்.

    எனவே அரசு பள்ளிகளில் அடிப்படையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினால்தான் மாணவர்கள் நன்றாக படிக்க முடியும். குடிநீர், கழிவறை வசதி மிக மிக முக்கியமானது. அவற்றை தேவைக்கேற்ப கட்ட வேண்டும். முறையாக பராமரிக்க வேண்டும் என தன்னார்வலர்கள் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.

    • கவுன்சிலராகி மக்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வது திருப்தியாக உள்ளது.
    • பள்ளியில் பாடம் நடத்துவதால் என்னை பார்த்ததும் குழந்தைகள் ‘மிஸ்’ என்று அன்போடு அழைக்கிறார்கள்.

    கவுன்சிலர் என்றாலே தனி கெத்து தான்! தெருவில் இறங்கி நடந்தால் சுற்றி வரும் தொண்டர் படை பரிவாரம்! பிரச்சினைக்கு தீர்வை தேடி வரும் மக்கள் கூட்டம்! இப்படி ஒரு பந்தாவான பதவிக்காலம் அது.

    அதிலும் ஆளும் கட்சி கவுன்சிலராக இருந்தால் அவர்கள் லெவலே வேறு. ஆனால் இவை எல்லாவற்றிலும் இருந்து மாறுபட்டு காட்சி தருகிறார் சென்னை மாநகராட்சி 44-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சர்ப ஜயாதாஸ். மாநகராட்சி வரி விதிப்பு குழு தலைவராகவும் இருக்கிறார்.

    இவர் தெருவில் வந்தால் 'கவுன்சிலரம்மா... வணக்கம்' என்கிறார்கள் பெரியவர்கள். அவர்களுக்கு அக்மார்க் அரசியல்வாதியை போல் இரு கைகளையும் கூப்பி சிரித்தபடியே வணக்கம் போட்டு நகர்கிறார்....

    அந்த வழியாக வரும் வாண்டுகள் 'குட் மார்னிங் மிஸ்' என்கிறார்கள். அவர்களை பார்த்ததும் 'குட் மார்னிங்' என்றபடியே அவர்களை தட்டிக் கொடுத்து சாட்சாத் பள்ளி ஆசிரியை போலவே மாறி விடுகிறார்.

    புரியாமல் புருவம் உயர்த்திய நம்மிடம் ஆசிரியையும் நானே. கவுன்சிலரும் நானே என்றார் சிரித்த படியே.

    அது எப்படி...?

    வாரம் தோறும் சனிக்கிழமை என் வார்டில் உள்ள மாநகராட்சி பள்ளியில் மாணவர்களுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பு நடத்துகிறேன் என்றார்.

    ஒரு கவுன்சிலர் டீச்சராகவும் மாறியது எப்படி என்பது பற்றிய சுவையான தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். எனக்கு டீச்சர் வேலைன்னா ரொம்ப பிடிக்கும். கல்யாணத்துக்கு முன்பு டீச்சராக வேலை பார்த்து இருக்கிறேன்.

    கவுன்சிலர் வேலையும், அனுபவமும் எனக்கு புதியது. எனது கணவர் நரேந்திரன் தி.மு.க.வில் இருக்கிறார். எங்கள் வார்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டு. எனவே என்னை தேர்தலில் போட்டியிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாய்ப்பு கொடுத்தார்.

    இப்போது கவுன்சிலராகி மக்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வது திருப்தியாக உள்ளது. கவுன்சிலர் பணி நிமித்தமாக ஒரு நாள் எங்கள் பகுதி மாநகராட்சி பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அது நடுநிலைப் பள்ளிதான்.

    குழந்தைகள் ஸ்மார்ட்டாக இருந்தார்கள். ஆனால் ஆங்கிலம் பேசுவதில் அவர்களிடம் தயக்கம் இருந்ததை பார்த்தேன். எனவே நானே அவர்களுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுக்க ஆசைப்பட்டு தலைமை ஆசிரியரிடம் அனுமதி கேட்டேன்.

    கவுன்சிலர் பள்ளியில் வந்து கற்று தர போகிறாரா? என்று அவர்களும் யோசிக்கத்தான் செய்தார்கள். வாரம்தோறும் சனிக்கிழமையில் கற்றுக் கொடுக்க தயார் என்றேன். அதற்காக பெற்றோரிடமும் அனுமதி பெற்று வகுப்பு எடுக்க தொடங்கினேன். கடந்த ஆண்டு 45 குழந்தைகள் கலந்து கொண்டனர். சொல்லிக் கொடுத்தால் எளிதில் புரிந்து கொள்கிறார்கள். பேச்சு வழக்கில் பேசும் வார்த்தைகளை ஆங்கிலத்தில் சொல்லிக் கொடுத்து தினமும் என்னிடம் 15 நிமிடங்கள் ஆங்கிலத்திலேயே பேச வைப்பேன்.

    கொஞ்சம் கொஞ்சமாக தயக்கத்தை விட்டு பேச தொடங்கி இருக்கிறார்கள். இந்த ஆண்டு இன்னும் தொடங்க வில்லை.

    பள்ளியில் பாடம் நடத்துவதால் என்னை பார்த்ததும் குழந்தைகள் 'மிஸ்' என்று அன்போடு அழைக்கிறார்கள். அதை கேட்கும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது. உண்மையை சொல்லப் போனால் பள்ளியில் பாடம் நடத்தும் ஒவ்வொரு நாளும் நான் மன அழுத்தம் எதுவும் இல்லாமல் மிகவும் உற்சாகமாகி விடுவேன் என்றார்.

    ஆசிரியர் தொழிலை ஏன் விட்டீர்கள்? அரசியலுக்குள் எப்படி வந்தீர்கள்? என்றதும் தனது வாழ்க்கை பயணத்தின் இனிமையான அனுபவங்களை நினைவு கூர்ந்தார். "எனது பூர்வீகம் மேற்கு வங்காளம். வங்காளிதான் தாய்மொழி. நான் புனே பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப் படிப்பு படித்து கொண்டிருந்த போது எனது கணவர் அங்கு நிறுவனம் நடத்தி வந்தார். அப்போது எங்களுக்குள் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட நட்பு காதலாகி, திருமணத்தில் முடிந்தது. திருமணம் முடிந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. எனது மூத்த மகன் 9-ம் வகுப்பும், இளையவன் 4-ம் வகுப்பும் படிக்கிறார்கள்.

    திருமணத்துக்கு முன்பு சென்னை எங்கு இருக்கிறது? எப்படி இருக்கும்? என்றே தெரியாது. தமிழ்மொழியை பற்றியும் தெரியாது. இப்போது தமிழ் பேசவும் தெரியும், எழுத, படிக்கவும் தெரியும்.

    தமிழ் மட்டுமல்ல இந்தி, சமஸ்கிருதம், மராத்தி, ஆங்கிலம், வங்காளி ஆகிய 6 மொழிகள் நன்கு தெரியும். திருமணத்துக்கு முன்பு மேற்கு வங்காளத்தில் கேந்திரிய பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக வேலை பார்த்தேன். எனக்கு ஆசிரியை பணி ரொம்ப பிடிக்கும். எனவே பெரம்பூரில் ஒரு தனியார் பள்ளியில் சில ஆண்டுகள் ஆசிரியர் வேலை பார்த்தேன். அதன் பிறகு எனது ஆர்வத்தை பார்த்து எனது கணவர் 'பிளே ஸ்கூல்' தொடங்கி நடத்த ஊக்கம் அளித்தார்.

    இப்போது அந்த பள்ளியையும் நடத்துகிறோம். ஒன்று மாணவர்களுக்கு கற்று கொடுப்பது இன்னொன்று பொது மக்களுக்கு சேவை செய்வது. ஆக, இரண்டு பணிகளும் இப்போது எனக்கு பிடித்த பணிகளாகி விட்டன" என்றார் வங்காளத்து தமிழ் மருமகள்.

    • வேலூரில் ஏழை மாணவர்கள் நலனுக்காக அமைக்கப்படுகிறது
    • வரும் கல்வி ஆண்டு முதல் மாணவ மாணவிகளுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கும்

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி யால் 87 பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் 60-க்கும் மேற்பட்ட நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் சுமார் 10,000 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இதில் 15 பள்ளிகளில் மட்டுமே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி உள்ளது. இதுவும் 2017-ம் ஆண்டு ஏற்படுத்தப்ப ட்டுள்ளது.

    மாநகராட்சியால் நடத்தப்படும் பள்ளிகளில் மாணவர்கள் தற்போது குடிநீர் மற்றும் பிற தேவைகளுக்காக மேல்நிலை குடிநீர் தொட்டி மற்றும் ஆழ்துளை கிணறு ஆகியவற்றை சார்ந்து உள்ளனர்.

    தண்ணீர் தொட்டிகளில் குளோரின் கலக்கப்படுகிறது. ஆனாலும் தொட்டிகளை பராமரிப்பது பெரும் சவாலாக உள்ளது.

    பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவ மாணவிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வழங்குவதன் மூலம் அவர்களுடைய பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்.

    வருகின்ற கல்வி ஆண்டில் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்பாக அனைத்து பள்ளிகளிலும் அதிகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    ரூ.4.5 லட்சம் செலவில் ஒரு நாளைக்கு 500 லிட்டர் குடிநீர் கிடைக்கும் வகையில் சுத்திகரிப்பு தொட்டிகள் நிறுவப்பட உள்ளது.

    மாணவ, மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப குடிநீர் அளவு அதிகரிக்கப்படும்.

    சுத்திகரிப்பு எந்திரங்களுக்கு தேவையான தண்ணீர் வசதிக்காக பள்ளிகளில் போர்வெல் அமைக்கப்பட உள்ளது.

    வேலூர் மாநகராட்சி பள்ளிகளில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பள்ளிகளில் இந்த பணிகளை விரைவாக செய்ய முடியும். இதன் மூலம் வரும் கல்வி ஆண்டு முதல் மாணவ மாணவிகளுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கும் என மேயர் சுஜாதா தெரிவித்துள்ளார்.

    • முதல்கட்டமாக சென்னை உள்பட 21 மாநகராட்சி பகுதிகளில் காலை சிற்றுண்டி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
    • காலை உணவு தயாரித்து வழங்குவதற்கு சமையல் கூடங்கள் தனியாக செயல்பட்டு வருகிறது.

    சென்னை:

    அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் பள்ளிக்கு இடைநிற்றல் இல்லாமல் முறையாக வர வேண்டும் என்பதற்காக காலை சிற்றுண்டி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் ஏழை குழந்தைகள் வீட்டில் காலை உணவு சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கு வருவதில் தாமதம் ஏற்படுவதையொட்டி இத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

    முதல்கட்டமாக சென்னை உள்பட 21 மாநகராட்சி பகுதிகளில் காலை சிற்றுண்டி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. சென்னையில் உள்ள 38 துவக்கப்பள்ளியில் படிக்கும் 5220 குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. 2-வது கட்டமாக பிப்ரவரி மாதத்தில் மேலும் ஒரு பள்ளி இத்திட்டத்தின்கீழ் கொண்டு வரப்பட்டது.

    இந்த நிலையில் காலை உணவு திட்டம் ஜுன் மாதம் முதல் அனைத்து அரசு தொடக்கப்பள்ளியிலும் விரிவாக்கம் செய்யப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 333 பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இப்பள்ளியில் படிக்கும் 63 ஆயிரம் குழந்தைகள் வருகிற ஜுன் மாதம் முதல் காலை உணவு சாப்பிடுவார்கள்.

    காலை உணவு தயாரித்து வழங்குவதற்கு சமையல் கூடங்கள் தனியாக செயல்பட்டு வருகிறது. நவீன சமையல் கூடம் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டு அங்கிருந்து உணவு வினியோகிக்கப்படுகிறது.

    கூடுதலாக சமையல் கூடங்கள் அமைக்க இடங்கள் தேர்வு செய்யப்படுகின்றன. மாணவர்கள் காலை உணவு சாப்பிடக்கூடிய பள்ளிக்கு மையப்பகுதியில் உணவு தயாரித்து தாமதம் இன்றி வழங்கும் வகையில் மாநகராட்சி அதிகாரிகள் இடங்களை ஆய்வு செய்கின்றனர்.

    • தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாநகராட்சி பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளும் உள்ளன.
    • திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 139 அரசு பள்ளிகள் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி மூலம் மழலைய பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை நடத்தப்பட்டு வருகிறது. சுமார் 1 லட்சம் மாணவ-மாணவிகள் மாநகராட்சி பள்ளியில் படித்து வருகிறார்கள்.

    பள்ளி கட்டிடங்கள், அடிப்படை வசதிகளுடன் மாநகராட்சி பள்ளிகள் தன் பங்களிப்பை வழங்கி வருவதால் ஏழை, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் அதிகளவில் படித்து வருகின்றனர். தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஸ்மார்ட் வகுப்பறைகளும் உள்ளன.

    இந்நிலையில் சென்னை நகரின் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் கடந்த சில வருடங்களாக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வருகின்றன.

    மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இந்த பள்ளிகள் இருந்தாலும் கூட அரசு பள்ளிகளாக செயல்பட்டு வந்தன. இதனால் நிர்வாக ரீதியான பிரச்சினை உருவானது.

    திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய வருவாய் மாவட்டங்களை உள்ளடக்கி இந்த பள்ளிகள் செயல்பட்ட வந்தன. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள இத்தகைய பள்ளிகளை மாநகராட்சி பள்ளிகளுடன் இணைக்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

    அதன் அடிப்படையில் எத்தனை பள்ளிகள் இதுபோன்று உள்ளன என ஆய்வு செய்யப்பட்டது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 139 அரசு பள்ளிகள் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டது.

    அந்த பள்ளிகளை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டு என மன்ற கூட் டத்திலும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. அதன்படி 139 அரசு பள்ளிகள் சென்னை மாநகராட்சியுடன் சமீபத்தில் இணைக்கப்பட்டன.

    அந்த பள்ளிகள் "சென்னை பள்ளிகள்" என பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அங்கு படித்த 35 ஆயிரம் மாணவ-மாணவிகள் தொடர்ந்து கல்வியை தொடர சென்னை மாநகராட்சி அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

    மாநகராட்சி கல்வி துறை மூலம் இனி இதற்கு நிதி ஒதுக்கப்பட்டு இப்பள்ளி களின் வளர்ச்சி பணிகள் செயல்படுத்தப்படும்.

    • காலையில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
    • பள்ளி மாணவர்கள் முதல்-அமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    கோவை,

    தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கவும், மாணவர்களுக்கு ஏற்படும் ஊட்டச்சத்துக குறைபாட்டினை களையவும் காலையில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    சட்டசபையில், 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் ஒவ்வொரு மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அதன்படி, இந்த திட்டம் கோவை வரதராஜபுரம் மாநகராட்சி பள்ளியில் இன்று தொடங்கப்பட்டது. திட்டத்தை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி, மாநகராட்சி கமிஷனர் பிரதாப், கிழக்கு மண்டல தலைவர் லக்குமி இளஞ்செல்வி ஆகியோர் தொடங்க்கி வைத்தனர்.

    இதனைத் தொடர்ந்து அனைவரும் பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து சிற்றுண்டி சாப்பிட்டனர். பின்னர் பள்ளி மாணவர்கள் முதல்-அமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    ×