search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமலாக்கத் துறை"

    • ஒவ்வொரு மணல் குவாரியிலும் விற்பனையான மணல் அளவு, அதற்கான பில் போன்றவற்றை சமர்பிக்கும்படி அறிக்கை கேட்டனர்.
    • நீர்வளத்துறை முதன்மை செயற்பொறியாளர் முத்தையா மற்றும் செயற் பொறியாளர்களுக்கு சம்மன் வழங்கப்பட்டதாக தகவல் வெளியானது.

    சென்னை:

    தமிழகத்தில் மணல் விற்பனையை அரசின் நீர்வளத்துறை நேரடியாக செய்து வருகிறது. இடைத்தரகர்கள் இல்லாமல் மக்களுக்கு குறைவான விலையில் மணல் கிடைக்க வேண்டும் என்பதற்காக அரசு மணல் விற்பனையை செய்கிறது.

    ஒரு யூனிட் மணல் விலை ரூ.1000-க்கும் மணலை யார்டுக்கும் கொண்டு வந்து ஒப்பந்ததாரர் வழங்க ரூ.1680 என மொத்தம் ரூ.2680 வசூலிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் அரசு மணல் விற்பனையில் தவறுகள் நடப்பதாக வந்த தகவலை தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மாதம் 12-ந் தேதி சோதனையில் ஈடுபட்டனர். திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள மணல் குவாரிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

    இதனால் கடந்த ஒரு மாதமாக மணல் விற்பனை முழுமையாக நடைபெறவில்லை. ஆறுகளில் இருந்து மணல் எடுக்கப்படவில்லை. யார்டுகளில் உள்ள மணல் மட்டும் மிக குறைந்த அளவில் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் விளக்கம் கேட்டனர். ஒவ்வொரு மணல் குவாரியிலும் விற்பனையான மணல் அளவு, அதற்கான பில் போன்றவற்றை சமர்பிக்கும்படி அறிக்கை கேட்டனர்.

    இதுதொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நீர்வளத்துறை முதன்மை செயற்பொறியாளர் முத்தையா மற்றும் செயற் பொறியாளர்களுக்கு சம்மன் வழங்கப்பட்டதாக தகவல் வெளியானது.

    இந்த நிலையில் முதன்மை பொறியாளர் முத்தையா, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

    இதுவரையில் ஆற்று மணல் எடுக்கப்பட்ட அளவு விவரம், விற்பனை செய்த அளவு, அதற்கான பில் போன்றவற்றை அதிகாரிகள் அவரிடம் கேட்டனர். அம லாக்கத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களுக்கு கடிதமும் அனுப்பியுள்ளனர்.

    • அசிம்தாஸ் என்ற இடைத்தரகா், ராய்பூரில் ரூ.5.39 கோடி ரொக்கப் பணத்துடன் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்.
    • சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பாகேல் மீது திடுக்கிடும் குற்றச்சாட்டுகளுக்கு வழி வகுத்துள்ளன.

    புதுடெல்லி:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்-மந்திரி பூபேஷ் பாகேல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

    சத்தீஸ்கரில் காங்கிரசிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற பா.ஜ.க. தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.

    இந்நிலையில் அங்கு மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. முதல்கட்டமாக 20 தொகுதிகளுக்கு வரும் 7-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    மகாதேவ் சூதாட்டச் செயலி உரிமையாளர்களிடம் இருந்து முதல்-மந்திரி பூபேஷ் பாகேலுக்கு இதுவரை ரூ.508 கோடி கைமாறி இருப்பதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

    இதுகுறித்து அமலாக்கத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    'அசிம்தாஸ் என்ற இடைத்தரகா், ராய்பூரில் ரூ.5.39 கோடி ரொக்கப் பணத்துடன் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். இது, தோ்தல் செலவுகளுக்காக காங்கிரஸ் கட்சிக்கு மகாதேவ் சூதாட்டச் செயலி உரிமையாளா்களால் அனுப்பப்பட்ட பணம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    தாஸிடம் நடத்தப்பட்ட விசாரணையும் அவரது கைப்பேசியில் மேற்கொள்ளப்பட்ட தடயவியல் பகுப்பாய்வும் சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பாகேல் மீது திடுக்கிடும் குற்றச்சாட்டுகளுக்கு வழி வகுத்துள்ளன. அவருக்கு இதுவரை ரூ.508 கோடி கைமாறியிருப்பதாக தெரியவருகிறது. இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அமலாக்கத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மகாதேவ் சூதாட்டச் செயலியால் சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட பணம், பல்வேறு அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு லஞ்சமாக பகிரப்பட்டதாக அமலாக்கத் துறை ஏற்கனவே விசாரணை மேற்கொண்டு வருகிறது.

    இந்த விவகாரத்தில், செயலியின் உரிமையாளர்கள் சவுரவ் சந்திராகா், ரவி உப்பால் உள்பட 14 பேருக்கு எதிராக சமீபத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    மகாதேவ் செயலியின் சில பினாமி வங்கிக் கணக்குகளில் உள்ள ரூ.15.59 கோடியை சட்டவிரோத பரிவா்த்தனைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் முடக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

    • போலி ரசீது, போலி க்யூ.ஆர்.கோடு பயன்படுத்தி மணல் விற்பனை செய்துள்ளதை அமலாக்க துறையினர் கைப்பற்றியதாக தெரிகிறது.
    • மணல் அள்ளிய பகுதிகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் டிரோன் மூலம் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்த ஒருவந்தூரில் அரசு மணல் குவாரி செயல்படுகிறது. இங்கிருந்து மணல் எடுத்து வரப்பட்டு வளையப்பட்டி சாலை செவிட்டுரங்கன்பட்டியில் உள்ள அரசு மணல் சேமிப்பு கிடங்கில் சேமித்து வைத்து ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

    இதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், சட்ட விரோதமாக மணல் விற்பனை மேற்கொள்வதாகவும் புகார் கூறப்பட்டது. இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் 12-ந் தேதி 2 கார்களில் வந்த அமலாக்கத்துறையை சேர்ந்த 10 பேர் கொண்ட அதிகாரிகள் குழு மணல் சேமிப்பு கிடங்கில் சோதனை நடத்தினர்.

    ஆற்றில் இருந்து எவ்வளவு மணல் அள்ளி வந்து சேமிக்கப்படுகிறது. எவ்வளவு மணல் விற்கப்பட்டுள்ளது. அதற்காக எவ்வளவு பணம் பெறப்பட்டுள்ளது. அதற்கான ஆவணங்கள் முறையாக உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

    35 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் மணல் சேமிப்பு கிடங்கு அலுவலகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், ரசீதுகள், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவற்றில் கிடைக்கப் பெற்ற பல்வேறு ஆதாரங்களைக் கொண்டு விசாரணை நடத்தினர்.

    மேலும் போலி ரசீது, போலி க்யூ.ஆர்.கோடு பயன்படுத்தி மணல் விற்பனை செய்துள்ளதை அமலாக்க துறையினர் கைப்பற்றியதாக தெரிகிறது.

    ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டவர்களுக்கு மணல் வழங்கப்பட்ட விபரம், ஆற்றிலிருந்து எவ்வளவு மணல் அள்ளி வரப்பட்டது, தற்போது சேமிப்பு கிடங்கில் இருப்பு விபரம், எந்தெந்த வாகனங்களுக்கு மணல் விற்பனைக்கு வழங்கப்பட்டது என்பது குறித்தும் விசாரணை செய்தனர்.

    அதேபோல் அரசு நிர்ணயித்த 3 யூனிட் மணலுக்கு 7,950 ரூபாய் தொகையை விட கூடுதலாக 6,500 ரூபாய் எவ்வளவு பேரிடம் வாங்கப்பட்டது என்பது பற்றியும் விசாரணை செய்தனர்.

    இந்த நிலையில் நேற்று கரூர் மாவட்டம் வாங்கல் அருகே உள்ள என்.புதூர் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் மணல் குவாரிகளை ஏலம் எடுத்த நபர்கள் எவ்வளவு மணல் அள்ளிச் சென்றுள்ளனர் என்பது குறித்து நேற்று காலை முதல் மதியம் வரை அமலாக்கத்துறையினர் ஆய்வு நடத்தி குழிகளை அளந்து பார்த்து மதிப்பிட்டனர்.

    தொடர்ந்து மாலை 4 மணியளவில் 7 கார்களில் வந்த அமலாக்கத்துறையினர் 9 பேர், 2 குழுக்களாக பிரிந்து நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே ஒருவந்தூர் காவிரி ஆற்றில் மணல் அள்ளிய பகுதிகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் டிரோன் மூலம் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அவர்களுடன் கோரக்பூர் ஐ.ஐ.டி. பேராசிரியர் தலைமையில் 10 பேர் கொண்ட அளவீட்டாளர்கள், திருச்சி பொதுப்பணித்துறை உதவி கோட்ட அலுவலர் சிவக்குமார், உதவி செயற்பொறியாளர் சங்கீதா ஆகியோர் வந்திருந்தனர்.

    அப்போது ஆற்றுக்குள் இறங்கி அரசு அனுமதித்த அளவை விட முறைகேடாக மணல் அள்ளப்பட்டுள்ளதா? மணல் அள்ளிய குழிகளின் நீளம், அகலம், ஆழம் ஆகியவற்றை சுமார் 2 மணி நேரம் எவ்வளவு மணல் அள்ளப்பட்டுள்ளது என்பதை டிஜிட்டல் முறையில் கணக்கீடு செய்து அதனை குறித்துக் கொண்டனர். பின்னர் 6 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

    இந்த சோதனையின் போது 20 மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் குவாரியை சுற்றி துப்பாக்கியுடன் நின்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் பொதுப்பணி துறை அதிகாரிகளும் வந்திருந்தனர்.

    கடந்த முறை அமலாக்கத்துறை மணல் குவாரிகளில் ஆய்வு நடத்தியதை தொடர்ந்து மணல் குவாரிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×