search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக கோவில்கள்"

    • கோவில் நடைமுறைகளில் தலையிட தி.மு.க. அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது?
    • தமிழகக் கோவில்கள் பக்தர்களுக்குச் சொந்தமானவை.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள இணையதளபதிவில் கூறியிருப்பதாவது:-

    நாளைய தினம் அயோத்தியில் ஸ்ரீராமர் உருவச்சிலை, நமது பிரதமர் நரேந்திர மோடியால் பிரதிஷ்டை செய்யப்படுவதை அடுத்து, நாடே விழாக்கோலம் பூண்டுள்ளது.

    சாதி, மத வேறுபாடின்றி, மக்கள் அனைவரும் இந்த புண்ணிய தினத்தை வரவேற்கின்றனர். பல ஆண்டு காலமாக நாட்டு மக்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்த நாளை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள கோவில்கள் அனைத்திலும் சிறப்புப் பூஜைகளும், அன்னதானம் உள்ளிட்ட அறப்பணிகளும் நடைபெற்று வருகின்றன.

    இந்த நிலையில், மதசார்பற்ற அரசு நடத்துகிறோம் என்ற பெயரில் இந்து மத விரோதச் செயல்பாடுகளையே முழு வேலையாகக் கொண்டிருக்கும் தி.மு.க. தமிழக கோவில்களில் சிறப்புப் பூஜைகளுக்கும், அன்னதானத்திற்கும் தடை விதித்துள்ளதாகத் தெரிகிறது.

    கோவில் நடைமுறைகளில் தலையிட தி.மு.க. அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது? அதுமட்டுமின்றி, ஸ்ரீராமர் சிலை நிறுவப்படுவதை முன்னிட்டு, தமிழகத்தில் கோவில் நிர்வாகம் சார்பிலோ, பொதுமக்கள் சார்பிலோ, எந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது என்றும், பொதுமக்கள் கண்டுகளிக்க பெரிய திரை வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடாது என்றும் காவல் துறையினர் தடுப்பதாகவும் கூறப்படுகிறது.

    தமிழகக் கோவில்கள் பக்தர்களுக்குச் சொந்தமானவை. ஆலய நடைமுறைகளில் தேவையில்லாமல் தலையிடவோ, வழிபடும் முறைகளில் குறுக்கிடவோ தி.மு.க. அரசுக்கு எந்த உரிமையுமில்லை என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

    இந்து மத மக்களின் அடிப்படை உரிமையான கோவில் வழிபாட்டைத் தடுப்பதை, மாற்று மத மக்களே விரும்பமாட்டார்கள். யாரை திருப்திபடுத்த இந்த பிரிவினை முயற்சியில் ஈடுபடுகிறது தி.மு.க. அரசு?

    மாதம் ஒருமுறை இந்து மத மக்களைச் சீண்டிப்பார்க்கும் அற்பச் செயல்பாடுகளை தி.மு.க. கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    தி.மு.க.வின் தடையை மீறி, அயோத்தி ஸ்ரீராமர் கோவில் விழாவுக்காக, தமிழகக் கோவில்களில் சிறப்பு பூஜைகளும், அன்னதானம் உள்ளிட்ட அறப்பணிகளும் தொடரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • தமிழ்நாட்டில் உள்ள பல திருக்கோவில்களில் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையே நிலவுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
    • திருக்கோவில்களில் திருட்டு சம்பவங்கள் நடப்பதை ஓர் அபசகுனமாக பக்தர்கள் கருதுகிறார்கள்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கொங்கு நாட்டின் ஏழு சிவ ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்ற கோவிலாகக் கருதப்படுவதும், சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடிப் புகழ்பெற்ற திருத்தலமும், மிகப்பழமை வாய்ந்ததுமான திருக்கோவில் திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள அருள்மிகு அவினாசி லிங்கேஸ்வரர் திருக்கோவில்.

    தீமைகள் நீங்கக் கூடிய ஸ்தலமாக, நவக்கிரஹ தோஷங்கள் நீங்கக் கூடிய திருக்கோவிலாக, வியாதிகளை நிவர்த்தி செய்யக்கூடிய திருக்கோவிலாக, ஒற்றுமையை அதிகரிக்கக் கூடிய திருக்கோவிலாக, திருமணத் தடையை அகற்றக் கூடிய ஒப்பற்ற ஆலயமாக இந்த ஆலயம் விளங்குகிறது.

    இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த இந்த ஆலயத்தில் கடந்த 23-ந் தேதியன்று திருக்கோவில் திறக்கப்பட்ட போது, திருக்கோவிலின் பலிபீடம் அலங்கோலப்படுத்தப்பட்டும், 63 நாயன்மார்களின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டும், ஒவ்வொரு சன்னதிக்கும் மேல் உள்ள கோபுர கலசங்கள் சுக்கு நூறாக உடைக்கப்பட்டும் இருந்தன.

    திருக்கோவிலுக்குள் உள்ள முருகன் சன்னதியில் வெண்கலத்தால் செய்யப்பட்ட வேல் மற்றும் சேவல் கொடியுள்ள இரண்டு வேல்கள் மற்றும் சில பொருட்கள் காணவில்லை என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக இறைவனுக்கான பூஜைகள் ஏதும் அன்று நடைபெறவில்லை. இது அப்பகுதி மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்தத் திருக்கோவில் முழுக்க முழுக்க இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்தாலும், திருக்கோவிலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏதும் அரசால் மேற்கொள்ளப்படவில்லை என்பதே அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. தி.மு.க. அரசின் அலட்சியப்போக்கே மேற்படி அசம்பாவிதத்திற்கு முழுக் காரணம்.

    தமிழ்நாட்டில் உள்ள பல திருக்கோவில்களில் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையே நிலவுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

    திருக்கோவில்களில் திருட்டு சம்பவங்கள் நடப்பதை ஓர் அபசகுனமாக பக்தர்கள் கருதுகிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் இனி வருங்காலங்களில் நடக்காதிருப்பதையும், அனைத்துக் கோவில்களுக்கும் பாதுகாப்பு அளிப்பதையும் தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×