என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜூனியர் உலக கோப்பை"

    • 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்தியா-அர்ஜென்டினா அணிகள் மோதின
    • இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் வென்று 3-வது இடத்தை பிடித்து வெண்கல பதக்கத்தை கைப்பற்றியது.

    சென்னை:

    14-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி கடந்த 28-ந்தேதி சென்னை, மதுரையில் தொடங்கியது. இதன் இறுதிப் போட்டி எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடைபெற்றது.

    இதில் ஜெர்மனி அணி சாம்பியன் பட்டம் பெற்றது. அந்த அணி ஸ்பெயினை வீழ்த்தியது. ஆட்டத்தின் முடிவில் 1-1 என்ற சமநிலை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற டைபிரேக்கில் ஜெர்மனி 3-2 என்ற கணக்கில் வென்று உலக கோப்பையை கைப்பற்றியது. அந்த அணி 8-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது.

    ஸ்பெயினுக்கு 2-வது இடம் கிடைத்தது அந்த அணியின் சிறப்பான நிலை இதுவாகும். இதற்கு முன்பு ஸ்பெயின் அணி 2 முறை (2005, 2023), 3-வது இடத்தை பிடித்ததே சிறந்ததாக இருந்தது.

    முன்னதாக நடைபெற்ற 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்தியா-அர்ஜென்டினா அணிகள் மோதின. இதில் ரோகித் தலைமையிலான இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் வென்று 3-வது இடத்தை பிடித்து வெண்கல பதக்கத்தை கைப்பற்றியது.

    துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஜெர்மனி அணிக்கு உலக கோப்பையை வழங்கினார். அந்த அணி வீரர்களுக்கு பதக்கங்களை அணிவித்தார். மேலும் ஸ்பெயின் வீரர்களுக்கு வெள்ளி பதக்கத்தையும், இந்திய வீரர்களுக்கு வெண்கல பதக்கத்தையும் அணிவித்தார்.

    சர்வதேச ஹாக்கி சம்மேளன தலைவர் தயாப் இக்ரம், பீகார் மாநில விளையாட்டு துறை மந்திரி ஸ்ரேயாசி சிங், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி, ஹாக்கி இந்தியா தலைவர் திலீப் திர்கி, செயலாளர் போலாநாத் சிங், பொருளாளர் சேகர் மனோகரன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

    ஜூனியர் உலக கோப்பையில் வெண்கல பதக்கம் வென்று சாதித்த இந்திய ஹாக்கி வீரர்களுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று ஹாக்கி இந்தியா அறிவித்துள்ளது. அணியில் உள்ள பயிற்சியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு தலா ரூ.2½ லட்சம் வழங்கப்படுகிறது.

    2005, 2021, 2023 ஆகிய 3 முறை இந்திய அணி வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் தோற்று 4-வது இடத்தை பிடித்தது. தற்போதுதான் முதல் முறையாக சொந்த மண்ணில் 3-வது இடத்திற்கான போட்டியில் வெற்றி பெற்று வெண்கல பதக்கம் வென்று முத்திரை பதித்தது.

    முன்னதாக நடந்த 5-வது இடத்திற்கான போட்டியில் பெல்ஜியம்-நெதர்லாந்து அணிகள் மோதின. போட்டியின் முடிவில் 3-3 என்ற சமநிலை ஏற்பட்டது. இதை தொடர்ந்து டைபிரேக்கர் கடைபிடிக்கப்பட்டது. இதில் பெல்ஜியம் 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 5-வது இடத்தை பிடித்தது. நெதர்லாந்துக்கு 6-வது இடம் கிடைத்தது.

    பிரான்ஸ்-நியூசிலாந்து அணிகள் மோதிய ஆட்டத்தில் பிரான்ஸ் 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 7-வது இடத்தை பிடித்தது. நியூசி லாந்துக்கு 8-வது இடம் கிடைத்தது. 

    • வெற்றி- தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்- அவுட் கடைபிடிக்கப்பட்டது.
    • ஜெர்மனி பலம் வாய்ந்தது என்பதால் அந்த அணியை வீழ்த்துவது சவாலானது.

    14-வது ஜூனியர் உலக கோப்பை ஆக்கி போட்டி சென்னை, மதுரையில் நடைபெற்று வருகிறது. கடந்த 28-ந் தொடங்கிய இந்த போட்டியில் நாக் அவுட்டான கால் இறுதி ஆட்டங்கள் நேற்று நடைபெற்றது.

    2 முறை சாம்பியனான இந்திய அணி பெல்ஜியத்தை வீழ்த்தி 7-வது முறையாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது.

    போட்டியின் முடிவில் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை ஏற்பட்டது. இதனால் வெற்றி- தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்- அவுட் கடைபிடிக்கப்பட்டது. இதில் இந்தியா 4- 3 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

    இந்திய அணி அரை இறுதியில் 7 தடவை உலக கோப்பையை கைப்பற்றிய ஜெர்மனியை எதிர்கொள்கிறது. சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு இந்த போட்டி நடைபெறுகிறது.

    ரோகித் தலைமையிலான இந்திய அணி ஜெர்மனியை தோற்கடித்து 4-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும் ஆர்வத்தில் உள்ளது. ஜெர்மனி பலம் வாய்ந்தது என்பதால் அந்த அணியை வீழ்த்துவது சவாலானது.

    உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும். இதை வீரர்கள் சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். தோல்வியை சந்திக்காமல் அரை இறுதி வாய்ப்பை பெற்ற இந்தியா லீக் சுற்றில் சிலி ( 7-0), ஓமன் (17-0), சுவிட்சர்லாந்து (5-0) ஆகிய அணிகளை தோற்கடித்தது.

    ஜெர்மனி அணி லீக் சுற்றில் தென் ஆப்பிரிக்கா (4-0), கனடா (7-0), அயர்லாந்து (5-1) ஆகிய வற்றையும், கால் இறுதியில் பிரான்சையும் தோற்கடித்தது. இந்தியாவை போலவே ஜெர்மனியும் கால் இறுதியில் பிரான்சை பெனால்டி ஷூட் அவுட்டில் (3-1) வீழ்த்தியது. போட்டி முடிவில் 2-2 என்ற சமநிலை இருந்தது.

    13-வது முறையாக அரை இறுதியில் விளையாடும் ஜெர்மனி அணி இந்தியாவை தோற்கடித்து 10-வது தடவையாக இறுதி போட்டிக்கு நுழையும் வேட்கையில் உள்ளது.

    முன்னதாக நாளை மாலை 5.30 மணிக்கு நடைபெறும் முதல் அரை இறுதியில் ஸ்பெயின்- அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன.

    5 முதல் 8-வது இடங்களுக்கான போட்டிகளில் பெல்ஜியம்- பிரான்ஸ் (மதியம் 2.30 மணி), நெதர்லாந்து-நியூசிலாந்து (மாலை 3 மணி) அணிகள் மோதுகின்றன.

    • தென் ஆப்பிரிக்காவில் 15-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.
    • நடப்பு சாம்பியன் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.

    பெனோஸ்:

    தென் ஆப்பிரிக்காவில் நடந்து வரும் 15-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

    16 அணிகள் பங்கேற்ற இப்போட்டி தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

    சாம்பியனை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி நாளை பெனோனி நகரில் நடக்கிறது. இந்த ஆட்டம் மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    ஜூனியர் உலக கோப்பையை இந்தியா 5 முறை (2000, 2008, 2012, 2018, 2022) வென்றது. முகமது கைப், விராட் கோலி, உன்முக்த் சந்த், பிரித்வி ஷா, யாஷ் துல் ஆகியோர் தலைமையில் கோப்பை கிடைத்தது.

    இந்தியா 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. இந்தியா 9-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

    உதய் சஹாரன் தலைமையிலான இந்திய அணி பேட்டிங், பந்துவீச்சில் சமபலத்துடன் உள்ளது. உதய் சஹாரன் 389 ரன்னும், முஷீர் கான் 338 ரன்னும், சச்சின் தாஸ் 294 ரன்னும் எடுத்து முதல் 3 இடங்களில் உள்ளனர். இதில் முஷீர் கான் 2 சதம் அடித்துள்ளார்.

    பந்துவீச்சில் சவுமி குமார் பாண்டே 17 விக்கெட்டும், ரமன் திவாரி10 விக்கெட்டும் கைப்பற்றினர். ராஜ் லிம்பானி, முருகன் அபிஷேக் ஆகியோரும் பந்துவீச்சில் உள்ளனர். அதுபோல் ஆதர்ஷ் சிங், அர்ஷின் குல்கர்னி, பிரியன்ஷு மோலியா ஆகிய பேட்ஸ்மேன்களும் உள்ளனர்.

    ஆஸ்திரேலியா 3 முறை (1988, 2002, 2010) கோப்பையை வென்றுள்ளது. அந்த அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. ஹத் வெய்ப்ஜென் தலைமையிலான அந்த அணியும் பேட்டிங், பந்துவீச்சில் சம பலத்துடன் உள்ளது. அந்த அணியில் ஹாரி டிக்சன் 267 ரன்னும், ஹக் வெய்ப்ஜென் 256 ரன்னும் எடுத்துள்ளனர். பந்துவீச்சில் டாம் ஸ்ட்ரேக்கர், வீட்லேர் தலா 12 விக்கெட் கைப்பற்றி உள்ளனர்.

    இந்திய அணி தோல்வியே சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு நுழைந்துள்ளது. ஆஸ்திரேலியாவும் தோல்வியைச் சந்திக்கவில்லை. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முடிவு இல்லை.

    ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இதற்கு முன்பு இரண்டு முறை (2012, 2018) மோதியுள்ளன. இரண்டிலும் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • 16 அணிகள் பங்கேற்ற இப்போட்டி தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
    • அரையிறுதியின் முடிவில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

    பெனோனி:

    15-வது ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. 16 அணிகள் பங்கேற்ற இப்போட்டி தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

    அரையிறுதியின் முடிவில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்நிலையில் பெனோனி மைதானத்தில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

    இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி இந்தியா முதலில் பந்து வீச உள்ளது.

    ×