search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அம்மை நோய்"

    • கோடை கால அம்மை நோய்கள் கடந்த வருடம் இதே காலகட்டத்தில் இருந்ததை விட தற்போது 4 மடங்கு அதிகரித்துள்ளது.
    • காய்கறிகள் மற்றும் பழங்களுடன் ஆரோக்கியமான உணவு பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.

    சென்னை:

    சென்னையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் கோடையில் ஏற்படும் நோய்களும் பரவி வருகின்றன. சென்னையில் கோடை வெயில் காரணமாக 'அம்மை' நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

    மேலும் தமிழகம் முழுவதுமே அம்மை நோய் பரவி வருகிறது. தமிழகத்தை பொருத்தவரை 350-க்கும் மேற்பட்டோர் அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 3 மாதங்களில் 7 பேருக்கு ரூபெல்லா எனப்படும் ஜெர்மன் தட்டம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த கோடை கால அம்மை நோய்கள் கடந்த வருடம் இதே காலகட்டத்தில் இருந்ததை விட தற்போது 4 மடங்கு அதிகரித்துள்ளது.

    இது தொடர்பாக டாக்டர்கள் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் சில பகுதிகளில் பகல் நேரத்தில் வெப்பநிலை அதிகமாக உள்ளது. மேற்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் 100 டிகிரி முதல் 102 டிகிரி வரை வெயிலின் தாக்கம் உள்ளது. இது வைரஸ் பரவ சாதகமாக உள்ளது. நோயை தடுப்பதற்கான எளிதான வழி தடுப்பூசி போடுவதுதான். அனைத்து குழந்தைகளுக்கும் டாக்டர்களின் பரிந்துரைப்படி அம்மை நோய்க்கு தடுப்பூசி போட்டுகொள்ள வேண்டும். பெரியவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு ஓய்வெடுக்க வேண்டும்.

    காய்கறிகள் மற்றும் பழங்களுடன் ஆரோக்கியமான உணவு பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். சுயமாக மருந்துகளை எடுத்துக்கொள்ள கூடாது. டாக்டரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • சின்னம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டால் உடலில் நீர் கட்டியை போன்ற சிறிய கொப்பளங்கள் தோன்றும்.
    • வயதானவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் ஆகியோர் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும்.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இனிவரும் நாட்களில் இன்னும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    கோடை வெயில் கொளுத்தும் நிலையில் பொதுமக்களுக்கு அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைசுற்றல், தசைப்பிடிப்பு, குறைந்த அளவு சிறுநீர் வெளியேற்றம், மயக்கம், வலிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.

    மேலும் வெயிலின் உக்கிரம் அதிகமாக இருப்பதால் தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு தட்டம்மை, சின்னம்மை போன்ற வெப்பம் தொடர்பான நோய்கள் அதிக அளவில் தாக்குவதற்கு வாய்ப்புள்ளது. தட்டம்மை நோய்க்கு காய்ச்சல், இருமல், மூக்கில் நீர் ஒழுகுதல், கண்ணில் நீர் வடிதல் ஆகியவை அறிகுறிகளாகும். முகம் மற்றும் காதின் பின்பகுதிகளில் வேர்க்குரு போன்ற அறிகுறிகள் தோன்றி சிவப்பு புள்ளிகளாக உடல் முழுவதும் பரவி காணப்படும். கண்கள் சிவந்து வீக்கம் ஏற்படும்.

    சின்னம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டால் உடலில் நீர் கட்டியை போன்ற சிறிய கொப்பளங்கள் தோன்றும். பின்னர் அவை கொஞ்சம் பெரிதாகி நீர் கோர்த்து காணப்படும். கொப்பளங்களில் இருந்து நீர் வடியும். பின்னர் நீர் வறண்டு கொப்பளங்கள் உதிரும். இந்த நோய் குழந்தைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும், முதியவர்களுக்கும் எளிதில் பரவும்.

    எனவே பொதுமக்கள் வெயில் காலத்தில் இந்த நோய்களில் இருந்து தங்களை காக்க மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    பொதுமக்கள் தேவையான அளவிற்கு தண்ணீர் குடிக்க வேண்டும், இளநீர், மோர் மற்றும் இயற்கை பழச்சாறுகளை குடிக்கலாம். திராட்சை, கிர்ணி பழம், தர்பூசணி பழங்கள் போன்ற நீர் சத்து உள்ள பழங்களை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். மெல்லிய தளர்ந்த பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.

    வயதானவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் ஆகியோர் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். செயற்கை குளிர்பானங்கள் மற்றும் ஐஸ் தண்ணீர் குடித்தால் ரத்தக் குழாய்கள் சுருங்கி, உடலின் வெப்பம் அதிகரிக்கும்.

    எனவே கோடை காலத்தில் ஐஸ் தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    • பாதிக்கப்பட்டவர்களின் உமிழ்நீர், சளி மூலமாக பிறருக்கு பரவக்கூடும் என்பதால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைபடுத்துவது அவசியம்.
    • சுகாதாரத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    பெங்களூரு:

    மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் 1970-களில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து தற்போது பல நாடுகளில் இந்த நோய் கண்டறியப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட விலங்குடன் தொடர்பு கொள்வதன் மூலம் இந்த குரங்கு அம்மை பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நோய் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவினால் 7 முதல் 14 நாட்களுக்குள் தொற்றை ஏற்படுத்திவிடும்.

    குரங்கு அம்மையால் பாதிக்கப்படுபவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடல்வலி, உடலில் தடுப்புகள் ஏற்படும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உமிழ்நீர், சளி மூலமாக பிறருக்கு பரவக்கூடும் என்பதால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைபடுத்துவது அவசியம்.

    இந்நிலையில் கர்நாடக மாநிலம், உத்தர கன்னடம் மாவட்டத்தில் உள்ள மலை கிராமத்தில் குரங்கு அம்மையால் 21 பேர் பாதிக்கப்பட்டுள்னர். இதில் 8 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற 13 பேர் வீட்டில் தனிமைபடுத்தப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது உடல் நிலையை சுகாதாரத் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். நோய் பரவாமல் தடுக்கும் வகையில் சுகாதாரத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இது குறித்து மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர். நிரஜ் கூறியதாவது:-

    குரங்கு அம்மையால் பாதிக்ப்பட்ட 21 பேரும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். நோய் பாதிக்கப்பட்ட விலங்குடன் தொடர்பு கொள்வதன் மூலம் மனிதர்களுக்கு இந்த குரங்கு அம்மை பரவுகிறது. எனவே வனப்பகுதிக்குள் மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் இருமல் சளி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சுகாதார அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டும். குரங்கு அம்மை ஏற்பட்டால் அடுத்த 3 முதல் 5 நாட்களில் அதிக காய்ச்சல் இருக்கும். 2 வது முறையாக குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தப்போக்கு அறிகுறிகள் இருக்கும், உடல் வெப்பநிலையும் உயரக்கூடும் எனவே பொது மக்கள் கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    கர்நாடகா, தமிழகம் இடையே தினமும் ஆயிரக்கணக்கானோர் பயணிக்கும் சூழ்நிலையில் கர்நாடகாவில் குரங்கு அம்மை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது:-

    தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை. அத்தகைய அறிகுறிகளுடன் கூட யாரும் இல்லை. ஆனாலும் அண்டை மாநிலங்களில் அத்தகைய பாதிப்பு இருக்கும் பட்சத்தில் அதற்கான முன்னேற்பாடுகளை பொது சுகாதாரத்துறை மேற்கொள்ளும். கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு கண்காணிப்பு பணிகளின் தொடர்ச்சியாக தற்போதும் தேவையின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கபடும். அதே போன்று குரங்கு அம்மை குறித்த விழிப்புணர்வு பொது மக்களுக்கு ஏற்படுத்தப்படும். இவை அனைத்தும் அவசியம் ஏற்பட்டால் மட்டுமே மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள். எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை இவ்வாறு அவர் கூறினார்.

    • பசு மாடுகளுக்கு அம்மை பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
    • பெரியம்மையால் மாடுகள் பாதிக்கப்பட்டிருந்தால், விவசாயிகள் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

    குடிமங்கலம் :

    திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு வட்டாரங்களில் பசு மாடுகளுக்கு அம்மை பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்நோய் நாட்டு மாடுகளை காட்டிலும் கலப்பின மாடுகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.கடிக்கும் பூச்சிகள், உண்ணிகள், கொசுக்கள் மூலம் பாதிக்கப்பட்ட மாடுகளில் இருந்து மற்ற மாடுகளுக்கு பரவுகிறது.

    நோயுற்ற மாடுகளின் எச்சம், ரத்தம், கொப்புளங்கள் மற்றும் விந்தணுக்கள் மூலம் பரவுகிறது. நோயுற்ற தாய் பசுவிடம் இருந்து கன்றுக்கும் பரவுகிறது.இதற்கான சிகிச்சை முறை பற்றி, கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- பெரியம்மையால் மாடுகள் பாதிக்கப்பட்டிருந்தால், விவசாயிகள் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.வெற்றிலை 10, மிளகு 10 கிராம், கல் உப்பு 10 கிராம், வெல்லம் ஆகியவற்றை அரைத்து, தேவையான அளவு நாக்கில் தடவி கொடுக்க வேண்டும்.

    குப்பை மேனி இலை, வேப்பிலை, துளசி இலை, மருதாணி இலை (ஒவ்வொன்றிலும் ஒரு கைப்பிடி), மஞ்சள் தூள் 20 கிராம், பூண்டு 10 பல் ஆகியவற்றை அரைத்து 500 மி.லி., நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து கொதிக்க வைத்து பின்னர் ஆற விட்டு காயங்களை சுத்தப்படுத்திய பின் மருந்தை மேலே தடவ வேண்டும்.காயத்தில் புழுக்கள் இருந்தால், சீத்தாப்பழ இலையை அரைத்து காயத்தில் தடவ வேண்டும். அல்லது பச்சை கற்பூரத்தை தேங்காய் எண்ணெயில் கலந்து காயத்தில் விட்டு புழுக்களை அப்புறப்படுத்தி பின்னர் மருந்து போட வேண்டும்.முக்கியமாக நோயுற்ற மாடுகளை தனிமைப்படுத்த வேண்டும். பண்ணையின் சுத்தம், சுகாதாரத்தை பேணி பாதுகாக்க வேண்டும். கிருமி நாசினி கொண்டு கொட்டகையை சுத்தம் செய்ய வேண்டும். கொட்டகையை காற்றோட்டமாகவும், சூரிய ஒளிபடுமாறும் அமைக்க வேண்டும் என்றனர்.

    மேலும் அவர்கள் கூறுகையில், பாதிக்கப்பட்ட மாடுகள், அதிக காய்ச்சல், பசியின்மை, சோர்வு மற்றும் உடல் எடை குறையும். கண்களில் வீக்கம் மற்றும் நீர் வடிதல் இருக்கும். அதிக உமிழ்நீர் சுரப்பும் இருக்கும். பால் உற்பத்தி குறையும். தலை, கழுத்து, கால்கள், மடி, இனப்பெருக்க உறுப்புகள் போன்றவற்றில் 2 முதல் 5 செ.மீ., அளவுக்கு கொப்புளங்கள் தென்படும். தோலின் மீது ஏற்படும் இந்த கொப்புளங்கள் உறுதியாக வட்டமாக நன்கு உப்பியிருக்கும். மிகப்பெரிய கொப்புளங்கள் சீழ் பிடித்து புண்ணாகி பின்னர் அதன் தழும்புகள் தோலில் இறுதி வரை மறையாமல் இருக்கும். கொப்புளங்களில் புழுக்கள் உருவாகவும் வாய்ப்புள்ளது என்றனர்.  

    ×