search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மலை கிராமங்கள்"

    • கல்வி சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வருவாய் மற்றும் வனத்துறை சார்பில் செய்து தரப்படுகிறது.
    • சோலார் விளக்குகள் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக முன்னாள் எம்.எல்.ஏ தொகுதி நிதியில் இருந்து அமைத்து தரப்பட்டது.

    உடுமலை :

    உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள கோடந்தூர், பொருப்பாறு, ஆட்டுமலை, ஈசல்தட்டு, தளஞ்சி, தளிஞ்சிவயல், மாவடப்பு, குலிப்பட்டி, குருமலை, காட்டுப்பட்டி, பூச்ச கொட்டாம்பாறை, கருமுட்டி உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகளில் மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள். இவர்களுக்கு தேவையான கல்வி சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வருவாய் மற்றும் வனத்துறை சார்பில் செய்து தரப்படுகிறது. ஆனால் முழுமையாக பூர்த்தி அடையாததால் மலைவாழ் மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

    அந்த வகையில் மலைவாழ் குடியிருப்புகளுக்கு ஒளி ஏற்றும் விதமாக சூரிய ஒளியில் இயங்கக்கூடிய சோலார் விளக்குகள் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக முன்னாள் எம்.எல்.ஏ ஜெயராமகிருஷ்ணன் தொகுதி நிதியில் இருந்து அமைத்து தரப்பட்டது. அதன் பின்பு அதை முறையாக பராமரித்து நடைமுறைப்படுத்துவதற்கு அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அந்த விளக்குகள் படிப்படியாக பழுதடைந்து தற்போது கிராமங்கள் முழுவதும் இருளில் மூழ்கி உள்ளது.

    இதுகுறித்து மலைவாழ் மக்கள் கூறியதாவது:- எங்கள் கிராமங்களுக்கு அடிப்படை வசதிகளை அரசுத்துறைகள் சார்பில் செய்து கொடுப்பது மகிழ்ச்சியான விஷயமாகும்.ஆனால் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்ட பின்பு அதனை பராமரித்து முழுமைப்படுத்தி நடைமுறைப் படுத்துவதற்கு அதிகாரிகள் முன் வருவதில்லை. இதனால் திட்டங்கள் தொடங்கப்பட்ட வேகத்திலேயே செயலிழந்து பழுதடைந்து காட்சி பொருளாக மாறி வருவது வேதனைக்குரிய விஷயமாகும்.

    அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு எங்கள் குடியிருப்புகளில் சூரிய ஒளியில் இயங்கக்கூடிய சோலார் விளக்குகள் அமைத்து தரப்பட்டது. அவற்றை அவ்வப்போது பராமரித்து நடைமுறையில் இருக்க வைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அந்த விளக்குகள் ஒவ்வொன்றாக பழுது அடைந்து தற்போது முற்றிலுமாக அனைத்து விளக்குகளும் காட்சி பொருளாக மாறிவிட்டது. இதன் காரணமாக கிராமங்கள் இருளில் மூழ்கி உள்ளது.

    இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாததால் வனவிலங்குகள் தடம் மாறி குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுவது வாடிக்கையாக உள்ளது. அதை விரட்டி பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக ரோந்து பணியில் ஈடுபட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அப்போது மனிதன் வன விலங்குகள் மோதல் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. இதனால் மலைவாழ் மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே அதிகாரிகள் மலைவாழ் கிராமங்களில் ஆய்வு செய்து பழுதடைந்த சோலார் விளக்குகளை புதுப்பித்து கிராமங்களுக்கு இரவில் ஒளியேற்றி வைக்க வேண்டும்.

    • சாலை வசதி இல்லாததால் மலைவாழ் மக்கள் அதிகம் பாதிப்படைகின்றனர்.
    • குறிப்பிட்ட நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியாததால் நடந்த உயிரிழப்புகள் ஏராளம்.

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே பீஞ்சமந்தை, ஜார்தான்கொல்லை, பாலாம்பட்டு ஆகிய மலை ஊராட்சிகளில் சுமார் 120-க்கும் மேற்பட்ட மலை குக்கிராமங்கள் உள்ளன.

    சுமார் 30 ஆயிரம் பேர் வசிக்கும் இந்த மலை பகுதிகளுக்கு இதுநாள் வரை சாலை அமைக்கப்படவில்லை.

    மலை உச்சியில் வசிக்கும் இந்த மக்கள் தங்களது தேவைகளை சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒடுக்கத்தூர் மற்றும் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அணைக்கட்டு பகுதிக்கு சென்று தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றனர்.

    அதேபோல் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொண்டு, தலை மீது சுமந்தபடியே மீண்டும் மலை கிராமத்துக்கு நடைபயணமாக செல்கின்றனர்.

    சாலை வசதி இல்லாததால் மலைவாழ் மக்கள் அதிகம் பாதிப்படைகின்றனர். யாருக்கேனும் திடீரென உடல்நிலை சரியில்லாதபோது மலைவாசிகள் டோலி கட்டி, அதில் நோயாளியை படுக்க வைத்து தோள் மீது சுமந்தபடியே ஆஸ்பத்திரிக்கு வருகின்றனர். பிரசவ வலியால் துடிக்கும் கர்ப்பிணிகளையும் டோலி கட்டி தூக்கி செல்லும் அவலம் நீடித்து வருகிறது.

    குறிப்பிட்ட நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியாததால் நடந்த உயிரிழப்புகள் ஏராளம்.

    இந்த நிலையில் பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்டது அல்லேரி அடுத்த அத்திமரத்து கொல்லை. இந்த மலை கிராமத்தைச் சேர்ந்த விஜி-பிரியா தம்பதியரின் ஒன்றரை வயது மகள் தனுஷ்காவை பாம்பு கடித்தது.

    சாலை வசதி இல்லாததால் குழந்தையை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல தாமதம் ஏற்பட்டது. இதனால் சிகிச்சை குழந்தை பரிதாபமாக இறந்தது.

    பிரேத பரிசோதனைக்கு பின்னர் குழந்தையின் உடல் பெற்றோரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.

    மலை அடிவாரம் வரை ஆம்புலன்சில் உடல் கொண்டுவரப்பட்டது அங்கிருந்து பெற்றோர்களை இறக்கி விட்டனர் குழந்தையின் தாய் கண்ணீர் மல்க தனது குழந்தையின் உடலை 10 கிலோ மீட்டர் தூரம் சுமந்து சென்றார். இது பெரும் பரபரப்பை பரிதாபத்தையும் ஏற்படுத்தியது.

    அல்லேரி, அத்திமரத்து கொல்லை உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு சாலை வசதி செய்து தரவேண்டும் என அப்பகுதி மலைவாழ் மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    இந்த நிலையில் இன்று காலை வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அதிகாரிகளுடன் அத்திமரத்து கொல்லை மலை கிராமத்திற்கு சென்று ஆய்வு செய்தார். மேலும் சாலை அமைப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    அணைக்கட்டு அருகே உள்ள மலை கிராமங்களுக்கு விரைவில் சாலை வசதி மற்றும் ஆரம்ப துணை சுகாதார மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த ஆய்வின்போது சப்-கலெக்டர் கவிதா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு, அணைக்கட்டு தாசில்தார் வேண்டா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுதாகரன், சாந்தி வனத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • உழவுக்கு பயன்படும் கால்நடைகள் மற்றும் நாட்டுக்கோழிகள் அதிக அளவு வளர்க்கப்படுகின்றன.
    • இப்பகுதியில் 10 ஆயிரத்துக்கும் அதிகமாக கால்நடைகள் இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    உடுமலை:

    உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் பொன்னாலம்மன் சோலை, ஆண்டியூர், பாண்டியன் கரடு, வல்லக்குண்டாபுரம், பாலாறுபதி, மயிலாடும்பாறை உள்ளிட்ட பல சிறிய கிராமங்கள் அமைந்துள்ளன. மேலும் அப்பகுதியில் விளைநிலங்களில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தோட்டத்து சாளைகள் உள்ளன.இங்கு விவசாயத்துக்கு இணையாக கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. பண்ணை முறையிலும் குறைந்தளவிலும் வெள்ளாடு, செம்மறியாடு, பால் உற்பத்திக்கான மாடுகள், உழவுக்கு பயன்படும் கால்நடைகள் மற்றும் நாட்டுக்கோழிகள் அதிக அளவு வளர்க்கப்படுகின்றன.

    இப்பகுதியில் 10 ஆயிரத்துக்கும் அதிகமாக கால்நடைகள் இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் அப்பகுதியில் கால்நடைத்துறையின் மருந்தகம், கிளை நிலையம் உட்பட வசதிகள் எதுவும் இல்லை.எனவே கால்நடைகளுக்கு நோய்த்தாக்குதல் ஏற்படும் போது வெகுதொலைவு அழைத்துச்செல்ல வேண்டியுள்ளது. குறித்த நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் கால்நடைகள் இறப்பதும் நடக்கிறது.

    குறிப்பிட்ட இடைவெளிகளில் கோமாரி நோய் உட்பட நோய்த்தாக்குதல்களை கட்டுப்படுத்த தடுப்பூசி போடுவதிலும் சிக்கல் ஏற்படுகிறது. இப்பிரச்சினைக்கு தீர்வாக நடமாடும் கால்நடை மருந்தக திட்டத்தை அப்பகுதியில் செயல்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இது குறித்து கால்நடை வளர்ப்போர் கூறியதாவது:-

    கால்நடைகளின் பிரச்சினைகளுக்கு வாளவாடி, கரட்டுமடத்திலுள்ள கால்நடை மருந்தகத்துக்கே அழைத்துச்செல்ல வேண்டியுள்ளது. குறைந்தபட்சம் 10 கி.மீ., தூரத்துக்கு மேலுள்ளதால் கால்நடைகளை அழைத்துச்செல்ல முடிவதில்லை. எனவே தனியாரிடம் அதிக செலவழித்து நோய்வாய்ப்படுதல், சினை ஊசி போடுதல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.எனவே கால்நடைத்துறை சார்பில் குறிப்பிட்ட இடைவெளிகளில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடத்த வேண்டும்.கால்நடைகளுக்கு அம்மை நோய் பரவி வரும் நிலையில் இத்திட்டத்தை செயல்படுத்த திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.  

    ×