search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போச்சம்பள்ளி அருகே நிலம் அளவீடு செய்ய எதிர்ப்பு: கைக்குழந்தையுடன் தாய் உள்பட 10 பேர் தீக்குளிக்க முயற்சி
    X

    போச்சம்பள்ளி அருகே நிலம் அளவீடு செய்ய எதிர்ப்பு: கைக்குழந்தையுடன் தாய் உள்பட 10 பேர் தீக்குளிக்க முயற்சி

    • பாதுகாப்பு பணியில் பாரூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகா மற்றும் சிவசந்திரன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் இருந்தனர்.
    • வருவாய்த்துறையினர் நிலத்தை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, தாமோதரஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னபாறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாதன் (வயது 75). விவசாயி.

    இவர் அனுபவத்தில் அதே பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக 60 சென்ட் இடம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் மாதன் உறவினரான சின்னசாமி (58) என்பவர் 60 சென்ட் இடம் தனக்கு சொந்தமானது என கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். இதில் சின்னசாமிக்கு சாதகமான தீர்ப்பு பெற்றுள்ளார்.

    இதுகுறித்து கோர்ட் உத்தரவின்படி நேற்று சம்மந்தப்பட்ட நிலத்தை அளவீடு செய்ய வருவாய்த் துறையினர் சென்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் பாரூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகா மற்றும் சிவசந்திரன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் இருந்தனர்.

    இந்த நிலையில் வருவாய்த்துறையினர் நிலத்தை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது மாதன் மற்றும் அவரின் மகன் லட்சுமணன் வயது (33)மற்றும் மாதன் மகள்களான 4 பேர், ஒரு வயது குழந்தையுடன் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் நிலம் அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து திடீரென்று உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்தனர்.

    இதனை சற்றும் எதிர்பாராத போலீசார் உடனடியாக மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி, அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி தடுத்தனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போர்களமாக மாறியது.

    பின்னர் சின்னபாறையூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் வருவாய்த் துறையினர், போலீசாரிடம் வருகிற 8-ந்தேதி நிலம் அளவீடு செய்ய வழிவகை செய்யும் விதத்தில் மாதன் மற்றும் சின்னசாமியிடம் சுமூக பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் காண்பதாக உத்தரவாதம் அளித்தனர்.

    இதையடுத்து போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×