search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகை கடை கொள்ளை"

    • சிறியதாக திருடி சேர்க்க முடியாததால், பெரிதாக ஏதாவது திருட்டில் ஈடுபட்டு சொகுசு வாழ்க்கை வாழ ஆசைப்பட்டுள்ளார்.
    • போலீசார் தப்பியோடிய விஜயை வலைவீசி தேடி வருகின்றனர்.

    கோவை:

    கோவை 100 அடி ரோட்டில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை செயல்பட்டு வருகிறது.

    இந்த நகைக்கடையில் கடந்த 27-ந் தேதி நள்ளிரவில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. பல கோடி ரூபாய் மதிப்பிலான வைரம், பிளாட்டினம், தங்கம் உள்ளிட்ட நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

    இந்த கொள்ளை குறித்து ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆய்வு நடத்தினர். கடையில், இருந்த சி.சி.டி.வி கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் என்பது தெரியவந்தது. நள்ளிரவு நேரத்தில் புகுந்த கொள்ளையன் ஏ.சி. வெண்டிலேட்டரை உடைத்து கொண்டு கடைக்குள் சென்றுள்ளார்.

    அங்கு ஷோகேஸ்களில் இருந்த நகைகளை தேடி எடுத்து கடையில் இருந்த பையில் வைத்து எடுத்து சென்றது கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது.

    முகத்தை கேமிராவில் இருந்து மறைக்க தனது மேல் சட்டையை பயன்படுத்தி உள்ளார். எந்த இடத்திலும் முகம் தெரியாமல் இருக்க உஷாராக இருந்துள்ளான் கொள்ளையன்.மேலும் நகைகளை கொள்ளையடித்து விட்டு கடையில் இருந்து வெளியில் வந்து, சில அடி தூரம் நடந்து சென்றதும், பின்னர் அந்த வழியாக வந்த ஆட்டோவில் ஏறி உக்கடம் பஸ் நிலையத்திற்கு சென்று பொள்ளாச்சி பஸ்சில் தப்பி செல்வதும் கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது.

    இதனால் கொள்ளையன் பொள்ளாச்சி, பழனி, உடுமலை போன்ற பகுதிகளுக்கு சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.

    இதையடுத்து தனிப்படை போலீசார் பொள்ளாச்சி, பழனி, உடுமலை, பெங்களூரு, சேலம், ஓசூர் போன்ற பகுதிகளுக்கும் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.மேலும் கொள்ளையனின் உருவம், நடை, செயல்பாடு ஆகியவற்றை வைத்து அவர் பழைய குற்றவாளியா? என்பது குறித்தும் போலீசார் ஆய்வு செய்தனர்.

    பொள்ளாச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகள் என அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு கொள்ளையனை தேடி வந்தனர்.

    இந்த நிலையில், கோவை நகைக்கடையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபரின் அடையாளம் தெரியவந்தது.

    நகைக்கடையில் கொள்ளையடித்த நபர் தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்த விஜய்(வயது28).இவர் மீது தர்மபுரி மாவட்டத்தில் கொள்ளை, வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதுதொடர்பாக தர்மபுரி போலீசார் அவரை கைது செய்து, கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    அப்போது அவருக்கு கோவை மத்திய ஜெயிலில் போக்சோ வழக்கில் கைதாகி இருந்த ஆனைமலையை சேர்ந்த சுரேஷ் என்பவரின் நட்பு கிடைத்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய் ஜெயிலில் இருந்து வெளியில் வந்தார். பின்னர் மீண்டும் தர்மபுரிக்கு சென்றார். அப்போது மீண்டும் அவரை வேறு வழக்கில் போலீசார் கைது செய்வதற்கான நடவடிக்கை எடுத்தனர். இதனை அறிந்ததும், விஜய் இங்கிருந்தால் நாம் மாட்டிக்கொள்வோம் என்பதால், வேறு எங்காவது செல்ல நினைத்தார்.

    அப்போது அவருக்கு ஜெயிலில் அறிமுகமான சுரேஷின் நினைவு வந்தது. உடனே அவரை தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் தர்மபுரியில் இருந்து கோவைக்கு தனது மனைவியுடன் வந்த அவர், ஆனைமலையில் வீடு எடுத்து வாடகைக்கு தங்கி இருந்தார்.

    இங்கு வந்த பின்னரும், மீண்டும் விஜய் சிறு, சிறு திருட்டுகளில் ஈடுபட்டு தனது வேலையை காட்ட தொடங்கியுள்ளார். சிறியதாக திருடி சேர்க்க முடியாததால், பெரிதாக ஏதாவது திருட்டில் ஈடுபட்டு சொகுசு வாழ்க்கை வாழ ஆசைப்பட்டுள்ளார்.

    அதன்படியே கோவையில் உள்ள நகைக்கடையில் நகைகளை கொள்ளையடித்தார். பின்னர் தான் கொள்ளையடித்த நகைகளில் பாதியை அரூரில் உள்ள தனது தாய் வீட்டிலும், மற்றொரு பாதியை ஆனைமலையில் உள்ள வீட்டிலும் வைத்தார்.

    இந்த நிலையில் ஆனைமலையில் விஜய் இருப்பதாக கோவை தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது. இதேபோல் கோவையில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக வெளியான வீடியோ காட்சிகளை பார்த்த தர்மபுரி போலீசாரும், விஜயை கைது செய்ய கோவைக்கு வந்தனர்.

    பின்னர் கோவை தனிப்படை போலீசார் மற்றும் தர்மபுரி போலீசார் இணைந்து ஆனைமலை பகுதிக்கு சென்றனர். அங்கு விஜய் தங்கி இருந்த வீட்டை சுற்றி வளைத்த போலீசார் அவரை வெளியில் வர எச்சரிக்கை விடுத்தனர்.

    போலீசார் தன்னை சுற்றி வளைத்ததை அறிந்ததும், விஜய் தனது வீட்டின் ஓட்டை பிரித்து மேல் பகுதி வழியாக வெளியில் வந்து, போலீசாரின் கண்ணில் படாமல் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

    சிறிது நேரம் கழித்து போலீசார் வீட்டிற்குள் சென்று பார்த்த போது விஜய் வீட்டில் இல்லை. இதையடுத்து போலீசார் அவரது மனைவியை பிடித்தனர். அவரிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். மேலும் அவரது வீடு மற்றும் அரூரில் விஜயின் தாய் வீட்டில் இருந்த 2¾ கிலோ நகையையும் மீட்டனர்.

    மேலும் விஜய்க்கு வீடு பார்த்து கொடுத்த சுரேஷ் என்பவரை பிடித்து நகை கொள்ளையில் தொடர்பு இருக்கிறதா? என விசாரித்தனர். விசாரணையில் அவருக்கு தொடர்பு இல்லை என்பது தெரியவந்து.

    இதையடுத்து போலீசார் தப்பியோடிய விஜயை வலைவீசி தேடி வருகின்றனர்.

    கொள்ளையன் சிக்கிய நிலையில் வீட்டை சுற்றி வளைத்த 2 மாவட்ட போலீசாரும் அவனை பிடிக்க முடியாமல் கோட்டை விட்டு விட்டனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • கொள்ளையர்கள் சுமார் 50 லட்சம் மதிப்புள்ள தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர்.
    • கொள்ளை சம்பவம் குறித்து திருக்கோவிலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் வடக்கு வீதியில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் குமார் 5 பேர் கொண்ட கொள்ளை கும்பல் கடந்த மாதம் 15-ம் தேதி நள்ளிரவில் கேஸ் வெல்டிங் மூலம் 3-வது மாடியில் உள்ள கடையின் இரும்பு கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் சுமார் 50 லட்சம் மதிப்புள்ள தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர். லாக்கரை உடைக்கும் அளவுக்கு கேஸ் தீர்ந்து விட்ட காரணத்தினால் லாக்கரில் இருந்த பல கோடி மதிப்பிலான நகைகள் அதிர்ஷ்டவசமாக தப்பின. இந்த சம்பவம் திருக்கோவிலூரில் உள்ள மற்ற நகைக்கடைக்காரர்களையும் வட்டிக்கடை க்கார ர்களையும் பெரும் பீதிக்கு உள்ளாக்கியது.

    அதேபோல் பொது மக்களும் கொள்ளை நடந்த விதம் கொள்ளையர்கள் பயன்படுத்திய உபகரணங்கள் அவற்றைக் கண்டு அச்சத்திற்கு உள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து திருக்கோவிலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு, சப் இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீஸ்சாருக்கு கிடைத்த ரகசிய தகவல் படி கொள்ளையர்களை தேடி மகாராஷ்டிரா மாநிலம் சென்றனர்.

    திருக்கோவிலூரில் கொள்ளை அடித்த கொள்ளையர்களின் ஊருக்கே சென்று கொள்ளையர்களை பிடிக்க முயன்ற நிலையில் திருக்கோவிலூர் போலீசார் இங்கு வந்து விட்டனர் என்பதை அறிந்த கொள்ளையர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிவிட்டனர். இதனால் போலீசார் கொள்ளையர்களை பிடிக்க முடியாமல் வெறும் கையுடன் திரும்பினர். இந்த கொள்ளை சம்பவத்தில் குற்றவாளிகளை கண்டறிய போலீசாருக்கு கிடைத்த மிகப்பெரிய துப்பு சந்தேகத்திற்குரிய ஒரு செல்போன் நம்பர் ஆகும். அந்த செல்போன் மூலம் அடுத்தடுத்து போலீசார் எடுத்த நடவடிக்கையின் காரணமாக பீகார் ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு போலீசார் விரைந்தனர்.

    இறுதியாக முக்கிய குற்றவாளி மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவன் என்பது உறுதி செய்யப்படவே திருக்கோவிலூர் போலீசார் தீரன் சினிமா படபாணியில் மாறுவேடத்தில் சென்று குற்றவாளிகளை மடக்கிப் பிடிக்க முயன்றனர். ஆனால் எதிர்பாராத வகையில் மாறுவேடத்தில் வந்திருந்த திருக்கோவிலூர் போலீசாரை அடையாளம் கண்டுவிட்ட கொள்ளையர்கள் தப்பி விட்டனர். இருந்த போதும் கொள்ளையர்களை சரியாக அடையாளம் கண்டு மகாராஷ்டிரா மாநிலம் சென்ற போலீசாரின் வருகை கொள்ளையர்களின் சொந்த ஊர் மக்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

    ஜார்க்கண்ட் பீகார் மற்றும் பங்களாதேஷை சேர்ந்த நபர்களும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை வளையத்தை தீவிரபடுத்தி உள்ளனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசாரை அழைத்து குற்றவாளிகளை வியூகம் அமைத்து பிடிப்பது எப்படி என்பது குறித்து அறிவுரை வழங்கி உள்ளார். அதன் அடிப்படையில் மேலும் சில போலீசார் குற்றவாளிகளை தேடி நவீன ரக துப்பாக்கிகள் எடுத்துக்கொண்டு மேற்கண்ட மாநிலங்களுக்கு செல்ல உள்ளனர். விரைவில் குற்றவாளிகளை கைது செய்து கொள்ளை போன பொருட்களையும் மீட்டு விடுவோம் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • மாணிக்கம் தலைமையான போலீசார் மூலம் 4தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
    • ஐந்து கிலோ எல்.பி.ஜி. சிலிண்டர் மூலம் நகை கடையின் இரும்பு கதவை துளையிட்டுள்ளனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வடக்கு தெருவில் பாபுலால் ஜுவல்லர்ஸ் நகைக் கடை உள்ளது. இந்த நகை கடையை அதே பகுதியைச் சேர்ந்த நித்தேஷ் லோகேஷ் என்பவர் நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் கடையில் வேலை முடித்துவிட்டு பணியாளர்கள் நகை கடையை மூடி விட்டு சென்றனர். நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் நகைக்கடையில் மூன்றாவது மாடியில் ஏறி சி.சி.டி.வி.கேமரா மற்றும் கடைக்கு வரும் மின்சார இணைப்பை ண்டித்து விட்டனர். பின்னர் அவர்கள் கொண்டு வந்த மூன்று சிலிண்டர்கள் மூலம் நகைக் கடை இரும்பு கதவை வெல்டிங் முறையில் துளையிட்டு கடையின் உள்ளே புகுந்தனர்.

    பின்னர் கடையில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த 50 பவுன் நகை மற்றும் 50 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளை கும்பல் திருடி சென்றனர். நேற்று காலை கடை பணியாளர்கள் கடையை திறந்த போது கடையில் கொள்ளை போய் இருந்தது. இது குறித்து திருக்கோவிலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி இன்ஸ்பெக்டர் பாபு, சப் -இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொள்ளை போன நகைக்கடையை பார்வையிட்டு வழக்கு பதிவு செய்தனர். இந்த கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளை கும்பலை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு, சப் இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் ,ராஜசேகர் ,மாணிக்கம் தலைமையான போலீசார் மூலம் 4தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இதில் இரண்டு தனி படைகள் நேற்று சென்னையில் உள்ள விமான நிலையம் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆய்வு செய்தனர். இந்த கொள்ளையில் புதிதாக வாங்கப்பட்ட 10 கிலோ எடையுள்ள மூன்று ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஐந்து கிலோ எல்.பி.ஜி. சிலிண்டர் மூலம் நகை கடையின் இரும்பு கதவை துளையிட்டுள்ளனர். இவைகள் கொள்ளையர்கள் அங்கே விட்டு விட்டு சென்றுள்ளனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட ஸ்க்ரு டிரைவர் கட்டிங் பிளேடு என அனைத்துமே புத்தம் புதியதாக வாங்கப்பட்டவையாக உள்ளது .இவர்கள் கொள்ளையடிக்க நோட்டமிட்டு திட்டம் தீட்டி இந்த கொள்ளை சம்பவத்தை நிகழ்த்திருப்பதை வைத்து பார்க்கும்போது அவர்கள் வட மாநில கொள்ளையர்கள் ஆக இருக்க கூடும் என்று போலீசார் சந்தேகத்தின் பேரில் கூறுகின்றனர். மேலும் போலீசார் இது குறித்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். 

    ×