search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிக்கண்ணா கல்லூரி"

    • ஜூன் 8 மற்றும் 9ம் தேதி இரு நாட்கள் இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடக்கிறது.
    • காலியாக இருக்கும் இடங்களுக்கு அடுத்தடுத்து மாணவர்கள் அழைக்கப்படுவர்.

    திருப்பூர் :

    திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் ஜூன், 8 மற்றும், 9ம் தேதி இரு நாட்கள் இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடக்கிறது. இக்கல்லூரியில், இளங்கலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை, முதல் கட்ட கவுன்சிலிங் மே, 31ல் துவங்கி, நேற்று (ஜூன், 6) வரை நடந்தது. மொத்தமுள்ள, 835 இடங்களுக்கு, 8,190 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதுதொடர்பாக கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    நாளை (8ம் தேதி) மற்றும், 9ம் தேதி இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடக்கிறது. வணிகவியல் பாடங்களான பி.காம்., பி.காம்., சி.ஏ., படிப்புக்கு ஜூன், 8ம் தேதி காலை, 9:30 க்கும், பி.காம்., ஐ.பி., பி.பி.ஏ., படிப்புகளுக்கு காலை, 11:30 மணிக்கும், வரலாறு, பொருளியல் பாடப்பிரிவுக்கு மதியம், 1:30 மணிக்கும் கவுன்சிலிங் நடக்கும். வரும், 9ம் தேதி காலை, 9:30 மணிக்கு இயற்பியல் பாடப்பிரிவு கவுன்சிலிங் நடக்கிறது. வேதியியல், விலங்கியல் பாடங்களுக்கு காலை, 11:30 மணிக்கும், கணிதம், கணிணி அறிவியல், கணிணி பயன்பாடு, ஆடைவடிவமைப்பு நாகரீகம், தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியம் பாடங்களுக்கு மதியம், 1:30 மணிக்கும் கவுன்சிலிங் நடக்கிறது. அரசின் இட ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை, விண்ணப்பித்தவர்களின் தரவரிசைப்பட்டில் www.cgac.in என்ற கல்லூரியின் இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்ப எண்ணை குறிப்பிட்டு தங்கள் தரவரிசையை அறிந்து கொள்ளலாம். காலியாக இருக்கும் இடங்களுக்கு அடுத்தடுத்து மாணவர்கள் அழைக்கப்படுவர்.

    கவுன்சிலிங்கில் பங்கேற்க கல்லுாரிக்கு வருவோர் கட்டாயம் பெற்றோர் உடன் வருதல் வேண்டும். ஆன்லைன் விண்ணப்பத்தை கட்டாயம் கொண்டு வர வேண்டும். அனைத்து சான்றிதழின் இரண்டு நகல், அசல் சான்றிதழ் கொண்டுவர வேண்டும்.

    உரிய நேரத்தில் கவுன்சிலிங்கில் பங்கேற்பது அவசியம். தாமதமாக வந்தால், அந்த நேரத்தில் பாடப்பிரிவுகளில் இருக்கும் இடங்கள் அடிப்படையிலேயே தகுதியுள்ள பிரிவுகளில் சேர்க்கை நடைபெறும். இவ்வாறு, கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

    • போசன் மா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
    • துரித உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும்.

    திருப்பூர் :

    மத்திய அரசின் அறுவுறுத்தலின் படி திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணர்வு பல்வேறு பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக தத்தெடுத்த கருமாபாளையம் கிராமத்தில் போசன் மா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கருமாபாளையம் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் சண்முகசுந்தரம் கலந்து கொண்டார். அவர் கூறுகையில், அனைவரும் சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். துரித உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். நமது உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். நெகிழி பைகளில் சூடான உணவு பொருட்களை வாங்க கூடாது. ஏனெனில் அதில் உள்ள நச்சுத்தன்மை உணவுடன் வினைபுரிந்து கெடுதல் ஏற்படுத்தும்.

    சத்தான உணவுகளான கீரைகள், பழங்கள், காய்கறிகளை அன்றாடும் சாப்பிடும் உணவில் சேர்க்கவேண்டும். நோய் வராமல் தடுக்க பாரம்பரிய உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஊட்டச்சத்து பற்றாக்குறை இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என அறிவுறுத்தினர். பிறகு மாணவ செயலர்கள் சுந்தரம், அருள்குமார், பூபதிராஜா, ரமேஷ், அரவிந்தன் ஆகியோர் தலைமையில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு நடனம் நடத்தியும், வீடுவீடாக சென்று விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கியும், ஊட்டச்சத்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    • ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தவிா்க்க வேண்டும்.
    • நெகிழி மண்ணுக்கும், உயிரினங்களுக்கும் தீங்கு விளைவிக்கக் கூடியதாகும்.

    திருப்பூர் :

    திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலகு 2 சாா்பில் மங்கலம் சாலையில் உள்ள தனியாா் பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் சுற்றுச்சூழல் அலுவலா் சாந்தி வரவேற்றாா். பள்ளி முதல்வா் பில்ஸி தலைமை வகித்தாா்.இந்த நிகழ்ச்சியில் நாட்டுநலப் பணித் திட்ட அலகு 2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் பேசியதாவது:-

    ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தவிா்க்க வேண்டும். எங்கு சென்றாலும் துணிப் பைகளை எடுத்துச் செல்ல வேண்டும். நெகிழி மண்ணுக்கும், உயிரினங்களுக்கும் தீங்கு விளைவிக்கக் கூடியதாகும். இவை மண்ணில் மக்காத தன்மை கொண்டதாகும். ஆகவே நாம் குப்பைகளைப் போடும்போது மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து போட வேண்டும். ஆகவே சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிா்க்க வேண்டும் என்றாா்.

    நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் பிளாஸ்டிக் ஒழிப்பு தொடா்பான உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் கிருஷ்ணன் செய்திருந்தாா்.

    • ஆகஸ்ட் 20-ந் தேதி மதநல்லிணக்க தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
    • மாணவர்கள் எந்தவொரு பாகுபாடும் இல்லாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் .

    திருப்பூர் :

    திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக இன்று கல்லூரி வளாகத்தில் மதநல்லிணக்க நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவ பிரதிநிதி சுந்தரம் வரவேற்று பேசினார்.

    அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் தலைமை தாங்கி பேசுகையில் , ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 20-ந் தேதி மதநல்லிணக்க தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மாணவர்களிடத்திலே எந்த ஒரு பாகுபாடும் இருக்கக்கூடாது . அனைவரும் ஒருவரே.எந்தவொரு பாகுபாடும் இல்லாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் .தங்களுடைய எதிர்காலத்திற்கு பாடுபட வேண்டும். ஒருமைப்பாட்டு என்பது மக்களிடம் மனதில் வரக்கூடிய ஒரு சிந்தனையாக இருக்க வேண்டும். மக்கள் மனதில் எழுப்ப வேண்டிய ஒரு உணர்வாக இருக்க வேண்டும்.இந்தியாவில் உள்ள அனைத்து மக்களின் உணர்வுபூர்வமான ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்திற்கும் பாடுபடவேண்டும் என்று கூறினார்.

    பிறகு அலகு -2 மாணவர்கள், அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் போன்ற ஆடையணிந்தும் தேசிய கொடியை ஏந்தியும் அனைவரும் ஒருவரே என்பதை உணர்த்தும் வகையில் முகத்தில் வர்ணம் அடித்தும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் மதநல்லிணக்கத்தை பேணும் வகையில் எங்களுக்கிடையேயான அனைத்து வேறுபாடுகளையும் வன்முறையில் ஈடுபடாமல், பேச்சுவார்த்தைகள் மூலமாகவும் அரசியலமைப்புச் சட்ட வழிமுறைகளைக் பின்பற்றியும் தீர்த்துக்கொள்வேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    முடிவில் மாணவ செயலர் அருள்குமார் நன்றி கூறினார். மாணவ செயலர்கள் பூபதிராஜா , பூபாலன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    • வனத்தீ தடுப்பு பற்றிய பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது.
    • காட்டுத்தீ இயற்கையான முறையில் ஏற்படுவதை விட மனிதர்களால் அதிகம் ஏற்படுகிறது .

    திருப்பூர் :

    திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2, திருப்பூர் வனச்சரகம் சார்பில் கல்லூரி வளாகத்தில் உள்ள ஏ. வி. அரங்கில் வனத்தீ தடுப்பு பற்றிய பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது . முன்னதாக அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்புரை வழங்கினார். பேராசிரியர் விநாயகமூர்த்தி தலைமை தாங்கினார்.

    சிறப்பு விருந்தினராக திருப்பூர் வனச்சரக அலுவலர் சுரேஷ் கிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில் , காடுகளுக்குள் எப்படி பாதுகாப்பாக செல்லவேண்டும் , காட்டுத்தீயை எப்படி அணைக்க வேண்டும் , காட்டுத்தீ எப்படி உருவாகிறது , வெப்பம் , எரிபொருள் மற்றும் காற்று இந்த மூன்று பொருட்களும் சேரும் போது நெருப்பு உருவாகிறது என்றார். மேலும் காட்டுத்தீ இயற்கையான முறையில் ஏற்படுவதை விட மனிதர்களால் அதிகம் ஏற்படுகிறது .ஆகையால் இவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என்றார். காட்டுத்தீ மிகவும் ஆபத்தானது.காட்டுத் தீ உருவானால் பல கிலோமீட்டர் சுற்றளவுக்கு பரவும். இவை காடுகளில் வாழும் உயிரினங்களை அழிக்கப்படுவது மட்டுமல்லாமல் காடுகளின் வளத்தையே அழிக்கிறது . காட்டுத்தீ இயற்கையான முறையில் எப்படி உருவாகிறது என்பதை தெளிவாக கூறினார். சில நேரங்களில் அதுவும் வெயில் காலங்களில் காய்ந்து போன மரங்கள் மற்றும் செடிகளில் நெருப்பு உருவாகிறது எனவும் , மழைக்காலங்களில் மின்னல் மரங்களில் படும்போது நெருப்பு உருவாகிறது, இதன் மூலம் காட்டுத்தீ உருவாகிறது , மனிதர்கள் காடுகளுக்குள் செல்லும் போது தீயை மூட்டுவதால் அதிலிருந்து வரும் நெருப்பு காடுகளில் பரவுவதன் மூலம் காட்டுத்தீ உருவாகிறது . மேலும் காடுகளின் அருகில் வசிக்கும் மக்கள் குப்பைகளை எரிப்பதன் மூலம், அதிலிருந்து உருவாகும் நெருப்பு காடுகளில் பரவுவதன் மூலம் காட்டுத்தீ உருவாகிறது.

    அவற்றை கட்டுப்படுத்த ரசாயன பொருட்கள் பயன்படுத்தி காட்டுத் தீ அணைக்கப்படுகிறது, காட்டுத்தீ அதிகமாக பரவும் போது கிளவுடு சேவிங் என்ற தொழில்நுட்பம் மூலமாக செயற்கையான முறையில் மழைகளைப் பொழியவைத்து காட்டுத்தீ அணைக்கப்படுகிறது என்று கூறினார். பிறகு மாணவர்கள் தங்கள் கேள்விகளை கேட்டு நிவர்த்தி செய்தனர். மாணவ செயலர்கள் சுந்தரம், ரமேஷ், பாலாஜி ஆகியோர் தலைமையில் ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    • வாகனங்களில் செல்லும் போது சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க வேண்டும்.
    • பள்ளி கல்லூரி மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு -2 மற்றும் திருப்பூர் தெற்கு போக்குவரத்து காவல் துறை சார்பில் பழைய பேருந்து நிலையம் அருகில் போதை தடுப்பு மற்றும் 33வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக அலகு -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்றும், விழிப்புணர்வு பற்றிய முக்கியத்துவத்தையும் எடுத்துக் கூறினார். தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் தினேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    வாகனங்களில் செல்லும் போது சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க வேண்டும். அதி வேகத்தில் செல்வதை தவிர்க்க வேண்டும், இரு சக்கர வாகனத்தை எடுக்கும் போதே தலை கவசத்தை மறக்காமல் அணிய வேண்டும். காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் நிச்சயம் அணிய வேண்டும். ஒரு வழி பாதையில் செல்லக் கூடாது . போதை பழக்கத்திற்கு அடிமையாக வேண்டாம்.அவற்றால் எண்ணற்ற நோய்கள் பரவுகிறது. குடும்ப நிம்மதியை இழக்கிறது. பள்ளி கல்லூரி மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

    தெற்கு காவல் குற்றப்பிரிவு ஆய்வாளர் ரத்தினகுமார் முன்னிலை வகித்தார். பிறகு மாணவ செயலர்கள் ரத்தினகணேஷ், அருள்குமார், பாலசுப்பிரமணியன் தலைமையில் மாணவர்கள் போதை விழிப்புணர்வு நடனமும், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடனமும் அரங்கேற்றினர்.மாணவ மாணவிகள், பொதுமக்கள் , காவல் துறையினர் அனைவரும் இணைந்து போதை ஒழிப்பு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். இந்த விழிப்புணர்வினை ஏராளமான பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கண்டுகளித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    ×