search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. ஆட்சியில் கோவில்களுக்கு பாதுகாப்பு இல்லை- ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
    X

    தி.மு.க. ஆட்சியில் கோவில்களுக்கு பாதுகாப்பு இல்லை- ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

    • தமிழ்நாட்டில் உள்ள பல திருக்கோவில்களில் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையே நிலவுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
    • திருக்கோவில்களில் திருட்டு சம்பவங்கள் நடப்பதை ஓர் அபசகுனமாக பக்தர்கள் கருதுகிறார்கள்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கொங்கு நாட்டின் ஏழு சிவ ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்ற கோவிலாகக் கருதப்படுவதும், சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடிப் புகழ்பெற்ற திருத்தலமும், மிகப்பழமை வாய்ந்ததுமான திருக்கோவில் திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள அருள்மிகு அவினாசி லிங்கேஸ்வரர் திருக்கோவில்.

    தீமைகள் நீங்கக் கூடிய ஸ்தலமாக, நவக்கிரஹ தோஷங்கள் நீங்கக் கூடிய திருக்கோவிலாக, வியாதிகளை நிவர்த்தி செய்யக்கூடிய திருக்கோவிலாக, ஒற்றுமையை அதிகரிக்கக் கூடிய திருக்கோவிலாக, திருமணத் தடையை அகற்றக் கூடிய ஒப்பற்ற ஆலயமாக இந்த ஆலயம் விளங்குகிறது.

    இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த இந்த ஆலயத்தில் கடந்த 23-ந் தேதியன்று திருக்கோவில் திறக்கப்பட்ட போது, திருக்கோவிலின் பலிபீடம் அலங்கோலப்படுத்தப்பட்டும், 63 நாயன்மார்களின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டும், ஒவ்வொரு சன்னதிக்கும் மேல் உள்ள கோபுர கலசங்கள் சுக்கு நூறாக உடைக்கப்பட்டும் இருந்தன.

    திருக்கோவிலுக்குள் உள்ள முருகன் சன்னதியில் வெண்கலத்தால் செய்யப்பட்ட வேல் மற்றும் சேவல் கொடியுள்ள இரண்டு வேல்கள் மற்றும் சில பொருட்கள் காணவில்லை என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக இறைவனுக்கான பூஜைகள் ஏதும் அன்று நடைபெறவில்லை. இது அப்பகுதி மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்தத் திருக்கோவில் முழுக்க முழுக்க இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்தாலும், திருக்கோவிலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏதும் அரசால் மேற்கொள்ளப்படவில்லை என்பதே அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. தி.மு.க. அரசின் அலட்சியப்போக்கே மேற்படி அசம்பாவிதத்திற்கு முழுக் காரணம்.

    தமிழ்நாட்டில் உள்ள பல திருக்கோவில்களில் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையே நிலவுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

    திருக்கோவில்களில் திருட்டு சம்பவங்கள் நடப்பதை ஓர் அபசகுனமாக பக்தர்கள் கருதுகிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் இனி வருங்காலங்களில் நடக்காதிருப்பதையும், அனைத்துக் கோவில்களுக்கும் பாதுகாப்பு அளிப்பதையும் தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×