search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலி அதிகாரி"

    • மர்மநபர் ஒருவர் தான் உணவு பாதுகாப்பு அலுவலர் எனவும், உனது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்ததால் கடையை சோதனை செய்ய வேண்டும் என கூறி கடைக்குள் நுழைந்தார்.
    • நபரின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த மளிகை கடை உரிமையாளர் குமார் நைசாக போலீசாருக்கு போன் செய்ய முயற்சி செய்துள்ளார்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள செட்டிமாங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 44). இவர் செட்டிமாங்குறிச்சி அம்மன் கோவில் பஸ் நிறுத்தம் அருகே மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.

    சோதனை

    இந்த நிலையில் அண்மையில் குமாரின் மளிகை கடைக்கு டிப்-டாப்பாக உடை அணிந்து மோட்டார்சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர் தான் உணவு பாதுகாப்பு அலுவலர் எனவும், உனது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்ததால் கடையை சோதனை செய்ய வேண்டும் என கூறி கடைக்குள் நுழைந்தார்.

    அப்போது அந்த நபரின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த மளிகை கடை உரிமையாளர் குமார் நைசாக போலீசாருக்கு போன் செய்ய முயற்சி செய்துள்ளார். இதை கண்ட அந்த நபர் கடைக்குள் இருந்த குளிர்பான பாட்டிலை எடுத்து உடைத்து குமாரின் கழுத்தில் வைத்து மிரட்டி, கடையில் பணப்பெட்டியில் இருந்த ரொக்க பணம் ரூ.21 ஆயிரத்து 500 -ஐ கொள்ளை அடித்துக் கொண்டு தான் வந்த மோட்டார்சைக்கிளில் ஏறி தப்பிச் சென்று விட்டார்.

    இது குறித்து குமார் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த எடப்பாடி போலீசார் அப்பகுதியில் பதிவாகி இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு மளிகை கடையில் கொள்ளை அடித்த நபரை தீவிரமாக தேடி வந்தனர்.

    குமாரபாளையத்தை சேர்ந்தவர்

    போலீசாரின் விசார ணையில் சம்பந்தப்பட்ட மர்ம நபர் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (35) என்பதும், இவர் மீது இதேபோன்று 13 -க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது.

    இவர் சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே தனது கூட்டாளியான அங்கப்பன் என்பவருடன் சேர்ந்து போலி அதிகாரியாக நடித்து பெருந்தொகையினை கொள்ளை அடித்துச் சென்ற வழக்கில் தலைறைவாக இருந்து வருவதும், அவரை போலீசார் தேடி வருவதும் தெரியவந்தது.

    கைது- ஜெயிலில் அடைப்பு

    இந்த நிலையில் தான் செட்டிமாங்குறிச்சி பகுதியை சேர்ந்த குமாரின் மளிகை கடையில் மணிகண்டன் போலி அதிகாரியாக நடித்து பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே சுற்றித்திரிந்த மணிகண்டனை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவரிடம் இருந்த இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து சேலம் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    மேலும் இது போன்ற போலி நபர்கள் அதிகாரிகள் எனக்கூறி சோதனை செய்ய முற்படும் போது சம்பந்தப்பட்ட பகுதி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கும்மாறு வியாபாரிகளை போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    • போலி அடையாள அட்டைகளை தயாரித்துக் கொண்டு அரசு அதிகாரி என மிரட்டி மதன்குமார் வசூலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
    • ஆயுதப்படை மைதானத்துக்குள்ளேயே புகுந்து வாகனத்தை திருடிசென்ற சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சேலம்:

    சேலம் குமாரசாமிபட்டி ஆயுதப்படை மைதானத்தில் 2-ம் நிலை காவலர்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. இதற்காக நியமிக்கப்பட்ட போலீஸ் அதிகாரிகள் நேற்று மைதானத்திற்கு வந்தனர். அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஆயுதப்படைக்கு சொந்தமான பொலிரோ வாகனத்தை காணவில்லை.

    இதனால் போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். அந்த வாகனத்தை திருடி சென்றது யார்? என்ற பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த வேளையில் ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் அலுவலகம் முன்பு நிறுத்தியிருந்த மற்றொரு போலீஸ் வாகனத்தை ஒருவர் திருட முயன்றார். இதனை பார்த்த இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் அந்த வாலிபரை மடக்கி அவரிடம் விசாரித்தனர்.

    அப்போது அந்த நபர், தாரமங்கலம் தொளசம்பட்டி பிரிவு ரோட்டை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் மதன்குமார்(வயது 38) என்பது தெரியவந்தது. இவர் அங்கு பொலிரோ வாகனத்தில் வந்துள்ளார்.

    அந்த வண்டிகள் அரசு முத்திரை பொருத்தப்பட்டிருந்தது. அவர் முதல்வர் நிவாரண பிரிவின் உதவி இயக்குனர் என்ற அடையாள அட்டையும் அவர் வைத்திருந்தார், அதனை அவர் போலியாக தயாரித்து வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது.

    மதன்குமார் கூட்டாளிகளுடன் வந்து போலீஸ் வாகனத்தை திருடினாரா என்ற சந்தேகம் எழுந்தது. இது குறித்து அஸ்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கப்பட்டது. மாநகர போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா நேரடியாக விசாரணை நடத்தினார். உதவி கமிஷனர் லட்சுமி பிரியா, இன்ஸ்பெக்டர் பால்ராஜ் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் ஆயுதப்படை மைதானத்தில் வெளிப்பகுதியில் இருக்கும் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். திருடப்பட்ட வாகனம் எந்த பகுதி வழியாக சென்றுள்ளது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். மதன்குமாரிடமும் துருவி துருவி போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்தான் போலீஸ் வாகனத்தை திருடியது தெரியவந்தது. மேலும் அந்த வாகனத்தை சூரமங்கலம் ஜங்ஷன் பகுதியில் நிறுத்தி இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து ஜங்ஷன் பகுதியில் சாலையோரம் நிறுத்தி இருந்த போலீஸ் வாகனத்தை போலீசார் மீட்டனர். மதன்குமார் இரவு ஆயுதப்படை மைதானத்துக்கு தனது சொகுசு காரில் வந்து மது குடித்ததும், பின்னர் அங்கிருந்த போலீஸ் வாகனத்தில் சாவி போடாமலேயே இணைப்பு கொடுத்து ஸ்டார்ட் செய்து வண்டியை எடுத்துச் சென்று ஜங்ஷன் பகுதியில் நிறுத்தியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்திச் சென்று அவரது சொகுசு காரை எடுக்க காலையில் வந்திருக்கிறார். அப்போது போலீஸ் வண்டியில் உள்ள மைக்கை கழற்றி அவரது வண்டியில் வைக்கும் போது போலீசாரிடம் சிக்கியது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

    அவரிடம் இருந்து ஏராளமான போலியான அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் பயன்படுத்தி வந்த சொகுசு காருக்கான எண்ணையும் போலியாக தயாரித்து ஒட்டி உள்ளார். மேலும் வேலை வாங்கி தருவதாக கூறி பலரை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

    தாரமங்கலம் அருகிலுள்ள சின்னப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 33). இவர் கடந்த 6 வருடங்களாக தாரமங்கலம் பேருந்து நிலையம் அருகிலுள்ள ஒரு பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மதன்குமார் தான் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணி புரிந்து வருவதாக அறிமுகம் ஆனார்.

    இதை தொடர்ந்து அவர் அடிக்கடி தனது காருக்கு டீசல் நிரப்பிவிட்டு பில்லில் கையொப்பம் இட்டு சென்று வந்துள்ளார். இவ்வாறு அவர் டீசல் அடித்த வகையில் பாக்கி ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் சேர்ந்ததால் அவரிடம் பணத்தை மஞ்சுநாதன் கேட்டார். அதற்கு அந்த நபர் தான் அரசு அதிகாரி என்று கூறி மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதுபற்றி மஞ்சுநாதன் தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி டீசல் போட்டு மோசடியில் ஈடுபட்ட மதன்குமார் மீது வழக்கு பதிவு செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது குறித்து போலீசார் கூறுகையில் போலி அடையாள அட்டைகளை தயாரித்துக் கொண்டு அரசு அதிகாரி என மிரட்டி மதன்குமார் வசூலில் ஈடுபட்டு வந்துள்ளார். தற்போது போலீஸ் வண்டியை திருடி சென்று இதுபோன்ற மோசடியில் ஈடுபட திட்டமிட்டது தெரியவந்துள்ளது என்றனர்.

    போலீசாரின் ஆயுதப்படை மைதானத்துக்குள்ளேயே புகுந்து வாகனத்தை திருடிசென்ற சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கைதான மதன்குமார் வேறு பல இடங்களில் இதுபோன்று கைவரிசை காட்டியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    • பணமோசடியில் ஈடுப்பட்ட பிரகாஷ் மீது சிவகங்கை, துறையூர், ஜீயபுரம் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    • சுபாஷ், சசிக்குமார் ஆகியோர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் போல் நடித்து வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்து சென்னையில் கைது செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    பெரம்பலூர்:

    திருச்சி மாவட்டம், துறையூர் சிங்கிளாந்தபுரத்தை சேர்ந்த பாலசுப்ரமணி மகன் பிரகாஷ் (வயது 40). இவருடன் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் 11-ந் தேதி அன்று பெரம்பலூர் ரோஸ் நகரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் மோகன்பாபுவிற்கு (25) அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அப்போது பிரகாஷ், ஹோம் அன்ட் ரூரல் டெவலப்மெண்ட் துறையில் இணை செயலாளராக வேலை பார்த்து வருவதாகவும். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சுபாஷ், சசிக்குமார் ஆகியோர் தனது நெருங்கிய நண்பர்கள் என கூறி, இவர்கள் மூலம் உங்களுக்கு ஹெல்த் இன்ஸ்பெக்டர் வேலை வாங்கி தருவதாகவும், உங்கள் மனைவி சாருமதிக்கு (22) விஏஓ வேலை வாங்கி தருவதாகவும் மோகன் பாபுவிடம் கூறியுள்ளார்.

    இதனை நம்பிய மோகன்பாபு, தனது உறவினர் மற்றும் நண்பர்களாகிய பெரம்பலூர் மாவட்டம், கீழப்புலியூர் ராஜலிங்கம், உளுந்துபேட்டை பார்த்திபன் உட்பட 23 பேரிடம் மொத்தம் ரூ.1.83 கோடி பணத்தை வசூல் செய்து பிரகாஷிடம் கொடுத்துள்ளார். ஆனால் பணத்தை வாங்கிக் கொண்டு வேலை வாங்கித் தராமல் பிரகாஷ் தலைமறைவாகி விட்டார். இதனால் வேலைவாங்கி தரமாமல் பண மோடிசயில் ஈடுப்பட்ட பிரகாஷ் மீது நடவடிக்கை எடுக்கும்படி பெரம்பலூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிபு போலீசில் மோகன்பாபு புகார் கொடுத்துள்ளார்.

    இதற்கிடையே பணம் கொடுத்த நபர்கள் மோகன்பாபுவிடம் பணத்தைக் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர்.

    மோகன்பாபு மற்றும் அவரது மனைவி இருவருக்கும் வேலைவாங்கி தராமல் ஏமாற்றிய பிரகாசை, கடந்த 29-ந்தேதி சென்னை கோயம்பேட்டிலிருந்து காரில் பெரம்பலூர் அழைத்து வந்து பணத்தை தந்து விட்டு செல்லும்படி தனது வீட்டில் அடைத்து வைத்துள்ளார்.

    இதையறிந்த பிரகாஷின் அண்ணன் பால்செல்வனின் மனைவி ஆரோக்கியமேரி 100 நம்பருக்கு போன் செய்து தனது கொழுந்தன் பிரகாஷை மோகன்பாபு கடத்தி சென்று அவரது வீட்டில் அடைத்து வைத்துள்ளார் என புகார் கொடுத்துள்ளார்.

    தகவலின்பேரில் பெரம்பலூர் போலீசார் மோகன்பாபுவின் வீட்டிற்கு சென்று பிரகாஷை மீட்டனர். பிரகாஷை போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பிரகாஷ் ஹோம் அன்ட் ரூரல் டவலப்மெண்ட் துறையில் இணை செயலாளராக பணிபுரியவில்லை என்பதும், சுபாஷ், சசிக்குமார் ஆகியோர் ஐ.ஏ.எஸ். அதிகாரியே கிடையாது என்பதும் தெரியவந்துள்ளது. பின்னர் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிந்து பண மோசடியில் ஈடுபட்ட பிரகாஷை கைது செய்து பெரம்பலூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    பணமோசடியில் ஈடுப்பட்ட பிரகாஷ் மீது சிவகங்கை, துறையூர், ஜீயபுரம் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    சுபாஷ், சசிக்குமார் ஆகியோர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் போல் நடித்து வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்து சென்னையில் கைது செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×