search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிலம் அளவீடு"

    • பாதுகாப்பு பணியில் பாரூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகா மற்றும் சிவசந்திரன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் இருந்தனர்.
    • வருவாய்த்துறையினர் நிலத்தை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, தாமோதரஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னபாறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாதன் (வயது 75). விவசாயி.

    இவர் அனுபவத்தில் அதே பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக 60 சென்ட் இடம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் மாதன் உறவினரான சின்னசாமி (58) என்பவர் 60 சென்ட் இடம் தனக்கு சொந்தமானது என கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். இதில் சின்னசாமிக்கு சாதகமான தீர்ப்பு பெற்றுள்ளார்.

    இதுகுறித்து கோர்ட் உத்தரவின்படி நேற்று சம்மந்தப்பட்ட நிலத்தை அளவீடு செய்ய வருவாய்த் துறையினர் சென்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் பாரூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகா மற்றும் சிவசந்திரன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் இருந்தனர்.

    இந்த நிலையில் வருவாய்த்துறையினர் நிலத்தை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது மாதன் மற்றும் அவரின் மகன் லட்சுமணன் வயது (33)மற்றும் மாதன் மகள்களான 4 பேர், ஒரு வயது குழந்தையுடன் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் நிலம் அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து திடீரென்று உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்தனர்.

    இதனை சற்றும் எதிர்பாராத போலீசார் உடனடியாக மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி, அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி தடுத்தனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போர்களமாக மாறியது.

    பின்னர் சின்னபாறையூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் வருவாய்த் துறையினர், போலீசாரிடம் வருகிற 8-ந்தேதி நிலம் அளவீடு செய்ய வழிவகை செய்யும் விதத்தில் மாதன் மற்றும் சின்னசாமியிடம் சுமூக பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் காண்பதாக உத்தரவாதம் அளித்தனர்.

    இதையடுத்து போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஓமலூர் நகரை சுற்றி கிழக்கு மற்றும் மேற்கு சரபங்கா நதி ஓடுகிறது.
    • கிழக்கு சரபங்கா நதிக்கரையை ஒட்டிஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த கோட்டை சரபங்கா விநாயகர் கோவில் உள்ளது.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் நகரை சுற்றி கிழக்கு மற்றும் மேற்கு சரபங்கா நதி ஓடுகிறது. இதில், கிழக்கு சரபங்கா நதிக்கரையை ஒட்டிஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த கோட்டை சரபங்கா விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் கட்டிடம் இல்லாமல் வெட்ட வெளியாக திறந்தவெளிகோவிலாக உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமாக, கோவிலை சுற்றிலும் சுமார் 70 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை, கோவிலில் பூஜை செய்து பராமரித்து வந்தவர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். ஆனால், அவர்கள் காலத்திற்கு பிறகு கோவிலை பராமரிக்க வில்லை, நிலத்தையும் யாரும் கண்டு கொள்ளவில்லை.

    இந்தநிலையில், கோவில் நிலத்தை ஒருசிலர் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டி வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலத்தை மீட்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், நிலம் அளவீடு செய்யும் தாசில்தார் பாலாஜி, ஓமலூர் கிராம நிர்வாக அலுவலர் சரவணன், ஓமலூர் வருவாய்துறை நில அளவர்கள், இந்துசமய அறநிலையத்துறை நில அளவீடு செய்யும் அலுவலர்கள் வந்து, கோவில் நிலத்தை நேரடியாக அளவீடு செய்தனர். கோவில் நிலத்தில் உள்ள வீடுகளையும் அளவீடு செய்தனர். தொடர்ந்து கோவிலுக்கு சொந்தமான 70 சென்ட் நிலத்தின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு நிலம் மீட்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மலை அடிவாரத்தில் திருமூர்த்தி அணை கட்டப்பட்டு உள்ளது
    • உபரிநீர் திறந்து விடப்படுகிறது.

    உடுமலை : 

    மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உற்பத்தியாகி ஓடி வருகின்ற நீர்வரத்தை தடுத்து மலை அடிவாரத்தில் திருமூர்த்தி அணை கட்டப்பட்டு உள்ளது. அணை நிரம்பும் சூழலில் அணையின் மேற்குப் பகுதியில் உள்ள ஷட்டர்கள் வழியாக பாலாற்றில் உபரிநீர் திறந்து விடப்படுகிறது. அதைத் தொடர்ந்து ஆற்றில் வெளியேறும் தண்ணீரானது பல்வேறு கிராமங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதுடன் கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணர்களின் நீர்இருப்பை உயர்த்தியும் வருகிறது.

    இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக அணையின் நீராதாரங்களில் பெரிதளவில் மழை பெய்யவில்லை. அதனால் ஆற்றில் தண்ணீர் திறந்து விடுவதற்கான சூழலும் ஏற்படவில்லை. இதை சாதகமாக கொண்டு வலையபாளையம் பகுதி வழியாக செல்கின்ற பாலாற்றில் ஆக்கிரமிப்புகள் உருவானது. இதனால் ஆற்றின் அகலம் படிப்படியாக குறைந்து ஓடை போன்று காட்சி அளித்து வந்தது.

    இதையடுத்து பாலாற்றில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் தரப்பில் மனு அளிக்கப்பட்டது. அதன் பேரில் உடுமலை தாசில்தார் கண்ணாமணி பாலாற்றில் ஏற்படுத்தப்பட்ட ஆக்கிரமிப்பை அகற்றுமாறு உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து வட்டத் துணை ஆய்வாளர் சையது அபுதாஹிர் கண்காணிப்பில் பெரியவாளவாடி உள்ள வட்ட வருவாய் ஆய்வாளர் சுதா, வாளவாடி உள்ள வட்ட அளவர் தஸ்லீமாபானு, வலைய பாளையம் கிராம நிர்வாக அதிகாரி ராஜமாணிக்கம் உள்ளிட்ட அதிகாரிகள் பாலாற்றில் கடந்த 2 நாட்களாக அளவீடு பணி மேற்கொண்டு வருகின்றனர்.

    பணி நிறைவடைந்த பின்பு ஆக்கிரமிப்புகள் முறையாக அகற்றப்பட உள்ளதாக வருவாய் துறையினர் தெரிவித்தனர். இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதேபோன்று பாலாற்றை முழுமையாக ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகள் இருந்தால் அதை அகற்றுவதற்கும் அதிகாரிகள் முன் வர வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

    • செல்லியாண்டியம்மன் கோவிலுக்கு சொந்தமான சுமார் ரூ.20 கோடி மதிப்புள்ள 9 ஏக்கர் 90 சென்ட் நிலங்களை அளவீடு செய்ய ரோவர் கருவி மூலம் சேட்டிலைட் சர்வே அளவீடு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    • இந்த பணியில் செல்லியாண்டியம்மன் கோவில் செயல் அலுவலர் பிரேமா, நில அளவையாளர்கள் கார்த்தி, அருள் மற்றும் கோவில் பணியாளர்கள் என பலர் ஈடுபட்டு உள்ளனர்.

    பவானி:

    இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள தமிழக கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் அளவீடு செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் உத்தரவு படி பவானி செல்லியாண்டியம்மன் கோவிலுக்கு சொந்தமாக செங்காடு, சொக்காரம்மன் காடு மற்றும் திருவள்ளுவர் நகர் போன்ற பகுதியில் சுமார் ரூ.20 கோடி மதிப்புள்ள 9 ஏக்கர் 90 சென்ட் காலி இடம் உள்ளது. இந்த காலி இடத்தினை அளவீடு செய்திட செல்லியாண்டியம்மன் கோவில் நிர்வாகத்தினர் முடிவு செய்தனர்.

    பவானியில் உள்ள ஆலய நிலங்கள் மீட்பு பணி மேற்கொள்ள ஓய்வு பெற்ற தாசில்தார் பழனிச்சாமி நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஓய்வு பெற்ற தாசில்தார் பழனிச்சாமி தலைமையில் செல்லியாண்டியம்மன் கோவிலுக்கு சொந்தமான சுமார் ரூ.20 கோடி மதிப்புள்ள 9 ஏக்கர் 90 சென்ட் நிலங்களை அளவீடு செய்ய ரோவர் கருவி மூலம் சேட்டிலைட் சர்வே அளவீடு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்த பணியில் செல்லியாண்டியம்மன் கோவில் செயல் அலுவலர் பிரேமா, நில அளவையாளர்கள் கார்த்தி, அருள் மற்றும் கோவில் பணியாளர்கள் என பலர் ஈடுபட்டு உள்ளனர்.

    இந்த அளவீட்டு பணிகள் முடிவடைந்த பின்னர் ஆக்கிரமிப்புகள் செய்திருப்பது கண்டறியப்பட்டு உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்த பின்னர் தமிழக அரசு உத்தரவு பெற்று ஆக்கிரமிப்பு இடத்தினை அகற்றப்பட்டு இந்து அறநிலைத்துறை மூலம் எல்லை கற்கள் நடப்பட உள்ளதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கடந்த 2000 ம் ஆண்டு வசித்து வந்த 2 செண்ட் இடத்திற்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.
    • வசிக்க வீடு இல்லாமல் தவித்து வருவதாகவும், உடனடியாக தங்கள் இடத்தை அளவீடு செய்து தரவேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி சேகாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நல்லமுத்து. அவரது மனைவி ராஜம்மாள். இவர்கள் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக அப்பகுதியில் வசித்து வருகின்றனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு நல்லமுத்து உயிரிழந்த நிலையில் ராஜம்மாள் தனது மகன் சக்திவேல் குடும்பத்தினருடன் இருந்து வருகிறார். கடந்த 2000 ம் ஆண்டு அவர்கள் வசித்து வந்த 2 செண்ட் இடத்திற்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர்கள் வசித்து வந்த வீடு மழையால் சிதிலமடைந்ததால் அதனை அகற்றி விட்டு புதிய வீடு கட்டும் பணிகளை துவங்கியுள்ளனர். அதற்கு அருகில் வசிப்பவர்கள் வழித்தடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டுவதாக வருவாய் துறையினருக்கு புகார் அளித்த நிலையில் வீடு கட்டும் பணிக்கு தடை விதித்து வருவாய் துறை நோட்டீஸ் வழங்கியதாக கூறப்படுகிறது.

    இது குறித்து ராஜம்மாளின் மகன் சக்திவேல் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அவர்களது இடத்தை முறையாக அளவீடு செய்து தருமாறு மனு கொடுத்துள்ளார். ஆனால் அதிகாரிகள் நிலத்தை அளவீடு செய்யாமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை கலெக்டர் அலுவலகம் மற்றும் அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராஜம்மாள் தனது மகன் சக்திவேல் குடும்பத்தினருடன் பல்லடம் தாலுகா அலுவலகத்தின் நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் கிடைத்து சம்பவ இடம் வந்த பல்லடம் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் அவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். வசிக்க வீடு இல்லாமல் தவித்து வருவதாகவும், உடனடியாக தங்கள் இடத்தை அளவீடு செய்து தரவேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த நிலையில், நிலத்தை அளவீடு செய்ய வருவாய்த்துறை அதிகாரிகள் சென்றபோது ராஜம்மாள் குடும்பத்தினருக்கும் அருகே வசிப்பவர்களுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பில் முடிந்துள்ளது. இதனால் காயமடைந்த இரண்டு தரப்பினரும் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பல்லடம் போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    ×