search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழக கோவில்களில் வழிபாடு நடத்த அரசு தடை விதிப்பதா?: அண்ணாமலை கண்டனம்
    X

    தமிழக கோவில்களில் வழிபாடு நடத்த அரசு தடை விதிப்பதா?: அண்ணாமலை கண்டனம்

    • கோவில் நடைமுறைகளில் தலையிட தி.மு.க. அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது?
    • தமிழகக் கோவில்கள் பக்தர்களுக்குச் சொந்தமானவை.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள இணையதளபதிவில் கூறியிருப்பதாவது:-

    நாளைய தினம் அயோத்தியில் ஸ்ரீராமர் உருவச்சிலை, நமது பிரதமர் நரேந்திர மோடியால் பிரதிஷ்டை செய்யப்படுவதை அடுத்து, நாடே விழாக்கோலம் பூண்டுள்ளது.

    சாதி, மத வேறுபாடின்றி, மக்கள் அனைவரும் இந்த புண்ணிய தினத்தை வரவேற்கின்றனர். பல ஆண்டு காலமாக நாட்டு மக்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்த நாளை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள கோவில்கள் அனைத்திலும் சிறப்புப் பூஜைகளும், அன்னதானம் உள்ளிட்ட அறப்பணிகளும் நடைபெற்று வருகின்றன.

    இந்த நிலையில், மதசார்பற்ற அரசு நடத்துகிறோம் என்ற பெயரில் இந்து மத விரோதச் செயல்பாடுகளையே முழு வேலையாகக் கொண்டிருக்கும் தி.மு.க. தமிழக கோவில்களில் சிறப்புப் பூஜைகளுக்கும், அன்னதானத்திற்கும் தடை விதித்துள்ளதாகத் தெரிகிறது.

    கோவில் நடைமுறைகளில் தலையிட தி.மு.க. அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது? அதுமட்டுமின்றி, ஸ்ரீராமர் சிலை நிறுவப்படுவதை முன்னிட்டு, தமிழகத்தில் கோவில் நிர்வாகம் சார்பிலோ, பொதுமக்கள் சார்பிலோ, எந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது என்றும், பொதுமக்கள் கண்டுகளிக்க பெரிய திரை வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடாது என்றும் காவல் துறையினர் தடுப்பதாகவும் கூறப்படுகிறது.

    தமிழகக் கோவில்கள் பக்தர்களுக்குச் சொந்தமானவை. ஆலய நடைமுறைகளில் தேவையில்லாமல் தலையிடவோ, வழிபடும் முறைகளில் குறுக்கிடவோ தி.மு.க. அரசுக்கு எந்த உரிமையுமில்லை என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

    இந்து மத மக்களின் அடிப்படை உரிமையான கோவில் வழிபாட்டைத் தடுப்பதை, மாற்று மத மக்களே விரும்பமாட்டார்கள். யாரை திருப்திபடுத்த இந்த பிரிவினை முயற்சியில் ஈடுபடுகிறது தி.மு.க. அரசு?

    மாதம் ஒருமுறை இந்து மத மக்களைச் சீண்டிப்பார்க்கும் அற்பச் செயல்பாடுகளை தி.மு.க. கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    தி.மு.க.வின் தடையை மீறி, அயோத்தி ஸ்ரீராமர் கோவில் விழாவுக்காக, தமிழகக் கோவில்களில் சிறப்பு பூஜைகளும், அன்னதானம் உள்ளிட்ட அறப்பணிகளும் தொடரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    Next Story
    ×