search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Herbal medicines"

    • பசு மாடுகளுக்கு அம்மை பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
    • பெரியம்மையால் மாடுகள் பாதிக்கப்பட்டிருந்தால், விவசாயிகள் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

    குடிமங்கலம் :

    திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு வட்டாரங்களில் பசு மாடுகளுக்கு அம்மை பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்நோய் நாட்டு மாடுகளை காட்டிலும் கலப்பின மாடுகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.கடிக்கும் பூச்சிகள், உண்ணிகள், கொசுக்கள் மூலம் பாதிக்கப்பட்ட மாடுகளில் இருந்து மற்ற மாடுகளுக்கு பரவுகிறது.

    நோயுற்ற மாடுகளின் எச்சம், ரத்தம், கொப்புளங்கள் மற்றும் விந்தணுக்கள் மூலம் பரவுகிறது. நோயுற்ற தாய் பசுவிடம் இருந்து கன்றுக்கும் பரவுகிறது.இதற்கான சிகிச்சை முறை பற்றி, கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- பெரியம்மையால் மாடுகள் பாதிக்கப்பட்டிருந்தால், விவசாயிகள் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.வெற்றிலை 10, மிளகு 10 கிராம், கல் உப்பு 10 கிராம், வெல்லம் ஆகியவற்றை அரைத்து, தேவையான அளவு நாக்கில் தடவி கொடுக்க வேண்டும்.

    குப்பை மேனி இலை, வேப்பிலை, துளசி இலை, மருதாணி இலை (ஒவ்வொன்றிலும் ஒரு கைப்பிடி), மஞ்சள் தூள் 20 கிராம், பூண்டு 10 பல் ஆகியவற்றை அரைத்து 500 மி.லி., நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து கொதிக்க வைத்து பின்னர் ஆற விட்டு காயங்களை சுத்தப்படுத்திய பின் மருந்தை மேலே தடவ வேண்டும்.காயத்தில் புழுக்கள் இருந்தால், சீத்தாப்பழ இலையை அரைத்து காயத்தில் தடவ வேண்டும். அல்லது பச்சை கற்பூரத்தை தேங்காய் எண்ணெயில் கலந்து காயத்தில் விட்டு புழுக்களை அப்புறப்படுத்தி பின்னர் மருந்து போட வேண்டும்.முக்கியமாக நோயுற்ற மாடுகளை தனிமைப்படுத்த வேண்டும். பண்ணையின் சுத்தம், சுகாதாரத்தை பேணி பாதுகாக்க வேண்டும். கிருமி நாசினி கொண்டு கொட்டகையை சுத்தம் செய்ய வேண்டும். கொட்டகையை காற்றோட்டமாகவும், சூரிய ஒளிபடுமாறும் அமைக்க வேண்டும் என்றனர்.

    மேலும் அவர்கள் கூறுகையில், பாதிக்கப்பட்ட மாடுகள், அதிக காய்ச்சல், பசியின்மை, சோர்வு மற்றும் உடல் எடை குறையும். கண்களில் வீக்கம் மற்றும் நீர் வடிதல் இருக்கும். அதிக உமிழ்நீர் சுரப்பும் இருக்கும். பால் உற்பத்தி குறையும். தலை, கழுத்து, கால்கள், மடி, இனப்பெருக்க உறுப்புகள் போன்றவற்றில் 2 முதல் 5 செ.மீ., அளவுக்கு கொப்புளங்கள் தென்படும். தோலின் மீது ஏற்படும் இந்த கொப்புளங்கள் உறுதியாக வட்டமாக நன்கு உப்பியிருக்கும். மிகப்பெரிய கொப்புளங்கள் சீழ் பிடித்து புண்ணாகி பின்னர் அதன் தழும்புகள் தோலில் இறுதி வரை மறையாமல் இருக்கும். கொப்புளங்களில் புழுக்கள் உருவாகவும் வாய்ப்புள்ளது என்றனர்.  

    ×