search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிலம் அளவீடு செய்ய தாமதம் - பல்லடம் தாலுகா அலுவலகத்தில்  குடும்பத்தினர் தர்ணா  போராட்டம்
    X

    போராட்டத்தில் ஈடுபட்ட குடும்பத்தினர்.

    நிலம் அளவீடு செய்ய தாமதம் - பல்லடம் தாலுகா அலுவலகத்தில் குடும்பத்தினர் தர்ணா போராட்டம்

    • கடந்த 2000 ம் ஆண்டு வசித்து வந்த 2 செண்ட் இடத்திற்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.
    • வசிக்க வீடு இல்லாமல் தவித்து வருவதாகவும், உடனடியாக தங்கள் இடத்தை அளவீடு செய்து தரவேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி சேகாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நல்லமுத்து. அவரது மனைவி ராஜம்மாள். இவர்கள் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக அப்பகுதியில் வசித்து வருகின்றனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு நல்லமுத்து உயிரிழந்த நிலையில் ராஜம்மாள் தனது மகன் சக்திவேல் குடும்பத்தினருடன் இருந்து வருகிறார். கடந்த 2000 ம் ஆண்டு அவர்கள் வசித்து வந்த 2 செண்ட் இடத்திற்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர்கள் வசித்து வந்த வீடு மழையால் சிதிலமடைந்ததால் அதனை அகற்றி விட்டு புதிய வீடு கட்டும் பணிகளை துவங்கியுள்ளனர். அதற்கு அருகில் வசிப்பவர்கள் வழித்தடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டுவதாக வருவாய் துறையினருக்கு புகார் அளித்த நிலையில் வீடு கட்டும் பணிக்கு தடை விதித்து வருவாய் துறை நோட்டீஸ் வழங்கியதாக கூறப்படுகிறது.

    இது குறித்து ராஜம்மாளின் மகன் சக்திவேல் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அவர்களது இடத்தை முறையாக அளவீடு செய்து தருமாறு மனு கொடுத்துள்ளார். ஆனால் அதிகாரிகள் நிலத்தை அளவீடு செய்யாமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை கலெக்டர் அலுவலகம் மற்றும் அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராஜம்மாள் தனது மகன் சக்திவேல் குடும்பத்தினருடன் பல்லடம் தாலுகா அலுவலகத்தின் நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் கிடைத்து சம்பவ இடம் வந்த பல்லடம் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் அவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். வசிக்க வீடு இல்லாமல் தவித்து வருவதாகவும், உடனடியாக தங்கள் இடத்தை அளவீடு செய்து தரவேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த நிலையில், நிலத்தை அளவீடு செய்ய வருவாய்த்துறை அதிகாரிகள் சென்றபோது ராஜம்மாள் குடும்பத்தினருக்கும் அருகே வசிப்பவர்களுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பில் முடிந்துள்ளது. இதனால் காயமடைந்த இரண்டு தரப்பினரும் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பல்லடம் போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    Next Story
    ×