search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐபிஎல் 2023"

    • ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் அம்பதி ராயுடு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
    • ஐ.பி.எல். வரலாற்றில் சென்னை அணி 25 முறை 200 ரன்னுக்கு எடுத்தது.

    ஐபிஎல் தொடரின் 16-வது சீசன் கடந்த மார்ச் மாதம் தொடங்கியது. இதில் 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இந்த தொடரில் கொல்கத்தா அணி வீரரான ரிங்கு சிங் இந்த தொடரில் தான் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார். இந்த தொடரின் லீக் ஆட்டம் ஒன்றில் குஜராத் - கொல்கத்தா அணிகள் மோதின. இந்த போட்டியின் கடைசி ஓவரில் கொல்கத்தா அணிக்கு 29 ரன்கள் தேவைப்பட்டது. ரிங்கு சிங் அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தார். 

    அந்த போட்டியில் இருந்து ரிங்கு சிங் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி தற்போது இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.

    இதேபோல கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 13 பந்துகளில் அரை சதம் கடந்து அசத்தினார். இதன்மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்து ஜெய்ஸ்வால் புதிய சாதனை படைத்தார்.

    இந்த சீசனில் லக்னோ அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வந்த கேஎல் ராகுல் பெங்களூர் அணிக்கு எதிராக காயமடைந்தார். பீல்டிங்கின் போது தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டத்தில் ராகுல் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்த சீசனின் இறுதி ஆட்டத்துடன் ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் அம்பதி ராயுடு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

    இந்த சீசனில் ரோகித் சர்மா மோசமான சாதனையை படைத்தார். ஐ.பி.எல். வரலாற்றில் அதிக முறை டக் அவுட் ஆன பேட்ஸ்மேன் என்ற மோசமான சாதனைக்கு ரோகித் சர்மா சொந்தக்காரரானார். அவர் மொத்தம் 16 முறை டக் அவுட் ஆகியுள்ளார்.

    டக் அவுட்டில் மோசமான சாதனை படைத்தாலும் சிக்சர் மூலம் மிரட்டலான சாதனையை படைத்தார். ஐபிஎல் தொடரில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஏ.பி.டிவில்லியர்ஸை பின்னுக்குத் தள்ளி ரோகித் சர்மா 2-வது இடம் பிடித்துள்ளார். ரோகித் 252 சிக்சருடன் 2-வது இடம் பிடித்துள்ளார். அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் கிறிஸ் கெயில் 141 போட்டியில் 357 சிக்சருடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.

     

    ஐ.பி.எல். தொடரில் 7,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார். 233 ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 46 அரைசதங்களுடன் மொத்தம் 7,036 ரன்கள் எடுத்துள்ளார்.

     

    ஐ.பி.எல் கிரிக்கெட்டில் அவர் தனது ஏழாவது சதத்தை பதிவு செய்தார். ஐ.பி.எல் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் ஏழு சதங்கள் அடித்தது கிடையாது.

    மேலும் 236 ஆட்டங்களில் ஆடிய டோனி 5004 ரன்கள் குவித்துள்ளார். இந்த மைல்கல்லை கடந்த 7-வது வீரர் டோனி ஆவார். ஏற்கனவே விராட் கோலி, ஷிகர் தவான், டேவிட் வார்னர், ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா, டிவில்லியர்ஸ் ஆகியோர் ஐ.பி.எல்.-ல் 5 ஆயிரம் ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளனர்.


    இந்த சீசனில் லக்னோ மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் விராட் கோலி, நவீன் உல் ஹக், கம்பீர் ஆகியோர் வார்த்தை மோதலில் ஈடுபட்ட சம்பவத்தை யாரும் மருந்து விட முடியாது. இந்த மோதலினால் கோலி- கம்பீர் ஆகியோருக்கு 100% அபராதம் விதிக்கப்பட்டது.


    ஐ.பி.எல். வரலாற்றில் சென்னை அணி 25 முறை 200 ரன்னுக்கு எடுத்தது. அதிக முறை 200-க்கு மேல் எடுத்த அணி சென்னை தான். இந்த வகையில் 2-வது இடத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் (24 முறை), 3-வது இடத்தில் பஞ்சாப் கிங்சும் (17 முறை) உள்ளது.

    ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் 10-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் அணி என்ற வரலாற்று சாதனையைப் சென்னை சூப்பர் கிங்ஸ் படைத்தது. சென்னைக்கு அடுத்தபடியாக மும்பை இந்தியன்ஸ் அணி 6 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

    ஐ.பி.எல். கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரூ.20 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டது. 2-வது இடத்தை பிடித்த குஜராத் அணிக்கு ரூ.13 கோடி கிடைத்தது. 3-வது இடத்தை பிடித்த மும்பை இந்தியன்ஸ், 4-வது இடத்தை பிடித்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு முறையாக ரூ.7 கோடி, ரூ.6.5 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டது.


    இந்த தொடர் முழுவதிலும் சென்னை அணி எந்த மாநிலத்திற்கு சென்றாலும் அங்கு சென்னை அணிக்கே அதிகமான ஆதரவு கிடைத்தது. ஏனென்றால் இந்த தொடருடன் டோனி கிரிக்கெட்டில் இருந்து விலகுவதாக வதந்தி பரவியது. இதனால் அவரை கடைசி போட்டியில் பார்த்து விட வேண்டுமென்றே அனைவரும் சென்றதாக ரசிகர்கள் தெரிவித்திருந்தனர்.


    இந்த சீசனில் இறுதிப்போட்டி நடக்கும் மைதானத்தில் ராட்சத திரையில் 'ரன்னர் அப் சென்னை சூப்பர் கிங்ஸ்' என்று எழுதியிருந்தது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. ஒருவேளை ஐபிஎல் போட்டிகள் சொல்லி வைத்து ஆடுவது போல என்று நினைக்கும் ரசிகர்களுக்கு, உண்மையிலேயே அப்படிதான் நடக்கிறதோ என்பது போல இருந்தது இந்த புகைப்படம்.


    போட்டி டாஸ் கூட போடாத நிலையில் ராட்சத திரையில் இப்படி வந்தது சிஎஸ்கே ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

    ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் திரை சோதனை, வழக்கமான பயிற்சியாக இருந்திருக்கலாம் என்று சிலர் கூறியுள்ளனர். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் இதேபோன்ற சோதனை நடத்தப்பட்டுள்ளது எனவும் கூறினர். 

    • இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி 5-வது முறையாக கோப்பையை வென்றது.
    • இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் 8 அணிகள் மட்டுமே விளையாடிய நிலையில் ஒவ்வொரு ஆண்டும் பல மாறுதல்கள் நடந்து தற்போது 10 அணிகள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகின்றன.

    2022-ம் ஆண்டு முதன் முறையாக குஜராத அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதனை தொடர்ந்து இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் 16-வது சீசன் இந்த ஆண்டு நடைபெற்றது. இதன் இறுதி போட்டியில் குஜராத் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த பரபரப்பான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில் வெற்றியை ருசித்தது.

    இதன்மூலம் சிஎஸ்கே அணி 5-வது முறையாக கோப்பையை வென்றது. இதனை சிஎஸ்கே வீரர்கள் டோனிக்கு அர்பணிப்பதாக தெரிவித்தனர். இந்த போட்டி முடிந்த பிறகு டோனி குறித்து சில சுவாரஸ்மான வீடியோக்கள் அவ்வபோது வைரலாகி வந்தது.

    இந்நிலையில் 5-வது முறையாக ஐபிஎல் கோப்பை வென்றதை கொண்டாடும் வகையில், ராஞ்சியில் உள்ள JSCA ஜிம்மில், தனது நண்பர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


    • அயர்லாந்துக்கு எதிரான தொடரில் நாங்கள் சிறப்பாக விளையாடி வருகிறோம். தொடரை வென்று விட்டோம்.
    • 2-வது போட்டியில் எனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டேன்.

    டூப்ளின்:

    இந்தியா-அயர்லாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி இன்று நடக்கிறது.

    ஜஸ்பிரீத் பும்ரா தலைமையிலான இந்திய அணி முதல் 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிவிட்டது. முதல் போட்டியில் 2 ரன் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 33 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.

    இன்றைய ஆட்டத்திலும் அயர்லாந்தை வீழ்த்தி 'ஹாட்ரிக்' வெற்றியுடன் தொடரை முழுமையாக வெல்லும் ஆர்வத்தில் இந்திய அணி இருக்கிறது.

    இந்த ஆட்டம் குறித்து இந்திய வீரர் ரிங்குசிங் கூறியதாவது:-

    அயர்லாந்துக்கு எதிரான தொடரில் நாங்கள் சிறப்பாக விளையாடி வருகிறோம். தொடரை வென்று விட்டோம். 3-வது போட்டியிலும் வென்று உயர்நிலையை அடைவதை இலக்காக கொண்டுள்ளோம்.

    முதல் ஆட்டத்தில் விளையாடுவதற்கு மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தேன். ஆனால் மழையால் என்னால் பேட்டிங் செய்ய முடியாமல் போனது. 2-வது போட்டியில் எனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டேன்.

    ஐ.பி.எல். போட்டியில் 5 சிக்சர்கள் அடித்தது எனது வாழ்க்கையை மாற்றியது. அந்த தருணத்தை ரசிகர்கள் இன்னும் நினைவில் வைத்து உள்ளார்கள். ரசிகர்கள் என் மீது அன்பை பொழிவதால் நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    25 வயதான ரிங்குசிங் ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடி வருகிறார். குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் அவர் கடைசி ஓவரில் 5 சிக்சர்களை தொடர்ச்சியாக அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.

    இதனால் அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணிக்கு தேர்வானார். 2-வது 20 ஓவர் ஆட்டத்தில் ரிங்குசிங் 21 பந்தில் 2 பவுண்டரி, 3 சிக்சருடன் 38 ரன் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த ஐ.பி.எல்.லில் வணிக மதிப்பு ரூ.70 ஆயிரம் கோடியாக இருந்தது.
    • ஐ.பி.எல்.லின் ஒளிபரப்பு கட்டணம் உலகின் பிறகு தொழில் முறை லீக்களுடன் ஒப்பிடுகையில் அதிகமாக இருக்கிறது.

    மும்பை:

    உலகின் மிகப்பெரிய பணக்கார விளையாட்டாக ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி திகழ்கிறது. 2008- ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த போட்டியில் கோடிக்கணக்கில் பணம் புரள்கிறது. விளம்பரங்கள் மற்றும் ஒளிபரப்பு உரிமம் ஆகியவற்றால் வருவாய் குவிகிறது.

    16-வது ஐ.பி.எல். போட்டி சமீபத்தில் நடந்தது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்சை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது.

    இந்த நிலையில் ஐ.பி.எல்.லின் வணிக நிறுவன மதிப்பு தற்போது ரூ.1.3 லட்சம் கோடியாகும். இதனை உலகம் முழுவதும் உள்ள பல விளையாட்டு உரிமைகளை மதிப்பிடும் உலகளாவிய முதலீடு வங்கியான ஹெளலி ஹான் லோகி தெரிவித்துள்ளது. இது கடந்த ஐ.பி.எல். போட்டியை விட வணிக மதிப்பு 80 சதவீதம் கூடுதலாகும். கடந்த ஐ.பி.எல்.லில் வணிக மதிப்பு ரூ.70 ஆயிரம் கோடியாக இருந்தது.

    ஐ.பி.எல். போட்டியின் பிராண்ட் மதிப்பு ரூ.26,600 ஆயிரம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதில் சென்னை சூப்பர் கிங்சின் பிராண்ட் மதிப்பு தான் அதிகமாக இருக்கிறது. அந்த அணியின் பிராண்ட் மதிப்பு ரூ.1760 கோடியாக உள்ளது. அதற்கு அடுத்தப் படியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு ரூ.1605 கோடியாகவும், மும்பை இந்தியன்சுக்கு ரூ.1504 கோடியாகவும், கொல்கத்தா நைட் ரைடர்சுக்கு ரூ.1490 கோடியாகவும் பிராண்ட் மதிப்பு இருக்கிறது.

    ஐ.பி.எல்.லின் ஒளிபரப்பு கட்டணம் உலகின் பிறகு தொழில் முறை லீக்களுடன் ஒப்பிடுகையில் அதிகமாக இருக்கிறது. என்.பி.ஏ., இங்கிலாந்து பிரீமியர் லீக், ஜெர்மனி கால்பந்து லீக் போன்றவற்றை விட ஐ.பி.எல். ஒளிபரப்பு கட்டணம் அதிகமாகும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2023 முதல் 2027 வரை ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி ஸ்டார் நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தம் காரணமாக வணிக மதிப்பு அதிகரித்துள்ளது. 2017-ம் ஆண்டு கிரிக்கெட் வாரியம் செய்து கொண்ட ஒப்பந்தத்தைவிட இது 3 மடங்கு விலை அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நான் களத்தில் அப்படி செய்திருக்கக் கூடாது என்பதை போட்டி முடிந்த பின்னர் தான் உணர்ந்தேன்.
    • இருந்தாலும் அதற்காக நான் வருந்துகிறேன்.

    நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.

    15-வது லீக் போட்டியில் முதலில் ஆடிய ஆர்சிபி 212 ரன்கள் குவித்தது. 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை லக்னோ விரட்டியது. 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது லக்னோ. கடைசிப் பந்தில் இந்த வெற்றியை அந்த அணி பதிவு செய்தது. ஹர்ஷல் படேல் வீசிய கடைசி ஓவரில் பை ரன் எடுத்து லக்னோ வெற்றி பெற்றது. அப்போது ஸ்ட்ரைக்கில் ஆவேஷ் கான் இருந்தார்.

    அந்தத் தருணத்தில் களத்தில் இருந்த ஆவேஷ் கான், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை தரையில் வீசி இருந்தார். இந்நிலையில் தற்போது அது குறித்து ஆவேஷ் கான் மனம் திருந்து பேசியுள்ளார்.

    அவர் கூறியதாவது:-

    நான் களத்தில் அப்படி செய்திருக்கக் கூடாது என்பதை போட்டி முடிந்த பின்னர் தான் உணர்ந்தேன். அது அந்த தருணத்தில் நடந்தது. அவ்வளவு தான். இருந்தாலும் அதற்காக நான் வருந்துகிறேன்.

    அண்மையில் முடிந்த சீசன் எனக்கு சிறப்பானதாக அமையவில்லை. இருந்தாலும் 10 ரன்களுக்கு குறைவான எக்கானமி ரேட், 4 அல்லது 5-வது ஓவரை பவர்பிளே ஓவர்களின் போது வீசியதும், டெத் ஓவர்களும் வீசி இருந்தேன்.

    என ஆவேஷ் கான் தெரிவித்துள்ளார்.

    • தனிப்பட்ட விருதுகளை வெல்வது அல்லது இழப்பது பற்றி நான் கவலைப்படவில்லை.
    • ஒரு அணியாக கோப்பையை வெல்ல வேண்டும் என கனவு கண்டேன்.

    16-வது ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டனஸ் அணிகள் மோதின. இதில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

    இந்நிலையில் ஐபிஎல் இறுதிப்போட்டியில் எனக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கியது வியப்பாக இருந்தது என சென்னை அணியின் தொடக்க ஆட்டகாரர் கான்வே கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    குஜராத் அணி வீரர் சாய் சுதர்சன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சென்னை வீரர் ஜடேஜா பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இப்படி இருக்க இறுதிப்போட்டியில் எனக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கியது வியப்பாக இருந்தது.

    தனிப்பட்ட விருதுகளை வெல்வது அல்லது இழப்பது பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால் ஒரு அணியாக கோப்பையை வெல்ல வேண்டும் என கனவு கண்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.
    • 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

    16-வது ஐபிஎல் தொடரின் தொடரின் இறுதி போட்டி குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இறுதி போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டனஸ் அணிகள் மோதின.

    இதில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது. இதனை சென்னை வீரர்கள் ரசிகர்கள் என அனைவரும் கொண்டாடினர்.


    இந்நிலையில் சிஎஸ்கே கோப்பையை வென்றதை சென்னை அணி வீரர்கள் பஸ் மற்றும் ஓய்வு அறையில் கொண்டாடிய வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • டோனி அடுத்தாண்டு ஐபிஎல் போட்டியில் விளையாட உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
    • என்சிசி தொடர்பான ஆய்வு குழுவில் அவருடன் பணியாற்றினேன்.

    குஜராத் அணிக்கு எதிரான இறுதி போட்டியில் வென்று ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணியையும் அதன் கேப்டன் டோனியையும் பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

    ஐபிஎல் போட்டி முடிந்த பிறகு அடுத்த சீசனிலும் விளையாடுவது குறித்து டோனி கூறியதாவது, மிகவும் உணர்வுப்பூவமான இறுதிப்போட்டியாக இந்த போட்டியை பார்க்கிறேன். எனது கண்கள் குளமாகின. என்னுடைய ஓய்வை அறிவிக்க இதுதான் சிறந்த தருணம். ஆனால், எல்லா இடங்களிலும் எனக்கு கிடைத்த அன்பு அளவு கடந்தது.

    இங்கிருந்து இத்துடன் கிளம்பி விடுவது எளிதானது. ஆனால் கடினமான விஷயம் என்னவென்றால், 9 மாதங்கள் கடினமாக உழைத்து மற்றொரு ஐபிஎல் விளையாட முயற்சிப்பது. ஓய்வு குறித்து யோசிக்க இன்னும் 8 முதல் 6 மாதம் இருக்கிறது. என்று கூறியிருந்தார்.

    இந்த நிலையில் டோனியின் முடிவு குறித்து டுவிட் செய்துள்ள தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா, என்சிசி தொடர்பான ஆய்வு குழுவில் அவருடன் பணியாற்றினேன். ஆடுகளத்தில் எவ்வளவு தீவிரமாக செயலாற்றுகிறாரோ, அதே அளவுக்கு அவரிடம் அறிவார்ந்த சிந்தனையும் உள்ளது என உணர்ந்தேன். புதுமையான விஷங்களை செய்வதில் அவர் ஆர்வமாக இருந்தார். நிச்சயம் டோனி வருங்காலத்தில் ஒரு தலைவராக திகழ்வார்.

    டோனி அடுத்தாண்டு ஐபிஎல் போட்டியில் விளையாட உள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இருப்பினும் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    • தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. இவர் சில படங்களில் கதாநாயகனாக கூட நடித்துள்ளார்.
    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 முறையாக கோப்பையை கைப்பற்றியது.

    ஐபிஎல் 2023 இறுதிப்போட்டியில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.

    இந்நிலையில், ஐபிஎல் தொடரில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனி, நகைச்சுவை நடிகர் யோகிபாபுவிற்கு தன்னுடைய பேட் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.

    இந்த பேட்டை வாங்கிய நடிகர் யோகிபாபு அந்த பேட்டிற்கு முத்தம் கொடுத்து கேப்டன் டோனிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், 'நன்றி டோனி சார்' என்று குறிப்பிட்டுள்ளார்.தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகிபாபு சில படங்களில் கதாநாயகனாக கூட நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நான் என்ன செய்ய வேண்டும் என்பதில் என் மனம் மிகவும் தெளிவாக இருந்தேன்.
    • வலை பயிற்சியின் போதும், இதற்கு முன்பும் இதுபோன்ற சூழ்நிலைகளை நான் எதிர்கொண்டிருக்கிறேன்.

    ஐபிஎல் 2023 இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த பரபரப்பான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 முறையாக கோப்பை வென்று சாதித்தது.

    இந்த வெற்றியை சிஎஸ்கே ரசிகர்கள் கொண்டாடினர். இது குறித்து வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைதளங்களில் நேற்று வரை வைரலானது.

    இது ஒரு பக்கம் இருந்தாலும் இந்த போட்டியில் கடைசி ஓவரை வீசிய மோகித் சர்மா மிகுந்த வேதனையடைந்ததாக கூறினார்.

    இது குறித்து மோகித் சர்மா கூறியதாவது:-

    நான் என்ன செய்ய வேண்டும் என்பதில் என் மனம் மிகவும் தெளிவாக இருந்தேன். வலை பயிற்சியின் போதும், இதற்கு முன்பும் இதுபோன்ற சூழ்நிலைகளை நான் எதிர்கொண்டிருக்கிறேன். எனவே நான் அனைத்து பந்துகளையும் யார்க்கர்களாக வீச வேண்டும் நினைத்தேன். எனது உள்ளுணர்வின்படியே நான் நடந்தேன்.

    என்னுடைய செயல் திட்டம் என்னவாக இருக்கும் என்பதை பாண்ட்யா அறிந்து கொள்ள விரும்பினார். மீண்டும் யார்க்கர் வீச முயற்சிப்பேன் என்று கூறினேன். மக்கள் இப்படியும் சொல்லுவாங்க அப்படியும் சொல்லுவாங்க. ஆனால் அதில் எந்த அர்த்தமுமில்லை. நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியும்.

    கடைசி ஓவரில் நான் மீண்டும் யார்க்கர் வீச முயற்சித்தேன். நான் மிகவும் கவனமாக செயல்பட விரும்பினேன். ஐபிஎல் தொடர் முழுக்க நான் இதைத்தான் செய்தேன். ஆனால் பந்து சென்று விழக் கூடாத இடத்தில் விழுந்தது. என்னால் முடிந்தவரை நான் சிறப்பாகவே செயல்பட்டேன்.

    என்னால் தூங்க முடியவில்லை. நான் பந்தை இப்படியோ அல்லது அப்படியோ வீசியிருந்தால் என்னவாகியிருக்கும்? போட்டியில் வென்றிருந்தால் எப்படி இருந்திருக்கும்? என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கிறேன். அது ஒரு இனிமையான உணர்வாக இல்லை. எங்கோ ஏதோவொன்று இல்லாததைப் போல உணர்கிறேன். எனினும் இதனை கடந்து போக முயற்சிக்கிறேன்.

    இவ்வாறு மோகித் சர்மா கூறியுள்ளார்.

    • அம்பதி ராயுடுவை அணி சார்பில் கோப்பையை வாங்க வைத்து கேப்டன் டோனி கவுரவித்தார்.
    • நாட்டுக்காக விளையாடியதை மிகப்பெரிய கவுரவமாக கருதுவதாக ராயுடு கூறி உள்ளார்.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜராத் அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. இந்த இறுதி ஆட்டத்துடன் ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் அம்பதி ராயுடு கூறியிருந்தார். அதன்படி இன்று ஓய்வு முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அனைத்து வகை இந்திய கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக கூறியுள்ளார்.

    நேற்று சென்னை அணி வெற்றி பெற்றதும் பரிசளிப்பு விழாவில் அம்பதி ராயுடுவை அணி சார்பில் கோப்பையை வாங்க வைத்து கேப்டன் டோனி கவுரவித்தார். இதுவரை ஐபிஎல் போட்டிகளில் அவர் இடம்பெற்ற அணி 6 முறை இறுதிப்போட்டியில் வென்றுள்ளது. 6 முறை ஐபிஎல் கோப்பையை கையில் ஏந்திய அம்பதி ராயுடு இன்றுடன் ஓய்வு பெற்றிருக்கிறார்.

    "15 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் இருந்து சீனியர் அணி வரை நாட்டுக்காக விளையாடியதை மிகப்பெரிய கவுரவமாகக் கருதுகிறேன். ஆறு முறை ஐபிஎல் வெற்றியாளராக எனது கிரிக்கெட் வாழ்க்கையை முடித்ததில் பெருமை கொள்கிறேன்" என அம்பதி ராயுடு கூறி உள்ளார்.

    • 15.5 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் மட்டுமே லக்னோ எடுத்திருந்தது.
    • சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஸ்டாய்னிஸ் 2 ரன்னுக்கு ஆசைப்பட்டு ஆட்டமிழந்தார்.

    ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் குர்ணால் பாண்டியா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதியது.

    டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா 11 ரன்னிலும், இஷான் கிஷன் 15 ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர்.

    இந்த சரிவுக்குப் பின் கேமரான் கிரீன், சூர்யகுமார் யாதவ் ஜோடி அதிரடியாக ஆடி ஸ்கோரை உயர்த்தியது.

    11வது ஓவரில் அணியின் ஸ்கோர் 104 ஆக இருந்தபோது, சூர்யகுமார் யாதவ் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். அதே ஓவரின் கடைசி பந்தில் கேமரான் கிரீன் அவுட் ஆனார்.

    அவர் 23 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்சர் உள்பட 41 ரன்கள் விளாசினார். திலக் வர்மா 26 ரன்களிலும், டிம் டேவிட் 13 ரன்களிலும், கிறிஸ் ஜோர்டான் 4 ரன்னிலும், நேஹல் வதேரா 23 ரன்களிலும் ஆட்டமிழக்க, மும்பை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது.

    லக்னோ தரப்பில் நவீன் உல் ஹக் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். யஷ் தாகூர் 3 விக்கெட்டுகள், மோஷின் கான் ஒரு விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி களமிறங்கியது.

    இதில் அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டாய்னிஸ் 40 ரன்கள் எடுத்த நிலையில், 2 ரன்னுக்கு ஆசைப்பட்டு ரன் அவுட் ஆனார். 

    தொடர்ந்து, மயேர்ஸ் 18 ரன்களிலும், குருணல் பாண்டியா 8 ரன்களிலும், பிரேராக் மாங்கட் மற்றும் ரவி பிஷ்னோய் தலா 3 ரன்களிலும், கிருஷ்ணப்பா கவுதம் 2 ரன்களிலும், ஆயுஷ் பதோனி ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். நிக்கோலஸ் பூரன் ஒரு ரன் கூட எடுக்கவில்லை.

    தீபக் ஹூடாவும், கிருஷ்ணப்பா கவுதமும் சொர்ப்ப ரன்னில் ரன் அவுட் ஆகினர். அடுத்தடுத்து 3 ரன் அவுட் லக்னோவிற்கு மிகவும் பின்னடைவை ஏற்படுத்தியது.

    15.5 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் மட்டுமே லக்னோ எடுத்திருந்தது. 31 பந்துகளில் 83 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் லக்னோ தொடர்ந்து விளையாடியது.

    நவீன் உல் அக் மற்றும் மோஹ்சின் கான் களமிறங்கினர். இதில், நவீன் உல் அக் ஒரு ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மோஹ்சின் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மும்பை அணி சார்பில் அதிகபட்சமாக ஆகாஷ் மேத்வால் 5 விக்கெட்டுகளும், கிரிஷ் ஜோர்டான் மற்றும் பியூஸ் சாவ்லா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    இந்நிலையில், இந்த ஆட்டத்தின் முடிவில் லக்னோ அணி 16.3 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 101ரன்களை எடுத்து தோல்வியை சந்தித்தது.

    இதன்மூலம், மும்பை அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலாக வெற்றி பெற்றுள்ளது. இதனால், லக்னோ அணி தொடரில் இருந்து வெளியேறுகிறது.

    நேற்று பிளே ஆப் சுற்றில் தோல்வி அடைந்த குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் குவாலிபையர் 2-ல் மும்பை அணி எதிர்த்து விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×