search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜுங்கா"

    கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி - சாயிஷா - மடோனா செபாஸ்டியன் நடிப்பில் வெளியாகி இருக்கும் `ஜுங்கா' படத்தின் விமர்சனம். #JungaReview #VijaySethupathi
    கிராமத்தில் பேருந்து நடத்துநரான விஜய் சேதுபதியும் (ஜுங்கா), அந்த பேருந்தில் பயணியாக வரும் மடோனா செபாஸ்டியனும் காதலிக்கிறார்கள். இந்த நிலையில், மடோனாவின் பின்னால் சுற்றி அவளுக்கு தொல்லை கொடுக்கும் ஒருவரை, விஜய் சேதுபதி கண்டிக்கிறார். இதனால் கடுப்பாகும் அந்த நபர், அடியாட்களுடன் வந்து விஜய் சேதுபதியை அடித்துவிடுகிறார். 

    தன்னை அடித்தவர்களை பழிவாங்க வேண்டும் என்று யோசிக்கும் விஜய் சேதுபதி, தனது நண்பன் யோகி பாபுவிடம் இதுபற்றி கூறி, யோசனை கேட்கிறார். தனக்கு ஒரு அரசியல்வாதியை தெரியும் என்று கூறி, விஜய் சேதுபதியின் சம்பள பணத்தை வாங்கி செலவு செய்துவிடுகிறார் யோகி பாபு. இதனால் கடுப்பாகும் விஜய் சேதுபதி, தன்னை அடித்தவர்களை தேடிச் சென்று புரட்டி எடுக்கிறார். விஜய் சேதுபதி அடிதடியில் ஈடுபட்டது அவரது அம்மாவான சரண்யா பொன்வண்ணனுக்கு தெரிய வருகிறது.



    அப்பா, தாத்தாவைப் போல நீயும் டானாக மாறிவிடக் கூடாது என்பதற்காகத் தான் விஜய் சேதுபதியை வேறு ஊருக்கு அழைத்து வந்ததாக கூறும் சரண்யா பொன்வண்ணன், சென்னையில் விஜய் சேதுபதியின் அப்பா, தாத்தா பெரிய டான் என்றும், அவர்களுக்கு ஒரு சொந்தமாக தியேட்டர் இருந்ததாகவும் கூறுகிறார். தனது குடும்பம் டான் குடும்பம் என்பதை அறிந்து குஷியாகும் விஜய் சேதுபதி, அவர்களது திரையரங்கை மீட்பதற்காக சென்னை வருகிறார். 

    சென்னையில் சிறிய, சிறிய கட்டப் பஞ்சாயத்துகளை செய்து, சென்னையில் டானாகிறார். இதனால் பல்வேறு கட்டப் பஞ்சாயத்துகள் அவரைத் தேடி வருகிறது. அவரும் அவை அனைத்தையும் முடித்து வைக்கிறார். தனது தியேட்டரை மீட்கவும் பணத்தை சேர்த்து வருகிறார். 

    இது சென்னையில் இருக்கும் மற்ற டான்களுக்கு பிடிக்காமல் போக, விஜய் சேதுபதியை கொல்ல முடிவு செய்கின்றனர். அதேநேரத்தில் மற்றொரு டானான ராதாரவி விஜய் சேதுபதியை பழிவாங்க, தியேட்டரை இடித்து விட திட்டம் போடுகிறார். 



    இந்த நிலையில், தியேட்டர் உரிமையாளரான சுரேஷ் மேனனை சந்தித்து, தியேட்டரை தான் வாங்கிக் கொள்வதாக விஜய் சேதுபதி கூறுகிறார். ஆனால் சுரேஷ் மேனன், விஜய் சேதுபதியை அசிங்கப்படுத்தி அனுப்ப, அவரை பழிவாங்க அவரது மகளான சாயிஷாவை கடத்த பாரிஸ் செல்கிறார் விஜய் சேதுபதி. 

    பாரிஸில் சாயிஷாவை சுற்றி எப்போதும் பாதுகாப்புக்கு ஆட்கள் இருக்க, சாயிஷாவை கடத்த விஜய் சேதுபதி முயற்சி செய்கிறார். 

    கடைசியில், விஜய் சேதுபதி, சாயிஷாவை கடத்தினாரா? தனது தியேட்டரை கைப்பற்றினாரா? தனது காதலியான மடோனாவை திருமணம் செய்தாரா? சாயிஷாவுடன் இணைந்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    பேருந்து நடத்துநர், கஞ்ச டான், பணக்கார டான் என வித்தியாசமான கெட்-அப்புகளில், வந்து ரசிக்க வைத்திருக்கிறார் விஜய் சேதுபதி. அதிலும் கஞ்ச டான் செய்யும் அட்டகாசங்கள் ரசிகர்களிடையே கவனத்தை பெறுகிறது. யோகி பாபு காமெடியில் கலக்கியிருக்கிறார். யோகி பாபு, விஜய் சேதுபதி இருவரும் சேர்ந்து செய்யும் அட்டகாசங்கள் ரசிக்கும்படியாக இருக்கிறது.

    சாயிஷாவும் பணக்கார வீட்டு பெண்ணாக வந்து ரசிக்க வைத்திருக்கிறார். விஜய் சேதுபதியிடம் சிக்கித் தவிக்கும் காட்சிகளில் ஸ்கோர் செய்திருக்கும் சாயிஷா, பாடல் காட்சிகளில் ரசிகர்களை தனது நடனத்தால் கட்டிப் போட்டிருக்கிறார். மடோனா செபாஸ்டியன், விஜய் சேதுபதியின் காதலியாக வந்து ரசிக்க வைத்திருக்கிறார். 



    சரண்யா பொன்வண்ணன், விஜய் சேதுபதியின் பாட்டி கதாபாத்திரங்கள் ரசிகர்களை ஈர்க்கும்படியாக உள்ளது. இருவரும் திரையில் கலக்கியிருக்கிறார்கள். ராதா ரவி, சுரேஷ் மேனன் முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். மொட்டை ராஜேந்திரனும் ஸ்கோர் செய்திருக்கிறார்.

    இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்திற்கு பிறகு இந்த படத்தை ஒரு வித்தியாசமான காமெடி படமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் கோகுல். தான் ஒரு டான் குடும்பம் என்பதை அறியாத நாயகன், டானாக மாறி செய்யும் அட்டகாசங்கள் படத்தின் திரைக்கதையாக நகர்கிறது. ஒரு பக்கம் கஞ்ச டானாக வரும் விஜய் சேதுபதி, விஜய் சேதுபதிக்கு செலவு வைக்கும் யோகி பாபு என காட்சிகள் சுறுசுறுப்பை கூட்டுகின்றன. மற்றொரு பக்கம் சரண்யா பொன்வண்ணனும், பாட்டியும் செய்யும் லூட்டிகள் ரசிக்க வைத்திருக்கிறது. இரண்டாவது பாதியில் பாட்டி கலக்கியிருக்கிறது என்றே சொல்லலாம். அனைத்து கதாபாத்திரங்களையும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார் இயக்குநர். 

    சித்தார்த் விபினின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாகவே வந்திருக்கிறது. டூட்லியின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரம்மியமாக வந்திருக்கின்றன. சண்டைக் காட்சிகளில் கேமரா விளையாடியிருக்கிறது. சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள். 

    மொத்தத்தில் `ஜுங்கா' பார்க்கலாம் தெம்பா. #JungaReview #VijaySethupathi
    கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி - சாயிஷா, மடோனா செபாஸ்டியன் நடிப்பில் உருவாகி இருக்கும் `ஜுங்கா' படத்தின் முன்னோட்டம். #Junga #VijaySethupathi
    வி.எஸ்.பி.புரொடக்‌ஷன்ஸ் சார்பில் விஜய் சேதுபதி தயாரித்துள்ள படம் `ஜுங்கா'. 

    விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் நாயகியாக சாயிஷாவும், முக்கிய கதாபாத்திரங்களில் மடோனா செபாஸ்டியன், சுரேஷ் மேனன், ராதா ரவி, யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், நேகா சர்மா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். 

    ஒளிப்பதிவு - டூட்லி, இசை - சித்தார்த் விபிண், பாடலாசிரியர் - லலித் ஆனந்த், எடிட்டிங் - வி.ஜே.ஷாபு ஜோசப், நடனம் - ராஜூ சுந்தரம், சண்டைப்பயிற்சி இயக்குநர் - அன்பறிவு, தயாரிப்பு - விஜய் சேதுபதி, வெளியீடு - ஏ & பி குரூப்ஸ், எழுத்து, இயக்கம் - கோகுல். 



    படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படம் பற்றி இயக்குநர் கோகுல் பேசுகையில், 

    ‘இது கஞ்ச டான் பற்றிய கதை. கஞ்ச டானாக நடிக்கும் விஜய் சேதுபதி, அவருடைய லட்சியத்தை அடைய வெளிநாட்டிற்கு செல்லவேண்டிய கட்டாய சூழல் ஏற்படுகிறது. அங்கு சென்று தன்னுடைய கேரக்டரை மாற்றிக் கொள்ளாமல் வெற்றிப் பெற்றாரா? இல்லையா? என்பது தான் ஜுங்காவின் திரைக்கதை. இது முழுக்க முழுக்க காமெடி படம். ஆனால் ஆக்சன் கலந்த காமெடி படம் என்று சொல்லலாம்' என்றார். 

    படம் வருகிற ஜூலை 27-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. #Junga #VijaySethupathi

    ஜுங்கா டிரைலர்:

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தில் விஜய்சேதுபதி விரைவில் இணைவதற்காக மற்ற பட வேலைகளை முடித்து வருகிறார். #VijaySethupathi #Rajini
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தில் இதுவரை விஜய்சேதுபதி இல்லாத காட்சிகள் படமாக்கப்பட்டன.

    விஜய்சேதுபதி தான் பங்கேற்கும் காட்சிகளுக்காக விரைவில் படக்குழுவில் இணைய உள்ளார். இதற்காகவே இந்த மாத இறுதியில் வெளியாகும் ஜுங்கா படத்தின் புரமோ‌ஷன்களை இப்போதே தொடங்கி இருக்கிறார்.

    அவர் நடிக்கும் மற்ற படங்களான சீதக்காதி மற்றும் 96 படங்களின் விளம்பர வேலைகளும் தொடங்கி விட்டன. இவை தவிர விஜய்சேதுபதி நயன்தாராவுக்கு கணவராக சில காட்சிகள் நடித்துள்ள இமைக்கா நொடிகள் படத்துக்கும் புரமோ‌ஷன் தொடங்கி உள்ளது.



    இன்னும் சில நாட்கள் இந்த படங்களின் விளம்பர வேலைகளை முடித்துவிட்டு ரஜினி பட டீமுடன் சேர இருக்கிறார். ஒரே நேரத்தில் ஒரு நடிகரின் 4 படங்கள் விளம்பரப்படுத்தப்படுவது சமீபகாலங்களில் எந்த கதாநாயகருக்கும் நடக்காதது.
    பிரேமம் படம் மூலம் பிரபலமான மடோனா செபஸ்டியன், முத்த காட்சிக்கு நடிக்க மறுத்ததால் 3 படங்களை இழந்தேன் என்று கூறியிருக்கிறார். #MadonaSebastian
    பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமான மடோனா செபஸ்டியன் ஜுங்கா படம் மூலம் விஜய்சேதுபதியுடன் 3வது முறை இணைந்து இருக்கிறார். அவரிடம் பேசினோம்.

    ஜுங்காவில் கவுரவ வேடத்தில் நடித்தது விஜய்சேதுபதிக்காகவா?

    விஜய்சேதுபதி என்மீது அபார நம்பிக்கை வைத்திருக்கிறார். அதுதான் முதல் காரணம். கதையை கேட்டேன். என் கதாபாத்திரம் மிகவும் பிடித்தது. எனவே சம்மதித்தேன். 5 நிமிடங்கள் வந்தாலும் பரவாயில்லை. ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும். அதுதான் முக்கியம்.

    தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று 4 மொழிகளில் நடிக்கும் அனுபவம்?

    நான் புதிதாக எதையாவது கற்றுக்கொண்டே இருக்க விரும்புவேன். எனவே மொழி பிரச்சினை இல்லை. எந்த மொழியாக இருந்தாலும் முன்கூட்டியே வசனங்களை வாங்கி வைத்து அதை மனப்பாடம் செய்துகொள்வேன். தமிழும் கற்றுக்கொண்டு வருகிறேன்.



    விஜய்சேதுபதி உங்களது அர்ப்பணிப்பை புகழ்கிறாரே?

    எனக்கு அப்படி எதுவும் தெரியவில்லை. அவரது பாராட்டு எனக்கு ஊக்கம் அளிக்கிறது. இன்னும் நன்றாக பண்ண வேண்டும் என்ற பொறுப்பு வருகிறது. ஒவ்வொரு படம் பார்க்கும்போதும் அதில் இருந்து ஏதாவது ஒன்றை கற்றுக்கொள்கிறேன்.

    எப்படி படம் தேர்வு செய்கிறீர்கள்? 

    முதலில் கதை என்ன சொல்ல வருகிறது என்று பார்ப்பேன். அடுத்து எனது கதாபாத்திரத்தின் தன்மை. முக்கியமாக இயக்குனரின் திறமை. இவைகளுக்கு பிறகு தான் சம்பளம் உள்ளிட்ட மற்ற வி‌ஷயங்கள்.

    காதல் அனுபவம்?

    என்னுடைய தனிப்பட்ட வி‌ஷயங்களை பேச விரும்பவில்லை. ஆனால் அப்படி ஒன்று இருந்தால் வெளிப்படையாக அறிவிக்க தயங்க மாட்டேன்.

    நீங்கள் அணியும் உடைகள் வித்தியாசமாக இருக்கிறதே?

    நான் இதை கவனித்தது இல்லை. ஆடைகள் நமது குணத்தை பிரதிபலிக்கும். எனவே பார்த்து பார்த்துதான் தேர்வு செய்வேன்.

    அதிகம் படங்களில் பார்க்க முடியவில்லையே?

    ஆமாம். லிப்லாக் முத்தத்திற்கு மறுத்ததால் கடந்த 3 மாதங்களில் 3 படங்களை இழந்துள்ளேன். அதற்கு எல்லாம் இப்போது நான் தயாராக இல்லை. கட்டிப்பிடிக்கும் காட்சியில் முதல்முறை நடித்தபோது அம்மாவுக்கு போன் பண்ணி அழுதிருக்கிறேன். அதுபோல நடிப்பது சிரமம். நான் கூச்ச சுபாவம் கொண்டவள். பிறரிடம் பேசவே பயப்படுவேன். எனக்கு ஒரு சின்ன தங்கை இருக்கிறாள். அவளுடன் நேரம் செலவிடவே அதிகம் விரும்புவேன்.



    நடிப்பு தவிர எதில் ஆர்வம்?

    நான் அடிப்படையில் ஒரு பாடகி. சொந்தமாக ஒரு இசைக்குழு நடத்தி வருகிறேன். ஆனால் படங்களுக்கு இசை அமைக்கும் அளவுக்கு நம்பிக்கை இல்லை.

    மலையாள நடிகர் சங்கத்தில் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளதே?

    நான் எந்த சங்கத்திலும் உறுப்பினராக இல்லை. இந்த வி‌ஷயத்தில் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை.

    நடிகை என்றால் பொது இடங்களில் தொல்லைகள் வருமே?

    ஆமாம். நடிகைகளும் சாதாரண மனிதர்கள் தான். இதை அனைவரும் உணர வேண்டும். நான் பெண்ணியவாதி அல்ல. ஆனால் ஆணும் பெண்ணும் சமமாக மதிக்கப்படவேண்டும். தனி மனித உரிமை மிக முக்கியம்.
    கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி - சாயிஷா நடிப்பில் ‘ஜுங்கா’ படம் இந்த மாதம் 27-ஆம் தேதியன்று ரிலீசாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. #Junga #VijaySethupathi
    நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் அவர்களின் பிறந்த நாள் விழா நேற்று ஜுங்கா படக்குழுவினருடன் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் அருண் பாண்டியன், விஜய் சேதுபதி, இயக்குநர் கோகுல், சரண்யா பொன்வண்ணன், சுரேஷ் மேனன், மடோனா செபாஸ்டின், இசையமைப்பாளர் சித்தார்த் விபின், படத்தொகுப்பாளர் ஷாபு ஜோசப், பாடலாசிரியர் லலிதானந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    விஜய் சேதுபதி பேசுகையில், ‘இயக்குநர் கோகுல் மீது எனக்கு எப்போதும் பெரிய நம்பிக்கை உண்டு. அவருடைய எண்ண அலைகள் எப்போதும் என்னை வசீகரிக்கும். அதனை என்னால் எளிதில் உட்கிரகிக்க இயலும். இது தான் ஜுங்காவில் நான் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு முதல் காரணம். 

    அதன் பிறகு தான், அருண் பாண்டியன் வந்தார். படத்தின் கதையை கேட்காமல் தயாரிக்க முன்வந்தார். வாங்கவும் முன்வந்தார். இது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. இது அவரின் அனுபவ வெளிப்பாடு என்று நினைக்கிறேன். ‘உங்களுடைய கதை தேர்வு நன்றாக இருக்கிறது. அதனால் நீங்கள் நடிக்கும் படத்தை தயாரிக்க முன்வந்தேன்.’ என்று என்னிடம் முதல் முறை சந்திப்பின் போது சொன்னார். 



    ஆஸ்திரியாவில் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த போது இயக்குநரிடம் தொலைபேசி மூலம் கதையின் ஒரு வரி என்ன என்று கேட்டார். அதன் பிறகு தணிக்கைக்கு அனுப்பும் போது தயாரிப்பாளர் என்ற முறையில் படத்தை பார்த்தார். நான் கோகுல் மீது நம்பிக்கை வைப்பதும், கோகுல் என் மீது நம்பிக்கை வைப்பதும் சாதாரணமானது. இயல்பானது. ஆனால் எங்களை நம்பி அருண் பாண்டியன் வந்தார். அது தான் ஆச்சரியமான விசயம். 

    மடோனாவிற்கும் என் மீதும் பெரிய நம்பிக்கை. இயக்குநர் அந்த கேரக்டருக்கு மடோனா பொருத்தமாக இருப்பார் என்று எண்ணியவுடன், அவரைத் தொடர்பு கொண்டு கதையை கேட்குமாறு சொன்னேன். அவரும் கதையைக் கேட்டார். என்னைப் பொறுத்தவரை நான் சந்தித்த ஆகச்சிறந்த நடிகை மடோனா என்பேன். இதற்கு முன் நான் நடிகை காயத்ரியை அப்படி பல முறை சொல்லியிருக்கிறேன். அதற்கடுத்து நடிகை மடோனாவை சொல்வேன். நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்துவதில் பெரிய திறமைசாலி.



    ஆண்டவன் கட்டளைக்கு பிறகு யோகி பாபுவுடன் இணைந்து நடிக்கும் இரண்டாவது படம். படப்பிடிப்பு தளத்தில் அந்த கேரக்டருக்கு, அந்த தருணத்தில் என்ன பஞ்ச் பேச முடியுமோ அதை பேசி அசத்துவார். இந்த படத்தை நாங்கள் ரசித்து ரசித்து செய்திருக்கிறோம். உங்களின் சுவைக்காக இம்மாதம் 27 ஆம் தேதியன்று சமர்பிக்கிறோம்.’ என்றார்.

    இந்த விழாவில் இயக்குநர் கோகுல் பேசுகையில், ‘இது கஞ்ச டான் பற்றிய கதை. கஞ்ச டானாக நடிக்கும் விஜய் சேதுபதி, அவருடைய லட்சியத்தை அடைய வெளிநாட்டிற்கு செல்லவேண்டிய கட்டாய சூழல் ஏற்படுகிறது. அங்கு சென்று தன்னுடைய கேரக்டரை மாற்றிக் கொள்ளாமல் வெற்றிப் பெற்றாரா? இல்லையா? என்பது தான் ஜுங்காவின் திரைக்கதை. இது முழுக்க முழுக்க காமெடி படம். ஆனால் ஆக்சன் கலந்த காமெடி படம் என்று சொல்லலாம் என்றார். #Junga #VijaySethupathi

    பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதால் தமிழகத்தில், மக்கள் நல்ல தலைமையை தேடுகிறார்கள் என்று நடிகர் விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார். #VijaySethupathi #Junga
    விஜய்சேதுபதி நடித்து விரைவில் வெளியாக இருக்கும் படம் ஜுங்கா. இந்த படத்தின் வெளியீட்டையொட்டி அவர் அளித்த பிரத்தியேக பேட்டி வருமாறு:-

    கேள்வி:- பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் ஜுங்கா படத்தில் தயாரிப்பாளராக களம் இறங்கியது ஏன்?

    பதில்:- நடிகர்களின் வியாபாரத்தை பொறுத்தவரை சில வரைமுறைகள் வைத்து இருக்கிறார்கள். அவர்கள் சொல்லும் அந்த வரைமுறை கணக்கில் பல கேள்விகளுக்கு பதில் இல்லை. பல மர்மங்கள் நிறைந்த அலிபாபா குகை போல சினிமா வியாபாரம் மற்றும் வசூல் கணக்கு மாறிவிட்டது.

    ஒரு நல்ல கதையை வியாபாரத்தை கருத்தில் கொண்டு அதற்கு ஆகும் செலவை சுருக்குவதில் எனக்கு விருப்பம் இல்லை. எந்த சூழ்நிலையிலும் உங்கள் பட்ஜெட்டை இறக்காதீர்கள் என்று அச்சப்படுத்துகிறார்கள். மார்க்கெட் என்ற பெயரில் கதாநாயகர்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.

    அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஒரு படம் என்ன கேட்கிறதோ அதை செலவழித்து படம் எடுத்து வியாபாரம் செய்வதே சரியானதாக இருக்கும்.

    மக்களுக்கு இதுதான் பிடிக்கும் என்றும் கட்டம் கட்டுகிறார்கள். ஆனால் அப்படி எதுவும் இல்லை.

    என்னுடைய நிறைய படங்கள் சினிமாக்காரர்களால் ஏளனமாக பார்க்கப்பட்டவை. ஆனால் மக்கள் வரவேற்பை பெற்றவை. எனக்கு இயக்குனர் கோகுல் மீது இருந்த நம்பிக்கையே ஜுங்காவின் பிரம்மாண்டத்துக்கு காரணம்.

    எல்லா நடிகர்களுக்கும் எல்லா வகை படங்களும் பண்ண விருப்பம் இருக்கும். ஆனால் வியாபார பயம் தான் அவர்களை யோசிக்க வைக்கிறது. சினிமாவை எல்லாருமே நேசித்து தான் வருகிறார்கள்.

    வரைமுறை எதுவும் இல்லாமல் படம் நன்றாக இருந்தால் ஓடும் என்பதற்கு உதாரணம் பாகுபலி. வாய்வழி விளம்பரம் தான் இங்கே முக்கியம். மக்களுக்கு பிடித்தால் போதும்.



    கே:- நடிகர்களின் சம்பளம் அதிகமாகி விட்டதாக ஒரு குறை சொல்லப்படுகிறதே?

    ப:- எல்லாமே இங்கே டிமாண்டை பொறுத்து தான். உங்களுக்கான மார்க்கெட் தேவை இல்லாவிட்டால் ஒரு ரூபாய் அதிகமாக கேட்டால் கூட கொடுக்க மாட்டார்கள். நான் சினிமாவுக்கு வெளியில் இருந்தபோது அப்படிதான் தெரிந்தது. ஆனால் உள்ளே வந்தபிறகு தான் கதாநாயகர்களின் சம்பளம் அவர்கள் நிர்ணயித்துக் கொள்வதில்லை. அது மற்றவர்களால் நிர்ணயிக்கப்படுகிறது என்பது புரிகிறது.

    கே:- ரஜினிக்கு வில்லனாக நடிப்பது ஏன்?

    ப:- ரஜினியை ஒரு பல்கலைக்கழகமாக பார்க்கிறேன். அந்த பல்கலைக்கழகத்தில் மாணவனாக கற்றுக்கொள்ள ஆவலோடு இருக்கிறேன். அவரிடம் வீழ்ந்தாலும் எனக்கு பெருமையே. நான் சம்பாதித்தது போதும். நிறைவான வேடங்களில் நடிக்க தான் விரும்புகிறேன்.

    அது வில்லனாக இருந்தாலும் சரி, சில நிமிடங்கள் வந்தாலும் சரி. எனக்கு பிரச்சினை இல்லை.

    கே:- விஜய் சிகரெட் பிடிக்கும் காட்சிகளுக்கு எழும் எதிர்ப்புகள்?

    ப:-என் தந்தைக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது. சண்டை போட்டு, கண்டித்து, பிடிவாதமாக இருந்து, பேசாமல் இருந்து அதை நிறுத்த வைத்தேன். ஆனால் எனக்கும் அதே பழக்கம் ஏற்பட்டது. என்னை அவர் புகைபிடிக்காதே என்றார். பின்னர் நிறுத்தினேன்.

    என் உடனேயே வாழ்ந்து புகையால் இறந்த ஒருவர் சொல்லியே என்னால் கடைபிடிக்க முடியவில்லை. புகை தீங்கானது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் சினிமாவால் தான் புகை பழக்கம் அதிகமாகிறது என்பதில் உடன்பாடு இல்லை.



    ஒரு கதாபாத்திரத்தின் தன்மையை சொல்லும்போது அது தேவைப்பட்டால் தவிர்க்க முடியாதே... அப்படி பார்த்தால் வில்லன் என்ற கதாபாத்திரமே இல்லாமல் தான் சினிமா எடுக்க வேண்டும்.

    கே:- தமிழ்நாட்டுக்கு இப்போது ஒரு தலைமைக்கான தேவை ஏற்பட்டிருக்கிறது. எப்படிப்பட்டவர் பூர்த்தி செய்யவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

    ப :- மக்கள் இதுவரை தி.மு.க. அதிமுக இரண்டு ஆட்சிகளையும் மாறி மாறி பார்த்து இருக்கிறார்கள். முன்பு இதுபோன்ற பாதுகாப்பில்லாத சூழல் இல்லை. இப்போது மக்களிடம் ஏற்பட்டுள்ள பாதுகாப்பில்லாத சூழல் தான் தலைமையை தேடுகிறது.

    அது சரியாகிவிடும் என்று நம்புகிறேன். இந்த கேள்வி எல்லோரிடமும் இருக்கிறது. மக்களிடத்தில் ஒரு எரிச்சல் இருக்கிறது. ஓட்டு போடும் நாள் வரும்போது மக்கள் இதற்கான பதிலை தருவார்கள்.

    ப:- நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் என்ன தவறு இருக்கிறது. இங்கு எல்லோரும் வரலாம். ஆனால் நான் வரமாட்டேன். எனக்கு அந்த அறிவு இல்லை. யார் வந்தாலும் சாதி அரசியலை ஒழிக்க வேண்டும். அதுதான் சமூகத்தில் உள்ள எல்லா ஏற்றத்தாழ்வுகளுக்கும் காரணம். சாதி முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #VijaySethupathi #Junga

    பல படங்கள் கைவசம் வைத்துக் கொண்டு பிசியாக நடித்து வரும் விஜய் சேதுபதி, கன்னட படத்தில் வில்லனாக மிரட்ட இருக்கிறார். #VijaySethupathi
    விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘ஜுங்கா’. கோகுல் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சாயிஷா நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மேலும் இவரது நடிப்பில், ‘சீதக்காதி’, ‘96’, ‘சூப்பர் டீலக்ஸ்’ உள்ளிட்ட பல படங்கள் உருவாகி வருகிறது. 

    விஜய்சேதுபதி தான் இன்றைய நிலையில் தமிழ் சினிமாவில் அதிக படங்களை கையில் வைத்திருக்கும் கதாநாயகன் இருந்து வருகிறார். அவருக்கு ஒரு வேடம் பிடித்திருந்தால் அது சிறியதாக இருந்தாலோ, வில்லனாக இருந்தாலோ கூட நடித்து விடுவார்.



    தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து வருகிறார். இதையடுத்து கன்னட படம் ஒன்றில் வில்லனாக நடிக்க சம்மதித்துள்ளார். சிவ்கணேஷ் இயக்கும் அக்காடா என்ற படத்தில் வசந்த் விஷ்ணு என்பவர் கதாநாயகனாக நடிக்க விஜய்சேதுபதி வில்லனாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    `ஜுங்கா' படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய சரண்யா பொன்வண்ணன், என் முகத்தை யாருக்காவது பிடிக்குமா என்று விஜய் சேதுபதி கேட்டதாக கூறினார். #Junga #VijaySethupathi
    கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி - சாயிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் `ஜுங்கா' படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் நடந்துவரும் நிலையில், படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. 

    இதில், விஜய் சேதுபதி, சாயிஷா, சரண்யா பொன்வண்ணன், இயக்குநர் கோகுல், டெல்லி கணேஷ், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, வருண், பொன்வண்ணன், சித்தார்த் விபின், அருண் பாண்டியன், ஐசரி கணேஷ் இயக்குநர் சீனு ராமசாமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    விழாவில் சரண்யா பொன்வண்ணன் பேசும்போது, 

    தென்மேற்கு பருவக்காற்று படத்திற்கு பின்னர், 8 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் விஜய் சேதுபதியுடன் ஜுங்கா படத்தில் இணைந்து நடித்திருக்கிறேன். தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடித்த போது, என் முகத்தை யாருக்காவது பிடிக்குமா என்று விஜய் சேதுபதி கேட்டார். அப்போது அவரிடம், உங்களைப் போன்ற நிறைய பேர் திறமையால் உயர்ந்திருக்கிறார்கள் என்றேன். முதல் படத்தில் அவ்வுளவு பயந்து கொண்டிருந்த விஜய் சேதுபதியுடன் இந்த படத்தில் நடித்துள்ளேன். அதுமட்டுமில்லாமல், அவரிடம் இருந்தே சம்பளம் வாங்கியிருப்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. தன்னம்பிக்கை, விடாமுயற்சி, நல்ல குணம் தான் அவரது முன்னேற்றத்திற்கு காரணம். அவர் மேலும் வளர வாழ்த்துக்கள் என்றார். 



    கோகுல் இயக்கத்தில் நடித்தது, 10 வயது குறைந்தது போல உணர்கிறேன். அவ்வுளவு சுறுசுறுப்பு, மகிழ்ச்சியுடன் அவர் படத்தில் பணியாற்ற முடியும். ஜுங்கா வித்தியாசமான அனுபவத்தை கொடுத்தது என்றார். #Junga #VijaySethupathi #Sayyeshaa

    ‘ஜுங்கா’ படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்து வரும் சாயிஷா, விஜய் சேதுபதி நிஜத்திலும் ஒரு ஹீரோ தான் என்று கூறியிருக்கிறார். #Junga #VijaySethupathi
    தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜுங்கா’. கோகுல் இயக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக சாயிஷா சய்கல் நடிக்கிறார். 

    சமீபத்தில் ஜுங்கா படத்திற்காக அஸெர்பெய்ஜான் நாட்டில் படப்பிடிப்பை முடித்துவிட்டு வந்து இருக்கும் சாயிஷா, விஜய்சேதுபதி பற்றி கூறும்போது `அவர் நிஜத்திலும் ஒரு ஹீரோ தான்.

    காரில் நானும் அவரும் செல்லும்போது கார் துரத்தப்பட்டு பயங்கரமாக நொறுங்கும் ஒரு காட்சியை எடுத்தோம். அப்போது டூப் வைத்துக்கொள்ள மறுத்துவிட்டார்.



    முற்றிலும் ஒரு புது நாட்டில் பயங்கரமான கார் துரத்தலில் காரை ஓட்டி செல்வது என்ற ஆபத்தான செயலை மிக துணிச்சலாக செய்துகாட்டினார். அவர் கார் ஓட்டியதை பார்த்து அருகில் அமர்ந்து இருந்த நான் பயந்துவிட்டேன்' என்றார். #Junga #VijaySethupathi #Sayyeshaa

    விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படத்தில், பிரபல தொலைக்காட்சி புகழ் ரமணியம்மாள் ஒரு பாடல் ஒன்றை பாடியிருக்கிறார். #VijaySethupathi #Ramaniyammal
    விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘ஜுங்கா’. கோகுல் இயக்கி வரும் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சாயிஷா நடித்து வருகிறார். முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் பாரீசில் நடந்து முடிந்துள்ளது. 

    இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்து வருகிறார். இவருடைய இசையில் தற்போது பாடல் பதிவு உருவாகி வருகிறது. இதில் இடம் பெறும் சிறப்பு பாடலை பிரபல தொலைக்காட்சியில் புகழ் பெற்று வரும் ரமணியம்மாளை பாட வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் சித்தார்த் விபின்.



    விஜய் சேதுபதி - கோகுல் கூட்டணியில் ஏற்கனவே ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானதால், இப்படம் மீது அதிக எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. #VijaySethupathi #Ramaniyammal
    ×