search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman employee arrest"

    • பணம் கையாடல் செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பப்பட்டது.
    • சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் அகிலாவின் குடும்பத்தினரையும் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

    திட்டக்குடி:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாசில்தார் அலுவலகத்தில் சமூக மேம்பாட்டு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் பல கோடி ரூபாய் கையாடல் நடைபெற்று உள்ளதாக கடலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் வந்தது.

    இது தொடர்பாக விசாரணை நடத்த கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவிட்டார். இதையடுத்து கடலூர் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு விசாரணை நடத்தினார்.

    இந்த விசாரணையில் முறைகேடுகள் நடந்துள்ளது தெரியவந்தது. இதை தொடர்ந்து இந்த புகார் மாவட்ட குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது.

    போலீஸ் விசாரணையில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகள் விவசாயிகள் பெயரில் வழங்கப்படும் திருமண உதவி திட்டம், கல்வி உதவித் திட்டம், இறந்தால் இறுதி சடங்கு செய்ய உதவி திட்டம், விபத்து காப்பீடு திட்டம் என பல திட்டங்களில் பல கோடி ரூபாய்க்கு மேல் கையாடல் செய்தது தெரியவந்தது.

    அந்த பணம் சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்த கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் அகிலா மற்றும் 4-க்கும் மேற்பட்டவர்களின் வங்கி கணக்குகளில் பரிமாற்றம் செய்ததும் தெரிய வந்தது.

    அவர்கள் பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளதாகவும், அவர்களுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் நேற்று தாசில்தார் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தமிழக வாழ்வுரிமை கட்சி ஒன்றிய செயலாளர் சுரேந்தர் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது பணம் கையாடல் செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பப்பட்டது.

    இந்த நிலையில் கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இன்று திட்டக்குடி சென்றனர். அங்கு கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றிய அகிலாவை கைது செய்து அழைத்து சென்றனர். அவர் ரூ.4½ கோடிக்கு மேல் கையாடல் செய்ததாக கூறப்படுகிறது.

    சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் அகிலாவின் குடும்பத்தினரையும் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

    இந்த சம்பவம் திட்டக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கோவை தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் பெண் ஊழியர், கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
    கோவை:

    கோவை ராமநாதபுரத்தில் உள்ள முத்தூட் நிதிநிறுவனத்தில் கடந்த 27-ந் தேதி மாலை முகமூடி கொள்ளையன் நுழைந்து ரூ.2 கோடி மதிப்புள்ள 804 பவுன் நகை மற்றும் ரூ.1,34,000-ஐ கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பட்டப்பகலில் நிதிநிறுவனத்தில் பணியில் இருந்த 2 பெண் ஊழியர்களை தாக்கி விட்டு நடைபெற்ற இந்த துணிகர கொள்ளை குறித்து விசாரிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

    நிதிநிறுவன ஊழியர்களான போத்தனூரை சேர்ந்த ஜான்பீட்டர் என்பவரது மனைவி ரேணுகா தேவி(26), கெம்பட்டி காலனியை சேர்ந்த திவ்யா(24) ஆகியோரிடம் போலீசார் துருவி, துருவி விசாரித்தனர்.

    கொள்ளையன் தாக்கியதில் மயக்கம் போட்டு விழுந்ததாகவும், 2 மணி நேரம் கழித்து மயக்கம் தெளிந்த போது கொள்ளை நடந்தது தெரிந்ததாகவும் இருவரும் கூறினர். நிறுவனத்துக்குள் இருந்த சி.சி.டி.வி. கேமிராவில் கொள்ளையன் நுழையும் காட்சிகள் இருந்தது.

    ஆனால் ஊழியர்களை தாக்கும் காட்சிகள் இல்லை. மேலும் ரூ.2 கோடி நகைகள் இருக்கும் பாதுகாப்பு அறையை திறக்கும் பெரிய இரும்பு கதவு திறந்திருந்தது குறித்து விசாரித்த போதும் சரியான தகவல் கிடைக்கவில்லை. இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவே இரு ஊழியர்களிடமும் தனித்தனியாக விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணான பதில் அளித்தனர்.

    கொள்ளை நடந்த நிதி நிறுவனத்தின் கிளையில் வேலை செய்த திவ்யா என்ற பெண் திடீரென விடுமுறை எடுத்துள்ளார். இதனால் அவருக்கு பதிலாக செல்வபுரம் கிளையில் பணியாற்றி வந்த மற்றொரு திவ்யா பணிக்கு வந்துள்ளார்.

    ரேணுகா தேவி இந்த கிளையிலேயே பணியாற்றி வந்துள்ளார். ரூ.2 கோடி நகைகள் இந்த கிளையில் இருப்பது வெளியாட்களுக்கு தெரிய வாய்ப்பில்லை என்பதால் இந்நிறுவன ஊழியர்கள் தொடர்பு இல்லாமல் இந்த கொள்ளை நடக்க வாய்ப்பு இல்லை என போலீசார் கருதினர். இதைத்தொடர்ந்து பணியில் இருந்த ரேணுகா தேவி, திவ்யா ஆகியோரது செல்போன் அழைப்புகள் பட்டியலை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதில் ரேணுகா தேவியின் செல்போனுக்கு அடிக்கடி வந்த சில அழைப்புகள் போலீசாருக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் கெம்பட்டி காலனியை சேர்ந்த சுரேஷ்(32) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு சத்தியமங்கலத்தை சேர்ந்த இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த சில வருடங்களாக கோவை கெம்பட்டி காலனியில் தங்கி ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் இதற்கு முன்பு ஒரு நகைகடையிலும் வேலை பார்த்துள்ளார். முத்தூட் நிறுவனத்தில் நகையை அடகு வைக்க சென்ற போது இவருக்கு ரேணுகா தேவியின் பழக்கம் கிடைத்துள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது.

    அப்போது சுரேஷ் பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டத்தில் இருப்பதாக கூறி ரேணுகா தேவியிடம் அவர் வேலை பார்க்கும் நிதிநிறுவனத்திலேயே நகைகளை கொள்ளையடிக்கும் திட்டத்தை கூறி உள்ளார். அதற்கு ரேணுகா தேவியும் சம்மதிக்க, சம்பவத்தன்று மாலை 3 மணி அளவில் முகத்தை மறைத்துக் கொண்டு நிதி நிறுவனத்துக்கு சென்று நகை, பணத்தை கொள்ளையடித்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் அளித்த தகவலின் பேரில் கொள்ளையடிக்கப்பட்ட 804 பவுன் நகைகள், மற்றும் பணம் மீட்கப்பட்டது.

    சுரேஷ் கொடுத்த தகவலின்பேரில் முத்தூட் நிதி நிறுவன பெண் ஊழியர் ரேணுகாதேவியும் கைது செய்யப்பட்டார். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து தனிப்படை போலீசார் கூறுகையில், இச்சம்பவத்தில் ரேணுகா தேவி எந்தெந்த வகைகளில் சுரேசுக்கு உதவினார்? என விசாரணை நடந்து வருகிறது என்றனர்.
    பொன்னேரி அருகே பைனான்ஸ் நிறுவனத்தில் வசூலான ரூ.3 லட்சத்துடன் தலைமறைவான பெண் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த சின்ன கவனம் பகுதியை சேர்ந்தவர் வினோதினி (28).

    இவர் பொன்னேரியில் உளள ஒரு பைனான்ஸ் நிறுவனத்தில், பெண்களுக்கு கடன் வழங்கும் பிரிவில் ஊழியராக வேலை பார்த்தார். மாதம் ஒருமுறை கிராமப் பகுதிகளுக்கு சென்று வாடிக்கையாளர்களிடம் கடன் வசூல் செய்வார்.

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெண் வாடிக்கையாளர்களிடம் ரூ.3 லட்சத்து 26 ஆயிரத்து 386 ரூபாய் கடனை வசூல் செய்தார். ஆனால் அந்த பணத்தை பைனான்ஸ் நிறுவனத்திடம் செலுத்தாமல் தலைமறைவானார்.

    இதுகுறித்து பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த வினோதினியை நேற்று போலீசார் கைது செய்தனர்.

    தீவர விசாரணைக்கு பிறகு வினோதினி பொன்னேரி கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். பின்னர் நீதிபதிஉத்தரவுப்படி புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
    கணித பாட கேள்வித்தாள் அவுட்டான விவகாரத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் தற்காலிக பெண் ஊழியரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். #AnnaUniveristy
    சென்னை:

    அண்ணா பல்கலைக்கழகத்தில் செமஸ்டர் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மறுகூட்டலில் மதிப்பெண் போடுவதில் முறைகேடு நடைபெற்றது வெளிச்சத்துக்கு வந்தது.

    குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பல மடங்கு மதிப்பெண் போட்டதும், ஆயிரக்கணக்கில் பணம் கைமாறியதும் தெரிய வந்தது.

    இது தொடர்பாக தேர்வு கட்டுப்பாட்டாளராக பணியாற்றிய பெண் அதிகாரி மற்றும் பேராசிரியர்கள் உள்பட சிலர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் கணித பாட கேள்வித்தாள் அவுட் ஆன விவகாரம் மீண்டும் பூதாகரமாக கிளம்பியுள்ளது.

    கடந்த டிசம்பர் மாதம் 3-ந் தேதி என்ஜினீயரிங் கணிதம் 2-ம் தாள் தேர்வு நடந்தது. இதில் சில மாணவர்கள் நடவடிக்கையில் தேர்வு கண்காணிப்பாளர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    அப்போது நடத்திய சோதனையில் மாணவர்களின் செல்போன் வாட்ஸ் அப்பில் கணித பாட கேள்வித்தாள் அவுட் ஆகி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

    இது தொடர்பாக சுரேஷ் குமார் என்ற என்ஜினீயரிங் மாணவர் பிடிபட்டார். அவரிடம் விசாரணை நடத்திய போது பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் தனது உறவினர் மூலம் கணித கேள்வித்தாளை பெற்றதாகவும், அதை தனது நண்பர்களுக்கும், மற்ற மாணவர்களுக்கும் வாட்ஸ் அப்பில் அனுப்பியதாகவும் கூறினார்.

    இதையடுத்து அவர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடந்தது. உறவினர் மூலம் பெற்றுக் கொண்ட கேள்வித்தாளை அவர் தனது நண்பர் ஹரிகிருஷ்ணனுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பியதை ஒப்புக்கொண்டார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த புதன்கிழமை மாணவர்கள் சுரேஷ்குமார், ஹரிகிருஷ்ணன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.


    முன்னதாக சுரேஷ் குமார் கூறுகையில், “தேர்வுக் கட்டுப்பாட்டாளர் அலுவலகத்தில் பணிபுரியும் தனது உறவினரான காஞ்சனா மூலம் கேள்வித்தாளை பெற்றதாக” தெரிவித்தார்.

    பெண் ஊழியரான காஞ்சனா கடந்த 13 ஆண்டுகளாக அண்ணா பல்கலைக் கழகத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

    இவரை சுரேஷ்குமார் அணுகி தனக்கு கணித பாடம் கடினமாக இருப்பதாகவும் தேர்வின் போது கேள்வித்தாளை முன் கூட்டியே எடுத்துத்தர வேண்டும் என்றும் கேட்டுள்ளார். அதற்கு காஞ்சனா சம்மதித்துள்ளார். சி.பி.சி.ஐ.டி. போலீசார் பெண் ஊழியர் காஞ்சனாவையும் கைது செய்தனர்.

    காஞ்சனாவிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, பணத்துக்காக கேள்வித்தாளை அவுட் ஆக்கவில்லை. உறவினர் என்ற முறையில் தன்னை அணுகி உதவி கேட்டார். நானும் அவருக்கு உதவி செய்தேன் என்றார்.

    சி.பி.சி.ஐ.டி. போலீசார் காஞ்சனாவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். காஞ்சனா மற்றும் கைதான மாணவர்கள் சுரேஷ்குமார், ஹரிகிருஷ்ணன் ஆகிய 3 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

    இதற்காக கோர்ட்டில் அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்கிறார்கள். கோர்ட்டு அனுமதியுடன் 3 பேரிடமும் போலீஸ் காவலில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    அப்போது கேள்வித்தாள் அவுட் ஆன விவகாரத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? ஏற்கனவே இது போன்று நடைபெற்று உள்ளதா? என்று விசாரணை நடத்தப்படும். #AnnaUniveristy
    ×