உழவர் பாதுகாப்பு திட்டத்தில் ரூ.4½ கோடி மோசடி: திட்டக்குடி தாசில்தார் அலுவலக பெண் கம்ப்யூட்டர் ஊழியர் கைது

பணம் கையாடல் செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பப்பட்டது.சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் அகிலாவின் குடும்பத்தினரையும் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
உழவர் பாதுகாப்பு திட்டத்தில் ரூ.4½ கோடி மோசடி: திட்டக்குடி தாசில்தார் அலுவலக பெண் கம்ப்யூட்டர் ஊழியர் கைது
Published on

திட்டக்குடி:

கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாசில்தார் அலுவலகத்தில் சமூக மேம்பாட்டு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் பல கோடி ரூபாய் கையாடல் நடைபெற்று உள்ளதாக கடலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் வந்தது.

இது தொடர்பாக விசாரணை நடத்த கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவிட்டார். இதையடுத்து கடலூர் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு விசாரணை நடத்தினார்.

இந்த விசாரணையில் முறைகேடுகள் நடந்துள்ளது தெரியவந்தது. இதை தொடர்ந்து இந்த புகார் மாவட்ட குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது.

போலீஸ் விசாரணையில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகள் விவசாயிகள் பெயரில் வழங்கப்படும் திருமண உதவி திட்டம், கல்வி உதவித் திட்டம், இறந்தால் இறுதி சடங்கு செய்ய உதவி திட்டம், விபத்து காப்பீடு திட்டம் என பல திட்டங்களில் பல கோடி ரூபாய்க்கு மேல் கையாடல் செய்தது தெரியவந்தது.

அந்த பணம் சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்த கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் அகிலா மற்றும் 4-க்கும் மேற்பட்டவர்களின் வங்கி கணக்குகளில் பரிமாற்றம் செய்ததும் தெரிய வந்தது.

அவர்கள் பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளதாகவும், அவர்களுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் நேற்று தாசில்தார் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக வாழ்வுரிமை கட்சி ஒன்றிய செயலாளர் சுரேந்தர் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது பணம் கையாடல் செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பப்பட்டது.

இந்த நிலையில் கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இன்று திட்டக்குடி சென்றனர். அங்கு கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றிய அகிலாவை கைது செய்து அழைத்து சென்றனர். அவர் ரூ.4½ கோடிக்கு மேல் கையாடல் செய்ததாக கூறப்படுகிறது.

சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் அகிலாவின் குடும்பத்தினரையும் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

இந்த சம்பவம் திட்டக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com