search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vasanthakumar MLA"

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு 16 இடங்களை எதிர்பார்ப்பதாக வசந்தகுமார் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். #Congress #DMK #Vasanthakumar
    நெல்லை:

    தமிழக காங்கிரஸ் செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வசந்தகுமார் எம்.எல்.ஏ. இன்று நெல்லை வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் காங்கிரசை வளர்க்கும் முயற்சியில் மாநிலத்தலைவர் அழகிரி உள்ளிட்ட அனைவரும் ஈடுபட்டுள்ளோம். இதையடுத்து வருகிற 19-ந் தேதி திருச்சியில் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது, வெற்றி வாய்ப்புகள் குறித்து ஆலோசனை நடத்துகிறோம். அதில் மாநில தலைவர் அழகிரி, மேலிட பொறுப்பாளர் சஞ்சய்தத் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

    தமிழக காங்கிரசில் அனைவரும் இணைந்து செயல்படுவோம். தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை இடம் என்பது குறித்து ராகுல்காந்தி முடிவு செய்வார். காங்கிரசுக்கு 16 தொகுதிகள் எதிர்பார்க்கிறோம். இதில் கூடுதலாகவும் கிடைக்கலாம். குறைவாகவும் கிடைக்கலாம். வெற்றி ஒன்றே எங்கள் குறிக்கோள்.

    நெல்லை, குமரி, விருதுநகர், திருச்சி, கோவை உள்ளிட்ட வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை எதிர்பார்க்கிறோம். கடந்த பாராளுமன்ற தேர்தலில் குமரி தொகுதியில் போட்டியிட்டு அதிக வாக்குகள் பெற்றேன். இந்த முறை குமரி அல்லது நெல்லை தொகுதியில் போட்டிட விருப்பம் தெரிவித்துள்ளேன்.

    எங்களை பொறுத்தவரை ராகுல்காந்தி பிரதமராக வரவேண்டும் என்பதே எங்கள் நோக்கம். 100 சதவீதம் வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்களை நிறுத்துவோம்.

    இலங்கை தமிழர்களுக்கு அதிக நன்மை செய்த கட்சி காங்கிரஸ். ஏற்கனவே இலங்கையில் போர் நடந்த போது உணவின்றி தவித்த தமிழர்களுக்கு விமானம் மூலம் உணவு அளித்தவர் ராஜீவ்காந்தி.

    தற்போது தமிழக அரசு ஏழைகளுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை அ.தி.மு.க.வினர் பட்டியலின்படியே வழங்கப்படுவதாக தகவல் வந்துள்ளது. இது தேர்தலுக்காக கொண்டு வரப்பட்ட திட்டம். இதில் கட்சிபாகுபாடின்றி அனைவருக்கும் வழங்க வேண்டும். மத சார்பின்மையை வலியுறுத்தியே காங்கிரஸ் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவோம்.

    காங்கிரஸ் ஆண்ட 10 ஆண்டுகளில் தீவிரவாதிகள் தாக்குதலால் 120 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். ஆனால் பா.ஜ.க.ஆளும் இந்த நான்கரை ஆண்டுகளில் 1800 ராணுவவீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். உளவுத்துறை எச்சரித்தும் மத்தியஅரசு கவனக்குறைவாக இருந்துள்ளது. இதன்மூலம் ஆட்சி நடத்த தகுதியற்ற கட்சியாக பா.ஜ.க. உள்ளது. இந்த சம்பவத்திற்கு மத்தியஅரசு தார்மீக பொறுப்பேற்க வேண்டும்.

    பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்கு ராகுல்காந்தி, பிரியங்கா ஆகியோர் தமிழகம் வரஉள்ளனர். வாய்ப்பிருந்தால் சோனியா காந்தியும் பிரசாரத்தில் கலந்து கொள்வார். தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் 90 சதவீத வடஇந்தியர்கள் பணியில் உள்ளனர். இந்தநிலை மாறவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Congress #DMK #Vasanthakumar
    நாகர்கோவில் இலுப்பையடி காலனியில் ஒகி புயலால் வீடுகளை இழந்த 8 பேருக்கு புதிய வீடுகளை வசந்தகுமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் ஒகி புயலின் போது கடுமையான சேதங்கள் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான வீடுகளில் மரங்கள் முறிந்து சேதம் அடைந்தது. ஆயிரக்கணக் கான ஏக்கர் விவசாய நிலங்கள் மற்றும் தென்னைந் தோப்புகள் பாதிக்கப்பட்டது.

    நாகர்கோவில், கோட்டார், இலுப்பையடி காலனியில் ஏராளமான வீடுகள் இடிந்து சேதமடைந்தன. அந்த பகுதி மக்கள் வசந்தகுமார் எம்.எல்.ஏ. விடம் இது தொடர்பாக கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கை ஏற்று தனது சொந்த நிதியில் இருந்து 8 புதிய வீடுகளை அந்த பகுதியில் வசந்தகுமார் எம்.எல்.ஏ. அமைத்து கொடுத்தார்.

    மேலும் அந்த பகுதிக்கு செல்லும் சாலையும் சீர் செய்யப்பட்டது. வீடுகள், சாலை திறப்பு விழா நாகர்கோவில் இலுப்பையடி காலனியில் நடைபெற்றது. வசந்தகுமார் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு வீடுகளை திறந்து வைத்தார். வர்த்தக காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் ஏ.எம்.டி. செல்லத்துரை, ஆமோஸ், காங்கிரஸ் மகளிரணி தலைவர் தங்கம் நடேசன், கிறிஸ்டி ரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    கோவையில் காமராஜர் பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட எச். வசந்தகுமார் எம்எல்ஏ மாணவ-மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கினார்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை சின்னதடாகம் அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜரின் 116-வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. தொழில் அதிபர் ஆறுமுகசாமி தலைமை வகித்தார். சின்னதடாகம் ஊராட்சி முன்னாள் தலைவர் டி.என்.வேலுச்சாமி வரவேற்று பேசினார். முன்னாள் எம்.எல்.ஏ சின்னராஜ், முன்னாள் டி.எஸ்.பி வெள்ளிங்கிரி, முன்னாள் ஒன்றிய சேர்மன் வீரபாண்டி விஜயன், குருடம்பாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் பி.வி.மணி, சரவணகுமார், புலவர் அப்பாவு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் எச்.வசந்த குமார் எம்.எல்.ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது,

    காமராஜர் தொலை நோக்கு பார்வையில் தமிழகத்தில் கிராமங்கள் தோறும் பள்ளிகளை கொண்டு வந்தார். பொதுமக்களுக்கு பயன் தரும் வகையில் தேவையான இடங்களில் பாலங்கள், தடுப்பணைகள் கட்டி விவசாய வளர்ச்சிக்கு வித்திட்டார்.

    முதன் முதலில் அரசு ஆவணங்களை தமிழில் கொண்டு வந்தவர் காமராஜர். தமிழுக்காக கொண்டு வந்த பல சட்டங்கள் காமராஜரையும், காங்கிரசையும் சாரும். விவசாயி மகனும் கூட மருத்துவம் மற்றும் பொறியியல் படிக்க வழிவகை செய்தவர். தமிழகத்தில் பெரிய பெரிய தொழிற்சாலைகள் அவரது ஆட்சிகாலத்தில் தான் உருவாக்கப்பட்டது. அனைத்து குழந்தைகளும் பள்ளிக்கு வரவேண்டும் என்று மதிய உணவு திட்டத்தையும் கொண்டு வந்தவர். இவரை போல இன்று ஆட்சியாளர்கள் யாரும் இல்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து சின்னதடாகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பெண்கள் மேல் நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு கேடயங்கள், 170 பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகையும், 6ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு சீருடைகளும் வழங்கினார். மேலும் ரவுண்ட் டேபிள் 133 சங்கம் சார்பில் கோவனூர் நடுநிலைப்பள்ளிக்கு புரொஜக்டர் வழங்கப்பட்டது. 

    இந்த விழாவில் பன்னிமடை செல்வராஜ், ரத்தினசாமி, ராமலிங்கம், நஞ்சுண்டபுரம் முன்னாள் ஊராட்சி தலைவர் வி.கே.வி சுந்தரராஜ், ஆனந்த், சுப்புசாமி, மோகன்ராஜ், குணசேகர், தலைமை ஆசிரியர்கள் அருள்ஜோதி, பெரில்குமாரி, பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பாராளுமன்ற தேர்தலில் அனைத்து கட்சிகளும் இணைந்து பாரதிய ஜனதாவை வீழ்த்துவோம் என்று வசந்தகுமார் எம்.எல்.ஏ. கூறினார்.
    திருப்பூர்:

    காங்கிரஸ் கட்சியின் மாநில வர்த்தக பிரிவு சார்பில் திருப்பூர் குளத்துபுதூர் பகுதியில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

    விழாவிற்கு காங்கிரஸ் வர்த்தக பிரிவு மாநில பொது செயலாளர் ராயல் தர்மதுரை தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் காங்கிரஸ் வர்த்தக பிரிவு மாநில தலைவர் எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச பைகள் வழங்கி சிறப்புரையாற்றினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் அனைத்து கட்சிகளும் இணைந்து மக்களுக்கு எதிராக இருந்து வரும் பா.ஜனதா கட்சியை வீழ்த்தி ஆட்சி அமைப்போம். காவிரி பிரச்சனையில் தமிழக மக்களுக்கு ஆதரவாகவே காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது.

    காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இரு மாநில முதல்-அமைச்சர்களும் அமர்ந்து கலந்தாலோசனை செய்து தேவையான தண்ணீரை திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜி.எஸ்.டி.யால் தமிழகம் வேதனையையே அனுபவிக்கிறது.

    கோவை, திருப்பூர், அம்பத்தூர், ராணிபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மத்திய அரசு மக்களுக்கு தேவையான திட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்றுவதாக இருந்தால் யாரும் எதிர்க்கமாட்டார்கள். தேவையற்ற திட்டங்களை மட்டுமே மக்கள் எதிர்க்கின்றனர்.

    சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்வது வரவேற்கத்தக்கது. ஆனால் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதத்தை கொடுத்துவிட்டு பின்னர் பணிகளை தொடங்கட்டும். விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர்கள் சத்தியமூர்த்தி, ராஜாமுருகன், நிர்வாகிகள் முருகன், மெட்டல் மாதவன், பிரகாஷ், நடராஜ், குணசேகரன், கருப்பசாமி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #Tamilnews
    ×