search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நவகிரகம்"

    • கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரங்கள் பொதுவானவை.
    • புரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் பலன் ஒன்று தான்.

    கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரங்கள் பொதுவானவை. வழக்கமாக செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. புரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் பலன் ஒன்று தான்...

    1. படுக்கை அறையில் தலைக்கு அருகே நீரை வைத்து உறங்கிவிட்டு அந்த நீரை காலையில் செடிகளுக்கு விட சுக்கிரதோஷம் படிப்படியாக குறையும். இந்த விவரத்தை மாற்றியும் சொல்லலாம், படுக்கைக்கு நாம் எடுத்து செல்லும் குடிநீர் காலையில் மிதம் இருந்தால் செடிகளுக்கு குறிப்பாக துளசி அல்லது தொட்ட சிணுங்கி செடிகளுக்கு விட்டு விட வேண்டும்.

    2. அடிக்கடி பசுவிற்கு வாழை பழம், கற்கண்டு பொங்கல் கொடுப்பது சந்திரனின் ஆசிகளை நமக்கு கொடுத்து புகழை பெற்று தரும்.

    3. வசதி இல்லாத குடும்பத்தினருக்குப் ஈமச் சடங்குகள் செய்ய பணம், பொருள் கொடுத்து உதவி செய்தல் சனியின் ஆசிகளை கொடுத்து ஆயுளை விருத்தி செய்யும்.

    4. ஆசான், வேதம் படித்தவர, நம் முன்னோர்கள் மற்றும் சாதுக்களை விழுந்து வணங்கிட, புண்ணிய யாத்திரைக்கு இல்லாதவருக்கு பொருள் கொடுத்து உதவுவது, குழந்தை பெற்ற ஏழை தம்பதியருக்கு பொருள் கொடுத்து உதவுவது குருவின் ஆசிகள் கிடைக்கும்.

    5. சிதலம் அடைந்த கோவில்களுக்கு நீர்நிலை உண்டாக்குதல் /தண்ணீர் தொட்டி /குளம் சரி செய்தல் அல்லது செய்பவருக்கு உதவுதல் தேவதைகளின் ஆசிகளை கொடுத்து நமக்கு வசியமும் கவர்ச்சியும் கொடுத்துவிடும்.

    6. சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வதும் பசித்து தவிக்கும் உயிர்களுக்கு உணவு அளிப்பதும், கோவிலுக்கு சொர்ணத்தை தானமாக அல்லது கலசத்திற்கு தருவது, தொழு நோய் /குஷ்டம் கண்டவர்களுக்கு வைத்திய செலவு அல்லது அவர்களுக்கு நல்ல உணவு அளிப்பது சூரியனின் ஆசிகளை கொடுத்து நல்ல ஆரோக்கியம் மற்றும் வம்ச விருத்தி செய்யும்.

    7. திருமணம் செய்ய ஏழை பெண்களுக்கு பொருள் கொடுத்து உதவுதல், நம் வாழும் மனை, தொழில் செய்யும் மனை கைகளால் தொட்டு வணங்குதல், மேலும் பூமிக்கு மரியாதை செய்தல், பல உயிர்களை வளர்த்தல் (விலங்கு, பறவைகள் ), உயிர் பலிகளை நாம் தவிர்த்தல், இல்லாதவர்களுக்கு மருத்துவ செலவிற்கு பணம் கொடுத்தல் செவ்வாயின் ஆசிகளை கொடுத்து அஷ்ட சுகங்களையும் தரும்.

    8. ஏழை குழந்தைகளுக்கு கல்விக்கு பொருள் உதவி செய்தல், புதன் கிழமைதோறும் அன்னதானம் செய்தல், புதிய உடைகளை தானம் செய்தல் (குறிப்பாக குளிர் காலத்தில் செய்வது ) புதனின் ஆசிகளை நமக்கு கொடுத்து சண்டை, பொறாமையினால் வரும் நோய் (திருஷ்டி )நீதிமன்ற சோதனை போன்ற தொல்லைகளை விலக்கி நல்ல தொழில், மென்மையான வாழ்க்கையை கொடுக்கும்.

    9. பாம்புகளை கண்டதும் அடிக்காமல் இருப்பது, இறந்த நாகத்தின் உடலை கண்டதும் தீயிட்டு கொளுத்துவது, குடி கெடுத்தவன், குடிகாரன், குரு துரோகி, பசுவை கொன்றவன், சண்டாளன் - இவர்களிடம் நட்பு கொள்ளாமல் தவிர்ப்பது ராகு-கேது ஆசிகளை கொடுத்து அதிர்ஷ்டம், போகம், மற்றும் சகல பாக்கியத்தை அனுபவிக்கும் ஆசிகளை தரும். ( இந்த பஞ்ச மஹா பாவிகளை அடையாளம் கண்டு கொள்வது சற்று சிரமம் தான், தெரிந்தே சேர்வது நமக்கு தரித்தரம் )

    10. பாழடைந்த சிவன் கோவிலில் விளக்கு ஏற்றுவது, பிரதோஷ நாளில் சிவ ஸ்தலங்களுக்கு முடிந்த வரையிலான அபிஷேகத்திற்கு தேவையிலான பொருட்களை வாங்கி கொடுப்பது, வெள்ளத்துடன் பச்சரிசி தூளை கலந்து அந்த கோவிலின் சுற்று பிரகாரத்தில் தூவி விடுவது தேவர்களை சாந்தி படுத்திவிடும், இவர்கள் நம் முன்னோர்களுக்கு மோட்ச பதவி அளிப்பார்கள்.

    • சந்திரன் ஜெனன காலத்தில் எங்கு இருக்கிறாரோ அதை ஜென்ம ராசி என்கிறோம்.
    • நவகிரகங்களால் ஏற்படக்கூடிய தோஷங்கள் விலக அந்தந்த பரிகார ஸ்தலங்களுக்குச் சென்று பரிகாரம் செய்வது நல்லது.

    ஒருவருக்கு கற்பனை வளம் அதிகரித்து அவரை கவிஞராக்கும் பலம் சந்திரனுக்கு உண்டு. சந்திரன் மனநிலைக்கு காரகனாகிறார். அழகும், கவர்ச்சியும் கொண்ட சந்திரனை அழகான எதற்கு வேண்டுமானாலும் ஒப்பிடலாம். பொதுவாக பெண்களின் அழகை வர்ணிப்பதற்கு சந்திரன் மிகவும் உறுதுணையாக இருப்பார். வட்ட நிலா போன்ற முகம், பிறை போன்ற நெற்றி, புருவம் என பல உவமைகள் உண்டு. பெண்களும் தன் தலைவன் பிரிந்து ஏக்கத்தை யாரிடமும் கூறமுடியாமல் இரவில் நிலாவுடன்தான் பகிர்ந்து கொள்வார்கள். ஆண்களும் நிலவை ஒரு பெண்ணாக நினைத்து காதலிக்கு தூது விடுவார்கள். எத்தனை எத்தனை கவிஞர்களை கற்பனை திறன் மிக்கவர்களாக உருவாக்கிய பெருமை நிலாவிற்கு உண்டு தெரியுமா? நிலவையே கையில் பிடித்ததாக நினைத்து கொஞ்சி விளையாடும் காதலர்களும் உண்டு.

    நிலாவைக் காட்டி தாய் தன் பிள்ளைக்கு சோறுட்டுவாள். பாட்டி தன் பேத்திகளுக்கு நிலவில் ஆயா வடை சுட்டதாக கதைகள் சொல்லுவாள். இதையெல்லாம் தாண்டி விஞ்ஞானம் நிலவிற்கு சென்று மனிதனால் வாழ முடியும் என்றும் பனிக்கட்டிகள் உள்ளதாக சான்றுகள் உள்ளது என்றும் உலகிற்கு உணர்த்தி உள்ளது. நாம் நிலாவிற்கு ஜோதிடத்தில் உள்ள பங்கையும் பற்றி பார்ப்போம்.

    சந்திரன், நிலா, திங்களன், வதனமதி, மதிவதனன், மாதுர்காரகன், மனோகாரகன் என வர்ணிக்கப்படும் சந்திரன் நவக்கிரகங்களில் இரண்டாம் இடத்தை வகிப்பவர். சந்திரன் ஒரு பெண் கிரகமாவார் ஒருவரின் ஜாதகத்தை கணிப்பதற்கு மிகவும் உறுதுணையாக இருப்பவர் சந்திரன். சந்திரன் சஞ்சரிக்கும் நட்சத்திரமே ஒருவரின் ஜெனை கால நட்சத்திரமாகிறது. அதனைக் கொண்டுதான் அவருக்கு ஏற்படக்கூடிய தசாபுக்திகளையும் கணக்கிடுகிறோம். இதன் மூலமே அவரின் முழு ஜாதகப் பலனை அறியமுடியும்.

    சந்திரன் ஜெனன காலத்தில் எங்கு இருக்கிறாரோ அதை ஜென்ம ராசி என்கிறோம். சந்திரன் ஒருவருக்கு பலம் பெற்றிருந்தால் மற்றவர்களிடம் பாசமாக நடக்கும் பண்பு, நல்ல மனநிலை, கவிதை, கற்பனைத் திறன், கௌரவம், புகழ், நிம்மதியான உறக்கம், அரசு வழியில் ஆதரவுகள் உண்டாகும்.

    சந்திரன் மனோகாரகன் என்பதால் அவர் பலமிழந்திருந்தால் மனக்குழப்பம், மன நோய், மற்றவர்களிடம் ஒத்துப்போக முடியாத நிலை, எதிம் தோல்வி போன்ற அனுகூலமற்றப் பலன்கள் உண்டாகும்.

    சந்திரன் கோட்சார ரீதியாக 1,3,6,7,10,11 ஆகிய ஸ்தானங்களில் சஞ்சரிக்கும் நாட்களில் அனுகூலமானப் பலன்கள் உண்டாகும். சந்திரன் ஜென்ம ராசிக்கு 8 ல் சஞ்சரிப்பதை சந்திராஷ்டமம் என்கிறோம். சந்திரன் மனோகாரகன் என்பதால் இந்த சந்திராஷ்டம நாட்களில் தேவையற்ற மனக் குழப்பங்கள் உண்டாகும். சந்திரனின் இந்த கோட்சார சஞ்சாரத்தைக் கொண்டுதான் தினப்பலன் ஜோதிடர்களால் கணிக்கப்படுகிறது.

    சந்திர திசை 10 வருடங்கள் நடைபெறும். சந்திரன் ஒரு ராசியில் இரண்டே கால் நாட்கள் சஞ்சரிக்கிறார். ராசி மண்டலத்தை சுற்றிவர 27 நாட்கள் ஆகிறது. சூரியன், சந்திரன் ஆகிய இருவரும் இணைந்திருக்கும் நாளை அமாவாசை என்கிறோம். சூரியனுக்கு 7 ல் சந்திரன் சஞ்சரிக்கும் நாளை பௌர்ணமி என்கிறோம். சூரியன் இருக்கும் இடம் முதல் 7ம் வீடு வரை சந்திரன் சஞ்சரிக்கும் நாட்களை வளர்பிறை என்கிறோம். 7ம் வீடு முதல் 12ம் வீடுவரை சந்திரன் சஞ்சரிக்கும் நாட்களை தேய்பிறை என்கிறோம். இந்த இடைவெளி நாட்களை கொண்டுதான் திதி நிர்ணயம் செய்யப்படுகிறது. அதே போல சந்திரனுக்கும், சூரியனுக்கும், இடையில் பூமி ஒரே நேர்கோட்டில் இருக்கும்போது சந்திர கிரகணம் உண்டாகிறது. சந்திரனின் பலத்தைக் கொண்டுதான் திருமண முகூர்த்தங்களும் நிர்ணயம் செய்யப்படுகிறது. சந்திரன் ஜெனன காலத்தில் நின்ற ராசியை ஜென்ம ராசி என்பதுபோல ஜென்ம ராசியைக் கொண்டுதான் கோட்சார ரீதியாக மற்றகிரகங்களின் சஞ்சாரபலனை அறியமுடியும்.

    சந்திரன் ரிஷபத்தில் உச்சமும், விருச்சகத்தில் நீசமும், கடகத்தில் ஆட்சியும் பெறுகிறார். சந்திரனுக்கு பகை வீடுகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சந்திரனுக்கு மூல திரிகோண வீடு ரிஷபமாகும்.

    சந்திரன் பெண் கிரகமாவான். பாஷை தமிழ், நிறம் வெண்மை, ஜாதி வைசியம், திசை தென்கிழக்கு, ரத்தினம் முத்து, தானியம் நெல், புஷ்பம் வெள்ளை அல்லி, வாகனம் நரி, சுவை தித்திப்பு, உலோகம் ஈயம், வஸ்திரம் வெள்ளை, தேவதை பார்வதி, குணம் வளர்பிறை, சௌமியர் தேய்பிரை, குரூரர் சமித்து எருக்கன் கள்ளியாகும்.

    சந்திரனின் நட்பு வீடு மிதுனம், சிம்மம், கன்னி. சமவீடுகள் மேஷம், துலாம், தனுசு, மகம் கும்பம், மீனம், நீசவீடு விருச்சிகம். நட்பு கிரகங்கள் சூரியன், குரு.

    சந்திரனின் காரகத்துவங்கள்

    மாதுர்காரகனாகிய சந்திரன் தாயார் பராசக்தி, கணவதி, சுவையான விருந்து, உபசரிப்புகள், ஆடம்பரமான ஆடைகள், குதிரை, தூக்கம், ஏற்றத்தாழ்வான பொருளாதார நிலை, உடல்நிலைகள், சீதள நோய்கள், இடது கண்புருவம், உத்தியோகம், கூழ், முத்து, வெண்கலம், வெண்ணெய் அரிசி, உப்பு, மீன், உழவர்கள், உப்பு காய்ச்சுபவர், வண்ணான், தர்ம சத்திரங்கள், சாமரம், அந்நிய நாட்டு பயணங்கள் கடல் கடந்து செல்லுதல் போன்றவற்றிற்கு காரகம் வகிக்கிறார்.

    சந்திரனால் உண்டாகக்கூடிய நோய்கள்

    தூக்கமின்மை, சோம்பேறித்தனம், மன நிலை பாதிப்பு, மஞ்சள் காமாலை, ஜல தொடர்புடைய நோய்கள், சீதபேதி, உணவு செரிக்காத நிலை, குடல் புண், முகப்பரு, சுவையை அறியும் தன்மையை இழக்கும் நிலை, தைரிய குறைவு, ஜலத்தால் கண்டம், தண்ணீரில் உள்ள மிருகத்தால் கண்டம், பெண்களால் பாதிப்பு, ரத்தத்தில் தூய்மையில்லாத நிலை, சளி, காய்ச்சல் போன்ற நோய்கள் சந்திரனால் ஏற்படும்.

    ஒருவருடைய ஜாதகத்தில் வளர்பிறை சந்திரன் சுபராகவும், தேய்பிறை சந்திரன் பாவியாகவும் விளங்குகிறார். வளர்பிறை சந்திரன் கேந்திர திரிகோணத்திலோ 2,11 லோ அமைந்து திசை நடைபெற்றால் நற்பலன்கள் உண்டாகும். தேய்பிறை சந்திரனாக இருந்தாலும் 3,6,10, 11 ல் இருந்து திசை நடைபெற்றால் நற்பலன்களை வழங்குவார். சந்திரன் ராகு, கேது சேர்க்கை பெற்று அமைவது கிரகண தோஷமாகும். கிரகண தோஷம் ஏற்பட்டு திசை நடைபெற்றால் மனக்குழப்பம், மன சஞ்சலம் தாய்க்கு கண்டம் உண்டாகும்.

    சந்திரன் தான் நின்ற வீட்டிலிருந்து 7ம் வீட்டை மட்டுமே பார்வை செய்வார். வளர்பிறை சந்திரன் வளமான யோகத்தை தருவது போல தேய்பிறை சந்திரன் தருவதில்லை.

    சந்திரனால் உண்டாகக்கூடிய யோகங்கள்

    சந்திராதியோகம், சந்திரமங்கள யோகம், சகடயோகம், அமாவாசையோகம், கேமத்துருவ யோகம், அனபாயோகம், சுனபாயோகம்.

    சந்திராதியோகம்

    சந்திரனுக்கு 6,7,8 ல் சுபகிரகம் இருப்பது. இதனால் தைரியம், துணிவு, நீண்ட ஆயுள், எதிரிகளை வெல்லும் ஆற்றல் உண்டாகும்.

    சந்திர மங்கள யோகம்

    சந்திரனுக்கு 1,4,7,10 ல் செவ்வாய் இருப்பது. இதனால் வீடு, வானம், செல்வம், செல்வாக்கு யாவும் உண்டகும்.

    சகடயோகம்

    சந்திரனுக்கு 6,8,12 ல் குரு இருப்பது. வாழ்வில் இன்பமும் துன்பமும் சரிசமமாக இருக்கும்.

    அமாவாசை யோகம்

    சந்திரனும், சூரியனும் இணைந்து இருப்பது. இதனால் சுறுசுறுப்பாகவும், கல்வியில் சிறந்தவராகவும், வாழ்வில் சாதனைகள் செய்யக்கூடியவராகவும் இருப்பார்கள்.

    மேத்ரும யோகம்

    சந்திரனுக்கு முன்னும் பின்னும் கிரகங்கள் இல்லாமல் இருப்பது. இதனால் வாழ்வில் முன்னேற்றமற்ற நிலை உண்டாகும்.

    அனபாயோகம்

    சந்திரனுக்கு 2ல் சுபகிரகம் இருப்பது. இதனால் சொந்த முயற்சியால் முன்னேற்றம், உயர் பதவி உண்டாகும்.

    சுனபா யோகம்

    சந்திரனுக்கு 12 ல் சுபகிரகம் இருப்பது. இதனால் செல்வம், செல்வாக்கு, புகழ், பதவி யாவும் உண்டாகும்.

    சந்திர ஓரையில் செய்ய வேண்டியவை

    பெண் பார்த்தல், நகைகள் செய்தல், உறவினரைக் காணுதல், பசு, கன்று வாங்குதல், இசை பயில, கல்வி கற்க, ஜலத்தில் பிராயாணம் செய்ய, வியாபாரம் செய்ய உத்தமம்.

    நவகிரகங்களால் ஏற்படக்கூடிய தோஷங்கள் விலக அந்தந்த பரிகார ஸ்தலங்களுக்குச் சென்று பரிகாரம் செய்வது நல்லது.

    சந்திரனுக்குரிய திருத்தலங்கள் இரண்டு 1. திங்களூர், 2. திருப்பதி

    திங்களூர்

    திங்கள் என்றால் சந்திரன். அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவராகிய அப்பூதியடிகளின் சொந்த ஊராகும். தமிழ்நாட்டிலுள்ள சைவத் திருப்பதிகளுள் தேவார பாடல் பெற்ற திருத்தலம் இத்திங்களூராகும். இது சந்திரனுக்கு உரிய ஸ்தலமாதலால் இப்பெயர் பெற்றது. இத்தலம் திருவையாற்றிலிருந்து எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

    திருப்பதி

    இது சந்திரன் பூஜித்து பெரும்பேறு பெற்ற ஸ்தலமாகும். இது ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா ரயில் நிலையத்திலிருந்து 9 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. மலையடிவாரத்திலிருந்து நடந்தும் பஸ் மூலமும் செல்லலாம். திருப்பதி சென்று வந்தாலே வாழ்வில் ஒரு திருப்புமுனை உண்டாகும். இக்கோவிலில் எம்பெருமான் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.

    சந்திரனை வழிபடும் முறைகள்

    திங்கட்கிழமைகளில் விரதம் இருத்தல் (சோம வார விரதம்), பௌர்ணமி நாட்களில் சாதத்தில் தேனும் சர்க்கரையும் கலந்து செப்பு பாத்திரத்தில் சந்திரனுக்கு படைப்பது, செம்பருத்தி பூவால் அர்ச்சனை செய்வது, முத்து பதித்த மோதிரம் அணிவது, வெங்கடாசலபதியை தரிசிப்பது, திருப்பதி சென்று வருவது, சந்திரனின் அதிதேவதையான பார்வதி தேவியை திங்களன்று வணங்குவது, ஸ்ரீபராசக்தி, துர்க்கா தேவியை வழிபடுவது, இரண்டு முகங்கள் கொண்ட ருத்ராட்சையை அணிந்து கொள்வது,

    நீர், பசும்பால், அரிசி போன்றவற்றை திங்கட்கிழமைகளில் பெண்களுக்கு தானம் தருவது, வெள்ளி பாத்திரங்களை உபயோகிப்பது, வெள்ளை நிற ஆடை அணிவது, எப்போதும் வெள்ளை நிற கைக்குட்டை வைத்திருப்பது.

    அதுபோல ஓம் ஷரம் ஸ்ரீம் ஷெளரம் சந்திராய நமஹ என சந்திரனின் மூல மந்திரங்களை 40 நாட்களுக்கு தினம் 250 வீதம் 10,000 தடவை ஜெபிப்பது.

    சந்திராயன விரதம் என்ற முறையில் அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமை அன்று 1 கவளம் அடுத்த நாள் 2 கவளம் என வரிசையாக ஒவ்வொரு நாளுக்கு ஒரு கவளம் மட்டும் உணவு சேர்த்து மறுபடியும்

    பௌர்ணமியன்று முழு உபவாசம் இருப்பது.

    • செவ்வாய்கிழமை துர்க்கை வழிபாட்டிற்கு உகந்ததாக கருதப்படுகிறது.
    • வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த நாள்.

    திங்கட்கிழமை

    திங்கட்கிழமை எனப்படும் சோமவாரம் சிவபெருமானுக்கு உகந்த நாளாகும். திங்கட்கிழமைகளில் வரும் பிரதோஷங்களில் சிவனை வேண்டி பிரதோஷ விரதம் இருப்பது மிகுந்த நன்மையை தரும். சோமவாரம் விரதம் இருந்து , ஈசனுக்கு பால் , அரிசி மற்றும் சர்க்கரை படைப்பது மிகவும் சிறந்தது என ஆன்மிகப் பெரியவர்கள் கூறியுள்ளனர்.

    செவ்வாய் கிழமை

    செவ்வாய் கிழமை என்றதும் நமக்கு முதலில் நினைவிற்கு வருவது துர்க்கை அம்மனும் , ராகு காலத்தில் ஏற்றப்படும் எலுமிச்சை விளக்கும் தான். அந்த அளவிற்கு செவ்வாய்கிழமை துர்க்கை வழிபாட்டிற்கு உகந்ததாக கருதப்படுகிறது. செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து ராகு காலத்தில் எலுமிச்சை தீபம் ஏற்றி வந்தால் , இல்லத்தில் துன்பம் நீங்கி இன்பம் பெருகும். அன்று முருகனுக்கும் உகந்த நாள். அன்றைய தினம் முருகப்பெருமானை வணங்கி கந்தசஷ்டி கவசம் படித்துவந்தால் பொல்லாதவரை பொடிப்பொடியாக்கும்.

    புதன்கிழமை

    புதன் கிழமை ஆனைமுகத்தனை வணங்க ஏற்ற நாளாகும். புதன்கிழமைகளில் விநாயகருக்கு விரதம் இருந்து வழிபட , எந்த ஒரு காரியமும் தடங்கல் இல்லாமல் நடக்கும்.

    வியாழன் கிழமை

    வியாழன் கிழமைகளில் விஷ்ணு , தட்சணாமூர்த்தி மற்றும் லக்ஷ்மி தேவி ஆகிய கடவுளுக்கு விரதம் இருப்பது நன்மையை தரவல்லது. அன்று குபேரனுக்கும் சிறப்பான நாளாக கருதப்படுகிறது.

    வெள்ளிக்கிழமை

    வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த நாள். மேலும் செல்வத்தை வாரி வழங்குபவளான திருமகளை வணங்கவும் ஏற்ற நாளாக கருதப்படுகிறது. வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் அம்மனுக்கு விரதமிருந்து வழிபடுவது அவர்களையும் அவர்கள் குடும்பத்தையும் காக்கும்.

    சனிக்கிழமை

    நவகிரகங்களில் அனைவரின் தலை எழுத்தையும் மாற்றவல்ல சனிபகவானுக்கு உகந்த நாள் சனிக்கிழமை. ஆஞ்சநேயர் , பெருமாள் , மற்றும் காளி தேவிக்கும் சனிக்கிழமை உகந்த நாளே. சனிக்கிழமை அன்று அருகில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றினால் ஜாதக ரீதியாக ஒருவருக்கு ஏற்படும் சனி தோஷத்திற்கு நிவாரணம் கிடைக்கும்.

    ஞாயிற்றுக்கிழமை

    நவகிரகங்களில் முதன்மையானவராகக் கருதப்படும் சூரிய பகவானுக்கு ஏற்ற நாள் ஞாயிற்றுக்கிழமை. ஞாயிற்று கிழமைகளில் தவறாமல் சூரிய பகவானுக்கு விரதமிருந்து வழிபட்டால் , எதிரிகளின் தொல்லைகளில் இருந்து நம்மை காப்பாற்றுவதோடு, நம்முடைய வாழ்க்கையும் அந்த சூரியனைப் போன்று பிரகாசமாக இருக்கும்...

    • குரு வேறு; தட்சிணாமூர்த்தி வேறு என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
    • பொருளாதாரம் உயரவேண்டுமானால் குருவை வழிபடவேண்டும்.

    ஆதிபரம்பொருளாகிய இறைவன் தன் சக்தியை பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் என மூன்று அம்சங்களாக்கினார்.

    பிரம்மதேவர் படைப்புத் தொழிலில் தனக்கு உதவிபுரிய சப்த ரிஷிகளை உருவாக்கினார். அந்த ஏழு ரிஷிகள் மூலம் மனித, அசுர இனங்கள் தோன்றின. அந்த ஏழு ரிஷிகளில் ஆங்கிரஸ முனிவரின் மகன்தான் பிரகஸ்பதி எனும் வியாழ பகவான்.

    பிரகஸ்பதி குருவானது எப்படி?

    வாழ்வில் உயர்ந்த இடத்தை அடையவேண்டும் என்று லட்சியம் கொண்ட பிரகஸ்பதி நான்கு வகை வேதங்களையும் கற்று, பல யாகங்களும் ஹோமங்களும் செய்தார். அஸ்வமேத யாகம் போன்ற சிறந்த யாகங்களை நூற்றுக்கும்மேல் செய்தார். இப்படி சிறப்பான ஹோமங்களைச் செய்து மிகச்சிறந்த முறையில் தேர்ச்சி பெற்றவர்களில் ஒருவர்தான் தேவர்களுக்கு குருவாக முடியும். அதன்படி தேர்வு பெற்று பிரகஸ்பதி தேவர்களுக்கு குருவானார்.

    அத்துடன் அவர் திருப்தி அடைந்துவிடவில்லை. தேவ குருவைவிட சிறப்பான இடத்தை அடைய மேலும் பல அரிய ஹோமங்களும் யாகங்களும் செய்ததுடன், திட்டை தலத்துக்கு வந்து, அங்கு கோவில் கொண்டுள்ள வசிஷ்டேஸ்வரரைக் குறித்து கடுந்தவம் புரிந்தார். அவர் தவத்துக்கு மெச்சிய சிவபெருமான் அவருக்கு நவகிரக பதவியை வழங்கினார்.

    அதன்படி நவகிரகங்களில் சுபகிரகமான குரு பகவானாக ஏற்றம் பெற்றார். அது முதற்கொண்டு திட்டையில் சுவாமி சந்நிதிக்கும், அம்பாள் சந்நிதிக்கும் இடையில் குரு பகவான் தனிச்சந்நிதியில் அருள்பாலித்து வருகிறார்.

    சிவபெருமானின் ஞானவடிவமான தட்சிணாமூர்த்தி ஆதிகுரு என அழைக்கப்படுகிறார்.

    இவரை வழிபடுபவர்களுக்கு அருளையும், ஞானத்தையும் வழங்கக்கூடியவர். எல்லா சிவன் கோவில்களிலும் தென் கோஷ்டத்தில் இவர் எழுந்தருளியிருப்பார். குரு பகவான் இல்லாத திருக்கோவில்களில் தட்சிணாமூர்த்தியையே குருவாக பாவித்து வழிபடுகின்றனர். ஆனால் குரு வேறு; தட்சிணாமூர்த்தி வேறு என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். குருவுக்கு செய்யும் பரிகாரங்களை குருவுக்கே செய்யவேண்டும்.

    குருவால் ஏற்படும் தோஷங்களுக்கு குருவையே வழிபடவேண்டும். உலகம் முழுவதும் உள்ள பணம், பொன் விஷயங்களுக்கு குருவே அதிபதி. எனவே பொருளாதாரம் உயரவேண்டுமானால் குருவை வழிபடவேண்டும். உங்களுக்கு பொருள் வந்துவிட்டது. அடுத்தது என்ன, திருமணம்தானே? அதற்கும் குருவின் அருள் வேண்டும்.

    குரு பலம்

    ஒருமுறை பார்வதி தேவியானவர் பூவுலகில் பிறந்து, சிவபெருமானை திருமணம் செய்துகொள்ள கடுந்தவம் புரிந்தார். நாட்கள் கடந்துகொண்டே இருந்தன. ஆனால் திருமணம் கைகூடி வரவில்லை. தேவர்கள் சிவ பெருமானிடம் சென்று தேவியை மணந்து கொள்ளவேண்டுமென்று முறையிட்டனர். அப்போது சிவன், "தேவியைத் திருமணம் செய்துகொள்ள நானும் தயாராகவே இருக்கிறேன். ஆனால் என்ன செய்வது? தேவிக்கு இன்னும் குரு பலம் வரவில்லையே' என்றார். உலக அன்னையான தேவிக்கே குரு பலம் இருந்தால்தான் திருமணம் நடைபெறும் எனும்போது சாமான்யர்களான நம் நிலை என்ன? எனவே திருமணம் தடைப்படுபவர்கள் அவர் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் திட்டைக்கு வந்து சுவாமி, அம்பாளை தரிசனம் செய்து, குரு பகவானை அபிஷேகம், அர்ச்சனை செய்து வணங்கினால், திருமணத்தடை விலகும் என்பது ஐதீகம்.

    சரி; பொருள் சேர்ந்துவிட்டது. திருமணமும் ஆகிவிட்டது. குழந்தை வரம் கிடைக்க வில்லை. அப்போதும் குரு பகவானையே வழிபடவேண்டும். ஏனென்றால் குரு பகவான் புத்திரகாரகன் என்று அழைக்கப்படுகின்றார்.

    அவர் அருள் இருந்தால்தான் குழந்தை பிறக்கும்.

    நவீன விஞ்ஞான ஆய்வுகளும் இதையே கூறுகின்றன. வியாழகிரகத்திலிருந்து வரும் மஞ்சள் நிறமான மீத்தேன் கதிர்கள்தான் உயிரினங்கள் உண்டாகக் காரணமென்று அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    வித்யாகாரகன் குரு பகவான்

    குருவருளால் பொருள், திருமணம், குழந்தைச் செல்வம் என எல்லாம் பெற்று விட்டீர்கள். அந்தக் குழந்தை நல்லபடியாகப் படித்து முன்னேற வேண்டும் அல்லவா? அதற்கும் குரு பகவான்தான் அருளவேண்டும். கல்வியில் முன்னேற்றம், வேத வேதாந்த சாஸ்திர அறிவு, நல்ல புத்தி, ஞாபக சக்தி அனைத்தையும் வழங்குபவர் குரு பகவான்தான். அப்படி நல்லபடியாகப் படித்துத் தேறிய குழந்தைகளுக்கு உரிய பதவியை வழங்குபவரும் குரு பகவான் தான். அவர் அருளால்தான் அரசியல் தொடர்பான சட்டமன்ற உறுப்பினர், நாடாளு மன்ற உறுப்பினர், அமைச்சர் ஆகிய பதவிகள் கிடைக்கும். அதுபோலவே நீதிபதிகள், வழக்கறிஞர்கள், வங்கிகள் மற்றும் முக்கியமான நிர்வாகத் துறைகளில் உயர் பதவிகளில் இருப்பவர்கள் அனைவரும் குரு அருள் பெற்றவர்களாகவே இருப்பார்கள்.

    குரு பார்க்க கோடி நன்மை

    நவகிரகங்களில் முழுமையான சுப கிரகம் குரு பகவான் ஒருவரே. சந்திரன் சுபரானாலும் இவர் வளர்பிறையில் மட்டுமே சுபராகக் கருதப்படுவார். புதன் சுபகிரகங்களோடு சேரும்போது மட்டுமே சுபர். அசுப கிரகங்களோடு சேரும்போது பாபத் தன்மை அடைந்துவிடுவார். சுக்கிரன் சுப கிரகமானாலும் அவர் அசுர இனத்தில் பிறந்ததால் அவரை முழு சுபராக ஏற்பதில்லை. எனவே, தேவகுருவான குரு பகவானே முழுச்சுபராக கருதப்படுகின்றார்.

    சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகிய ஐந்து கிரகங்களையும் முழு பாப கிரகங்களாக ஜோதிட சாஸ்திரம் நிர்ணயித்துள்ளது. இந்த ஐந்து கிரகங்களினால் வரும் தோஷங்களைக் கட்டுப்படுத்துகிற சக்தி முழு சுபகிரகமான குரு பகவானுக்கு உண்டு. குருவின் 5, 7, 9-ஆம் பார்வைகள் சிறப்பாகச் சொல்லப்படுகிறது. எனவேதான் "குரு பார்க்க கோடி தோஷம் விலகும்', "குரு பார்க்க கோடி நன்மை' என்று பழமொழிகள் உருவாகின.

    • நற்காரியம் நடைபெற நவக்கிரகத்தை வழிபடுவோம்.
    • இந்த காயத்ரி மந்திரங்களை தினமும் சொல்லி வந்தால் துன்பங்கள் பறந்தோடும்.

    சூர்ய காயத்ரி மந்திரம்:-

    ஓம் அச்வ த்வஜாய வித்மஹே

    பாச ஹஸ்தாய தீமஹி

    தன்னோ சூர்ய ப்ரசோதயாத்

    சந்திர காயத்ரி மந்திரம்:-

    பத்மத்வஜாய வித்மஹே

    ஹேமரூபாய தீமஹி

    தன்னோ ஸோமப் பிரசோதயாத்

    அங்காரக காயத்ரி மந்திரம்:-

    ஓம் வீர த்வஜாய வித்மஹே

    விக்ன ஹஸ்தாய தீமஹி

    தன்னோ பெளம ப்ரசோதயாத்

    புத காயத்ரி மந்திரம்:-

    ஓம் கஜத் வஜாய வித்மஹே

    சுக ஹஸ்தாய தீமஹி

    தன்னோ புத ப்ரசோதயாத்

    குரு காயத்ரி மந்திரம்:-

    ஓம் விருஷபத்வஜாய வித்மஹே

    க்ருணி ஹஸ்தாய தீமஹி

    தன்னோ குரு ப்ரசோதயாத்

    சுக்ர காயத்ரி மந்திரம்:-

    ஓம் அச்வ த்வஜாய வித்மஹே

    தனுர் ஹஸ்தாய தீமஹி

    தன்னோ சுக்ர ப்ரசோதயாத்

    சனீஸ்வர காயத்ரி மந்திரம்:-

    ஓம் காக த்வஜாய வித்மஹே

    கட்க ஹஸ்தாய தீமஹி

    தன்னோ மந்த ப்ரசோதயாத்

    ராகு காயத்ரி மந்திரம்:-

    ஓம் நகத் வஜாய வித்மஹே

    பத்ம ஹஸ்தாய தீமஹி

    தன்னோ மந்த ப்ரசோதயாத்

    கேது காயத்ரி மந்திரம்:-

    ஓம் அச்வத் வஜாய வித்மஹே

    சூல ஹஸ்தாய தீமஹி

    தன்னோ கேது ப்ரசோதயாத்

    • ஒன்றை நாம் தொடர்ந்து நினைத்தால், இயல்பாக அதனோடு நாம் உயிர் கலப்பு பெறுவோம். இது பிரபஞ்ச நியதி.
    • கவனிப்பதால் மனஅலை நீளமும் குறையும். இதை செய்வதற்கு உங்களுக்கு தேவை சற்று தனிமை.

    கோவில்களில் பார்த்து இருப்பீர்கள். ஒவ்வொரு கோள்களின் காந்த அலைக்கதிர் நிறத்திற்கு ஒத்த துணியை நவகிரகங்களுக்கு கட்டி இருப்பார்கள். சனிபகவானுக்கு சாம்பல் நிற அங்கவஸ்திரம் கட்டி இருப்பார்கள். சனியின் காந்த அலைக்கதிர்கள் சாம்பல் நிறம் என்பதை உணர்த்தவே முன்னோர்கள் அதை செய்து இருக்கிறார்கள்.

    பொதுவாக நவகோள்களின் காந்த அலை கதிர்கள், நமது உயிருக்கும் உடலுக்கும் நெருங்கிய தொடர்பு உடையவை.

    சனி நம் நரம்புகளோடு தொடர்பு உடையது. சனியின் சாம்பல் நிற காந்த அலைக்கதிர்கள் ஆயுள், செல்வ வளம், உடல் நலம் அளிக்க வல்லது. தவத்தால் அதனோடு நட்பு பாராட்டி, அதனோடு உயிர் கலப்பு பெற்று, நமக்கு ஒத்ததாக மாற்றி கொள்ளலாம் என்று அருட்தந்தை பஞ்ச பூத நவக்கிரக தவத்தில் குறிப்பிடுவார்.

    ஒன்றை நாம் தொடர்ந்து நினைத்தால், இயல்பாக அதனோடு நாம் உயிர் கலப்பு பெறுவோம். இது பிரபஞ்ச நியதி. கவனிப்பதால் மனஅலை நீளமும் குறையும். இதை செய்வதற்கு உங்களுக்கு தேவை சற்று தனிமை.

    சனி என்ற கோளின் மீது மனம் செலுத்தி, அதன் சிறப்புகளை நினைவு கூர்தல், அவ்வளவுதான். உங்கள் எண்ணம் பிரபஞ்சமெல்லாம் விரிந்து, சனியோடு உறவாடி, உயிர் கலப்பு பெறும்.

    தேவையற்ற எண்ணங்களை புறந்தள்ளி விட்டு, நேரம் கிடைக்கும் போது நினைவு கூறலாம். வித்தியாசமான அனுபவமாக இருக்கும். உங்களுக்குள் ஒரு மாற்றம் நிகழ்வதை உணர முடியும்.

    இது போல வார நாட்களில் அந்தந்த கோள்களை நினைவு கூர்தல், சற்று நேரம் அந்த கோள்களின் நினைவாக இருந்து, உயிர் கலப்பு பெறுதல் என்று பழக்கப்படுத்தி கொண்டால் வாழ்வு சிறக்கும்.

    ×