என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவராத்திரி விரதம்"

    • புரட்டாசி மாதத்தில் வரும் 2 சிவராத்திரிகளில் பூஜை செய்தால்,செல்வம் பெருகும்.
    • மேல் உலகில் வேதம் ஒதியவருக்கு கொடுக்கின்ற மதிப்பைக் கொடுப்பார்கள்.

    தமிழ் மாதந்தோறும் 2 சிவராத்திரிகள் வருகின்றன. அதற்கான சிறப்புகள் வருமாறு:-

    சித்திரை மாதத்தில் வரும் 2 சிவராத்திரிகளிலும் வழிபாடு செய்து வந்தால், அங்கங்களின் குறைகள் நீங்கும். உடலின் குறைகள் நீக்கப்பட்டு, ருத்திர கணங்கள் வந்து சிவலோகத்திற்கு அழைத்துச் செல்வார்கள்.

    வைகாசி மாதத்தில் வரும் 2 சிவராத்திரி பூஜைகளை ஆயுள் முழுக்க செய்தால், நாம் சாப்பிடுகின்ற மருந்து நம் உடலில் ஒட்டும். சாப்பிடுகின்ற மருந்து உடலில் ஒட்டினால் தான் நம் நோய் நீங்கி ஆரோக்கியம் வரும்;

    ஆனி மாதத்தில் வரும் 2 சிவராத்திரிகளில் பூஜை செய்தால், தேவதைகள் எல்லாம் நடனம் ஆடி நம்மை வணங்கி தேவலோகத்திற்கு அழைப்பார்கள்.

    ஆடி மாதத்தில் வரும் இரு சிவராத்திகளில் பூஜை செய்தால், அம்பிகையுடன் சேர்ந்து சிவராத்திரி பூஜை செய்த பலன் கிட்டும்;

    ஆவணி மாதத்தில் வரும் 2 சிவராத்திரிகளில் பூஜை செய்தால் பூணூல் அணிந்து வேதம் ஓதிய பலன் கிட்டும். மேல் உலகில் வேதம் ஒதியவருக்கு கொடுக்கின்ற மதிப்பைக் கொடுப்பார்கள்.

    புரட்டாசி மாதத்தில் வரும் 2 சிவராத்திரிகளில் பூஜை செய்தால்,செல்வம் பெருகும்.

    ஐப்பசி மாதத்தில் வரும் 2 சிவராத்திரிகளில் பூஜை செய்தால், நாம் என்றுமே பசியால் வாடித் தவித்து அலையமாட்டோம். வாழ்நாள் முழுவதும் பசியால் அவதிப்படமாட்டோம். அதாவது உணவிற்காக என்றுமே கையேந்தி நிற்கும் நிலை வராது;

    கார்த்திகை மாதத்தில் வரும் 2 சிவராத்திரிகளிலும் விரதம் இருந்துவழிபட்டால் குறைவற்ற செல்வ வளம் கிடைக்கும். மார்கழி மாதத்தில் வரும் 2 சிவராத்திரி பூஜையை ஆயுள் முழுக்க செய்தால், பிறருக்காக தவறுகள் செய்ய மாட்டார்கள்: ஒரு மனிதன் அதுவரை செய்த அனைத்துவிதமான தவறுகளையும் அழிக்கின்ற சிவராத்திரி மார்கழியில் வரும் சிவராத்திரியாகும்;

    தை மாதத்தில் வரும் 2 சிவராத்திரி பூஜைகளை ஆயுள் முழுக்க செய்தால், நெல் முதலான தானியங்கள் நன்கு விளையும். அள்ளி வழங்கிய தான பலன் கிடைக்கும்; மாசி மாதத்தில் வரும் 2 சிவராத்திரிகளில் பூஜையை மனைவி செய்தால், பிற பெண்களை நாடும் கணவன் திருந்திவிடுவான். கணவன் செய்தால், பிற மாதரை நாடும் எண்ணத்தில் இருந்து நிச்சயம் மீண்டு வர முடியும்.

    பங்குனி மாதத்தில் வரும் இரு சிவராத்திரிகளில் பூஜை செய்தால், சிவபெருமானின் பங்குனி உத்திர நடனத்தைக் காணும் அளப்பரிய பாக்கியம் கிடைக்கும்; பங்குனி உத்திர நடனத்தைப் பார்ப்பதற்கு 3 கோடி முறை மனிதப் பிறப்பு எடுத்து சிவசிந்தையோடு வாழ்ந்தால் தான் கிட்டும். அதை ஒரே ஒரு பிறவி பங்குனி மாத சிவராத்திரி பூஜைகளைப் பின்பற்றுவதன் மூலமாக கிடைத்துவிடுகின்றன என்கிறனர் ஆன்மீக பெரியவர்கள்.

    • நெருப்பு பிழம்பில் இருந்து வெடித்து வெளியே வந்து, லிங்க வடிவாக காட்சி தந்தார்.
    • சிவனிடம் அடி பணிந்து நின்ற விஷ்ணுவிற்கும், தேவர்களுக்கும் கேட்ட வரங்களை கொடுத்தார்.

    ஒருமுறை பிரம்மாவிற்கும், விஷ்ணுவிற்கும் தங்களில் யார் பெரியவர் என்ற பிரச்சிினை ஏற்பட்டது. அவர்களது சண்டையை தீர்த்து வைக்குமாறு தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர்.

    தேவர்களின் கோரிக்கையை ஏற்று, சிவ பெருமானுக்கு மிகப்பெரிய நெருப்பு பிழம்பமாக தோன்றினார். அந்த நெருப்பு பிழம்பு விண்ணிற்கும், மண்ணிற்கும் பரவி மிகப் பெரிய வடிவமாக காட்சி அளித்தது. அந்த நெருப்பு பிழம்பின் அடியை காண விஷ்ணுவும், முடியை காண பிரம்மாவும் புறப்பட்டனர்.

    அடியையும், முடியையும் முதலில் கண்டறிந்த வருபவரே உலகில் பெரியவர் என்றார் சிவபெருமான். அன்னப்பறவையாக மாறி பல யுகங்கள் பிரயாணம் செய்த பிரம்மாவின் அகந்தை குறையாததால் ஒரு தாழம்பூவை பொய் சாட்சி சொல்ல அழைத்து வந்தார். அதன் படி தாழம்பூவும் பொய் சாட்சி சொன்னது. நெருப்பு பிழம்பாக இருந்த சிவ பெருமானுக்கு கோபம் வந்தது.

    அந்த நெருப்பு பிழம்பில் இருந்து வெடித்து வெளியே வந்து, லிங்க வடிவாக காட்சி தந்தார். பொய் சொன்ன பிரம்மாவிற்கு பூவுலகில் வழிபாடுகளே இருக்காது என்றும், தாழம்பூ எந்த பூஜைக்கு பயன்படாமல் கொடிய நாகங்கள் குடியிருக்கும் இடமாக மாறும் என்றும் சாபம் அளித்தார். அதே சமயம் சிவனிடம் அடி பணிந்து நின்ற விஷ்ணுவிற்கும், தேவர்களுக்கும் கேட்ட வரங்களை கொடுத்தார்.

    இந்த நிகழ்ச்சி நடந்தது திருவண்ணாமலையில் தான். மகாசிவராத்திரி மட்டுமல்ல லிங்க வழிபாடும், உலகில் முதன் முதலில் அக்னி தோன்றியதும் திருவண்ணாமலை திருத்தலத்தில் தான். இந்த அக்னியில் இருந்த தான் சூரியன், சந்திரனின் பிரகாசங்களும், தீப ஒளியும் தோன்றியதாக புராணங்கள் சொல்கின்றன.

    அக்னியில் இருந்து வெளியில் வந்த சிவபெருமான் லிங்கோத்பவராக காட்சி அளித்தார். இந்த நிகழ்வு மாசி மாத தேய்பிறை சதுர்த்தியில் நடைபெற்றதாலேயே இந்த நாள் மகா சிவராத்திரி தினமாக கொண்டாடப்படுகிறது.

    திருவண்ணாமலை தலத்தில் இருந்து தான் லிங்க வழிபாடும், மகாசிவராத்திரி வழிபாடும் மற்ற பகுதிகளுக்கு பரவியதாக சொல்லப்படுகிறது.

    • பகல் பொழுது பரமேஸ்வரனுக்கும், இரவுப்பொழுது அம்பிகையான உமாதேவிக்கும் உரியது.
    • சிவராத்திரி என்பது அம்பாளின் வேண்டுதலின்படி கொண்டாடப்படுவதால் அது சிவனுக்கு உரியதானது.

    பிரளய காலத்தின் போது பிரம்மனும், அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் பரம்பொருளுக்குள் அடங்கின. இதையடுத்து அன்றைய இரவுப் பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்துப் பூஜை செய்தார். நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தார்.

    பூஜையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி, அடியேன் தங்களைப் பூசித்த இந்த இரவை, தேவர்களும் மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே - அதாவது 'சிவராத்திரி' என்றே கொண்டாட வேண்டும் என்று வேண்டினார். சிவராத்திரி அன்று, சூரியன் மறைந்தது முதல் மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை, சிவனைப் பூஜிப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லா விதமான பாக்கியங்களையும் தந்து முடிவில் மோட்சத்தையும் அளிக்க வேண்டும் என்று அன்னையானவள் வேண்டிக் கொண்டாள்.

    சிவபெருமானும், அப்படியே ஆகட்டும் என்று கூறி அருள் புரிந்தார். அந்த இரவே சிவராத்திரி என வழங்கப்பட்டு, அனைவராலும் கொண்டாடப்படுகிறது. பகல் பொழுது பரமேஸ்வரனுக்கும், இரவுப்பொழுது அம்பிகையான உமாதேவிக்கும் உரியது. ஆனால் சிவராத்திரி என்பது அம்பாளின் வேண்டுதலின்படி கொண்டாடப்படுவதால் அது சிவனுக்கு உரியதானது.

    • மகா சிவராத்திரி தோன்றியதும், லிங்க வழிபாடு தோன்றியதும் திருவண்ணாமலை தலத்தில் தான்.
    • திருவண்ணாமலையில் உள்ள குகைகளில் சித்தர்கள், முனிவர்கள், மகான்கள் யோகிகள் தவம் செய்திருக்கிறார்கள்.

    சிவ பெருமான் பஞ்சபூதங்களின் வடிவில் காட்சி தரும் பஞ்சபூத தலங்களில் ஈசன் அக்னி வடிவமாக காட்சி தரும் தலம் திருவண்ணாமலை. நினைத்தாலே முக்தி தரும் தலம் என போற்றப்படுவதும், தமிழகத்தில் உள்ள முக்தி தலங்களில் முதன்மை தலமாக போற்றப்படுவதும் திருவண்ணாமலை தான்.

    திருவண்ணாமலை தலத்தில் தான், சிவ பெருமான், பிரம்மா மற்றும் விஷ்ணுவிற்கு ஜோதி வடிவமாக காட்சி தந்ததாக சொல்லப்படுகிறது. இதை போற்றும் விதமாகவே திருக்கார்த்திகை தீப திருநாளில், சிவமே மலையாக காட்சி தரும் திருவண்ணாமலை மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

    ஜோதி வடிவமாக காட்சிதந்த சிவ பெருமான், லிங்கோத்பவராக காட்சி தந்ததும் இங்கு தான் என சொல்லப்படுகிறது. அதனால் மகா சிவராத்திரி தோன்றியதும், லிங்க வழிபாடு தோன்றியதும் திருவண்ணாமலை தலத்தில் தான்.

    அருணன் என்றால் சூரியன் - நெருப்பின் நிறமான சிவப்பைக் குறிக்கும். அசலம் என்றால் கிரி என்றும் மலை என்றும் பொருள். எனவே அருணாசலம் என்றால் சிவந்த நிறத்தையுடைய மலை என்று பொருள். மலையே சிவனாக காட்சி தரும் திருவண்ணாமலை, கிருதா யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் மாறி மாறி வந்துள்ளது.

    "அருணாசலத்தை வலம்வர வேண்டும் என்ற நினைவோடு ஓரடி எடுத்து வைப்பவருக்கு யாகம் செய்த பலன் கிடைக்கும். இரண்டடியில் ராஜசூய யாகம் செய்த பலன் கிடைக்கும், சர்வதீர்த்தமாடிய பலனும் வந்து சேரும். மூன்றடியில் தான பலன், நான்கடியில் அஷ்டாங்க யோக பலன் உண்டாகும்." என்கின்றது அருணாசல புராணம். ஒரு சாதாரண நாளில் திருவண்ணாமலை கிரிவலம் சென்றாலே நமது முன்வினைகள் நீங்கிவிடும். பொருள் வேண்டுபவர்கள் பவுர்ணமியிலும், அருள் வேண்டுபவர்கள் அமாவாசையிலும் திருவண்ணாமலையை கிரிவலம் வரவேண்டும்.

    அதுபோல் சிவ பெருமானின் அருளை பெற விரும்புபவர்களும், பாவங்கள் நீங்கி வளமான வாழ்வு பெற விரும்புபவர்களும் மகா சிவராத்திரி நாளில் கிரிவலம் செல்வது சிறப்பாகும்.

    திருவண்ணாமலையில் உள்ள குகைகளில் சித்தர்கள், முனிவர்கள், மகான்கள் யோகிகள் தவம் செய்திருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் அமாவாசை அன்று அண்ணாமலை யாரை கிரிவலம் வந்து சிவனின் அருள் பெற்று, பின் குகைகளிலேயே இறைவனுடன் கலந்து ஜீவசமாதி நிலை அடைந்துள்ளார்கள். இதனால், சக்தி அதிர்வலைகள் அதிகமான இந்த மலையைச் சுற்றி வருவதால் சித்தர்கள், முனிவர்கள், மகான்கள் யோகிகள் ஆசிகளை பக்தர்கள் பெறுகின்றனர் என்பது ஐதீகம். மற்றும் திருவண்ணாமலையை கிரிவலம் சுற்றி வரும்போது சக்தி மிக்க மூலிகைச் செடிகொடிகளின் காற்றை சுவாசிப்பதால் உடலும் உள்ளமும் நலம் பெறுகிறது.

    பொதுவாக ஞாயிறு கிரிவலம் சிறந்ததாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் சூரிய பகவான் பூவுலகிற்கு ஏதேனும் ஒரு வடிவில் வந்து திருவண்ணாமலையைக் கிரிவலம் செய்வதாகக் ஐதீகம். நாளை (ஞாயிற்றுக்கிழமை) சிவராத்திரி என்பதால் கிரிவலம் செல்பவர்கள் சிவலோகமாம் திருக்கயிலாயத்தில் தேவர்களாய் வீற்றிருக்கும் சிறப்பைப் பெறுவார்களாம். குடும்பப் பிரச்சினை காரணமாக பிரிந்து வாழும் தம்பதியர் ஞாயிறு கிரிவலம் செய்தால் ஒற்றுமையுடன் சேர்ந்து வாழ வழி பிறக்கும் என்கின்றனர்.

    சிவராத்திரி இரவு கண் விழித்து சிவனைத் தொழுவார்கள். உறங்காமல் இருப்பது என்றால் ஆன்மா விழித்திருப்பது என்று பொருள். அன்றிரவு முழுவதும் மலையை வலம் வந்தால் கண் விழித்த பலனும் உண்டு. இறைவனை இடைவிடாது தொடர்ந்து தொழுத பலனும் உண்டு. சிவராத்திரி அன்று கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்கக் கோவில்களிலும் அந்தந்த ஜாமங்களில் அபிஷேகம் நடப்பதை கிரிவலம் செய்யும்போதே தரிசிக்கலாம்.

    திருவண்ணாமலை கிரிவலத்தை முதலில் ஆலயத்தின் புறத்தே இருக்கும் மலையின் காவல் தெய்வமான பூத நாராயணரை வணங்கி, மலையைச் சுற்றுவதற்கு அனுமதி வாங்கி தொடங்க வேண்டும். அடுத்து இடையூறு இல்லாமல் கிரிவலம் முடிய வேண்டும் என்று வழியில் உள்ள இரட்டைப் பிள்ளையாரை வணங்கி வேண்டிக் கொள்ள வேண்டும். பின்னர் ராஜ கோபுரத்தை வணங்கி விட்டு கிரிவலத்தை ஆரம்பிக்க வேண்டும்.

    கிரிவலத்தை முடித்தப் பின்னர், கோவிலில் மூலவரின் உள்பிரகாரத்தில் இருக்கும் துர்வாசமகரிஷியை வணங்கவேண்டும். அவரிடம் முறைப்படி கிரிவலம் முடித்துவிட்டு வந்துள்ளதாக மானசீகமாகத் தெரிவிக்க வேண்டும். அதன் பிறகே அண்ணாமலையாரையும், உண்ணா முலையம்மாளையும் தரிசிக்க வேண்டும். இப்படிச் செய்தால் ஈசன் அருளுடன் துர்வாசரின் அருளும் நமக்குக் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    இந்த கிரிவலப்பயணம் முழுவதும் எவரிடமும் பேசாமலும், விடாமல் ஓம் சிவ சிவ ஓம் என ஜபித்தவாறும் சென்றால் நமது எண்ணிக்கை நிச்சயமாக ஒரு லட்சத்தைத் தொட்டுவிடுகிறது. இப்படி ஜபித்துவரும்போது நாம் இந்த மந்திரத்தை எண்ண வேண்டிய அவசியமில்லை.

    அசாத்தியமான மன வலிமை உள்ளவர்களால் மட்டுமே இப்படி 14 கி.மீ.தூரமும் மவுனமாக வர முடியும். அப்படி ஒரே ஒரு முறை கிரிவலம் மவுனமாக ஓம் சிவ சிவ ஓம் ஜபித்தவாறு வந்துவிட்டாலே மறுநாளே நமது கடுமையான பிரச்சினை ஒன்று தீரும் அல்லது அதற்கான சூழ்நிலை உருவாகிவிடும் என்கின்றனர் பக்தர்கள்.

    • கடல் பகுதியில் உடைந்த மத்து போன்ற மந்தாரமலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    • மலைப்பகுதி பாகல்பூர் என்ற இடத்திலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

    பீகார் மாநிலம், பாங்கா மாவட்டத்தின் கடற்கரையை ஓட்டி மந்தர் மலைப்பகுதியில் சங்கு குளம் ஒன்று அமைந்துள்ளது. இந்த சங்கு குளத்தில் பாஞ்சஜன்ய சங்கு என்று அழைக்கப்படும் சங்கு உள்ளது.

    இந்த சங்கானது வருடம் முழுவதும் சுமார் 70 அடி முதல் 80 அடி ஆழத்தில் தண்ணீரில் மூழ்கிய நிலையில் இருக்கிறது. சிவராத்திரிக்கு முந்தைய தினம் மட்டும் தண்ணீர் வற்றி சங்கு பொதுமக்களின் கண்களுக்கு தென்படும். ஒரே நாளில் தண்ணீர் வற்றி சங்கு தென்படுவதும் மறுநாளே தண்ணீர் பெருக்கெடுத்து சங்கு மூழ்கிப்போவதும் ஆச்சரியமாக உள்ளதாக அங்கு வசிக்கும் மக்கள் கூறி வருகின்றனர்.

    புராணக் கதையின்படி பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுக்க தேவர்களும் அசுரர்களும் மந்தார மலையை மத்தாகப் பயன்படுத்தினர் எனக் கூறப்படுகிறது. பீகார் கடல் பகுதியில் உடைந்த மத்து போன்ற மந்தாரமலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இந்த மலைப்பகுதி பாகல்பூர் என்ற இடத்திலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த மலைக்கு பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷம் ஆகிய நாட்களில் திரளான பக்தர்கள் வருகை தருகின்றனர். இப்பகுதி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்பதால் மலைக்குச் செல்ல வனத்துறையிடம் பக்தர்கள் அனுமதி பெற வேண்டியது அவசியம்.

    • சிவபெருமான்-பார்வதி தேவியை திருமணம் செய்து கொண்ட நாளாக கருதப்படுகிறது.
    • சிவ அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களையோ அல்லது சிவ பூஜைக்கு தேவையான மலர்கள் ஆகியவற்றையோ வாங்கிக் கொடுக்கலாம்.

    மகாசிவராத்திரியின் நேரடி அர்த்தம் 'சிவனின் மகா இரவு' என்பதாகும். மகாசிவராத்திரி விரதத்தைக் கடைப்பிடிப்பது திருமணமாகாத பெண்களுக்கு அவர்கள் விரும்பிய வாழ்க்கைத் துணை கிடைக்க ஆசீர்வதிக்கிறது. திருமணமான பெண்களுக்கு திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியை அளிக்கிறது.

    மகாசிவராத்திரி என்பது சிவபெருமான்-பார்வதி தேவியை திருமணம் செய்து கொண்ட நாளாக கருதப்படுகிறது.

    தெய்வீக ஆற்றல் அதிகரித்து காணப்படும் இந்த நாளில் சிவபெருமானையும், பார்வதி தேவியையும் வழிபடுவதால் மகிழ்ச்சி, ஆரோக்கியம், அமைதி, செல்வ வளம் ஆகியவை கிடைக்கும்.

    திருமணம் தாமதமாகிறவர்கள், திருமணம் தடைபடுபவர்கள் இந்த நாளில் எளிய பரிகாரம் செய்தால் விரைவில் திருமண வரம் கூடி வரும் என்பது நம்பிக்கை. யாருக்கு திருமணம் ஆக வேண்டுமோ அவர்கள் தங்கள் கைகளால் மஞ்சளை சிவன் மற்றும் பார்வதியின் பாதத்தில் வைத்து வழிபட வேண்டும். திருமண வாழ்க்கையில் பிரச்சினை இருப்பவர்களும், கருத்து வேறுபாட்டால் பிரிந்து இருக்கும் கணவன்- மனைவியும் இந்த வழிபாட்டினை செய்யலாம்.

    மஞ்சளை படைத்து, சிவன்-பார்வதியை வேண்டிக் கொண்டு முடிந்த வரை சிவ மந்திரத்தை உச்சரித்து மனதில் உள்ள வேண்டுதலை சொல்லி வழிபடலாம். இப்படி வழிபடுவதால் அவர்களின் திருமணம் நடைபெறுவதில் அல்லது திருமண வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைகள், தடைகள் ஆகியவை நீங்கி, மனதிற்கு விருப்பமான திருமண வாழ்க்கை அமையும்.

    சிவ அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களையோ அல்லது சிவ பூஜைக்கு தேவையான மலர்கள் ஆகியவற்றையோ வாங்கிக் கொடுக்கலாம். அன்று 2 பேருக்காவது அன்னதானம் செய்வது சிறந்த பலனை தரும். ஜாதகத்தில் உள்ள கிரகங்களாலோ அல்லது வேறு ஏதாவது காரணத்தாலோ திருமணம் தள்ளிப் போகிறது என்றாலும் அன்னதானம் செய்து, சிவனை வழிபட்டால் அனைத்து தோஷங்களும், பாவங்களும் நிவர்த்தி ஆகி மகிழ்வான வாழ்க்கை அமையும்.

    • மகா சிவராத்திரி நாளில் கிரிவலம் வந்தால் இரு மடங்கு பலன் கிடைக்கும் என சிவ புராணம் சொல்கிறது.
    • சிவராத்திரியில் கிரிவலம் வருவது விசேஷம்.

    மலையே சிவன். சிவனே மலை. ''வானனை, மதி சூடிய மைந்தனை, தேனனை, திருவண்ணாமலையனை, ஏனனை, இகழ்ந்தார் புர மூன்றெய்த ஆனனை, அடியேன்மறந்து உய்வனோ?" என்று உருகுகிறார் நாவுக்கரசர். நெருப்பு தலமான இங்குதான் சிவமும் சக்தியும் ஒன்றே என்பதை உணர்த்துவதற்காக அர்தநாரீஸ்வரராக வடிவம் எடுத்ததும், சிவராத்திரி விழா உருவானதும் என்று புராணங்கள் கூறுகின்றன. சிவராத்திரி நாளிலேயே குபேரன் கிரிவலம் வந்து, அனைத்து செல்வங்களையும் பெற்றதாக சொல்லப்படுகிறது.

    மகா சிவராத்திரி நாளில் கிரிவலம் வந்தால் இரு மடங்கு பலன் கிடைக்கும் என சிவ புராணம் சொல்கிறது. சிவத்தலமான இங்கு ஜோதி ரூபத்தில் பெருமாள் சொர்க்கவாசல் கடக்கிறார். வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலையில் தீபத்தை வைகுண்ட வாசல் வழியே கொண்டு வருவர். பஞ்சபூத தலங்களில் இது அக்னி தலம் என்பதால், பெருமாளும் ஜோதி வடிவில் எழுந்தருளுவதாகச் சொல்கின்றனர்.

    மகா சிவராத்திரியின் போது, கோவில் விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, பக்தர்கள் மலையைச் சுற்றி வருகிறார்கள். சிவராத்திரி விழா உருவானதும் இங்கு தான் என்று புராணங்கள் கூறுகின்றன. சிவராத்திரியில் கிரிவலம் வருவது விசேஷம்.

    • சிவபெருமானுக்கு சிறப்பாக உள்ள நாட்கள் மூன்றாகும்.
    • ஆறு காலங்களுக்கும் அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெறும்.

    சிவபெருமானுக்கு சிறப்பாக உள்ள நாட்கள் மூன்றாகும்.

    அவை மகா சிவராத்திரி, திருக்கார்த்திகை, திருவாதிரை ஆகியவை ஆகும்.

    அதில் சிவராத்திரி தினங்களில் சிவபெருமானை வழிபடுவது மிகவும் சிறப்புடையதாகும்.

    அன்றைய தினம் சிவன் கோவில்கள் இரவு முழுவதும் திறந்திருக்கும்.

    ஆறு காலங்களுக்கும் அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெறும்.

    அன்று ஈசனை நினைத்து விரதம் இருந்து ஆறு காலங்களையும் அபிஷேக ஆராதனையுடன் தரிசிப்பது மிகவும் புண்ணிய பலன்களை தரும்.

    முக்தி கிடைக்கும்.

    சிவராத்திரியில் யோக சிவராத்திரி, நித்திய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி, மகா சிவராத்திரி என்று ஐந்து வகைகள் உண்டு.

    மாசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தியில் மகா சிவராத்திரி வரும்.

    அன்றைய தினத்தில் உபவாசமிருந்து அவரவர்களுக்கு உகந்ததைப் பாராயணம் செய்தால் ஈசன் அருள் நமக்கு நிச்சயம் கிடைக்கும்.

    ×