search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    நவகிரகங்களில் சந்திரனும் பரிகாரமும்
    X

    நவகிரகங்களில் சந்திரனும் பரிகாரமும்

    • சந்திரன் ஜெனன காலத்தில் எங்கு இருக்கிறாரோ அதை ஜென்ம ராசி என்கிறோம்.
    • நவகிரகங்களால் ஏற்படக்கூடிய தோஷங்கள் விலக அந்தந்த பரிகார ஸ்தலங்களுக்குச் சென்று பரிகாரம் செய்வது நல்லது.

    ஒருவருக்கு கற்பனை வளம் அதிகரித்து அவரை கவிஞராக்கும் பலம் சந்திரனுக்கு உண்டு. சந்திரன் மனநிலைக்கு காரகனாகிறார். அழகும், கவர்ச்சியும் கொண்ட சந்திரனை அழகான எதற்கு வேண்டுமானாலும் ஒப்பிடலாம். பொதுவாக பெண்களின் அழகை வர்ணிப்பதற்கு சந்திரன் மிகவும் உறுதுணையாக இருப்பார். வட்ட நிலா போன்ற முகம், பிறை போன்ற நெற்றி, புருவம் என பல உவமைகள் உண்டு. பெண்களும் தன் தலைவன் பிரிந்து ஏக்கத்தை யாரிடமும் கூறமுடியாமல் இரவில் நிலாவுடன்தான் பகிர்ந்து கொள்வார்கள். ஆண்களும் நிலவை ஒரு பெண்ணாக நினைத்து காதலிக்கு தூது விடுவார்கள். எத்தனை எத்தனை கவிஞர்களை கற்பனை திறன் மிக்கவர்களாக உருவாக்கிய பெருமை நிலாவிற்கு உண்டு தெரியுமா? நிலவையே கையில் பிடித்ததாக நினைத்து கொஞ்சி விளையாடும் காதலர்களும் உண்டு.

    நிலாவைக் காட்டி தாய் தன் பிள்ளைக்கு சோறுட்டுவாள். பாட்டி தன் பேத்திகளுக்கு நிலவில் ஆயா வடை சுட்டதாக கதைகள் சொல்லுவாள். இதையெல்லாம் தாண்டி விஞ்ஞானம் நிலவிற்கு சென்று மனிதனால் வாழ முடியும் என்றும் பனிக்கட்டிகள் உள்ளதாக சான்றுகள் உள்ளது என்றும் உலகிற்கு உணர்த்தி உள்ளது. நாம் நிலாவிற்கு ஜோதிடத்தில் உள்ள பங்கையும் பற்றி பார்ப்போம்.

    சந்திரன், நிலா, திங்களன், வதனமதி, மதிவதனன், மாதுர்காரகன், மனோகாரகன் என வர்ணிக்கப்படும் சந்திரன் நவக்கிரகங்களில் இரண்டாம் இடத்தை வகிப்பவர். சந்திரன் ஒரு பெண் கிரகமாவார் ஒருவரின் ஜாதகத்தை கணிப்பதற்கு மிகவும் உறுதுணையாக இருப்பவர் சந்திரன். சந்திரன் சஞ்சரிக்கும் நட்சத்திரமே ஒருவரின் ஜெனை கால நட்சத்திரமாகிறது. அதனைக் கொண்டுதான் அவருக்கு ஏற்படக்கூடிய தசாபுக்திகளையும் கணக்கிடுகிறோம். இதன் மூலமே அவரின் முழு ஜாதகப் பலனை அறியமுடியும்.

    சந்திரன் ஜெனன காலத்தில் எங்கு இருக்கிறாரோ அதை ஜென்ம ராசி என்கிறோம். சந்திரன் ஒருவருக்கு பலம் பெற்றிருந்தால் மற்றவர்களிடம் பாசமாக நடக்கும் பண்பு, நல்ல மனநிலை, கவிதை, கற்பனைத் திறன், கௌரவம், புகழ், நிம்மதியான உறக்கம், அரசு வழியில் ஆதரவுகள் உண்டாகும்.

    சந்திரன் மனோகாரகன் என்பதால் அவர் பலமிழந்திருந்தால் மனக்குழப்பம், மன நோய், மற்றவர்களிடம் ஒத்துப்போக முடியாத நிலை, எதிம் தோல்வி போன்ற அனுகூலமற்றப் பலன்கள் உண்டாகும்.

    சந்திரன் கோட்சார ரீதியாக 1,3,6,7,10,11 ஆகிய ஸ்தானங்களில் சஞ்சரிக்கும் நாட்களில் அனுகூலமானப் பலன்கள் உண்டாகும். சந்திரன் ஜென்ம ராசிக்கு 8 ல் சஞ்சரிப்பதை சந்திராஷ்டமம் என்கிறோம். சந்திரன் மனோகாரகன் என்பதால் இந்த சந்திராஷ்டம நாட்களில் தேவையற்ற மனக் குழப்பங்கள் உண்டாகும். சந்திரனின் இந்த கோட்சார சஞ்சாரத்தைக் கொண்டுதான் தினப்பலன் ஜோதிடர்களால் கணிக்கப்படுகிறது.

    சந்திர திசை 10 வருடங்கள் நடைபெறும். சந்திரன் ஒரு ராசியில் இரண்டே கால் நாட்கள் சஞ்சரிக்கிறார். ராசி மண்டலத்தை சுற்றிவர 27 நாட்கள் ஆகிறது. சூரியன், சந்திரன் ஆகிய இருவரும் இணைந்திருக்கும் நாளை அமாவாசை என்கிறோம். சூரியனுக்கு 7 ல் சந்திரன் சஞ்சரிக்கும் நாளை பௌர்ணமி என்கிறோம். சூரியன் இருக்கும் இடம் முதல் 7ம் வீடு வரை சந்திரன் சஞ்சரிக்கும் நாட்களை வளர்பிறை என்கிறோம். 7ம் வீடு முதல் 12ம் வீடுவரை சந்திரன் சஞ்சரிக்கும் நாட்களை தேய்பிறை என்கிறோம். இந்த இடைவெளி நாட்களை கொண்டுதான் திதி நிர்ணயம் செய்யப்படுகிறது. அதே போல சந்திரனுக்கும், சூரியனுக்கும், இடையில் பூமி ஒரே நேர்கோட்டில் இருக்கும்போது சந்திர கிரகணம் உண்டாகிறது. சந்திரனின் பலத்தைக் கொண்டுதான் திருமண முகூர்த்தங்களும் நிர்ணயம் செய்யப்படுகிறது. சந்திரன் ஜெனன காலத்தில் நின்ற ராசியை ஜென்ம ராசி என்பதுபோல ஜென்ம ராசியைக் கொண்டுதான் கோட்சார ரீதியாக மற்றகிரகங்களின் சஞ்சாரபலனை அறியமுடியும்.

    சந்திரன் ரிஷபத்தில் உச்சமும், விருச்சகத்தில் நீசமும், கடகத்தில் ஆட்சியும் பெறுகிறார். சந்திரனுக்கு பகை வீடுகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சந்திரனுக்கு மூல திரிகோண வீடு ரிஷபமாகும்.

    சந்திரன் பெண் கிரகமாவான். பாஷை தமிழ், நிறம் வெண்மை, ஜாதி வைசியம், திசை தென்கிழக்கு, ரத்தினம் முத்து, தானியம் நெல், புஷ்பம் வெள்ளை அல்லி, வாகனம் நரி, சுவை தித்திப்பு, உலோகம் ஈயம், வஸ்திரம் வெள்ளை, தேவதை பார்வதி, குணம் வளர்பிறை, சௌமியர் தேய்பிரை, குரூரர் சமித்து எருக்கன் கள்ளியாகும்.

    சந்திரனின் நட்பு வீடு மிதுனம், சிம்மம், கன்னி. சமவீடுகள் மேஷம், துலாம், தனுசு, மகம் கும்பம், மீனம், நீசவீடு விருச்சிகம். நட்பு கிரகங்கள் சூரியன், குரு.

    சந்திரனின் காரகத்துவங்கள்

    மாதுர்காரகனாகிய சந்திரன் தாயார் பராசக்தி, கணவதி, சுவையான விருந்து, உபசரிப்புகள், ஆடம்பரமான ஆடைகள், குதிரை, தூக்கம், ஏற்றத்தாழ்வான பொருளாதார நிலை, உடல்நிலைகள், சீதள நோய்கள், இடது கண்புருவம், உத்தியோகம், கூழ், முத்து, வெண்கலம், வெண்ணெய் அரிசி, உப்பு, மீன், உழவர்கள், உப்பு காய்ச்சுபவர், வண்ணான், தர்ம சத்திரங்கள், சாமரம், அந்நிய நாட்டு பயணங்கள் கடல் கடந்து செல்லுதல் போன்றவற்றிற்கு காரகம் வகிக்கிறார்.

    சந்திரனால் உண்டாகக்கூடிய நோய்கள்

    தூக்கமின்மை, சோம்பேறித்தனம், மன நிலை பாதிப்பு, மஞ்சள் காமாலை, ஜல தொடர்புடைய நோய்கள், சீதபேதி, உணவு செரிக்காத நிலை, குடல் புண், முகப்பரு, சுவையை அறியும் தன்மையை இழக்கும் நிலை, தைரிய குறைவு, ஜலத்தால் கண்டம், தண்ணீரில் உள்ள மிருகத்தால் கண்டம், பெண்களால் பாதிப்பு, ரத்தத்தில் தூய்மையில்லாத நிலை, சளி, காய்ச்சல் போன்ற நோய்கள் சந்திரனால் ஏற்படும்.

    ஒருவருடைய ஜாதகத்தில் வளர்பிறை சந்திரன் சுபராகவும், தேய்பிறை சந்திரன் பாவியாகவும் விளங்குகிறார். வளர்பிறை சந்திரன் கேந்திர திரிகோணத்திலோ 2,11 லோ அமைந்து திசை நடைபெற்றால் நற்பலன்கள் உண்டாகும். தேய்பிறை சந்திரனாக இருந்தாலும் 3,6,10, 11 ல் இருந்து திசை நடைபெற்றால் நற்பலன்களை வழங்குவார். சந்திரன் ராகு, கேது சேர்க்கை பெற்று அமைவது கிரகண தோஷமாகும். கிரகண தோஷம் ஏற்பட்டு திசை நடைபெற்றால் மனக்குழப்பம், மன சஞ்சலம் தாய்க்கு கண்டம் உண்டாகும்.

    சந்திரன் தான் நின்ற வீட்டிலிருந்து 7ம் வீட்டை மட்டுமே பார்வை செய்வார். வளர்பிறை சந்திரன் வளமான யோகத்தை தருவது போல தேய்பிறை சந்திரன் தருவதில்லை.

    சந்திரனால் உண்டாகக்கூடிய யோகங்கள்

    சந்திராதியோகம், சந்திரமங்கள யோகம், சகடயோகம், அமாவாசையோகம், கேமத்துருவ யோகம், அனபாயோகம், சுனபாயோகம்.

    சந்திராதியோகம்

    சந்திரனுக்கு 6,7,8 ல் சுபகிரகம் இருப்பது. இதனால் தைரியம், துணிவு, நீண்ட ஆயுள், எதிரிகளை வெல்லும் ஆற்றல் உண்டாகும்.

    சந்திர மங்கள யோகம்

    சந்திரனுக்கு 1,4,7,10 ல் செவ்வாய் இருப்பது. இதனால் வீடு, வானம், செல்வம், செல்வாக்கு யாவும் உண்டகும்.

    சகடயோகம்

    சந்திரனுக்கு 6,8,12 ல் குரு இருப்பது. வாழ்வில் இன்பமும் துன்பமும் சரிசமமாக இருக்கும்.

    அமாவாசை யோகம்

    சந்திரனும், சூரியனும் இணைந்து இருப்பது. இதனால் சுறுசுறுப்பாகவும், கல்வியில் சிறந்தவராகவும், வாழ்வில் சாதனைகள் செய்யக்கூடியவராகவும் இருப்பார்கள்.

    மேத்ரும யோகம்

    சந்திரனுக்கு முன்னும் பின்னும் கிரகங்கள் இல்லாமல் இருப்பது. இதனால் வாழ்வில் முன்னேற்றமற்ற நிலை உண்டாகும்.

    அனபாயோகம்

    சந்திரனுக்கு 2ல் சுபகிரகம் இருப்பது. இதனால் சொந்த முயற்சியால் முன்னேற்றம், உயர் பதவி உண்டாகும்.

    சுனபா யோகம்

    சந்திரனுக்கு 12 ல் சுபகிரகம் இருப்பது. இதனால் செல்வம், செல்வாக்கு, புகழ், பதவி யாவும் உண்டாகும்.

    சந்திர ஓரையில் செய்ய வேண்டியவை

    பெண் பார்த்தல், நகைகள் செய்தல், உறவினரைக் காணுதல், பசு, கன்று வாங்குதல், இசை பயில, கல்வி கற்க, ஜலத்தில் பிராயாணம் செய்ய, வியாபாரம் செய்ய உத்தமம்.

    நவகிரகங்களால் ஏற்படக்கூடிய தோஷங்கள் விலக அந்தந்த பரிகார ஸ்தலங்களுக்குச் சென்று பரிகாரம் செய்வது நல்லது.

    சந்திரனுக்குரிய திருத்தலங்கள் இரண்டு 1. திங்களூர், 2. திருப்பதி

    திங்களூர்

    திங்கள் என்றால் சந்திரன். அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவராகிய அப்பூதியடிகளின் சொந்த ஊராகும். தமிழ்நாட்டிலுள்ள சைவத் திருப்பதிகளுள் தேவார பாடல் பெற்ற திருத்தலம் இத்திங்களூராகும். இது சந்திரனுக்கு உரிய ஸ்தலமாதலால் இப்பெயர் பெற்றது. இத்தலம் திருவையாற்றிலிருந்து எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

    திருப்பதி

    இது சந்திரன் பூஜித்து பெரும்பேறு பெற்ற ஸ்தலமாகும். இது ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா ரயில் நிலையத்திலிருந்து 9 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. மலையடிவாரத்திலிருந்து நடந்தும் பஸ் மூலமும் செல்லலாம். திருப்பதி சென்று வந்தாலே வாழ்வில் ஒரு திருப்புமுனை உண்டாகும். இக்கோவிலில் எம்பெருமான் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.

    சந்திரனை வழிபடும் முறைகள்

    திங்கட்கிழமைகளில் விரதம் இருத்தல் (சோம வார விரதம்), பௌர்ணமி நாட்களில் சாதத்தில் தேனும் சர்க்கரையும் கலந்து செப்பு பாத்திரத்தில் சந்திரனுக்கு படைப்பது, செம்பருத்தி பூவால் அர்ச்சனை செய்வது, முத்து பதித்த மோதிரம் அணிவது, வெங்கடாசலபதியை தரிசிப்பது, திருப்பதி சென்று வருவது, சந்திரனின் அதிதேவதையான பார்வதி தேவியை திங்களன்று வணங்குவது, ஸ்ரீபராசக்தி, துர்க்கா தேவியை வழிபடுவது, இரண்டு முகங்கள் கொண்ட ருத்ராட்சையை அணிந்து கொள்வது,

    நீர், பசும்பால், அரிசி போன்றவற்றை திங்கட்கிழமைகளில் பெண்களுக்கு தானம் தருவது, வெள்ளி பாத்திரங்களை உபயோகிப்பது, வெள்ளை நிற ஆடை அணிவது, எப்போதும் வெள்ளை நிற கைக்குட்டை வைத்திருப்பது.

    அதுபோல ஓம் ஷரம் ஸ்ரீம் ஷெளரம் சந்திராய நமஹ என சந்திரனின் மூல மந்திரங்களை 40 நாட்களுக்கு தினம் 250 வீதம் 10,000 தடவை ஜெபிப்பது.

    சந்திராயன விரதம் என்ற முறையில் அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமை அன்று 1 கவளம் அடுத்த நாள் 2 கவளம் என வரிசையாக ஒவ்வொரு நாளுக்கு ஒரு கவளம் மட்டும் உணவு சேர்த்து மறுபடியும்

    பௌர்ணமியன்று முழு உபவாசம் இருப்பது.

    Next Story
    ×