search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுயேட்சை வேட்பாளர்கள்"

    • 30-ந்தேதி மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
    • ஒரே சின்னத்தை 2 சுயேட்சைகள் கேட்கும் பட்சத்தில் குலுக்கல் முறையில் அவர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்றத் தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் பிரசாரம் விறுவிறுப்படைந்துள்ளது.

    தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா, நாம் தமிழர் கட்சி இடையே 4 முனை போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக கடந்த 20-ந்தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வந்தது.

    இதில் 25-ந்தேதி மிகவும் நல்லநாள் என்பதால் அன்றைய தினம் அ.தி.மு.க. வேட்பாளர்கள் 33 பேரும் அதன் கூட்டணி வேட்பாளர்கள் அனைவரும் மனுதாக்கல் செய்துள்ளனர். இதே போல் தி.மு.க., பா.ஜனதா, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களும் அன்றைய தினம் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

    நேற்றும் தி.மு.க., பா.ஜ.க., சுயேட்சை வேட்பாளர்கள் ஆர்வமுடன் வந்து வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். தமிழகம், புதுச்சேரி முழுவதும் நேற்று வரை 780 பேர் மனுதாக்கல் செய்திருந்த நிலையில் இன்றும் வேட்பு மனு தாக்கல் செய்ய ஆர்வமுடன் பலர் வந்திருந்தனர்.

    வேட்பு மனு தாக்கல் இன்றுடன் முடிகிறது என்பதால் காலை 11 மணியில் இருந்து மாலை 3 மணி வரை தேர்தல் அலுவலகங்களில் ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

    தி.மு.க., காங்கிரஸ், பா.ஜனதா, பா.ம.க., நாம் தமிழர் கட்சியை சார்ந்த வேட்பாளர்களும், சுயேட்சை வேட்பாளர்களும் தங்களது ஆதரவாளர்களுடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

    வேட்புமனு தாக்கல் இன்று மாலை 3 மணியுடன் முடிவடைந்த நிலையில் அப்போது வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அதற்கு பிறகும் கூட மனு தாக்கல் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனால் இதுவரை 40 தொகுதிகளிலும் மொத்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

    நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வேட்பு மனு பரிசீலனை நடக்கிறது. வேட்பு மனுக்களை வாபஸ் பெற 30-ந்தேதி கடைசி நாள் ஆகும். அன்றைய தினம் மதியம் 3 மணிவரை மனுக்களை வாபஸ் பெறலாம்.

    30-ந்தேதி மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அப்போது சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படுகின்றன.

    ஒரே சின்னத்தை 2 சுயேட்சைகள் கேட்கும் பட்சத்தில் குலுக்கல் முறையில் அவர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×